முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எழுத்தும் பித்தும் (2)

எழுத்தாளனைப் பொறுத்தமட்டில், பித்தும் ஆளுமைப் பிறழ்வுகளும் எப்படி மிகைப்படுத்தப்பட்டன, அதன் வணிக நோக்கம் என்ன என பார்த்தோம். அடுத்து ஒரு கேள்வி: எழுத்தாளனுக்கு படைப்பூக்கம் மனப்பிறழ்வில் இருந்தே வருகிறது எனும் உளவியல் கூற்றில் உண்மையில்லையா?  
இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் நேன்ஸி ஆண்டிரியாசென் முப்பதே கலைஞர்களை பேட்டி கண்டு அதன் மூலம் படைப்பாற்றலுக்கும் மன அழுத்தத்துக்கு தொடர்பு உண்டு என கூறினார். பின்னர் கேய் ரேட்பீல்ட் ஜேமிசன் தனது ஆய்வில் படைப்பாற்றலுக்கும் bipolar disorder உளநோய்க்கும் தொடர்பு உண்டு என சொன்னார். இவர்கள் இருவருமே பைத்திய மேதை என படைப்பாளிகள் சித்தரிக்கப்படுவதற்கான கோட்பாட்டு பலத்தை அளித்தவர்கள். ஆனால் இவர்களின் ஆய்வு முடிவுகள் மிகையானவை மற்றும் ஆபத்தானவை என இன்றைய அறிஞர்கள் கருதுகிறார்கள். மனவியாதி வந்தவர்களுக்கே தெரியும் அதை வைத்துக் கொண்டு தொடர்ந்து தீவிரமாக எழுத முடியாது எனும் உண்மை. ஆனாலும் ஏன் இந்த தொன்மம் தொடர்ந்து பிரசித்தமாக உள்ளது என நாம் கேட்க வேண்டும்.


சின்ன சின்ன பிறழ்வுகளும் சமூக மீறல்களும் நம் வாழ்க்கைக்கு அவசியமாக இருக்கின்றன. அன்றாட வாழ்வில் கண்ணுக்குப் புலப்படாத பல்வேறு பைத்தியக்காரத்தனங்கள் வெளிப்பட்டபடியே இருக்கின்றன

