Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

இன்று வாசிப்பு குறைந்துள்ளதா?


தடம் இதழ் நிறுத்தப்பட்டதைப் பற்றின தனது பிளாக் பதிவில் வா. மணிகண்டன் இது இன்று வாசிப்பு குறைந்துள்ள நிலையில் ஏற்பட்டுள்ள தவிர்க்க முடியாத விளைவு என சொல்லி உள்ளார். இன்று யாரும் வாசிப்பதில்லை, அதிக நேரம் மொபைலில் எதையாவது பார்த்தபடி இருக்கிறார்கள், காணொளிகள் அதிகம் மக்களை போய் சேருகின்றன, அச்சுப்பத்திரிகைகள், புத்தகங்களுக்கு இனி எதிர்காலம் உண்டா என்பது ஐயமே என்கிறார். எனக்கு இது மிகைக்கூற்றாக படுகிறது.

இன்று நாம் அதிக நேரம் டிஜிட்டல் ஊடகங்களில் இருக்கிறோம் என்பது நிதர்சனம். ஆனால் அந்தநேரம்எதற்கான யாருக்கான நேரம் என நாம் கேட்க வேண்டும். அது வாசிப்புக்காக நான் இத்தனைக் காலமும் ஒதுக்கி வைத்திருந்த நேரமா? இல்லை.


அது நாம் வெளியே சுற்றுவதற்கு, நண்பர்களுடன் வெட்டி அரட்டை அடிப்பதற்கு, டி.வி பார்ப்பதற்கு, திரையங்கில் ஒரு மணிநேரம் காத்திருந்து டிக்கெட் வாங்கி படம் பார்ப்பதற்கு வீணடித்த நேரம் அது; காதலியை ஒரு கணம் பார்ப்பதற்காக மணிக்காய் பைக்கில் அலைந்த, வெட்டியாய் பேருந்தில் ஏறி திரிந்த காலம் அது. அது தெருமுனையில் நின்று வருவோர் போவோரை எல்லாம் காரணமின்றி பார்த்து காரணமின்றி அவரக்ளைப் பற்றி யோசித்து காரணமின்றி அவர்களைப் பற்றி வம்பு பேசிக் கழிக்க நேரம். அது அரசியல் கூட்டங்களில் கால்கடுக்க நின்று புரிந்தும் புரியாமலும் கேட்ட நேரம். அது உறவினர் வீடுகளுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் படையெடுத்து தொந்தரவு செய்த, ஒவ்வொரு விழாவுக்கும், சடங்குக்கும் தவறாது போய்கை நனைத்தநேரம். இந்த நேரத்தை தான் நாம் இப்போது டிஜிட்டல் காலவெளியில் தொலைக்கிறோம்.

ஏன் நாம் பேசும் நேரம் குறைந்து போய் அந்த நேரத்தை டிஜிட்டல் ஊடகங்கள் அபகரித்து விட்டதைப் பற்றி பேச மாட்டோம் என்கிறோம்

நான் என் பிளாகை தொடங்கி சுமார் பத்து வருடங்கள் ஆகின்றன. ஒரு மாதம் என் பிளாகை படிக்க வருகிறவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டதாக நான் கருதவில்லை. அது நிலையாகவே இருக்கிறது. ஒரு பரபரப்பான விசயத்தைப் பற்றி நான் எழுதினால் அதைப் படிக்க வருபவரின் எண்ணிக்கை என்ன, இலக்கியத்தனமான எழுத்துக்கான வாசகரக்ளின் எண்ணிக்கை என என நன்றாக அறிவேன். இதுவும் மாறவில்லை.

டிஜிட்டல் ஊடகங்களால் வாசிப்பு கூடியிருக்கிறது என்பதே நிஜம். ஆனால் இதுஇலக்கிய தத்துவ தீவிரவாசிப்பு அல்ல. அது கேளிக்கை வாசிப்பு. தகவல் அறிவதற்கான வாசிப்பு. இந்த டிஜிட்டல் ஊடகங்களால் அச்சு நாளிதழ்களின் இருப்பும் ஒரேயடியாக காலியானதாக தெரியவில்லை. இன்றும் ஒரு நாளைய செய்திகளை ஒருமித்து படிக்க, அறிவார்ந்த விவாதங்களை அறிய விரும்புவோர் நாளிதழ்களை வாங்கியே ஆக வேண்டும். அதுவே படிக்க எளிதாக வசதியாக உள்ளது. ஹிந்து நாளிதழை புரட்டி படிப்பதை விட அதன் இணையதளத்தில் ஒவ்வொரு செய்தியாக கிளிக்கி வாசிப்பது சிரமமாக இருக்கிறது. இந்த நாளிதழ்கள் கூடுதலாக டிஜிட்டல் தளங்களை உண்டுபண்ணி தம் வருமானத்தை பெருக்கி இருக்கின்றன. இன்று நாம் தகவலறிய, பொழுதுப்போக்கிற்காக கூடுதல் நேரத்தை, முன்பை விட பல மடங்கு அதிகமான நேரத்தை, செலவழிக்கிறோம். இது நம் நடைமுறை வாழ்க்கையையே இலக்கியத்தை விட அதிகமாக பாதிக்கிறது. உதாரணமாக, இரவு படுக்கையில் முகநூலில் உலவும் தம்பதியினர் செக்ஸ் வைத்துக் கொள்வது குறையும். பேசுவது அறவே நின்று போகும். குழந்தைகள் சதா யுடியூபிலும் செயலிகளிலும் பொழுதுபோக்கை நாடும் போது அவர்கள் விளையாடுவது குறையும், பிறருடன் பேசுவது குறையும். அவர்களின் உடல் / மன ஆரோக்கியமும் பேச்சுத்திறனும் பாதிக்கப்படும். இது இலக்கியவாதிகளுக்கான அபாயம் அல்ல உண்மையில்.

