Skip to main content

பீட்டர் ஹாண்ட்கெ - 2019 நோபல் பரிசு


இந்த ஆண்டுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசை இவர் வெல்லும் வரை இவரைப் பற்றி தெரியாது; என் நண்பர்கள் சிலரிடம் கேட்டுப் பார்த்தேன், அவர்களும் கைவிரித்தார்கள். படித்து தெரிந்து கொண்டேன் - ஆஸ்திரிய எழுத்தாளர். சுமார் ஐம்பது புத்தக்ங்களை எழுதி இருக்கிறார். சரி பாதி போல ஆங்கிலத்தில் மொழியாக்கப்பட்டுள்ளன.


ஹாண்ட்கெ அவர் நாட்டில் இவர் பெரிய பிஸ்தா எழுத்தாளர். ஜெயமோகனைப் போல சதா சர்ச்சைகள் நடுவே வாழ்பவர். குறிப்பாக தனது நாட்டின் வலதுசாரி தீவிர தேசியவாத அரசியலுக்கு விழுந்து விழுந்து ஆதரவு காட்டுபவர்; அதன் பொருட்டு பலரும் ஏற்காத அரசியல் கருத்துக்களை எழுதுபவர்
1991இல் யுகோஸ்லோவியா உடைந்த நிலையில் போஸ்னிய மற்றும் ஹெர்ஸ்கோவின சோசியலிஸ்ட் ரிபப்ளிக் கட்சி தனிநாட்டுக்கான கோரிக்கையை வைத்தது. இதை வலதுசாரி செர்பிய பாரம்பரிய குழுக்கள் எதிர்த்தன. இதை ஒட்டி 1992-95 வரை போஸ்னிய யுத்தம் நடந்தது. செர்பிய படைவீரர்கள் செர்பியாவிலும் ஹெர்ஸ்கோவினாவிலும் குவிந்து ஆக்கிரமித்துக் கொண்டு அங்குள்ள எதிர்ப்பாளர்களை, குறிப்பாக இஸ்லாமியர்களை, வேட்டையாடத் தொடங்கினர். இந்த போரில், இரு தரப்பில் இருந்தும், அப்பாவி மக்கள் சுமார் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டனர். பலர் கடுமையாய் காயம்பட்டனர்; 12,000-20,000 பெண்கள் பாலியல் தாக்குதலுக்கு ஆளானார்கள். செர்பிய படையினரால் 8000 இஸ்லாமிய ஆண்களும் சிறுவர்களும் கொல்லப்பட்டனர்; 25,000-30000 இஸ்லாமியர் இடம்பெயர்ந்து தப்பித்து சென்றனர்.
சர்வதேச அமைப்புகள் பல இந்த படுகொலைகளை இன அழித்தொழிப்பு என பரவலாக விசாரணையும் ஆய்வும் நடத்தி உறுதிப்படுத்தின; செர்பிய தேசியவாத படைகளை கண்டித்தனர்.
இந்த போர் குறித்த ஹாண்ட்கெயின் புரிதல் மாறுபட்டது - ‘இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது அதிகமும் கொல்லப்பட்டதும் பாதிக்கப்பட்டதும் இந்துக்களே, தற்போதைய சூழலிலும் இந்துக்கள் ஒடுக்கப்படுகிறார்கள், இந்து மதம் அவமதிக்கப்படுகிறதுஎன இங்கு வலதுசாரிகள் கோருகிறார்களே அவ்வாறு ஆஸ்திரியாவில் நம்புகிற ஒரு தரப்பை ஆதரிப்பவர் ஹாண்ட்கெ. அவர் இந்த போஸ்னிய யுத்த படுகொலைகளை சர்வதேச சமூகம் ஒருதலைபட்சமாக பார்க்கிறது, கண்மூடித்தனமாய் இஸ்லாமியர்களை ஆதரிக்கிறது என கூறுகிறார். குறிப்பாக இஸ்லாமியர்கள் தம்மைத் தாமே கொன்று கொண்டு அந்த பழியை செர்பிய படைவீரரக்ள் மீது போட்டார்கள் என அவர் 1996இல் Justice for Serbia எனும் ஒரு நீண்ட பத்திரிகை நடுப்பக்க கட்டுரையில் எழுத அது கடும் கண்டனத்துக்கும் சர்ச்சைக்கும் உள்ளானது. அவரது நண்பர்களே ஒரு பக்கம் அவரைத் தாக்க, அதற்கு ஹாண்ட்கெ பதிலடி கொடுக்க, ஹாண்ட்கெவுக்கு சிலர் ஆதரவு கொடுக்க பிரச்சனை ஒரு பூதாகர இலக்கிய-அரசியல் சூறாவளியாக மாறியது. சீண்டினால் புலி ஆகும் பூனை ஹாண்ட்கெ. ஆகையால் அவர் இந்த நீண்ட கட்டுரையை மேலும் வலுப்படுத்தி 136 பக்க புத்தகமாக உடனடியாக வெளியிட்டார். ஊர் ஊராகப் போய் தன் கட்டுரையை பொது மக்களுக்கு வாசித்து காண்பித்தார். இதன் பிறகு அவர் தொடர்ந்து இனப்படுகொலை விவாதங்களின் போது வலதுசாரி செர்பிய கட்சியினரை ஆதரிப்பதை வழக்கமாக்கினார்.
 உலகமே ஏற்றுக் கொண்ட, தெளிவாக ஆவணப்படுத்தப்பட்ட இனப்படுகொலைகளை கூட ஆதரிக்கிறாரே, இவர் ஒரு நுட்பமான எழுத்தாளராக ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் அறவுணர்வு அற்ற கண்மூடித்தனமான அரசியல் பார்வையாளராக இருக்கிறார் என சல்மான் ரஷ்டி, ஸிஸெக் உட்பட பலர் கவலை தெரிவித்து கண்டித்திருக்கிறார்கள்இதற்கு முன்பும் ஏகப்பட்ட (காப்கா விருது) விருதுகள் அங்கீகாரங்களை பெற்றிருக்கிறார். ஆனால் ஒவ்வொரு முறையும் காட்டமாக எதிர்ப்பு வரும். இம்முறை அவருக்கு அளிக்கப்பட்ட நோபல் பரிசுக்கும் உடனடியாக எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

