முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மகாராஷ்டிரா அரசியல் தகிடுதித்தங்கள்: பாஜக எனும் டெர்மினேட்டர்


மகாராஷிரா அரசியல் களம்சூது கவ்வும்படம் போல பல வாய்பிளக்க வைக்கும் திருப்பங்களுடன் உள்ளது. முதலில் பாஜகவும் சிவசேனாவும் எதிரெதிர் அணிகளாக நின்று மோதும் என்றார்கள். அடுத்து என்.சி.பி, காங்கிரஸ், சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கும் என எதிர்பார்த்தார்கள். இதனிடையே எங்களுடன் சேராவிட்டால் ஆளுநர் ஆட்சி தான் என அமித் ஷா வழக்கமான அஸ்திரத்தை ஏவினார். நான் கூட பாஜக மகாராஷ்டிரத்தை மற்றொரு காஷ்மீர் ஆக்கி விடுமோ என கவலைப்பட்டேன். ஆனால் ஷாவோ நம் கவனத்தை முழுக்க சிவசேனா / பவார் பக்கம் திருப்பி விட்டு இரவோடு இரவாக பவாரின் மருமகன் அஜித் பவாரின் துணையுடன் என்.சி.பியை பிளந்து அதன் ஆதரவுடன் பாஜக ஆட்சிக் கட்டிலை கைப்பற்றுவதை உறுதி செய்துள்ளார் - பத்னாவிஸ் முதல்வர், அஜித் பவார் துணை முதல்வர்

எப்போதும் அமித் ஷா ஒரு ஆட்சிப் பிரச்சனைக்கு மூன்று நான்கு தீர்வுகளை தன் பட்டியலில் வைத்திருப்பார், ஒன்று சரியாக வரவில்லையென்றால் அதற்கு ஈடாக அடுத்த தீர்வுகளை ஒரே சமயம் பரிசீலிப்பார் என நினைக்கிறேன். இந்த சாணக்யத்தனத்தை வியப்பதை விட இதைக் கொண்டு பாடம் கற்பதே முக்கியம். அடுத்த சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் நடக்கையில் பாஜகவின் நோக்கம் எப்படியாவது ஆட்சியில் இடம் பிடிப்பதாக இருக்கும்; அதுவும் பத்து இடங்களிலாவது வெற்றி பெற்று விட்டால் கூட்டணிக் கட்சியுடன் (அதிமுக) சீமான் மற்றும் சினிமா கட்சிகள், கூடவே சாதிக் கட்சிகள் என ஒரு அணியை உருவாக்குவார்கள். இதற்கு அடுத்ததாக திமுகவை ரெண்டாகப் பிளந்து, இன்னொரு பக்கம் அதிமுகவின் சில அதிருப்தி எம்.எல்.ஏக்களுடன் சேர்ந்து ஒரு அணியை உருவாக்க முடியுமா எனப் பார்ப்பார்கள்

அதாவது அடுத்த தேர்தலில் அதிமுக பெரும்பான்மை பெற்றாலும் அதனால் பலனிருக்காது - பாஜக சுலபத்தில் அதிமுகவை ரெண்டு, மூன்று அணிகளாக உடைத்து விடும். அடுத்து துணை முதல்வர் பதவியை ஒரு பாஜக தலைவருக்கு - தமிழகத்தில் எந்த மக்கள் செல்வாக்கும் இல்லாத, தமிழக செண்டிமெண்டுகளை தொடர்ந்து புண்படுத்தும் விதமாகப் பேசுகிற ஒருவருக்கு - வாங்கிக் கொடுத்து விடும். அவரை வைத்து பாஜகவே ஆட்சியில் உள்ளதான பிம்பத்தை நேரடியாக ஏற்படுத்தும்

எப்படிப் பார்த்தாலும் தமிழகத்தில் அடுத்த ஆட்சியை பாஜகவை கைப்பற்றாமல் இருக்க ஒரே வழி தான் - பெரும்பான்மை இடங்களை திமுக கூட்டணி பெற்று விடுவது. அதிமுக கூட்டணி மற்றும் மூன்றாம், நான்காம் அணிகள் நிர்மூலமாவது. அப்போது மட்டுமே திமுகவால் பாஜக படையெடுப்பை தடுத்து ஒரு அரணை அமைக்க முடியும். வலுவாக ஆள முடியும்

