சமீபமாக பாரதியார் பல்கலைக்கழக (யுவபுரஷ்கார் விருதாளர்களுக்கான) கருத்தரங்கின் போது பேசிய பாரதி கிருஷ்ணகுமார் தான் ஒரு நிகழ்ச்சியில் கால்மேல் கால் இட்டு அமர்ந்ததற்காக கண்டிக்கப்பட்ட சம்பவத்தை குறிப்பிட்டார். அப்போது அவர் பொதுவாக அடிமை மனநிலை கொண்டவர்கள் கால் மேல் கால் இடாமல், கால்களை ஏதோ கட்டைகளைப் போல வைத்திருப்பார்கள் எனச் சொன்னார். பிற்பாடு யோசித்த போது இது ஒரு முக்கிய பார்வை எனப் பட்டது. கால் மேல் காலிடாமல் இருப்பதைப் பற்றி மட்டுமே அவர் சொல்லவில்லை (துணிச்சலான ஒருவர் கால்மேல் காலிடும் விருப்பமில்லாமலும் இருக்கலாம்). எளிய மனிதர்கள் தம் உடல்மொழியினூடாக எப்படி சமூக அதிகாரத்தை எதிர்கொள்கிறார்கள் என்பதைப் பற்றி அவர் பேசுகிறார்.
தன்னை அதிகார மையங்கள் கவனிக்கின்றன, கண்காணிக்கின்றன என உணர்ந்து கொள்ளும் ஒருவர் மூன்று விதமாக எதிர்வினையாற்றலாம்:
1) தனித்துவமற்ற, தனி குணமற்ற, தனி தோற்றமற்ற ஒருத்தராக மாற்றி விட்டு தன்னை கும்பலோடு கரைத்துக் கொள்ளலாம். எந்த சந்தர்பத்திலும் கேள்வி எழுப்பாதவராக, கருத்துக்களை வெளிப்படுதாதவராக, கருத்துசொல்லும் நெருக்கடி வந்தாலும் நழுவலாக சொல்லி விட்டு செல்கிறவராக அவர் இருக்கலாம். இத்தகையோர் நிச்சயமாக முன்னிருக்கையில் கால் மேல் கால் இட மாட்டார்கள்.
2) அதிகாரத்தின் பார்வையை தன் மீது உணராமல் அல்லது உணர்ந்தும் அதை நினைவில் வைக்காமல் போகலாம்; வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என இருக்கலாம்.
3) நீயென்ன சொல்வது, நான் என்ன செய்வது என துணிந்து கால் மேல் கால் இடலாம், பெரிதாய் பக்கடா மீசை வளர்க்கலாம்; டாட்டூ குத்திக் கொள்ளலாம்; சத்தமாக சிரிக்கலாம்; துணிந்து விமர்சிக்கலாம்; தன் தோற்றத்தினாலும் செயல்களாலும் தொடர்ந்து அதிகாரத்தை எரிச்சலூட்டலாம்.
நம் சமூகத்தில் பெரும்பாலானோர் இந்த முதலிரண்டு வகைமைக்குள் தான் வருகிறார்கள்.
என் கிராமத்தில் முன்பு ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமான தோற்றம் இருந்தது நினைவுக்கு வருகிறது. ஒருவர் சதா இரண்டு வார தாடியுடன், முதல் இரு சட்டை பட்டன்களை திறந்து விட்டபடி திரிவார்; மற்றொருவர் சட்டையணியாமல் பெரிய தொப்பையுடன் தோள் துண்டு மட்டுமே அணிந்திருப்பார்; சிலர் பெரிய முறுக்கு மீசையும் மற்றும் சிலர் நீண்ட தாடியும் வைத்திருப்பார்கள். சிலர் பல வருடங்களாக முடியே வெட்டாமல் பாகவதர் போல தோற்றமளிப்பார்கள். சிலரது மூக்கில் இருந்து புசுபுசுவென தோன்றும் மயிர்கள் குழந்தைகளை அச்சுறுத்தும். ஒவ்வொரு மனிதனையும் இந்த தனித்துவ தோற்றத்தினாலே மனதில் பதித்திருப்பேன். ஆனால் இவர்கள் இடையே எங்களூர் மத்தியவர்க்க குமாஸ்தாக்கள் மட்டும் எந்த தோற்ற தனித்துவமும் இல்லாமல் இருப்பார்கள் - அவர்கள் தினமும் ஒரே வண்ணத்தில் கால்சட்டையும் ஒரே வெண்பழுப்பு சட்டையும் அணிவார்கள். இவர்களின் கன்ணாடி கூட ஒரே போலத் தான் இருக்கும். தினமும் சவரம் செய்வார்கள்; தவறாமல் இஸ்திரி பண்னி சட்டை போடுவார்கள். விடுமுறை தினமன்று கூட அப்படியே அலுவலகம் செல்வது போன்றே இருப்பார்கள். பேச்சிலும் ஒரு கவனம், நேர்த்தி, சின்னதாய் பதற்றம் இருக்கும். இவர்கள் அவர்களை மதிக்க மாட்டார்கள்; அவர்கள் இவர்களை பகடி பண்ணுவார்கள்.
