ஶ்ரீவள்ளியின் “பொல்லாத மைனாக்கள்” தொகுப்பு குறித்து பேசிய பா.வெங்கடேசனின் உரை ஒரு சிறப்பான தீவிரமான உரையாடல் (https://m.youtube.com/watch?v=Fr_SQpsarDQ&fbclid=IwAR0dGW-DHYygDurttPeh1X-ZlxJwj_tr0mhvp5SuAfAAk5UCt83b4nXg7bo). அதை ரசித்தேன். அதேவேளை அவருடன் என்னால் உடன்பட முடியாத சில புள்ளிகளும் உண்டு. என்னென்ன?
ஶ்ரீவள்ளியின் கவிதைகளில் உள்ள சங்கக் கவிதை நீட்சியை நாம் அறிவோம். அதன் உன்மத்தம், உள்முரண், பித்து நிலை, பரவசம், துயருற்றவாறே அதில் மீட்சி விழையாவது திளைத்தல் ஆகியவை, அதே நேரம், ஆதி தமிழ்க்கவிதையின் இயல்புகள் அல்ல என்பதையும் கவிதை வாசகர்கள் கவனித்திருப்பார்கள். இந்த அம்சத்தை பா. வெங்கடேசன் அழகாக சுட்டிக் காட்டி இருந்தார். எனக்கு இருந்த ஒரே மனக்குறை அவர் பிடிவாதமாக இந்த “மைனாக்களை” பின்நவீன பிரதிகளாக மட்டும் கூண்டிலிட்டு பூட்டி ரசிக்க பார்க்கிறார் என்பது. கவிதையில் எப்போதுமே மைனாக்கள் சுதந்திரமாகவே இருக்கும் என்பதை அவர் மறந்து விட்டார்.
உ.தா., பிரிவின் கடும் துயரில் ஶ்ரீவள்ளியின் கவிதைசொல்லி ஒரு மனத்திளைப்பை உணர்கிறார். நீ இல்லை என்னுடன் என்னுடம் எனும் போது இந்த பிரிவு சீக்கிரம் முடியட்டும் என அவசப்படுபவர், நீ இருக்கிறாய் என்னுடன் எனும் போது “சீக்கிரம்” போய் விடு என அவசப்படுத்துகிறார். இதே நிலையை நீங்கள் பாப்லோ நெருதாவின் பல கவிதைகளில் காண முடியும். “இன்றிரவு துயர்மிகு வரிகளை எழுதப்போகிறேன்” ஒரு உதாரணம்.
காதலி இல்லாத அந்த கடும் தனிமையான இரவில் அவள் காதலின் இழப்பை பேசும் போது அதை ஒரு சிறிய கொண்டாட்டமாக, அவள் இல்லாதிருப்பதில் அவள் இருப்பதை ரசித்து சிலாகிப்பதாக குறிப்புணர்த்துவார் நெருதா. அந்த துயரகவிதையை நாம் தொடர்ந்து ரசிப்பதன், அதை மீள மீள மொழியாக்குவதன் காரணம் அது தான். கூரை எரிந்து விட்டது, இனி நிலவை நன்றாக பார்க்கலாம் எனக் கோரும் பாஷோவின் ஹைக்கூவும் ஓரளவுக்கு இந்த மனநிலை கொண்டது தான் (இயற்கை ரசனை, இக உலக வெறுப்பு எனும் கட்டமைப்பை தாண்டி பார்த்தோமானால்).
இதைப் பற்றி பேசும் போது தெரிதா சொல்வதை நாம் கவனிக்க வேண்டும். இருப்பது, இல்லாமல் போவது (presence - absence) என்பவை மொழியின் அடிப்படை செயல்பாட்டில் உறைந்துள்ள ஒன்று என்கிறார். நீங்கள் ஒரு சொல் மூலம் (யானையை பார்க்கப் போன குருடர்களின் கதையைப் போல) அதை முழுக்க உணர்த்துவதில்லை - அது இருக்கிறது எனும் போதே அது இல்லை என்பதையே சேர்த்தே சொல்கிறோம் என்கிறார். (அவர் கையெழுத்து என்பதை உதாரணமாக காட்டுகிறார். கையெழுத்திட்டவர் இல்லை என்றாலே கையெழுத்துக்கு மதிப்பு தோன்ற முடியும். நீங்கள் கையெழுத்திடாத ஒரு காசோலையை எடுத்துக் கொண்டு வங்கிக்கு சென்று “இது நான் தான்” என சொன்னால் ஏற்க மாட்டார்கள்.) ஶ்ரீவள்ளியின் பிரிவுத் துயரம் கூட அது உணர்த்தும் பொருளில் தொடர்ந்து இருந்தும் இல்லாமல் ஆகியிருக்கிறது என்பதாலே அது தொடர்ந்து வாசிக்கையில் இன்பமளிக்கிறது. இது மொழியின் அடிப்படையான சுபாவம். இது ஒரு பின்நவீன இயல்பு மட்டுமல்ல. எல்லா காலத்திலும் நாம் அப்படித் தான் இருந்திருக்கிறோம்.
ஶ்ரீவள்ளியின் இச்சையைப் (அல்லது பிரிவு துயர் அல்லது காதல் இன்பம்) பற்றி பேசும் போது அது தொடர்ந்து ஒன்றை அடையாமல் தள்ளிப் போடும், தள்ளிப் போடுவதன் மூலம் அந்த கணத்தில் ஆழ்ந்து போய் அனுபவிக்கும் நிலை என பா. வெங்கடேசன் அழகாக அவதானிக்கிறார். அவர் இதை தொழில்நுட்பம் கட்டமைக்கும் சுயம் / மனநிலை என சொல்வதைத் தான் என்னால் ஏற்க முடியவில்லை.