சரி பாஜக வசம் தமிழகம் முழுக்க போனால் என்னவாகும்
பாஜகவால் இப்போது நேரடியாக செயல்படுத்த முடியாத திட்டங்கள் நிறைவேற்றப்படும்
அதில் முதலாவதாக தமிழுணர்வை காயடிப்பது இருக்கும் - அதற்குத் தோதாக பள்ளிகளில் இந்தி கற்பிப்பதை கட்டாயமாக்குவார்கள்
அடுத்து தொடர்ந்து இந்துக்கோயில்களை புனரமைத்து பெரும் விழாக்களை எடுத்து, சில பல மதப்பிரச்சனைகளைத் தூண்டி கலவரங்கள் செய்ய முடியுமா என முயல்வார்கள்.
தொடர்ந்து அமித் ஷாவின் இருப்பு தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் இருக்கும்படி ஊடகங்களை முடுக்கி விடுவார்கள். சொற்ப இடங்களை வென்றிருந்தாலும் கூட ஆட்சியை தாமே நேரடியாக நடத்துவதாக ஒரு பிம்பத்தை உண்டு பண்ணி, கடும் பிரச்சாரங்களை முன்னெடுத்து திராவிட கட்சிகளை விட மேலான ஆட்சியை தமிழகத்தில் பாஜக தருவதாக சித்தரிப்பார்கள். இதை வைத்து அடுத்தடுத்த தேர்தல்களில் தமிழக களத்தில் தாம் மட்டுமே ஒரே பெரிய கட்சி என காட்டிக் கொள்ளவும் திராவிட அரசியலுக்கு ஒரே மாற்று இந்துத்துவா என பிரச்சாரம் பண்ணவும் முயல்வார்கள்.

