சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு நான் ஓசூர் அருகே என் நண்பன் பணிபுரியும் ஒரு தனியார் பள்ளிக்கு சென்று பார்த்தேன். அன்றே அவர்கள் நவீன வசதிகளுடன் பார்க்க வியப்பு தரும் வகையில் வகுப்பறைகளை வடிவமைத்திருந்தார்கள். (நிச்சயமாய்) வியந்தேன். ஏனென்றால் அன்று நான் வேலை செய்த கல்லூரிகளில் கூட அத்தகைய வசதிகள் இல்லை. அதன் பிறகு திருச்சியில் ஒரு பிரசித்தமான தனியார் பள்ளிக்கு சில முறைகள் சென்று நவீன கவிதை குறித்து பட்டறைகள் நடத்தினேன். அந்த பள்ளியின் கட்டமைப்பு, அது தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து அறிவுத்துறைகள், கலைத்துறைகளை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவதை பாராட்டினேன். என் குழந்தைப் பருவத்தில் என் பள்ளியில் நான் ஒரு எழுத்தாளனையோ கலைஞனையோ கண்டதில்லை; நான் நவீன இலக்கியத்தை வெளியே தேடி அடைய வேண்டியிருந்தது. எனக்கு 12 வயதிருக்கும் போது மனுஷ்யபுத்திரன் என் வகுப்புக்கு வந்து நவீன கவிதையை பற்றி பேசினாலோ ஒரு நாட்டுப்புற கலைஞர் கூத்து வடிவம் பற்றி பயிற்சி வழங்கினாலோ அது ஒரு அபாரமான திருப்புமுனையாக எனக்கு இருந்திருக்கும் தானே.
ஆனால் நான் அன்றே மற்றொரு சிக்கலையும் இத்தகைய பள்ளிகளில் கவனித்தேன் - அவர்கள் அறிவு, கலை ஆகியவற்றை ஒரு வியாபார பண்டமாக, வாழ்க்கை வெளியே இருக்கும் ஒரு வாங்கத்தக்க உறையிலிட்டு முத்திரை பதித்த பொருளாக (சாக்லேட், லேஸ் சிப்ஸ் போல) காண்கிறார்கள். அவர்கள் தம் வியாபார சூழ்ச்சிக்கு ஆளுமைகளை ஒரு விளம்பர கருவிகளாக பயன்படுத்துகிறார்கள் என்பது. இது எனக்குள் ஆழமான கசப்பை ஏற்படுத்தியது.
மற்றொரு பக்கம் இந்த மாணவர்களை படிப்பின் பெயரில் சுயமாய் யோசிக்கவோ செயல்படவோ விடாமல் கிட்டத்தட்ட சிறைவைத்து அன்றாடம் தேர்வு எழுத வைத்து படிப்பை ஒரு வதை அனுபவமாக மாற்றிக் கொண்டிருந்தார்கள். அதாவது ஒருநாள் ஒரு அறிவுஜீவி வந்து வண்ணதாசனின் கதையைப் பற்றியோ ஒரு அறிஞர் வந்து சாக்ரடீஸ் பற்றியோ பேசுவார்கள்; இதன் அடுத்த கட்டம் இவர்கள் சொந்தமாய் சிந்திக்க, விவாதிக்க, படைக்க சந்தர்பங்களை உருவாக்கி அதன் வழி அவர்களின் அறிவையும் ஆளுமையையும் மேம்படுத்துவதாக இருக்க வேண்டும். இலக்கியமும் தத்துவமும் முன்னிறுத்துவது இத்தகைய சுதந்திரமான, சுய-வளர்ச்சி வாழ்க்கை முறையையே; ஆனால் இந்த பள்ளிகளிலோ நீங்கள் எந்த தத்துவத்தை அறிமுகப்படுத்துகிறீர்களோ அதற்கு நேர்மாறான வாழ்க்கைமுறையை குழந்தைகள் மீது திணிக்கிறீர்கள். நாளும் பொழுதும் அவர்கள் மனனம் செய்து, தேர்வை மட்டுமே இலக்காக வைத்து பயிற்சிகள் எடுத்து சம்பாதிக்கும் கருவிகளாக உருவாக்கப் படுகிறார்கள்; அவர்களின் அறிவும் படைப்பாளுமையும் இவ்வாறு மழுங்கடிக்கப்படுகின்றன. இந்த மேளாவின் நடுவே சித்தார் இசைக்கவும் ஆலாபனை பண்ணவும் பெயர்பெற்ற கலைஞர்களையும் படைப்பாளுமைகளையும் இந்த பள்ளி நிர்வாகங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன என அப்போது நினைத்தேன்.
