மக்கள் குழம்பிப் போகிறார்கள். ஆனால் ஜாலியாகவும் இருக்கிறார்கள். இப்போது அவர்கள் ஒன்றை கண்டுபிடிக்கிறார்கள் - தெளிவாக கவனமாக பேசுவதை விட உளறலாக முன்னுக்குப் பின் முரணாக பேசுவதே ஜாலியானது, சுதந்திரமானது. ஆக அவர்களில் கணிசமானோர் உளறுவதை ஒரு தனிபாணியாக எடுத்துக் கொண்டார்கள். நாம் என்னதான் வலதுசாரி “சிந்தனையாளர்களின்” உளறலை கேலி செய்தாலும் அவர்களுக்கு இன்று இணையத்திலும் வெளியிலும் கிடைக்கும் அபாரமான ஆதரவை மறுக்க முடியாது. “ஏன் இப்படி சிந்திக்கக் கூடாது? இது சரி தானே?” என மக்கள் இன்று நினைக்கத் தொடங்குகிறார்கள். உதாரணமாக ஒரு புது வண்டியை வாங்கியதும் நீங்கள் எலுமிச்சம் பழத்தை சக்கரத்தின் கீழே வைத்து நசுக்குகிறீர்கள். அதற்கு ஒரு குறியீட்டு முக்கியத்துவம் உள்ளது. ஆனால் அந்த பண்பாட்டுப் போக்கை நீங்கள் நவீன முற்போக்கு, விஞ்ஞான வாழ்வில் பின்பற்றுவதில்லை. நாம் இரு கூறாக பிரிந்து செயல்படுகிறோம். இப்போது ராஜ்நாத் சிங் ரபேல் விமானங்களுக்கு அதே போல எலுமிச்சை நசுக்கி பூஜை செய்யும் போது இந்த குறிப்பிட்ட மக்கள் திரள் அதை பரவலாக ஆதரிக்கிறார்கள்; அதையே ஒரு பக்கம் கிண்டல் செய்யவும் அவர்கள் தவறவில்லை என்றாலும் கூட அது ஒரு அபத்தமாக அவர்களுக்குத் தோன்றாது. ஏனென்றால் வாழ்வின் உள்முரணை எதிர்கொள்ள சிறந்த வழி தடையின்றி உளறுவதே என அவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் எலுமிச்சை நசுக்கி வழிபடுவதை ஏற்கிறார்கள் என இதற்குப் பொருளில்லை. ஏன் இதையும் ஆதரித்து “பகுத்தறிவுவாத அதிகாரத்தை” எதிர்க்கக் கூடாது என நினைக்கிறார்கள்.
டி.வி விவாதங்களில் திருப்பதி நாராயணன் போன்றோர் ஆதாரமே இல்லாமல் எடுத்து விடுவார்கள்; யாராவது சான்று கேட்டால் “அதெல்லாம் இல்ல சார், நான் சொல்றது தான் சரி” என கூலாக சொல்லுவார். ராகுல், ஸ்டாலின் போன்ற பெரிய தலைவர்களைப் பற்றி தயங்காமல் “முட்டாள், துரோகி, உளவாளி” என்றெல்லாம் சொல்லுவார். பாஜக ஆட்சியில் நடந்த நீட், ஜல்லிக்கட்டு சர்ச்சைகளின் போது “இந்த திட்டங்கள், சட்டங்களை முதலில் கொண்டு வந்தது காங்கிரஸ் தானே, பாஜக அல்லவே” என்பார். ஆனால் இப்போது பாஜக இம்முடிவுகளை ஆதரிக்கிறதா எனும் கேள்விக்கு அவர் என்றுமே பதிலளிக்க மாட்டார். இது கூட பரவாயில்லை அவரும் அவரைப் போன்ற வலதுசாரி ஆதரவாளர்களும் நம் டிவி சேனல்களில் பேசுவதைக் கேட்டால் தலையில் அடித்துக் கொண்டு அழத் தோன்றும். சமீபமாக மனுஷ்யபுத்திரன் ஒரு நேரலை விவாதத்தில் தன் கட்டுப்பாட்டை இழந்து “நான் பொறுக்கிகளுடன் உரையாட விரும்பவில்லை” எனக் கூறி விட்டார். அப்போதும் அந்த வலதுசாரி ஆதரவாளர் சிரித்த முகத்துடன் அதை ஏற்றுக் கொண்டார். ஏனென்றால் அது விமர்சனம் அல்ல, அப்படி அழைக்கப்படுவதை அவரைப் போன்றோர் விரும்புகிறார்கள். ஒரு நிதானமான ஆளை அசைத்துப் பார்ப்பதில் கிடைக்கும் சந்தோஷம் இது. இந்த கோணங்கியான, உளறலான விவாதப் போக்கே இந்தியா பூரா பரப்பப்படுகிறது.
நான் முன்பு டிவி விவாதங்களில் திருப்பதி நாராயணனுடன் விவாதித்திருக்கிறேன், காரில் போகும் போது அவருடன் தனிப்பட்ட முறையில் பேசி இருக்கிறேன். டிவியில் வரும் போது அவர் உளறுவார் என்றாலும் நேரில் ரொம்ப தெளிவாகப் பேசுவார். அப்போது தான் நான் புரிந்து கொண்டேன் - இந்தியாவில் உளற விரும்பும் ஒரு மக்கள் தொகைக்கு அவர் தன்னை பிரதிநிதியாக கருதுகிறார்.
பகுத்தறிவுக்கு எதிரான ஒரு கலாச்சார யுத்தம் இன்று நடந்து வருகிறது. அந்த தரப்பை பாஜக நன்கு பயன்படுத்திக் கொள்கிறது. இது புரியாததால் தான் நமக்கு இத்தகைய உளறல்கள் எரிச்சல் தருகின்றன. அமைதியான இடத்தில் விளையாடும் குழந்தைகள் பொருட்களை இட்டு உடைத்து கத்துவதைக் கண்டு பெரியவர்கள் கடுப்பாவதைப் போன்றது இது. இது இப்படித் தான் இருக்கும்!
மேலும் படிக்க

Comments