இன்று பெரும்பாலானோர் விவசாயம், தனித்தொழில், வேலையற்றிருக்கும் வேலை ஆகியவற்றில் இருந்து 9-5 அலுவலக வேலைகளுக்கு நகர்ந்து விட்டார்கள். அதோடு மக்களின், குறிப்பாக ஆண்களின், தோற்றமும் ஒற்றைத்தன்மை கொண்டதாக மாறி விட்டது; அவர்களின் உடலசைவுகளில் எந்திரத்தனம் வந்து விட்டது.
இன்றைய மத்திய வர்க்க ஆண்கள் முடியை ஒழுக்கமாக சீராக வெட்டிக் கொள்ளும் போக்கை கவனியுங்கள். அது ஒருவரது தோற்றத்தை அழகாக்குவதை விட அவரை தனி அடையாளமற்றவராக ஆக்குகிறது. பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவியரின் தோற்ற ஒழுங்கு வலியுறுத்தப்படுகிறது - நீண்ட முடியை வைத்திருப்பவர்கள், வண்ணமடிப்பவர்கள், டாட்டூ குத்திக் கொள்பவர்கள் கண்டிக்கப்படுகிறார்கள். ஏனென்றால் தோற்றம் மூலம் ஒருவர் செய்யும் கலகம் அதிகாரத்தை தொந்தரவு செய்வதைப் போல வேறெதுவும் செய்வதில்லை. நீங்கள் கருத்தளவில் கலகம் செய்தால் அந்த கருத்தை அங்கீகரிக்காமல் அதிகாரம் உங்களை மௌனமாக்கலாம். ஆனால் தோற்றமளவில் கலகம் செய்தாலோ அதிகாரத்தால் உங்களை புறக்கணிக்க முடியாது. அது உங்களை நேரடியாக தடுத்தே ஆக வேண்டும்.
மெல்ல மெல்ல நீங்கள் ஒன்றை புரிந்து கொள்கிறீர்கள் - தனியாக தெரிந்தால் நீங்கள் அதிகமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்; வகுப்பில் ஆசிரியர்கள் நீங்கள் செய்வதை நுணுக்கமாக கவனித்து கேள்வி கேட்பார்கள்; வகுப்பில் பிறரின் ஒழுங்கீனத்துக்கு நீங்களே முகமாவீர்கள். அலுவலகத்திலும் அப்படியே நடக்கும். பேச்சு, செயல், தோற்றம் ஆகியவற்றில் தனித்து தெரிகிறவர்களின் சின்ன சின்ன பிறவுகளும் நிர்வாகத்தால் பெரிது படுத்தப்படும். சக பணியாளர்களின் உட்குழுவிலும் அவர்கள் (பெண்களாக இருக்கும் பட்சத்தில்) அதிகமாய் கிண்டல்களை, விமர்சனங்களை எதிர்கொள்வார்கள். எதற்கு வம்பு என முடிவெடுத்து பலரும் அடையாளமற்றவராய், ஜெராக்ஸ் பிரதிகளாக தம்மை மாற்றிக் கொள்கிறார்கள். ஆயிரம் முகங்களில் ஒரு முகமாய் ஒளிந்து கொள்கிறார்கள். இப்போது எந்த பிரச்சனையையும் தனதில்லை என சொல்லி விலகிச் செல்லலாம்; தன்னை யாராவது விமர்சித்தால் கூட பக்கத்தில் இருப்பவரைத் தான் சொல்கிறார் என பாவனை பண்ணி தப்பிக்கலாம்.
https://thiruttusavi.blogspot.com/2019/11/2.html
https://thiruttusavi.blogspot.com/2019/11/2.html

Comments