Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

ஏன் இதைப் பற்றி யாரும் பேசுவதில்லை?


நேற்று Newsclick தளத்தில் வெளியான ஒரு முக்கியமான பேட்டியை பார்த்தேன்

 காஷ்மீரில் இன்று வாழும் மக்களில் 40% பேர் மனநோயால் (post-traumatic syndrome, மன அழுத்தம்) பாதிக்கப்பட்டுள்ளதைப் பற்றி உளவியலாளர் மற்றும் பேராசிரியரான ஷோபனா சோன்பர் பேசுகிறார். நான் இத்தனை நாள் கவனிக்காதிருந்த ஒரு விசயம் இது - காஷ்மீரின் தீவிரவாதம், பொருளாதாரம், தனிநாடு கோரிக்கை, சுதந்திரம், கருத்துரிமை, ராணுவ அத்துமீறல் பற்றி பேசுமளவுக்கு அங்குள்ள மக்களின் மனநலம் பற்றி நாம் யோசிப்பதில்லை.

 மனநோய் என்பது உடல் காயத்தை விட ஆபத்தானது, அதிக வலி ஏற்படுத்துவது, சமூகத்தையும் அடுத்த தலைமுறையையும் தீவிரமாக பாதிப்பது. அதுவும் ஒரு சமூகத்தின் சுமார் நேர்பாதி மக்கள் மன அழுத்தத்திலும் இன்னபிற மனப்பிரச்சனைகளிலும் இருக்கும் போது அவர்களின் நடவடிக்கை, சமூக எதிர்வினைகள் எப்படி இருக்கும் என பேட்டியாளர் ஷோபனாவிடம் கேட்கிறார். மக்கள் அப்படியே உறைந்து போயிருக்கிறார்கள் என அவர் பதிலளிக்கிறார். அவர்கள் தம்மைச் சுற்றி நிலவும் ஒடுக்குமுறை, அநியாயம், கொடுமைகள், அத்துமீறல், வன்முறை, கருத்துரிமை இன்மை ஆகியவற்றுக்கு எதிர்வினையாற்றுவதில்லை; அவர்கள் கண்ணிருந்தும் குருடர்கள் போல, காதிருந்தும் செவிடர்கள் போல இருக்கிறார்கள்.

 நாம் காணும் தெருவில் நின்று கல்லெறியும் போராளிகள் அந்த சமூகத்து மக்களை முழுக்க பிரதிநுத்துவப்படுத்துவதில்லை; அவர்கள் ஒரு சிறுபகுதி மட்டுமே. பெரும்பகுதி மக்கள் நுண்னுணர்வு மங்கிப் போய் காய்கறிகளாக மாறிப் போயிருக்கிறார்கள். இதற்கான பொறுப்பு நமது ராணுவத்தையும் பொறுப்பற்ற அரசுகளையுமே சேரும். காஷ்மீர் மக்கள் அனுபவிக்கும் இந்த உளச்சிதைவானது பல தலைமுறைகளாய் நீடிப்பது; போர்ச்சூழல்களில் இருக்கும் மக்கள், அங்கிருந்து தப்பி வாழும் அகதிகளிடம் நாம் காணும் வன்முறைத் தாக்கம், உளப்பிரச்சனைகளை நாம் இந்த மக்களிடமும் காண்கிறோம். அதாவது காஷ்மீர் என்பது இந்தியாவின் ஈழம்; காஷ்மீர் என்பது இந்தியாவின் அப்கானிஸ்தான்; காஷ்மீர் என்பது இந்தியாவின் பாலதீனம். நாம் இந்த மக்களை போர் அகதிகளாகக் காணாமல் சாதாரண குடிமக்களாக (அதுவும் தேசவிரோதிகளாக) காண்பது அபத்தம் மற்றும் அநியாயம்

