பிரச்சாரமாக இல்லாத ஒன்று எப்படி இலக்கியமாகாதோ அதே போல பிரச்சாரமாக இருப்பதால் ஒன்று இலக்கியமல்லாமல், படிக்க அருகதை அற்றதாக ஆகாது. கார்ல் மார்க்ஸ் உங்களுடையது ஒருவித அலெர்ஜி. அது விமர்சன நோக்கு அல்ல. சொல்லப் போனால் அது ஒரு பிழையான வாசிப்பு முறை.
சென் பாலனும் எழுதி முதிர்ந்த பின் நீங்கள் எதிர்பார்க்கும் இந்த தளுக்கையெல்லாம் பழகிக் கொள்வார் எனலாம். ஆனால் அது மட்டுமே அவரை தரமானவராக்காது. (தரம் என்பது சிடுக்கு, உள்முரண், சிக்கல்கள், கட்டற்ற பாய்ச்சல் மட்டுமே. அது தலையை படிய வாரிக் கொள்வது அல்ல. அது புறவடிவத்தையும் கடந்தது.)
இதே தட்டையான பார்வையை வைத்து நீண்ட காலமாக தி.ஜாவையும் வண்ணதாசனையும் நாம் பின் வாசலில் நிறுத்தி இருந்தோம் (அதற்காக சென்பாலனும் திஜாவும் ஒன்று என நான் சொல்ல வரவில்லை). ஒருவர் பரவலாக படிக்கப்பட்டாலே அவர் மேம்போக்கானவர், மலினமானவர் என நினைக்க தலைப்பட்டோம். நாம் இந்த குறுகியவாதத்தில் இருந்து மீண்டு வர வேண்டும்.
செந்தில்வேல் போன்றவர்களிடம் திரும்ப வருகிறேன்: நியாயமாக, தர்க்கரீதியாக, சங்கர் கணேஷை இளையராஜாவிடம் அல்ல சங்கீத மும்மூர்த்திகளுடன் ஒப்பிட வேண்டும். அதை செய்ய மாட்டீர்கள். அதை கற்பனையே பண்ண முடியாது என நினைப்போம். ஆனால் சாஸ்திரிய இசையை நன்கு அறிந்தவர்கள் வெகுஜன இசை மேடைகளுக்கும் வருகிறார்கள். நித்யஶ்ரீ, ஜக்ஜீத் சிங் போன்றவர்கள் இரண்டு மேடைகளிலும் புழங்குகிறார்கள். இரண்டு இசையும் அதன் தீவிரத்தை பொறுத்து ஒன்றல்ல என அறிவார்கள் அறிவார்கள். ஆனால் இரண்டு இசையிலும் நாம் ரசிக்கத் தக்க அம்சங்கள் உண்டு, மரபார்ந்த இசை சில நேரம் தட்டையாகவும் சினிமா இசை உணர்வுரீதியாக மனதை அசைப்பதாகவும் ஆழம் கொண்டதாகவும் அமையலாம் என அறிவார்கள். இளையராஜா தனது பேட்டி ஒன்றில் தன்னால் சின்ன சின்ன சப்தஙக்ளிலும் இசையை உணர முடிந்ததுண்டு, அப்படியே தனது பதின்பருவ இசைப்பயிற்சி துவங்கியது என சொல்லி இருக்கிறார்.
வித்தியாசங்களே இல்லை என நான் கூறவில்லை; ஆனால் வித்தியாசங்களை தர அளவுகோல்களாக மாற்ற வேண்டாம் என்கிறேன். ஒருவர் “நான் பேஸ்புக்கில் எழுதுவது எதையுமே படிக்க மாட்டேன்” என்றால் அவர் சில நல்ல கவிதைகளை, சுய அனுபவ பதிவுகளை, தீவிர அரசியல் தத்துவ குறிப்புகளை இழந்து விடுவார். வெகுஜன எழுத்தை ஒரேயடியாக நிராகரிப்பவருக்கும் இதுவே நடக்கும். நீங்கள் ஒரு ஊரில் வசிக்கிறீர்கள். அங்கு சாதி வெறி கொண்டவர்கள் இருக்கிறார்கள். நீங்கள் முற்போக்காளர். நீங்கள் சாதி வெறியை எதிர்க்கிறீர்கள். நீங்க இந்த அடிப்படையில் அவர்களிடம் பேசாமலே தவிர்த்தால் இழப்பு உங்களுக்குத் தான். இந்த உலகில் சிலர் அழகானவர்கள், சிலர் அழகற்றவர்கள். சிலர் மென்மையானவர்கள், சிலர் முரடர்கள். ஆனால் நாம் அழகானவர்களால், மென்மையானவர்களால் மட்டும் ஈர்க்கப்படுவதில்லையே. வித்தியாசங்களை கடந்து செல்வதே மானுட வாழ்வு. வித்தியாசங்களை கடந்து பார்ப்பதே இலக்கிய நோக்கு!
Comments