புத்தக விற்பனை குறைந்துள்ளதா? நீங்கள் தொண்னூறுகளுடன் ஒப்பிட்டால் கடந்த இரு பத்தாண்டுகளில் புத்தக விற்பனை பெருகி உள்ளது. ஆனால் லாபம் பெரிதாக இல்லை. அதற்கு நமது பொருளாதார வீக்கம், தாளின் விலை, புத்தகங்களை குடௌனில் வைத்திருக்கும் செலவு, போக்குரவத்து மற்றும் ஊழியர்களின் சம்பள செலவு ஆகியவை அதிகரித்து விட்டது தாம் காரணம். இதுவே எதிர்காலத்தில் டிஜிட்டல் வாசிப்பை லாபகரமாக்கும் என நினைக்கிறேன். (இனிமேல், பதிப்பகங்கள் தமக்கான செயலிகள் மூலம் புத்தகங்களை நேரடியாக டிஜிட்டலில் வெளியிடும்.) 

அதாவது வாசிப்பு பெரிதாக கூடவும் இல்லை, குறையவும் இல்லை. அது ஒரு பண்பாட்டு சிக்கல். இங்கு என்றைக்குமே பெரிதாக வாசிக்கும் சூழல் இருந்ததில்லை. ஆனால் கேரளாவில் நிலைமை எப்படி என நாம் விசாரித்து பார்க்கலாம். அங்கு புத்தக விறபனை பெரிதாக சரிந்துள்ளதா என கேட்கலாம். தாமஸ் ஜோசப் எனும் நோயினால் நலிவுற்ற மலையாள படைப்பாளியைப் பற்றி குறிப்பொன்றில் ஷாஜி இந்த படைப்பாளியின் நூல் ஒன்றை அவரது நண்பர்கள் வெளியிட்டு அதிலிருந்து வரும் பணத்தினால் அவருக்கு உதவப் போவதாக சொல்லுகிறார். இதை நீங்கள் தமிழில் பண்ண முடியாது. இங்கு ஒரு எழுத்தாளனின் புத்தகங்களை பிரசுரிப்பதே பெரிய சேவை. அதில் இருந்து வரும் வருமானத்தைக் கொண்டு அவனுக்கு ஒரு வேளை சோறு மட்டுமே வாங்கித் தர முடியும். மருத்துவ சிகிச்சை எல்லாம் சாத்தியமில்லை. ஆக, கேரளாவின் வாசிப்பு சூழலும் ஒரேயடியாக மண்ணோட மண்ணாகவில்லை என தெரிகிறது. (நண்பர்கள் அமெரிக்காவிலும் பிரான்சிலும் நிலைமை என்ன எனவும் விசாரிக்கலாம்.)

காணொளிகளின் தாக்கம் பற்றியும் இறுதியாக பேச வேண்டும். ஒரு கருத்தை எழுதி பிரசுரிக்கும் அளவுக்கு அதை காணொளியாக பதிவு பண்ணி பதிவேற்றுவது சுலபமாக இல்லை. மேலும் எழுத்தில் உள்ள ஒரு anonymity காணொளியில் இல்லை. காணொளி இன்று ஒரு நல்ல பாதை. அதிக பேரை போய் சேர முடிகிற பாதை. ஆனால் அது எழுத்தை முழுக்க அழித்து விடும் என நான் நம்பவில்லை. .தா., நீங்கள் ஒரு கவிதையை பற்றி ஒரு காணொளி வெளியிட்டால் அதை பார்க்கிறவர்களின் எண்ணிக்கை வெகுவாக கூடி விடாது. ஆனால் பாஜகவின் சங்கியாக மாறி (மாரிதாஸ் போல) பரபரப்பான விசயங்களை பேசி காணொளி வெளியிட்டால் அது அதிக பேர்களை போய் சேரும். ஏனென்றால் அதுவே அதற்கு சரியாக ஊடகம். முன்பு முச்சந்தி கட்சி பிரசங்கிகள் எடுத்தும் கொண்டிருந்த இடத்தை (எழுத்தை விட) காணொளியே சரியாக அளிக்க முடியும் இல்லையா? அந்த இடம் இலக்கியத்துக்கான இடம் அல்ல. அந்த நேரமும் இலக்கியத்தின் நேரம் அல்ல.

இறுதிக்கும்இறுதியாகஒரு விசயத்தை ஏற்கத் தான் வேண்டும். நீண்ட தீவிர உரையாடல்களுக்கு எதிரான ஒரு சிதறல் மனநிலையை இன்று ஊடகங்கள் கட்டமைக்கின்றன. இது நமது பண்பாட்டை பலவிதங்களில் பாதிக்கும். ஒருவேளை பல லட்சம் பேர் இலக்கியமும் தத்துவமும் படிக்கிற ஒரு ஆரோக்கியமான நிலையை எதிர்காலத்தில் தமிழகம் அடையாமல் இந்த சூழல் தடுக்கலாம். உலகம் முழுக்க இதன் தாக்கம் இருக்கும். ஆனால் இதையும் நாம் அறுதியாக கூறி விட முடியாது. தத்துவஞானி ஸிஸெக் அமெரிக்காவில் ஒரு அரங்கில் உரையாற்றினால் அதைக் காண அங்கும் ஆயிரக்கணானோர் காசு கொடுத்து திரள்கிறார்கள். அது பற்றி செய்தி வரவும் செய்கிறது


பொழுதுபோக்கும் அறிவுச்செயல்பாடுகளும் இன்று தழைக்கின்றன. “வாழத்தான் யாருக்கும் நேரமில்லாமல் போகிறது!

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...