Skip to main content

தனியார் பள்ளிகள் எனும் மால்கள் (2)

இந்த மாதிரி பள்ளிகளுக்கு வேறு சில அடிப்படையான பிரச்சனைகளும் உண்டு; கல்வி என்பது எதுவோ அதற்கு நேர் எதிரான திசையில் இவை படிப்பையும் அறிதலையும் கொண்டு செல்கின்றன.

கல்வி என்பது ஒரு மனிதன் தனக்குள் நிகழும் இயல்பான அறிதலுக்கு ஒரு வடிவம் கொடுப்பது; தான் அறிந்தவற்றை வெளிப்படுத்த, அடுத்து சமூகத்துக்கே படிப்பிக்க பயில்வது. முக்கியமாக: கல்வி என்பது ஒரு சில தகவல்களையோ திறன்களையோ குழந்தைகளிடம் திணிப்பதில்லை. இன்றைய கல்வி நிலையங்கள் கல்வியை ஏதோ சிரிஞ்சினால் மருந்தை செலுத்துவத்தை போல மாணவர்களுக்குள் செலுத்த முயல்கிறார்கள். இப்படி எதை ஏன் செலுத்த வேண்டும் என்பது குறித்தும் இவர்களுக்குள் தெளிவில்லை. எதை செலுத்தினால் ஆதரவு கிடைக்குமோ, எதை செலுத்தினால் குழந்தைகள்மகிழ்வார்களோ”, எதை செலுத்தினால் அவர்கள் எதிர்காலத்துக்கு ஏற்றமாதிரி மாறுவார்களோ அதை செலுத்துகிறார்கள்


நீங்கள் ஒரு மருத்துவரிடம் செல்கிறீர்கள். அவர் உங்களுக்கு திருப்தி தரும் வகையிலான மருந்துகளை மட்டும் தந்தால், ஒரு வாடிக்கையாளர்களாக உங்களை குஷிப்படுத்துவதே தன் இலக்கு என செயல்பட்டால் உங்கள் கதி என்ன? அதோகதி தான். இன்றைய தனியார் பள்ளிகள் நம் குழந்தைகளுக்கு பண்ணுவது இதைத் தான்.

இன்று நாம் பிறந்து ஆறு மாதங்களான குழந்தையிடம் இருந்தே இந்த ஆபாச பழக்கத்தை ஆரம்பிக்கிறோம் - அவர்களுக்கு ஸ்மார்ட் போன்களில் காணொளிகளை காண்பிக்கிறோம். மெல்ல மெல்ல இக்குழந்தைகள் ஸ்மார்ட் போன் போதைக்கு ஆட்படுகிறார்கள். உங்கள் கையில் இருந்து போன்களை தட்டிப்பறித்து அதை நீங்கள் அனுமதிக்க்காவிடில் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுகின்றன. அடடா விளையாட்டு வினையைக் விட்டதே என கவலைப்படுகிறீர்கள். இப்போது இந்த குழந்தைகளை வேறு இயல்பான காரியங்களில் ஈடுபடுத்தலாம் என்றால் இந்த குழந்தைகளால் சாதாரண விளையாட்டுகளில், எளிய அன்றாட நிகழ்வுகளில் தொடர்ந்து மனத்தை செலுத்தி மகிழ முடிவதில்லை என அறிகிறீர்கள். இவர்களின் மனம் ஒரு நிமிடத்துக்கு மேல் எதிலும் நிலைப்பதில்லை. தொடர்ந்து யுடியூப் நிகழ்ச்சிகளை ஸ்குரோல் செய்தும் மொபைலில் விளையாடியும் அவர்கள் அப்படி மாறிப் போயிருக்கிறார்கள். குழந்தைகளை, அவர்களின் கவனச்சிதறலை சமாளிக்க முடியாமல் பெற்றோர்கள் அவர்களை மூன்று மூன்றரை வயதில் இருந்தே பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள். அங்கு என பண்ணுகிறார்கள்?
 அங்கும் இந்த பிள்ளைகளை அமர வைத்து அதே யுடியூப் காணொளிகளை பெரிய திரையில் காண்பிக்கிறார்கள். இடையிடையே பாட்டுப்பாடி எதையாவது கற்பிக்கவும் முயல்கிறாரக்ள். ஆனால் குழந்தைகளின் மனம் எதிலும் ஈடுபடுவதில்லை. தொடர்ந்து பளீரென்ற வண்ணங்களை, அதிரடி செயல்பாடுகளை, உணர்ச்சிகளைத் தூண்டும் காணொளிகளைக் கண்டு கண்டு அவர்களுக்கு அலுத்துப் போய் இப்போது அதிலும் ஆர்வம் வருவதில்லை; அவர்களின் நரம்பு மண்டலம் இயல்பான விசயங்களால் தூண்டப்படுவதில்லை. நான் ஒரு ஸ்மார்ட் வகுப்பறைக்கு சென்று பார்த்த போது நாற்பது பிள்ளைகளில் ஒரு பிள்ளை மட்டுமே பத்து வினாடியாவது திரையை பார்க்கிறது என்பதை கவனித்தேன். பிற பிள்ளைகள் தம் வகுப்புக்கு வந்திருக்கும் புது ஆட்களை கூட கவனிப்பதில்லை. ஒரு நிமிடத்தில் பத்து இடங்களுக்கு அவர்கள் விழிகள் போய் வருகின்றன; ஆனால் ஒன்றிலும் ஊன்றி நிற்பதில்லை. ஒரு அழகான பைத்திய விடுதிக்கு போயிருப்பதை போல உணர்ந்தேன். (ஆனால், விசித்திரமாக, இங்கிருந்தால் உங்களுக்கு கசப்பை விட ஒருவித உற்சாகம் தொற்றும். அதற்குக் காரணம் இக்குழந்தைகளின் முழுக்க மழுங்கி விடாத குழந்தைமையின் மலர்ச்சி.)

