முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மதம் மாறவோ அல்லது ஒரு மதத்தில் வாழவோ அதன் தத்துவம் தெரிந்திருக்க வேண்டுமா?


ஶ்ரீனிவாசன் தோதாத்ரி தனது முகநூல் பதிவு ஒன்றில் பௌத்தம் தழுவ இருப்பதாக சொன்ன தனது முற்போக்கு நண்பருடனான உரையாடல் ஒன்றை விவரிக்கிறார். தோதாத்ரி அவரிடம் சில அடிப்படையான கேள்விகளைக் கேட்ட போது பௌத்தத்தின் பிரிவுகள், அந்த பிரிவுகளின் தத்துவம், அத்தத்துவங்களுக்கு இடையிலான வேறுபாடுகள் அவருக்கு தெரியவில்லை என்றும், தன் கேள்விகளுக்கு பதிலளிக்க தெரியாமலும், பௌத்தத்தில் புலால் உண்ணவோ வேறு உல்லாசங்களில் ஈடுபடவோ வழியில்லை என அறிந்து அவர் பின்வாங்கியதாகவும் சொல்கிறார். இதை ஒரு பகடிப் பதிவு என தோதாத்ரி நம்புவதன் அபத்தம் ஒரு பக்கம் இருக்கட்டும், இதன் மூலம் அவர் தனக்கு மதம் எப்படி செயல்படுகிறது என்கிற அடிப்படையான புரிதலே இல்லை என்பதையே காட்டுகிறார்.

இந்தியாவில் வாழும் இந்தியர்களில் 99% பேருக்கு இந்து மத தத்துவங்கள் குறித்து எந்த அடிப்படையான புரிதலும் இல்லை. இங்கு அத்வைதியாக வாழும் பலருக்கு தாம் அத்வைதி என்பதே தெரியாது. அப்படி தெரிந்த எத்தனை பேர் The Seven Great Untenables போன்று த்வைதத்துக்கும் அத்வைதத்துக்குமான மோதலை, வித்தியாசங்களை விளக்கும் நூல்களை படித்திருக்கிறார்கள்? விரல் விட்டு எண்ணி விடலாம்


இதன் பொருள் இந்துக்கள் முட்டாள்கள் என்றோ அவர்களுக்கு இந்துவாக இருக்க தகுதி இல்லை என்றோ அல்ல. இதன் பொருள் மதத்துக்கு தத்துவம் அவசியமில்லை என்பதே. குறிப்பாக இந்துமதத்துக்கு
இந்து மதம் ஒரு வாழ்நிலை மதம். அது அப்ரகாமிய மதங்களைப் போல குறிப்பிட்ட விதிமுறைகள், நம்பிக்கைகள், கருத்துக்கள் ஆகியவற்றை புத்தக வடிவாக்கி மக்களை அவற்றை எழுத்து பிசகாமல் படித்து அறிந்து பின்பற்றக் கோருபவை அல்ல. மத்யாமிக பௌத்தம் குறித்து ஓரளவு படித்தவன், நாகார்ஜுனரை தொடர்ந்து வாசித்து அவரைப் பற்றி ஒரு நூல் எழுதி வருகிறவன் என்கிற முறையில், அதன் தத்துவத்தை நிச்சயமாக ஒருவர் பின்பற்ற முடியாது, பின்பற்றினால் சமூக மனிதனாக சுலபத்தில் வாழ முடியாது என உறுதிபட கூறுவேன். ஆக, ஒருவர் எந்த ஒரு தத்துவத்தையும் ஆழ்ந்து படித்து கேள்விகளை எழுப்ப ஆரம்பித்தால் அவர் அந்த மதத்தில் இருந்து வெளியேற வேண்டியது தான்
ஜெ.கிருஷ்ணமூர்த்தி அதைத் தானே செய்தார்? நாகார்ஜுனரும் புத்தரையே மறுப்பவர் தானே? இதனால் தான் பொதுமக்கள் தாம் பின்பற்றுகிற மதத்தின் தத்துவத்தை படிப்பதில்லை. அவர்களுக்கு பல்வேறு துறைகள் சார்ந்து ஆழ்ந்த அறிவிருக்கும், ஆனால் தத்துவத்தை நெருங்குவது ஆபத்தானது, அவசியமற்றது என உள்ளுணர்வு அவர்களுக்கு சொல்கிறது. இதை எல்லா மதங்களுக்கும் சொல்லலாம் எனும் போது பௌத்தம் தழுவுகிறவர் மட்டும் அதன் தோற்றம், அமைப்பு, தத்துவம், கொள்கை பற்றி ஆராய்ந்து அறிய வேண்டிய அவசியம் என்ன? அதுவும் குறிப்பாக பௌத்தம் உங்களை வாழ்க்கைக்குள் விடுதலையை தேடக் கோரும் மதம், படிப்புக்குள் அல்ல எனும் போது

இன்னொரு விசயம் கணிசமான பக்தர்களுக்கு கடவுள் நம்பிக்கையோ கடவுளைத் தேடும் விருப்பமோ இல்லை. இது ஒரு விநோதம், ஆனால் உண்மை.

