Skip to main content

ஒரு குரலின் மரணம்


சிலர் பல நல்ல பாடல்களைத் தந்திருப்பார்கள். அவர்களில் ஒரு சிலர் தாம் சில பத்தாண்டுகள் தம் குரலே இசை என்னும் அளவுக்கு ஆதிக்கம் பண்ணியிருப்பார்கள். யேசுதாஸ் எனும் அந்த கான கந்தர்வன் அப்படியானவர். மலையாள இசையில் யேசுதாஸ் இன்றி ஒரு காலகட்டத்தை நீங்கள் நினைவுகூரவே முடியாது என்கிற அளவுக்கு, எந்த மலையாளி பாடுகிறேன் எனும் தோரணையில் முனகினாலும் அதில் யேசுதாஸின் சாயல் வந்துகிற அளவுக்கு. தமிழிலும் யேசுதாஸ் ஆளுமை செலுத்திய வகையான பாடல்கள் உண்டு - அவற்றை வேறு யாராலும் பாடவே முடியாது என நாம் நம்பும் அளவுக்கு, இளையராஜாவையே நாம் மறந்து லயிக்கும் அளவுக்கு. அவருடன் பாடிய ஜெயசந்திரன், எம்.ஜி ஶ்ரீகுமார், வேணுகோபால் போன்றவர்கள் நீண்டகாலம் அவரது நிழலிலே இருந்தார்கள். கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளாக அவர் பெரும்பாலும் பாடுவதை குறைத்திருக்கிறார். ஆனாலும் அவர் இடத்தை அங்கு யாரும் எடுத்துக் கொள்ளவில்லை; ஒரு பெரும் வெற்றிடம் மலையாள திரையிசையை வெறித்துப் பார்த்திருக்கிறது. தமிழில் அப்படியான ஒரு பாடகர் என்றால் டி.எம்.எஸ். எஸ்.பி.பி வரும் வரை எல்லா ஆண் குரல்களும் இங்கு டி.எம்.எஸ்ஸையே போல செய்தன. அவரைப் போல பாடும் பல மேடைப்பாடகர்கள் தோன்றினார்கள். எஸ்.பி.பி கூட சில தொடக்க கால பாடல்களில் டி.எம்.எஸ்ஸைப் போல கட்டைக்குரலில் பாடியிருக்கிறார் என நினைவு



இப்படியான யேசுதாஸ் சிங்கப்பூரில் Voice of Legends எனும் மேடைக்கச்சேரியில் எஸ்.பி.பி மற்றும் சித்ராவுடன் அந்த காலப் பாடல்கள் பலவற்றைப் பாடுவதை (யூடியூப்பில்) கேட்டேன். எஸ்.பி.பியும் சித்ராவும் தம் குரலின் தொய்வை ஈடுகட்டி சமாளிக்கிறார்கள், அதுவும் சித்ரா குழலூதும் கண்ணனுக்கு பாடலை இன்னமும் அவ்வளவு அபாரமாக பாடுகிறார். ஒப்பிடுகையில் யேசுதாஸின் குரல் மரணமடைந்து விட்டது. அவரும் அதை உணர்ந்தே தன்னுணர்ச்சியுடன் உணர்ச்சிவயப்பட்டு பாடுகிறார்; தனது முந்தைய உயர்வுகளுக்குப் பக்கத்தில் ஒரு சிறிய நிழலாக மட்டுமே தன்னால் இப்போது ஊர்ந்து போக முடியும் எனும் புரிதல் அவருக்கும் இருக்கிறது; இது அவரை இன்னும் மோசமாக பாட வைக்கிறது. இசை ஒரு பக்கம் அவரது குரல் மறுபக்கம் பறக்கிறது என்றால் ஸ்ருதி எங்கேயோ மேடையைத் தாண்டி பல மைல் தூரம் ஓடுகிறதுயேசுதாஸுக்கு 79 வயதாகிறது. எஸ்.பி.பிக்கு 73. வயதும் ஆரோக்கியமும் ஒருவரது இசைத்திறனை இந்த அளவுக்கு சீரழிக்குமா என வியப்பாக இருக்கிறது. சிலர் வயதாக ஆக பாதி திறனுடன் இருப்பார்கள். தாஸேட்டன் கால்வாசிக் குரலைக் கூட தக்க வைக்க முடியாமல் தவிக்கிறார். அவரது தீவிர ரசிகர்களுக்கு அவர் இப்போது பாடுவதைக் கேட்க பரிதாபமாக வருத்தமாக இருக்கும்; அவர் தன்னை இப்படி வருத்தி தாழ்த்திக் கொள்ளத் தான் வேண்டுமா?

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...