 ஆனால் ஹாண்ட்கெயின் இலக்கிய தகுதியை, ஆகிருதியை யாரும் மறுப்பதல்லை
(இவர் தனது வலதுசாரி தேசியவாத நோக்கில் அமெரிக்கா உட்பட்ட மேற்குலகை கடுமையாய் சாடுபவர். இருந்தும் எப்படி நோபலை அள்ளிக் கொடுத்தார்கள், அதன் அரசியல் உள்குத்து என்ன என்பது விளங்கவில்லை. நண்பர்கள் அறிந்து தெளிவுபடுத்தினால் மகிழ்வேன்.)

ஹாண்ட்கெ பல படங்களுக்கு திரைக்கதை எழுதி இருக்கிறார். இவை கான்ஸ் போன்ற பெரும் விருதுகள் பெற்ற கலைப்படங்கள் (நம்மூர் போல எந்திரனுக்கு எல்லாம் எழுதுபவர் அல்ல). இவரது ஒரு படத்துக்கு விமர்சனம் எழுதிய பத்திரிகை ஒன்று "ஒரு ஆணும் பெண்ணும் பிரிகிறார்கள். அந்த ஆணும் பெண்ணும் தமக்கான பாதைகளில் பொறுமையாக போகிறார்கள். அதன் பிறகு மெதுவாக பல விசயங்கள் நகர்கின்றன. பார்வையாளர்கள் தூங்கப் போய் விடுகிறார்கள்." என கலாய்த்தது. அந்த மாதிரி பரபரப்பான அரசியல் சர்ச்சைகளுக்கு நேர் எதிரான படங்களை எழுதுபவர் போல
சரி இவரது நாவல் ஒன்றை தரவிறக்கி படிப்போமே என The Goalie's Anxiety at the Penalty Kick படிக்கத் தொடங்கினேன்.
நாவல் ஆல்பர்ட் காமுவின் 'அந்நியன்' ஸ்டைலில் உள்ளது - வாழ்க்கையின் எந்திரத்தனம், அர்த்தமின்மை என மெதுவாக ஆனால் சுவாரஸ்யமாக போகிறது. The Taxi Driver படத்தையும் அமெரிக்க மினிமலிச எழுத்தையும் நினைவுபடுத்துகிறது

சிக்கலற்ற எளிமையான சொற்றொடர்கள். இவரை மொழிபெயர்ப்பது சுலபம் எனத் தோன்றியது. முடிந்தால் முதல் அத்தியாயத்தை மட்டும் தமிழாக்கி என் பிளாகில் இடுகிறேன்.


பின்குறிப்பு: நான் ஓரிடத்தில் ஜெயமோகனை குறிப்பிட்டதை வைத்து நான் அவரை இனப்படுகொலையை ஆதரிப்பவர் என சொல்வதாய் யாரும் எண்ண வேண்டாம். இஸ்லாமியர் மீது வலதுசாரிகளால் நடத்தப்பட்ட படுகொலைகளை அவர் நேரடியாக என்றும் ஆதரித்ததில்லை. ஜெயமோகனை நீங்கள் தெளிவான ஒரு இந்து தேசியவாதி என்றும் கூற முடியாது. ஆனால் தமிழ் தேசியவாதத்துக்குப் பதிலாக ஒருமித்த இந்தியா எனும் அடையாளத்தை ஏற்பவர், இலக்கிய தத்துவ பண்பாட்டுத் தளங்களில் செயல்படும் ஒரு புது செவ்வியல்வாதி (neoclassicist) என்றே அவரைப் பார்க்கிறேன். ராஜன் குறை தன் கட்டுரை ஒன்றில் சொல்வதைப் போல ஜெயமோகனிடம் நவதாராளாவாத தேசிய அரசியல் சார்பும் இருக்கலாம். அவர் மிக சிக்கலானவர் என்பதால் எந்த அடைப்புக்குறிக்குள்ளும் அவரை வைத்துப் பார்க்காமல் இருப்பது இலக்கிய வாசிப்புக்கு நல்லது என நினைக்கிறேன்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...