இந்த மாதிரி பள்ளிகளுக்கு வேறு சில அடிப்படையான பிரச்சனைகளும் உண்டு; கல்வி என்பது எதுவோ அதற்கு நேர் எதிரான திசையில் இவை படிப்பையும் அறிதலையும் கொண்டு செல்கின்றன.
கல்வி என்பது ஒரு மனிதன் தனக்குள் நிகழும் இயல்பான அறிதலுக்கு ஒரு வடிவம் கொடுப்பது; தான் அறிந்தவற்றை வெளிப்படுத்த, அடுத்து சமூகத்துக்கே படிப்பிக்க பயில்வது. முக்கியமாக: கல்வி என்பது ஒரு சில தகவல்களையோ திறன்களையோ குழந்தைகளிடம் திணிப்பதில்லை. இன்றைய கல்வி நிலையங்கள் கல்வியை ஏதோ சிரிஞ்சினால் மருந்தை செலுத்துவத்தை போல மாணவர்களுக்குள் செலுத்த முயல்கிறார்கள். இப்படி எதை ஏன் செலுத்த வேண்டும் என்பது குறித்தும் இவர்களுக்குள் தெளிவில்லை. எதை செலுத்தினால் ஆதரவு கிடைக்குமோ, எதை செலுத்தினால் குழந்தைகள் “மகிழ்வார்களோ”, எதை செலுத்தினால் அவர்கள் எதிர்காலத்துக்கு ஏற்றமாதிரி மாறுவார்களோ அதை செலுத்துகிறார்கள்.
நீங்கள் ஒரு மருத்துவரிடம் செல்கிறீர்கள். அவர் உங்களுக்கு திருப்தி தரும் வகையிலான மருந்துகளை மட்டும் தந்தால், ஒரு வாடிக்கையாளர்களாக உங்களை குஷிப்படுத்துவதே தன் இலக்கு என செயல்பட்டால் உங்கள் கதி என்ன? அதோகதி தான். இன்றைய தனியார் பள்ளிகள் நம் குழந்தைகளுக்கு பண்ணுவது இதைத் தான்.
இன்று நாம் பிறந்து ஆறு மாதங்களான குழந்தையிடம் இருந்தே இந்த ஆபாச பழக்கத்தை ஆரம்பிக்கிறோம் - அவர்களுக்கு ஸ்மார்ட் போன்களில் காணொளிகளை காண்பிக்கிறோம். மெல்ல மெல்ல இக்குழந்தைகள் ஸ்மார்ட் போன் போதைக்கு ஆட்படுகிறார்கள். உங்கள் கையில் இருந்து போன்களை தட்டிப்பறித்து அதை நீங்கள் அனுமதிக்க்காவிடில் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுகின்றன. அடடா விளையாட்டு வினையைக் விட்டதே என கவலைப்படுகிறீர்கள். இப்போது இந்த குழந்தைகளை வேறு இயல்பான காரியங்களில் ஈடுபடுத்தலாம் என்றால் இந்த குழந்தைகளால் சாதாரண விளையாட்டுகளில், எளிய அன்றாட நிகழ்வுகளில் தொடர்ந்து மனத்தை செலுத்தி மகிழ முடிவதில்லை என அறிகிறீர்கள். இவர்களின் மனம் ஒரு நிமிடத்துக்கு மேல் எதிலும் நிலைப்பதில்லை. தொடர்ந்து யுடியூப் நிகழ்ச்சிகளை ஸ்குரோல் செய்தும் மொபைலில் விளையாடியும் அவர்கள் அப்படி மாறிப் போயிருக்கிறார்கள். குழந்தைகளை, அவர்களின் கவனச்சிதறலை சமாளிக்க முடியாமல் பெற்றோர்கள் அவர்களை மூன்று மூன்றரை வயதில் இருந்தே பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள். அங்கு என பண்ணுகிறார்கள்?