திரும்பத் திரும்ப இந்த நிலைக்கு காரணம் இவர்களே தானே என பிற மாநில மக்கள், அதுவும் இந்துத்துவ ஆதரவாளர்களும் மோடியின் ரசிகர்களும், கூறுகிறார்களே, இது ஏன் என பேட்டியாளர் வினவுகிறார். இதற்கு ஷோபனா அளிக்கும் பதில் முக்கியமானது.
காஷ்மீரில் நடப்பது ஒரு பெரும் அநீதி என்பது பட்டவர்த்தமானது; ஆனால் பட்டவர்த்தமான அநீதியை எதிர்கொள்ளும் மன உறுதி பெரும்பாலான எளிய மக்களுக்கு இல்லை. அரசும் ஒரு பக்கம் காஷ்மீர் என்பதே இந்தியாவுக்குள் செயல்படும் ஒரு எதிரி தேசம் எனும் சித்திரத்தை கட்டி எழுப்பி விட்டது. நம் மக்கள் இப்போது இருகூறாக பிரிகிறார்கள் - ஒரு பக்கம் அவர்களின் மனம் கசிகிறது; மறுபக்கம் அவர்கள் இந்த அரசு மற்றும் தேசியவாத உணர்வுடன் ஒன்றிப் போகிறார்கள். எந்த பாசிச அரசும் மக்களும் சர்வாதிகார தலைமையும் தம்மை ஒன்றில் இருந்து மற்றொன்று பிரிக்க முடியாதபடி பின்னிப்பிணைந்திருப்பதான ஒரு நிலைமையை ஏற்படுத்தும். அதாவது மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது அவர் ஒரு தலைவர், நாம் மக்கள்; ஆனால் இன்று மோடியின் கீழ் அப்படி அல்ல - மோடியே மக்கள்; மக்களே மோடி. ஏனப்படி? மோடி தன்னை ஒரு தனிமனிதராக அல்ல, இந்த தேசத்தின் ஒரு உருவகமாக கட்டமைத்திருக்கிறார் - இந்தியால், இந்து மதத்தால் கட்டமைக்கப்பட்ட ஒரு தேசிய அடையாளத்தின் ஒரே உருவகம் அவர்; அந்த அடையாளத்துக்குள் வர விரும்பும் ஒவ்வொருவரும் தம்மை மோடியாகவே உணர முடியும்.

மேலும் மோடி இன்று இந்த தேசம் முழுமையையும் தன் அதிரடி முடிவுகளால் பொருளாதார குழப்பங்களில் ஆழ்த்தி, தன் தேசியவாத கதையாடல்களால் சிறைவைத்திருக்கிறார் - ராணுவப்படைகள் காஷ்மீரை ஆக்கிரமித்தால் காவிப்படைகள் இந்தியா முழுமையையும் ஆக்கிரமிக்கின்றன. இப்படி சிறைவைக்கப்பட்ட மக்கள் சதா ஒரு பதற்றத்தில் இருப்பார்கள்; அச்சமே அவர்களே வழிநடத்தும் - வெளியில் இருந்து யாரோ தாக்கப் போகிறார்கள் எனும் அச்சம்; எதிர்கால வாழ்க்கைக்கு உத்தரவாதம் இல்லை எனும் அச்சம். இத்தகைய மக்கள் தம் பலவீனத்தை போக்க ஒரு பலமுள்ள தலைமையை, ஒரு சர்வாதிகாரியை, நாடுவார்கள் (இதை Stockholm syndrome என்பார்கள்). இப்படித் தான் மோடி ஒரு பீதியை கிளப்பி அதன் அடிப்படையில் தனக்கான ஆதரவு அலையை உருவாக்கி இருக்கிறார்.

இப்படி ஏற்கனவே கடும் அழுத்தத்தில் இருக்கும், பதற்றமான மக்கள் தொகை தனக்கு ஒரு உடனடி எதிரியை தேடும். இப்போதைக்கு அந்த எதிரி இஸ்லாமியர். காஷ்மீர் என்பது தேசவிரோத கும்பல் என இந்த அரசும் ஊடகங்களும் ஒரு சித்திரத்தை உருவாக்கிய நிலையில் பொது மக்களால் ஒரேயடியாய் காஷ்மீரை சாடவும் முடியாது - அங்கு நிகழ்வது அநீதி என மக்கள் உணர்கிறார்கள்; ஆனால் ஆதரிக்கவும் முடியாது; அதற்கான அக உறுதியும் துணிவும் மக்களுக்கு இல்லை; அது தம்மையே சாடுவதாக மாறி விடும் (மோடியே மக்கள், மக்களே மோடி) - மேலும் இந்த பொதுஜனங்களே கிட்டத்தட்ட (சமூக பொருளாதார) கைதிகள் தானே. கைதிகள் என்றைக்காவது பக்கத்து சிறை கைதிகள் பற்றி கவலைப்படுவார்கள் சொல்லுங்கள்?