சமீபத்தில் நான் மற்றொரு பள்ளிக்கு சென்றேன் - இது மிகச்சிறிய தனியார் பள்ளி. ICSE பாடத்திட்டம். முன்பு நான் பார்த்தது போன்றே துலங்கும் நவீன ஸ்மார்ட் வகுப்பறைகள். இயந்திர ஒழுங்குடன் மாணவர்கள் பாடங்களை, கலைகளை (தபலா, கீபோர்ட் என) பழகுகிறார்கள்; விளையாடுகிறார்கள்; கராத்தே பயில்கிறார்கள். இனிமையாக பேசும், மனதை துள்ள வைக்கும் இயல்பு போன்ற பட்டாம்பூச்சிகள் இந்த குழந்தைகள். இவர்களுடன் சில மணிநேரங்கள் இருந்தாலே சில மாதங்களுக்கான புத்தணர்ச்சியை பெறுவீர்கள். பள்ளி முடிந்ததும் அவர்கள் தம் ஆசிரியர்களுக்கு “பை மாஸ்டர்” என தவறாமல் சொல்லி விடைபெறுகிறார்கள். பிள்ளைகள் தாறுமாறாய் ஓடுவதோ கத்தி கூப்பாடு இடுவதோ இல்லை - இந்த அம்சத்தை நான் ஆரம்பத்தில் ரசித்தாலும் இது சரியில்லையே என போகப்போக பிசிறு தட்டியது.
பின்னர் இந்த குழந்தைகளில் சிலரிடம் பேசிய போது ஒன்றை கவனித்தேன் - நான் என் கிராமத்தில், சென்னையின் எளிய குடியிருப்புகளில், நான் வேலை செய்த அடித்தட்டு மக்கள் அதிகம் வரும் கல்லூரிகளில் கண்ட ஒரு தனித்துவம், சுயமான பார்வை, தன்னிச்சையாய் தன்னை வெளிப்படுத்தும் விளையாட்டுத்தனம் இவர்களிடம் இல்லை. இவர்கள் வெளியில் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த ஒரு பிரக்ஞையை சின்ன வயதிலேயே (ஐந்து வயதில் இருந்தே) பெற்று விடுகிறார்கள். இவர்கள் ஓடினால் ஒரு வரிசையிலே “சீராக” ஓடுவார்கள்; இவர்கள் சிரித்தாலும் ஒரு குறிப்பிட்ட அலைவரிசையிலே சிரிப்பார்கள். இவர்களிடம் ஒரு வெளிநபர் கேள்வி கேட்டால் சொல்லிக்கொடுத்தது போல கச்சிதமாக பதிலளிக்கிறார்கள். இவர்களுக்குள்ளும் ஒரு குறும்புத்தனம், தன் போக்கில் மனதைப் பாய விடுவது, வெளியுலகின் போக்குகளுக்கு தன்னை ஈடுகொடுக்கும் விருப்பு, ஒவ்வொரு நொடியும் தன்னை புதிதாக உருவாக்கிக் கொள்ளும் தன்மை இருக்கலாம். ஆனால் அப்படியே எப்போதும் இருக்க முடியாதபடி அவர்கள் 24 மணிநேரமும் ஒரு கண்காணிப்பு சிறையில் வைக்கப்படுகிறார்கள் (இவர்களின் “ஸ்மார்ட்” வகுப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் வைத்திருக்கிறார்கள்). யோசிக்கவே முடியாதபடி ஏதாவது ஒரு ஆக்டிவிட்டி இவர்களுக்கு ஒவ்வொரு நொடியும் தரப்படுகிறது. ஒரே மைதானத்தில் சில நூறு குழந்தைகளை நிறுத்தி வைத்து ஒரே நேரத்தில் கராத்தேவும் ஆரோக்கியத்துக்கான சில பயிற்சிகளையும் வழங்குகிறார்கள். அது என்னவென்றே தெரியாமல் அவர்கள் கைகால்களை நீட்டி கத்துகிறார்கள்; அந்த நேரங்களில அவர்கள் தன்னிச்சையாக உலகை கவனிக்கவோ, சக குழந்தைகளிடம் சேட்டை பண்ண, சண்டை போட, பேசி பழகி புது சொற்கள், கற்பனையான உலகங்களை உருவாக்க முடியாமல் போகிறது. ஒருநாள் முடிந்ததும் இந்த குழந்தைகள் அடைகிற களைப்பானது இவர்களின் பெற்றோர்கள் தம் வேலையிடங்களில் அடைவதை விட அதிகமானது.
இதன் முடிவில் இவர்கள் வெளிவாழ்க்கைக்கான சில அடிப்படையான திறன்களைப் பெறுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் சுயமாய் சிந்திக்கும் தனித்துவமான ஆளுமைகளாக மலர்வது தடைபடும். இந்த மாதிரி பள்ளிகளில் படித்திருந்தால் நான் இந்த மாதிரி இப்போது ஆகியிருக்க மாட்டேன். மௌனியும் அசோகமித்திரனும் சு.ராவும் ஜெயமோகனின் சாருவும் மனுஷ்யபுத்திரனும், அ.மார்க்ஸும், ராஜ் கௌதனமனும், ராஜன்குறையும், ஸ்டாலின் ராஜாங்கமும் சற்றுக்கு பின்னுக்கு சென்றால் பெரியாரும் அயோத்திராஸ் பண்டிதரும் பாரதியும் முழுக்க வேறுமாதிரி “உருவாகி” இருப்பார்கள். இந்த தனியார் பள்ளிகளைப் பார்க்கையில் எனக்கு எதிர்கால சமூகம் குறித்த ஒரு கவலை வயிற்றில் பந்தாக திரள்கிறது; ஒரு பயம் என்னை முழுக்க ஆக்கிரமிக்கிறது.
Comments