எழுத்தாளர்கள் உலகம் முழுக்க சற்றே கோணலாக, எதிர்பாராத கோணங்கி சுபாவங்கள் படைத்தவர்களாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். அத்தகைய சித்தரிப்புகள் பிரசித்தமாகின. ஐரோப்பாவை பொறுத்தமட்டில் கற்பனாவாத கவிதை மரபுடன் (கூல்ரிட்ஜ், கீட்ஸ், ஷெல்லி) இது துவங்கியதாக சொல்கிறார்கள். படைப்பாளிகள் மையத்தை விடுத்து விளிம்பை விரும்புகிறவர்கள். எதையும் தலைகீழாக சிந்திப்பவர்கள் எனும் நம்பிக்கை தோன்றியது. சமூகம் எளிய சாமான்யர்களுக்கு அனுமதிக்காத காரியங்களை படைப்பாளிகள் தமதுரிமையாக கருதிக் கொள்வார்கள்; ஒரு கட்டத்தில் சமூகம் தனது அடக்கப்பட்ட விழைவுகளை வெளிப்படுத்தவும் சித்தரித்து பரிசீலிக்கவும் படைப்பு வெளியை பயன்படுத்துவதாக ஒரு நம்பிக்கை தோன்றி ஆஸ்திரிய உளவியலாளர் சிக்மண்ட் பிராயிடின் ஆய்வுக்கருத்துக்களால் வலுப்பட்டது.
இதன் பொருள் உலகமெங்கும் படைப்பாளிகள் பித்தர்களாக, பொருந்தா பிரகிருதிகளாக மட்டும் காணப்பட்டார்கள் என்றல்ல. பிரஞ்சு தத்துவ அறிஞரும் விமர்சகருமான ரொலாண்ட் பார்த் தனது 1957இல் வெளியான Mythologies நூலில் The Writer on Holiday எனும் கட்டுரையில் எழுத்தாளனை சாமான்யனாக காட்டுவதும் பிரசுர தொழிற்துறையின் நோக்கமாக இருந்தது என்கிறார். ஐரோப்பாவில் தொழில்மயமாக்கல் மும்முரமான பின்னரே எழுத்தாளனின் பிம்பமும் பிரசித்தமாகிறது; எழுத்தாளனும் எழுத்தும் ஒன்று எனும் நம்பிக்கை பிறக்கிறது; எழுத்தாளனை முன்னிறுத்தி புத்தகங்களை விளம்பரப்படுத்துகிறார்கள். இப்போது எழுத்தாளன் சமூகத்துடன் பொருந்தாத மற்றமையாக மட்டுமே இருக்க முடியாது என புரிந்து கொள்ளும் தொழிலதிபர்கள் அவனை சாமான்யனாகவும் காட்டும் நோக்கில் அவன் தட்டச்சு எந்திரத்தின் முன் அமர்ந்து “வேலை பார்க்கும்”, அவன் தன் குமாஸ்தாக்களைப் போல விடுமுறை நாட்களில் ஊர்சுற்றும் படங்களை நாளிதழ்களில் பிரசுரித்து ஒருவித கலவையான பிம்பத்தை உண்டு பண்ணுகிறார்கள். இன்றும் பத்திரிகை பேட்டிகள், விமர்சன கட்டுரைகளில் (பஷீர் துவங்கி ஜெயமோகன் வரை) படைப்பாளிகளை முன்னிறுத்துகையில் ஊடகங்கள் இதே பாணியை பின்பற்றுவதைத் தான் பார்க்கிறோம். அதாவது இவர்கள் முழுக்க சமூக மையவாத போக்குகளுடன் பொருந்திப் போகாதவர்கள், அதே நேரம் எல்லாரையும் போல மத்திய வர்க்க வாழ்க்கைக்குள் இருப்பவர்கள் (ஆனால் சினிமா மாஸ் ஹீரோக்களுக்கு இத்தகைய பிம்பங்கள் கட்டமைக்கப்படுவதில்லை, அவர்களுக்குள் பல கோணல்கள் இருந்தாலும் - உ.தா., ரஜினியின் ஆன்மீக கிறுக்குகளை யாரும் பிறழ்வாக சித்தரிப்பதில்லை; கமலின் முன்பின்னான பேச்சுகளை உளவியல்பூர்வமாக அலசுவதில்லை).
தமிழில் ஐம்பதுகள் துவங்கி சுமார் தொண்ணூறுகளின் முற்பகுதி வரை சிறுபத்திரிகை மரபு எழுத்தாளனின் மீறலை ஒரு முக்கிய பண்பாக முன்னிறுத்தியது. புதுமைப்பித்தன், ஜி.நாகராஜன், பிரமிள், ஆத்மாநாம் (கிணற்றுக்குள் குதித்து தற்கொலை) துவங்கி பிரேம்-ரமேஷ் ஜோடி, லஷ்மி மணிவண்ணன், ஜெயமோகன் வரை பல்வேறு சர்ச்சைகள், வாய்வழி மிகை சித்தரிப்புகள் மூலம் எழுத்தாளனை ஒரு பித்தனாக, முரண் பிம்பமாக கட்டமைப்பது தொடர்ந்தது. கோணங்கி தன் பெயரையே அவ்வாறு அமைத்துக் கொண்டார். எழுத்தாளர்கள் தமது இலக்கிய கூடுகைகளில் மிகுதியாக மது அருந்தி பரஸ்பரம் அடித்துக் கொள்வது குறித்த சில புரணிகளும் இதற்கு உதவின (அர்ப்பணிப்புடன் நடந்த பல தீவிரமான அறிவார்ந்த இலக்கிய விவாதங்கள் இங்கு கவனம் பெறவில்லை உ.தா., நிறப்பிரிகை விவாதங்கள், ஜெயமோகனின் ஊட்டி இலக்கிய முகாம்கள்). புதுமைப்பித்தன் பற்றி தொ.மு.சி ரகுநாதன் எழுதிய வாழ்க்கைக்கதை, சுந்தர ராமசாமி பிரமிள் குறித்து எழுதிய நூல், சாகித்ய அகாடெமியின் வெளியீடாக வந்த ஜி.நாகராஜன் வாழ்க்கை வரலாறு ஆகியவற்றை இங்கு குறிப்பிடலாம். எழுத்து இங்கு ஒரு வெற்றிகரமான வணிகம் ஆகாததால் பித்தனை சாமான்யனாகவும் காட்ட வேண்டிய அழுத்தம் தீவிர இலக்கிய பரப்பில் இங்கு தோன்றவில்லை. ஆனாலும் சுதந்திர தாகம் உச்சத்தில் இருந்த காலத்தில் தனது தேசபக்தி பாடல்களால் பிரசித்தம் பெற்ற பாரதியார் அவரது மறைவுக்குப் பின்னர் தேசிய கவியாக அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் முன்வைக்கப்பட்ட போது அவரது பிறழ்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. 2000இல் வெளியான படமான “பாரதி” கவிஞரை ஒரு முழுபித்தனாகவே சித்தரித்தது; ஆனாலும் அவரது தேசபக்தியின் லட்சியவாதமும் செல்லம்மா மற்றும் குழந்தைகள் மீதிருந்த அபாரமான பாசமும் அவரை சாமான்யனாக்க உதவின எனலாம்.
Comments