இந்த பிள்ளைகள் வளர வளர பள்ளிகளும் கல்லூரிகளும் இவர்களுக்கான அறிவை இவர்களின் இந்த அடிப்படையான பிழையான கவனமின்மை ஆளுமைக்கு ஏற்றபடி தகவமைத்து அளிப்பார்கள். இவர்கள் அன்றாடம் ஒரு நூறு விசயங்களைக் கற்பார்கள். எதிலிருந்தும் காத்திரமாக ஒன்றை பெற முடியாது. ஏனென்றால் இவர்களை வாடிக்கையாளர்களாக நடத்தும் கல்வி அமைப்புகள் இவர்கலின் பிழையான மனப்போக்கை, கோணலான வாழக்கைப் போக்கை மேலும் சிக்கலாக்கி அதை சுரண்டி வியாபாரம் பார்க்கின்றன

நாளை இந்த பிள்ளைகள் கல்லூரிக்கு வரும் போதும் பேராசிரியர்களான நாங்கள் மேலோட்டமாக நிறைய தகவல்களை அவர்களுக்கு அளிப்போம். ஒரு தெளிவான லட்சியத்துடன், சமூக அரசியல் நம்பிக்கையும் இவர்களை வடிவமைக்காமல் இவர்களின் தேவைக்கு (உடனடி திருப்தி, கேளிக்கை, கவனத்தை திரட்டாமல் ஓடிக்கொண்டே இருப்பது) ஏற்ப வகுப்புகளை நடத்துவோம். இதே போன்று பவர் பாயிண்ட், காணொளிகள், ஆக்டிவிட்டிகள் என நமது கார்ப்பரேட் கல்லூரி வகுப்பறைகள் இருக்கும். ஜெர்மானிய தத்துவத்தை கற்க வேண்டுமா? ஒரே மணிநேரத்தில் சில காணொளிகள் காட்டி, ஜோக்குகள் சொல்லி, சில விளையாட்டுகளை ஆட வைத்து அவர்கள் அனைத்தையும் கற்று விட்டதாக ஒரு பாவனையை காட்டி முடித்து விடுவோம். இவர்கள் வெளியே சென்று நுனிநாக்கு ஆங்கிலத்தில் அனைத்தைப் பற்றி மேலோட்டமாக பேசி விடும் போலி மனிதர்களாக ஆவார்கள்


Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...