ஏனென்றால் நீங்கள் இந்த உள்முரணை, திளைப்பை, பரவசத்தை உணர தீவிர உணர்வுநிலைக்கு செல்ல வேண்டும். காதல் பிரிவில் தவிப்ப்பது, மனம் சிதறி கலங்குவது, தன் கண்ணீரில் உப்பு சுவையில் ஒரு வெம்மையை இன்பத்தை அறிவது என்பதும் ஒரு மொபைல் செயலி மூலம் தனது தற்படத்தை பதிவேற்றி குதூகலிப்பதும் ஒன்றல்ல. தொழில்நுட்பம் நம்மை இன்று எந்த தீவிர எதிர்நிலைக்கும், முரண் நிலைக்கும் செல்ல முடியாமல் ஒருவித தட்டையான உணர்வுநிலைக்குள் சிறைவைத்திருக்கிறது என்பதே உண்மை. நெடுஞ்சாலை பயணத்தின் போது மோட்டலின் ரம்மியமான சூழலில் காப்பி அருந்துவதும் (வெங்கடேசனின் உவமை) காதலியின் மடியில் கிடந்து உன்மத்தத்தை உணர்ந்தபடி அதில் தான் இருப்பதை உணர்ந்து துணுக்குறுவதும் நேர் எதிரான மனநிலைகள்.
இன்றைய காலம் என்பது தன்னிலை முன்னிறுத்தப்படும் காலம் என பா. வெங்கடேசன் ஆரம்பத்தில் சொல்கிறார். அடுத்து, இந்த தன்னிலையின் பெயரிலேயே இன்று வாழ்க்கையின் ஒவ்வொரு அனுபவமும் அறியப்படுவதை விவரிக்கிறார். இன்று பொதுக்கருத்து என ஒன்று இல்லை, சாராம்சமான கருத்துநிலை என்பதே, ஒருவர் தான் காண்பதே தனதுண்மை என நம்புவதாக அது மாறி உள்ளது என்கிறார். ஆனால் அவரே தான் “தொழில்நுட்பத்தால் கட்டமைக்கப்பட்ட தன்னிலை” என ஒரு பிரயோகத்தை வைக்கிறார். தன்னிலை அவ்வளவு சுதந்திரமாக தான் காண்பதே தனக்கான உண்மை என கருத வாய்ப்பு உண்டென்றால் அந்த “தான்” எப்படி மற்றொன்றால் (தொழில்நுட்பம்) கட்டமைக்கப்பட்ட தன்னிலையாக இருக்க முடியும்? அது சுதந்திரமாக, சுயகட்டமைப்பாக அல்லவா இருக்க வேண்டும்? இது முரண் அல்லவா?
இறுதியாக சுதந்திரம், தன்னிலை குறித்து ஹைடெக்கர் என்ன சொல்கிறார் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். நவீன வாழ்க்கையில் மனிதன் “உலகில்” இருந்து தொழில்நுட்பத்தால் துண்டிக்கப்படுவதைப் பற்றி சற்று கவலையுடன் பேசுகிறார் ஹைடெக்கர். இதை “வீழ்ச்சி” (fallenness) என சொல்கிறார். ஆனால் இங்கு தொழில்நுட்பம் என்பது டெக்னிக்கலான தொழில்நுட்பம் மட்டுமல்ல. நீங்கள் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும், நீங்கள் ஒரு கேள்விக்கு பதில் சொல்லி ஆக வேண்டும் என்பது கூட “டெக்னாலஜி” தான். இப்போது நீங்கள் முழுமையாக உலகுடனான உங்கள் இருப்பை உணர முடியாதாகிறது. நீங்கள் ஒரு குளத்தில் போய் முக்குளித்து எழுவது உங்கள் ஆழமான தன்னிலை அனுபவம். ஆனால் ஒரு தாளை புரட்டுவது துண்டுபட்ட தன்னிலை. நான் டெக்னாலஜி உருவாக்கும் தன்னிலையை இப்படித் தான் பழுதான ஒன்றாக பார்க்கிறேன். அதை நீங்கள் பெருந்தேவியின் எதிர்கவிதைகளில் காணலாம். ஆனால் ஶ்ரீவள்ளியின் கவிதைகளில் காணும் பரவசமும் கட்டற்ற பறத்தலும் சற்றே ரொமாண்டிக்கான ஆட்படலும் “டெக்னாலஜியால்” தோன்றுவது அல்ல. நான் பா. வெங்கடேசனுடன் முரண்படும் முக்கியமான இடம் இது தான்.
கடைசியாக, ஶ்ரீவள்ளியின் கவிதைசொல்லி உணரும் அந்த தன்னிலையின் பாரம் (கூடலின் போது அவர் தன்னை அங்கு பாரமாக உணர்கிறார்) சற்றே பின்நவீன சாயல் கொண்ட நிலை தான். அது ஒரு நல்ல அவதானிப்பு. ஆனால் அதையே நாம் பழைய கவிதைகளிலும் காண்கிறோமே:
“என்னைப் பார்க்க வந்தவர்
தன்னைப் பார் என
சொல்லிச் சென்றார்” (நகுலன்)
Comments