சரி மதத்தின் பயன், நோக்கம் தாம் என்ன?
மதம் நமது சமூகமாக்கலுக்கு உதவுகிறது. பண்பாட்டை வலுப்படுத்தி தக்க வைக்க உதவுகிறது. இந்தியாவில் அது சாதிய அமைப்பை பாதுகாத்து மேல்சாதியினருக்கு உதவுகிறது. அடுத்து, இறுதியாக, ஏன் வாழ்கிறோம் எனும் கேள்விக்கு குறியீடுகளால் (விக்கிரகம், பூஜை, விழா) பதில் தேட உதவுகிறது. வாழ்வின் வெறுமையை நாம் உணராதிருக்க, சமூக அமைப்பு சிதறாதிருக்க உதவுகிறது. மதம் ஒரு அபின் என நான் கூற மாட்டேன். ஆனால் வாழ்வைக் கடந்த ஒரு நித்தியத்தை கற்பனை செய்ய, ஒரு பராபரத்தின் மீது பழியையும் நம்பிக்கையையும் சுமத்த உதவுகிறது. அடுத்த கட்டமாக இன்று மதம் தேசியவாத அரசியலுக்கும் பரவலாக உதவுகிறது

ஜக்கி வாசுதேவ், நித்தியானந்தா போல (நன்றாகவும் அரைகுறையாகவும்) மதக்கோட்பாடுகளை எளிமைப்படுத்தித் தரும் குருமார்களின் இடம் என்ன
சமூகமாக்கல், அரசியல், சாதி ஒருங்கிணைப்பு, குறியீட்டு புரிதல் ஆகியன தாண்டியும் கேள்விகளும் தேவைகளும் மீந்து நிற்கும் போது ஒரு கார்ப்பரேட் சாமியார் வந்து இன்றைய உளவியல் தேவைகளுக்கு ஏற்ப நமது அத்வைதமும் யோகாவும் கற்றுத் தருகிறார்கள். ஆனால் மிக கவனமாக அது சமூக கட்டமைப்பை சிதைக்காதபடி, சிதறடிக்காதபடி தான் கற்றுக்கொடுக்கிறார்கள்

ஏன் கார்ப்பரேட் சாமியார்கள் இவ்வளவு படோபமாக, செல்வாக்காக தம்மை காட்டிக் கொள்கிறார்கள்? தத்துவத்தின் சாரம் என்பது அனார்க்கிசம். இவர்கள் தமது தோற்றத்தின் படி நமக்கு ஒரு சேதி விடுக்கிறார்கள் - “என்னைப் பின்பற்றினால் நீங்கள் லௌகீக வெற்றிகளை, அதன் வசதிகளை துறக்க வேண்டி வராது. என்னைப் போன்றே நீங்கள் மாற வேண்டுமெனில் வாருங்கள்.” இவர்கள் குளிக்காமல், சடாமுடியுடன், கூட்டமும் பணமும் சேர்ப்பதில் அக்கறையின்றி / பிணங்களைத் தின்று பிணங்களுடன் வாழ்கிறவர்களாகத் தோன்றினால் ஐம்பது பேருக்கு மேல் இவர்களைக் காண செல்ல மாட்டார்கள்.

சரி இதையெல்லாம் தெரிந்திருந்தும் ஏன் ஒருவர் இந்து மதத்தில் இருந்து வெளியேற வேண்டும்?
இந்து மதம் வெகுவாக புரையோடிப் போய் விட்டது. அதனுள் இருந்தால் மூச்சுத்திணறல் ஏற்படும் எனத் தோன்றும் ஒருவர் வெளியேறுகிறார். இதை விட பரவாயில்லை எனத் தோன்றுகிற பௌத்தத்தை அவர் நாடுகிறார். அதன் பொருள் அங்கு அவர் இறைவனை நாடுவார் என்றில்லை. அங்கு ஒருவேளை இந்துத்துவாவை, சாதியத்தை எதிர்க்க தன்னால் இயலுமோ என நினைக்கிறார். இது ஒரு தவிப்பு. இந்த தவிப்பினால் தான் எத்தனையோ தலித்துகள் பௌத்தம் தழுவுகிறார்கள். அம்பேத்கரும் அதையே செய்தார், செய்யக் கேட்டார். மதம் மாறுவது ஒரு அரசியல் அறிக்கை; அது மற்றொரு சமூகத்திரளில் பொய் சேருவதற்கான முயற்சி
ஆனால் ஒரு மதத்தில் இருந்து தப்பிக்க நினைப்பவர் தத்துவத்தையே நாட வேண்டும், மற்றொரு மதத்தை அல்ல என்பேன்.
புலால் உண்ணுவதற்கு அடுத்து வருகிறேன். எத்தனையோ பிராமணர்கள் எனக்குத் தெரிந்து புலால் உண்ணுகிறார்கள், ரகசியமாக. அவர்கள் எல்லாம் வேதம் கூறும் வழியிலா நடக்கிறார்கள்? (ஆதி பிராமணர்களும் கூட யாகத்தீயில் பசுவை வெட்டி பலியிட்டவர்கள் தானே!)  இதனால் இந்த பிராமணர்கள் இந்து அல்லாமல் போய் விட்டார்களா? எந்த மதத்திலும் நீங்கள் இருக்க அதன் விதிமுறைகளை பின்பற்ற அவசியம் இல்லை


வலதுசாரிகள் உளறுவதில் வித்தகர்கள் என முந்தைய கட்டுரையில் சொல்லி இருந்தேன். அதற்கு தோதாத்ரியைப் போன்றோர் சிறந்த சான்று, குறிப்பாக மேற்சொன்ன அவரது பகடிப்பதிவு. இவர்கள் சாலையில் பட்டாசு வெடிக்கும் பையன்களைப் போன்றவர்கள். யோசிப்பார்கள், ரொம்ப தெளிவாகவே, ஆனால் மூளையை கழற்றி வைத்து விட்டு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...