ஆக, இந்தியர்கள் பூனையை போல கண்ணை மூடி தூங்க முயல்கிறார்கள்; அப்படி செய்தால் காஷ்மீர் பிரச்சனையும் அங்குள்ள அறவீழ்ச்சியும் மனித உரிமை மீறல்களும் மறைந்து விடும் என நினைக்கிறார்கள். பேஸ்புக், டி.வி, சினிமா, போதை, கொண்டாட்டம் என மூழ்கி கசப்பான விசயங்களை தவிர்க்க நினைக்கிறார்கள். ஏற்கனவே மோடியை ஆதரிப்பதாய் முடிவெடுத்துள்ளவர்களோ கண்ணை மூட முடியாமல் கண்மூடித்தனமாய் காஷ்மீரில் நடப்பது முழுக்க நியாயம் தான் என வாதிட முயல்கிறார்கள் இரண்டுமே தற்காப்பு நடவடிக்கைகளே என ஷோபனா சொல்கிறார்.

ஈழப்போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களை நோக்கிநீங்களாகவே உங்களுக்கு உண்டு பண்ணினது தானே இது?” என நாம் ஏன் கேட்பதில்லை என நான் அப்போது யோசித்தேன். ஏன்?
ஏனென்றால் ஈழப்போர் அல்லது வேறு எந்த போரையும் நாம் இரு தரப்பினருக்கு இடையிலான மோதல், அதில் பொதுமக்கள் இரையாகிறார்கள் எனப் பார்த்தோம். ஆகையால் உலகம் முழுக்க இருந்த ஆதரவுக்கரங்கள் இம்மக்களுக்கு நீண்டன. ஆனால் காஷ்மீரில் நடப்பது சகஜமாக்கப்பட்ட ஒரு அன்றாட யுத்தம் - சதா உங்களை பீதியில், கண்காணிப்பில் வைத்து கடும் அழுத்தத்துக்கு உள்ளாக்கும் யுத்தம்; அங்கு ராணுவ வன்முறை என்பது நேரடியாக அல்ல மறைமுகமாகவே நடக்கிறது; மறைமுக தாக்குதல் என்பது கூடுதலான பாதிப்பை, காயங்களை ஏற்படுத்துவது. ஒரு போர்க்களத்திலோ, நெருக்கடி சமயத்தில் ஒரு மாநிலத்திலோ ராணுவத்தை கொண்டு வந்து குவிக்கலாம். ஆனால் பல பத்தாண்டுகளாக காஷ்மீரின் தெருக்களில் ராணுவம் பொதுமக்களை விட அதிகமாய் தோன்றுகிறார்கள்; அவர்களே அந்த மண்ணை ஆக்கிரமிக்கிறார்கள். எங்கெங்கும் திரும்பினும் ராணுவம், துப்பாக்கி, தடுப்பரண் எனும் போது அங்குள்ள மக்களுக்கு தாம் சதா போர்முனையில் கைதிகளாய் வைக்கப்பட்டுள்ள உணர்வு ஏற்படும். மனித உடல் என்பது தனக்கான அந்தரங்க வெளியை, கண்காணிக்கப்படா சுதந்திரத்தை கோருவது. இதனாலே நீண்ட நேரம் போக்குவரத்து நெருக்கடியில் நின்றால் நமக்கு கடும் களைப்பும் எரிச்சலும் ஏற்படுகின்றன (டெஸ்மண்ட் மோரிஸ் தனது Human Zoo எனும் நூலில் இதைப் பற்றி விளக்குகிறார்). 

காஷ்மீர் மக்கள் 24 மணிநேரமும் வெளிவர முடியாத ஒரு போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது கூடுதலாக ஒரு மாதத்துக்கு மேலாக அவர்கள் ஒட்டுமொத்தமாக சிறைவைக்கப்பட்டிருக்கிறார்கள் - தொலைதொடர்பு, இணையம் தடை செய்யப்பட்ட நிலையில் அடிப்படையான மருத்துவ வசதிகள் கூட இன்றி அவர்கள் கடும் ஒடுக்குமுறையின் கீழ் இருக்கிறார்கள். 40% மேற்பட்ட மக்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்குமளவுக்கு அங்கு உளவியலாளர்கள் உண்டா? மருத்துவ அமைப்புகள் உண்டா? இல்லை - பதிலுக்கு மோடி அந்த மொத்த மாநிலத்தையும் ஒரு மனநல விடுதியாக மாற்றி வைத்திருக்கிறார்

இப்போது காஷ்மீரியருக்கும் பிற இந்தியர்களுக்கும் முன்னுள்ள ஒரே தீர்வு இதை ஒரு (கலாச்சார) மனநலப் பிரச்சனையாக ஏற்பது, இந்த அரசு மொத்த தேசத்தையும் ஒரு மனநல மருத்துவமனையாக மாற்றி வருவதை ஒப்புக் கொள்வது. அப்போது மட்டுமே நாம் தப்பிக்க முடியும்!


காணொளியைப் பார்க்க: https://youtu.be/rzJo-3_8Seg

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...