(பீட்டர் ஹேண்ட்கேயின் The Great Fall நாவலில் இருந்து)
உண்மை தான்: அவன் அவளை நேசிக்கவில்லை, அவளிடமே அதை சொல்லியும் இருக்கிறான், துவக்கத்தில் ஒருமுறை, அதன் பிறகு மற்றொரு முறை; அதன் பிறகு அதற்குத் தேவையும் இருக்கவில்லை. “நான் உன்னை நேசிக்கல”. முதல் தடவை இதை அவள் கேட்டாள் என்றால் இரண்டாம் முறை காதிலே வாங்கிக் கொள்ளவில்லை. தான் காதலை உணர்கிறேன், தன்னால் அவனிடம் காதலைப் பற்றிப் பேச முடிகிறது என்பதே அவளுக்கு போதுமானதாக இருந்தது; மேலும் அவன் அவளைத் தடுக்கவில்லை என்பதும். “நீ என் காதலன். சின்ன வயதில் இருந்து இப்போது தான் முதன்முதலில் ஒருவரிடம் நான் நானாக இருக்க முடிகிறது. இந்த பகுதியில் யாருமே, இந்த நாட்டில் யாருமே நம்மளவுக்கு அதிக நேரம் படுக்கையின்பத்தை அனுபவிப்பதில்லை. ஒவ்வொரு முறையும் நாம் உலகை தோற்கடித்தோம். உலகை நம் முன் மண்டியிட செய்தோம். சர்வ சக்தி வாய்ந்ததாக, முழுமையான கட்டுப்பாட்டை செலுத்துவதாய் சொல்லப்படுகிற இந்த காலத்தை பழிவாங்கி இருக்கிறோம். அவர்களை முறியடித்து விட்டோம், அவர்கள் நம் மீது கட்டுப்பாட்டை விதிக்க முடிவதில்லை இப்போது, அவர்கள் போட்டியிலே இல்லை ; நாம் இருவரும், நீயும் நானும், மட்டுமே இங்கு முக்கியம். நாமே முக்கியம்.”
அவனும் அவளை தன் போக்கில் இருக்க விட்டான், அவளை சுதந்திரமாக இருக்க விட்டான். இருந்தாலும் அவன் அதை மிஸ் பண்ணினான், அவன் ‘காதலை’ மிஸ் பண்ணினான். தினமும் அதை மிஸ் பண்ணினான், சில நேரம் குறைவாக வலித்ததது, சில நேரம் வலிகளுக்கெல்லாம் வலியாக அது மாறியது, தொடர்ச்சியான வலியாக, எப்படி எப்படியோ அமைந்தது. காதலை மிஸ் பண்ணுவது அவனை வெறிகொள்ளச் செய்தது, தன் மீதும் பிற விசயங்கள் மீதும், ஆனாலும் கடைசியில் அது அவனை மீறிப் பெருகியது. துல்லியமாக சொல்வதெனில், கோபவெறி காதலை மிஸ் பண்ணுவதால் அல்ல அதன் இன்மையாலே அவனுக்கு ஏற்பட்டது. காதலை மிஸ் பண்ணுவதும் ஒருவித நேசத்தை உணர்வதே, சொல்லப் போனால், அதுவே பூரணமாக, எதிர்காலம் குறித்து அதிக நம்பிக்கையை தருவதாக, கண்ணுக்கு முன் வந்து நிற்கும், தொட்டுணர முடிகிற, கைக்கொள்ள முடிகிற காதலை விட அதிக எதிர்பார்ப்புகளைத் தருவதாக இருக்கும்; எப்படியென்றால் ஒருவர் தன் வசம் இல்லாத ஒருத்தியை நினைத்து ‘உன்னை மிஸ் பண்ணுகிறேன்’ என சொல்வாரே அதைப் போன்ற காதல். அவன் அப்போது காதலை மிஸ் பண்ணவில்லை. அது அவனிடம் அதிர்ச்சிகரமாக தன் இன்மையை அறிவித்தது; அன்று காலையில் கூட, நாம் குறிப்பிடும் இதே காலை வேளையில் கூட. “இருந்தாலும் நான் அதை மிஸ் பண்ணுகிறேன்,” அவன் சத்தமாக தனக்கே சொல்லிக் கொண்டான். “அது இல்லாமல், அதனால் ஆசீர்வதிக்கப்படாமல், அதோடு இருக்காமல், ஒரு நொடியேனும் அதனூடே இருக்காமல், என்னுடைய இந்த தினம் மதிப்பிழக்கிறது, வெறுமனே தன் நாளை வீணடிக்கிற ஒருவனாகிறேன். மற்றொரு பக்கம், நான் போலியான நட்புகளைத் தூக்கி எறிந்தது குறித்து மகிழ்ச்சியும் கொள்கிறேன்.”
தமிழில்: ஆர். அபிலாஷ்
(பக். 18-19)

Comments