அமித் ஷாவின் வியூகங்களைக் காணும் போது எனக்கு அரபியும் ஒட்டகமும் கதை தான் நினைவுக்கு வருகிறது. ஒட்டகத்துக்கு என்றுமே தலையை உள்ளே விட்டால் போதாது. அதன் ஆகிருதியும் சுபாவமும் ஒண்டிக் கொள்வதை அனுமதிக்காது. இந்தியாவில் எந்த கட்சியாலும் பாஜகவுடன் இணக்கமாக இருந்து காலத்தை ஓட்ட முடியாது. அது ஒரு எம்.என்.ஸியைப் போன்றது - எப்படி பெரும் கார்ப்பரேட்டுகள் சின்னச் சின்ன நிறுவனங்களை முழுங்கி செரிக்குமோ அப்படியே பாஜகவும் மாநில கட்சிகளை எதிர்கொள்ளும். ஒரே கட்சி, ஒரே மதம், ஒரே மொழி எனும் புள்ளிகளின் திரளும் ஒரே தேசம் என்பதே அவர்களின் முழக்கம்.
 இத்தகைய குழிபறிக்கும் சூழ்ச்சிகளை முன்னர் காங்கிரசும் நிகழ்த்தியிருக்கிறது என்றாலும் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் உண்டு.
 காங்கிரஸ் ஒரு சமரசக் கட்சி. ஓரளவுக்கு அவர்களுக்கு அடிபணிந்து போகும் மாநிலக் கட்சிகளை ஏற்பார்கள்; ஆனால் பாஜக ஒரு சுனாமி அலை. அதன் முன்னர் போய் தலைகுனிந்து நின்றால் அடித்துக் கொண்டு போய் விடும். மகாராஷ்டிர அரசியல் இதற்கு நல்லதொரு சான்று.
 தமிழகத்தின் நிலைமைப் பாருங்கள் - முன்பு எப்போதாவது பெரும் மக்கள் தலைவர், முதல்வர் மருத்துவமனையில் மர்மமான முறையில் மரணமடைய, அதை பின்னணியில் வைத்து அரசியல் பேரங்கள் நடந்து, குதிரை பேரம் நடந்து இப்படி மக்கள் ஆதரவு இல்லாத ஒருவர் முதல்வராக பதவியேற்று இப்படி நீடித்திருக்க முடியுமாமேலும் யோசித்துப் பார்த்தால் கிழக்கிந்தியா கம்பெனியின் ஒரு நவகாலனிய வாரிசு போலவே பாஜக இன்று செயல்படுகிறது.
 கம்பெனியுடன் கூட்டணி அமைத்து வியாபாரம் பண்ணத் தொடங்கினால் விரைவில் கம்பெனி தன் கூட்டாளியை துரத்தி விட்டு ஆட்சியை பறித்துக் கொள்ளும். அடுத்து தேசம் முழுக்க கம்பெனியின் கீழே வரும். கம்பெனி நிர்தாட்சண்ணியமாக நடந்து கொள்ளும். அதற்கு மக்களின் உணர்வு, ஆட்சியின் எதிர்காலம், வரலாறு எதுவும் முக்கியமல்ல. அடித்துப் பிடுங்கும் இந்த காலனிய அரசியலை அமித் ஷா ஒரு    கலையாகவே வளர்த்தெடுத்திருக்கிறார். எப்படி கம்பெனிக்கு தனிமனிதர்கள், கொள்கை, விமர்சனங்கள் முக்கியமல்லவோ அப்படியே பாஜகவுக்கும். தனிமனிதர்கள் முக்கியமாகும் போது அங்கு பல்வேறு தரப்புகளுடன் இணக்கமாகப் போவது எதிர்கால நலனுக்கு அவசியமாக இருக்கும். ஆனால் பாஜகவுக்கு அத்தகைய சிக்கல்கள் இல்லை - பாஜகவின் வெற்றிகளை வைத்து அமித் ஷாவின் குடும்பத்தினர் பெரும் லாபம் காண முடியும் என்றாலும் அக்கட்சியின் எதிர்காலம் மோடியோ, ஷாவோ அல்ல. மோடியை வரும் ஆண்டுகளில் பாஜக உதிர்க்கும் என்றால் ஷா அதற்கு அடுத்த ஆண்டுகளில் சிதறிப் போவார். அடுத்தடுத்து தன்காலனியப்பரவலுக்கு உதவியாக இருக்கும் தலைவர்களை பாஜக பதவியில் அமர்த்தும்.
 பாஜகவுக்கு மனிதக் கண்களோ, மனித இதயமோ இல்லை. வாரிசு அரசியலின் ஊழல்கள், தீமைகள் இல்லை என்பது அனுகூலம் என சிலர் எண்ணலாம். ஆனால் என்னைப் பொறுத்தமட்டில் இதுவே பாஜகவை மிக மிக ஆபத்தான கட்சியாக்குகிறது. பாஜகவுக்கு வாரிசுத் தலைவர்களே தேவையில்லைஅதற்குத் தேவை டெர்மினேட்டர்களே. கட்சியின் அரூபமான தலைமையின் ஆணையை ஏற்று உணர்வுகளற்று ஆவேசமாகக் கிளம்பும் டெர்மினேட்டார்கள். காலத்துக்கும் தேவைக்கும் ஏற்ப உருவத்தை மாற்றி சஞ்சரிக்கும் டெர்மினேட்டரின் பல்வெறு வெர்ஷன்கள்.


டெர்மினேட்டர்களை நேரடியாகத் தாக்கவோ அழிக்கவோ முடியாது. அவர்களுடன் கூட்டணி குடும்பம் நடத்தவும் முடியும். அவர்கள் மனிதர்கள் அல்ல. இந்த சந்தர்பத்தில் இந்தியாவின் மாநிலக் கட்சிகள் ஒட்டுமொத்தமாய் மனதிற் கொள்ள வேண்டிய முக்கிய பாடம் - ஒருநாளும் டெர்மினேட்டருடன் கைகுலுக்கக் கூடாது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...