கடந்த மூன்று வருடங்களாக, பெங்களூருக்கு வந்த பின், எனக்கு அதிகமாய் ஜுரம், ஜலதோஷம் போன்ற தொற்றுநோய்கள் வந்ததில்லை - சற்று காலம் பேலியோ டயட்டில் இருந்தேன்; அதன் பிறகு ஒருவேளை மட்டும் உண்னுகிற intermittent fasting உணவுமுறைக்கு மாறினேன். இந்த இரண்டும் தான் என் உடல்நலனை ஓரளவுக்கு காப்பாற்றி வந்திருக்க வேண்டும் - ஏனென்றால் பெங்களூரில் காற்று மற்றும் நீர் மாசு அதிகம், அதோடு குளிர் காற்று வேறு; மக்கள் தும்மிக் கொண்டும் இருமிக் கொண்டும் இருப்பது இங்கு வாடிக்கை. ஆனால் நீண்ட காலத்துக்குப் பிறகு எனக்கும் ஜுரம் வந்து விட்டது. இவ்வளவு நாள் பார்க்காத வருத்தமோ என்னமோ வந்ததும் என்னை ஆரத்தழுவி கசக்கி பிழிந்து விட்டது. முதலில் மருந்துக்கடையில் தொண்டை வலி, ஜலதோசத்துக்கு மாத்திரை. அடுத்து ஜுரம் வெளித்தெரிய மருத்துவரிடம் போனேன். அவரது ஊசி இரண்டு மணிநேரத்துக்கு வேலை செய்து விட்டு தன் வேலையை பார்க்க போய் விட்டது. மருத்துவர் என்னைப் பார்க்கும் போதெல்லாம் ‘உங்க இடது கை நடுங்குதே’ என்பார். என் கண்ணுக்கு மட்டும் அந்த நடுக்கம் புலப்படாது. இம்முறையும் மறக்காமல் சொன்னார். ஜுரத்திற்குப் பிறகு ரெண்டு கைகளும் வேறு சதா நடுங்குகின்றன. எழுதினால் கை வலிக்கிறது.
பா. வெங்கடேசனிடம் சொன்னால் “டெங்கு பரவுது” என பயமுறுத்துகிறார். இது வேறயா என நினைத்துக் கொண்டேன். அண்மையில் எந்த கொசுவையும் நான் சந்திக்க நேரவில்லை என்பதால் பெரிய பயமில்லை.
இரவெல்லாம் மீண்டும் ஜுரம் படுத்தி எடுத்து விட்டது - நள்ளிரவில் எழுந்து இருமினால் நெஞ்சு வலிக்கிறது. வாயில் கசப்பு. பழைய அரசுப்பேருந்தில் பயணிப்பது போல மெல்லிய நடுக்கம் உடம்புக்குள் ஊடுருவுகிறது. இதோடு என் ரத்த சர்க்கரை வேறு டிராப்பிக்கில் நடுரோட்டில் வாகனத்தில் இருந்து இறங்கி வந்து சண்டை போடுகிறவரைப் போல தாவித் தாவி குதிக்கிறது. ஜுரத்தின் பின்விளைவு என புரிந்து கொண்டேன். சர்க்கரை அளவைக் குறைக்க இரட்டிப்பு இன்சுலின் எடுத்துக் கொள்ள வேண்டும். அது குறைந்தால் ஜுரமும் கட்டுக்குள் வந்து விடும் எனத் தோன்றுகிறது.
நேற்றிரவு அம்மா போன் செய்து “உனக்கு உடம்புக்கு ஒன்றுமில்லையே?” என விசாரித்தார். நேற்றைக்கு முந்தைய தினம் அவருக்கு ஒரு கனவாம். அதில் நான் உடல் நலிவுற்றிருக்கிறேன். அதனால் என்னை நேற்று முழுக்க போனில் பிடிக்க முயன்றிருக்கிறார். இது ஏற்கனவே பலமுறை நடந்திருக்கிறது. எனக்கு இப்படி ஆகும் போதெல்லாம் அவர் போனில் வந்து விடுவார். சில நாட்களில் நான் ஜம்மென்று இருக்கும் போது கூட அம்மாவிடம் இருந்து இத்தகைய அழைப்பு வரும் என்பதால் (அடிக்கடி அவர் கனவில் நான் வியாதிஸ்தனாகத் தோன்றுகிறேன் போல) இதன் மன அலைகளின் தொடர்பாக்கம் பற்றியெல்லாம் நான் மெனக்கெட்டு யோசிக்க வில்லை. அவரது பாசத்தை மட்டும் இதில் இருந்து எடுத்துக் கொள்கிறேன்.
ஜுரம் என்பது நன்றாக ஓடுகிற நமது வாழ்வின் குறுக்கே வந்து மனதைக் கலைக்கும் தற்காலிகக் காதலைப் போன்றது. அது கடந்து போன பிறகு தான் தள்ளிப் போட்ட பல பிரச்சனைகள் கதவைத் தட்டி பஞ்சாயத்தைக் கூட்டும். இந்த ஜுரம் சீக்கிரம் சரியாக வேண்டும் - எழுதி முடிக்கப்படாதவை, எடுத்து முடிக்காத வகுப்புகள் ..., விடுப்பெடுத்து ஜாலியாக வேறு பல வேலைகளை மறந்து விட்டு படுத்த வாக்கில் நாவல் படிப்பது இப்போது நன்றாக இருந்தாலும், இது முடிந்ததும் அவை டெர்மினேட்டர் படத்து ஆர்னல்டு ஷுவஸ்னேக்கர் போல வந்து துரத்தி துரத்தி சுடும். அதுக்கு ஜுரப் பாசமே பரவாயில்லை.

Comments