சின்ன வயதில் நான் நாய்க்குட்டியை தெருவில் இருந்து எடுத்து வளர்த்தேன். வீட்டுக்குள் வைக்க அனுமதி இல்லாததால் சோறு போட்டு அதனோடு நான் விளையாடும் வேளை தவிர அது பெரும்பாலும் தெருவில் தான் திரியும். விடுமுறையில் அதனோடு நான் வெளியே போனால் அது என்னை உற்சாகமாக பல்வேறு புதிய தெருக்களுக்கு அழைத்துப் போகும். ஒரே நாளில் இவ்வளவு இடங்களுக்குப் போகிறாயா நீ என வியந்து போவேன். ஒவ்வொரு தெருமுனையிலும் அதற்கு சில தோழமைகள் இருந்தனர். அந்த நாய்களுடன் வாலால் சம்பாஷித்து விட்டு சற்று நேரம் மணல்மேடுகளிலும் வறண்ட ஓடைகளிலும் ஓய்வு கொண்டு விட்டு சில தேநீர் கடைகளுக்கு பிஸ்கட் வாங்கித் தின்னும். மாலை நாலு மணிக்கு நான் பள்ளி விட்டு வரும் வேளையில் சரியாக வீடு திரும்பி விடும். பின்னர் நாங்கள் வீடு மாறிச்சென்ற போது நாயை பழையபடி ஊர்சுற்ற விட முடியவில்லை. கட்டிப் போட்டால் அது ஒப்பாரி வைத்து பெரிதாய் ஆர்ப்பாட்டம் பண்ணியது. வெளியே விட்டால் தன் பழைய இடங்களை தேடிப் போய் மூன்று நாட்கள் கழித்தே வீட்டுக்கு வரும். அதற்குப் பிறகு நான் வளர்த்த நாய்கள் எளிமையான, “சமூக விதிகளுக்குஏற்ப ஒழுகும் பிராணிகள். வீடே அவற்றுக்கு உலகம். திறந்து விட்டால் கூட வெளியே எட்டிப் பார்த்து விட்டு திரும்ப உடனே ஓடி வந்து விடும்
ஜி.நாகராஜன் குறித்து சுந்தர ராமசாமி ஓரிடத்தில் சொல்லும் போது ஜி.நாவின் இரவு அலைச்சல்களை குறிப்பிடுகிறார். இரவானால் ஜி.நாவை யாரும் கட்டுப்படுத்த முடியாது. அவர் வேட்டையாட கிளம்பி விடுவார். போதையை ஏற்றிக் கொண்டு ரயில் நிலையம், இருட்டான பிரதேசங்கள் என விலைமகளிரை நாடி அலைவார். அவர்களை அடைவதில்லை, அவர்களுக்காக காத்து நிற்பது, அவர்களை தேடி அலைவதே அவருக்கு மிகப்பெரிய கிளர்ச்சியை அளிக்கும். விடிகாலையில் அரைகுறையான ஆடைகளுடன் மோசமான கோலத்தில் ரயில் நிலையத்தில் கிடப்பார். பகலில் மீண்டும் நல்ல தோற்றத்தில் இயல்புநிலைக்கு மீண்டு விடுவார். சமீபத்தில் ஒரு இளம்பெண் நிர்வாணமாக ஸ்கூட்டி ஓட்டிச் சென்ற காணொளி சமூகவலைதளங்களில் பரபரப்பை உண்டு பண்ணியது. (காவல்துறை அவருக்கு எதிராக வழக்கும் தொடுத்தது.) இது போன்ற ஏராளமான மீறல் சம்பவங்கள் அனுதினமும் நடக்கின்றன; மிகச்சில மட்டுமே நம் பார்வைக்கு வருகின்றன. எனக்கு இந்த இருட்டு சாகசங்களைக் காணும் போது என் முதல் நாயின் தெரு வாழ்க்கை நினைவுக்கு வரும். நமது அன்றாட வாழ்க்கை எவ்வளவு பெரிய சிறைவாழ்க்கை என்பது நமக்கு பெரும்பாலும் புலனாவதில்லை. சுதந்திரம் உள்ளதாக ஒரு தோற்றம் நம்மை ஆறுதல்படுத்துகிறது. ஆனால் ஒருகாரணம்இல்லாமல் நம்மால் பொதுவெளியில் சத்தமாக சிரிக்கக் கூட முடியாது என்பதே உண்மை. எழுத்தாளன் மீறல் என்பதை கலைக்குள் தொடர்ந்து நிகழ்த்த எத்தனிப்பவன்; ஒரு எல்லைக்கு உட்பட்ட மீறலே சுவாரஸ்யமான வாசிப்பனுபவம் ஆகிறது. சில படைப்பாளிகள் அன்றாட வாழ்விலும் மீறலை நிகழ்த்தும் உரிமை தனக்குள்ளதாக கருதலாம். அதை சமூகம் அனுமதிக்கையில் அவன் கொண்டாடப்படுவான் (கேரளாவில் பஷீருக்கு நடந்ததைப் போல); அல்லது பரிகசிக்கப்படுவான் (பிரான்சிஸ் கிருபாவுக்கு இங்கு நடந்ததைப் போல).

நாம் புரிந்து கொள்ள வேண்டியதை இதைத் தான்: பைத்தியக்காரத்தனங்களே நம் அன்றாடத்தை மகிழ்ச்சியாக்கின்றன; ஆழமும் அர்த்தமும் கொண்டதாக்குகின்றன. ஒரு எழுத்தாளனின் வாழ்விலும் அப்படித்தான், ஒரே வித்தியாசம் பித்து அவனுக்கு ஒரு selling point ஆகவும் இருக்கிறது.


நன்றி: தடம், ஆகஸ்ட், 2019

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...