அங்கும் இந்த பிள்ளைகளை அமர வைத்து அதே யுடியூப் காணொளிகளை பெரிய திரையில் காண்பிக்கிறார்கள். இடையிடையே பாட்டுப்பாடி எதையாவது கற்பிக்கவும் முயல்கிறாரக்ள். ஆனால் குழந்தைகளின் மனம் எதிலும் ஈடுபடுவதில்லை. தொடர்ந்து பளீரென்ற வண்ணங்களை, அதிரடி செயல்பாடுகளை, உணர்ச்சிகளைத் தூண்டும் காணொளிகளைக் கண்டு கண்டு அவர்களுக்கு அலுத்துப் போய் இப்போது அதிலும் ஆர்வம் வருவதில்லை; அவர்களின் நரம்பு மண்டலம் இயல்பான விசயங்களால் தூண்டப்படுவதில்லை. நான் ஒரு ஸ்மார்ட் வகுப்பறைக்கு சென்று பார்த்த போது நாற்பது பிள்ளைகளில் ஒரு பிள்ளை மட்டுமே பத்து வினாடியாவது திரையை பார்க்கிறது என்பதை கவனித்தேன். பிற பிள்ளைகள் தம் வகுப்புக்கு வந்திருக்கும் புது ஆட்களை கூட கவனிப்பதில்லை. ஒரு நிமிடத்தில் பத்து இடங்களுக்கு அவர்கள் விழிகள் போய் வருகின்றன; ஆனால் ஒன்றிலும் ஊன்றி நிற்பதில்லை. ஒரு அழகான பைத்திய விடுதிக்கு போயிருப்பதை போல உணர்ந்தேன். (ஆனால், விசித்திரமாக, இங்கிருந்தால் உங்களுக்கு கசப்பை விட ஒருவித உற்சாகம் தொற்றும். அதற்குக் காரணம் இக்குழந்தைகளின் முழுக்க மழுங்கி விடாத குழந்தைமையின் மலர்ச்சி.)
இந்த பிள்ளைகள் வளர வளர பள்ளிகளும் கல்லூரிகளும் இவர்களுக்கான அறிவை இவர்களின் இந்த அடிப்படையான பிழையான கவனமின்மை ஆளுமைக்கு ஏற்றபடி தகவமைத்து அளிப்பார்கள். இவர்கள் அன்றாடம் ஒரு நூறு விசயங்களைக் கற்பார்கள். எதிலிருந்தும் காத்திரமாக ஒன்றை பெற முடியாது. ஏனென்றால் இவர்களை வாடிக்கையாளர்களாக நடத்தும் கல்வி அமைப்புகள் இவர்கலின் பிழையான மனப்போக்கை, கோணலான வாழக்கைப் போக்கை மேலும் சிக்கலாக்கி அதை சுரண்டி வியாபாரம் பார்க்கின்றன.
நாளை இந்த பிள்ளைகள் கல்லூரிக்கு வரும் போதும் பேராசிரியர்களான நாங்கள் மேலோட்டமாக நிறைய தகவல்களை அவர்களுக்கு அளிப்போம். ஒரு தெளிவான லட்சியத்துடன், சமூக அரசியல் நம்பிக்கையும் இவர்களை வடிவமைக்காமல் இவர்களின் தேவைக்கு (உடனடி திருப்தி, கேளிக்கை, கவனத்தை திரட்டாமல் ஓடிக்கொண்டே இருப்பது) ஏற்ப வகுப்புகளை நடத்துவோம். இதே போன்று பவர் பாயிண்ட், காணொளிகள், ஆக்டிவிட்டிகள் என நமது கார்ப்பரேட் கல்லூரி வகுப்பறைகள் இருக்கும். ஜெர்மானிய தத்துவத்தை கற்க வேண்டுமா? ஒரே மணிநேரத்தில் சில காணொளிகள் காட்டி, ஜோக்குகள் சொல்லி, சில விளையாட்டுகளை ஆட வைத்து அவர்கள் அனைத்தையும் கற்று விட்டதாக ஒரு பாவனையை காட்டி முடித்து விடுவோம். இவர்கள் வெளியே சென்று நுனிநாக்கு ஆங்கிலத்தில் அனைத்தைப் பற்றி மேலோட்டமாக பேசி விடும் போலி மனிதர்களாக ஆவார்கள்.
Comments