Skip to main content

Mi Band 4



ஒரு வாசகர் எனக்கு பிறந்த நாள் பரிசு அளிக்க விரும்புகிறார் என போன மாத இறுதியில் ஒரு தோழி சாட்டில் வந்து சொன்ன போது நான் நம்பவில்லை. நான் பொதுவாக வாசகர்களை அப்படி ஒருங்கிணைத்து லாபி பண்ணுவதில்லை; அவர்களை வாசகர்களாகவும் கருதுவதில்லை; பேச ஆரம்பித்த மறுநிமிடமே அவர்கள் என் நண்பர்கள்; எழுத ஆரம்பித்தால் என் சக எழுத்தாளர்கள். ஆகையால் வாசகர்களுடன் தேநீர்க் கடைக்குப் போனால் கூட பணத்தை நான் முதலில் நீட்டுவேன். ஆனாலும் அவ்வப்போது வாசக நண்பர்கள் எதிர்பாராமல் உதவியிருக்கிறார்கள். இப்போது தோழி என்னிடம்உங்களுக்கு ஒரு நல்ல பரிசை உங்கள் வாசகர் ஒருவர் தர விரும்புகிறார் - நீங்கள் நீண்ட காலமாக ஆசைப்படும் பொருள் என்ன?’ எனக் கேட்டார். யோசித்தால் அப்படி ஒன்று என் மனத்தில் இல்லை. ஒரு மேக்புக் ஏர் வாங்க ஆசையுண்டு; ஆனால் அதுவும் ஒன்றும் அத்தியாவசியம் இல்லை. இருக்கிற ஐபேடே தாராளமாக உள்ளது. பொருள் வசதி எனக்கு என்றுமே முக்கியமில்லை. ஆகையால் ரொம்ப யோசித்து ஒரு சிறிய பட்டியலை அனுப்பினேன். அத்தோழி பிறகு அந்த வாசகரின் பட்ஜெட்டை சொன்னார். அதற்குள்ளாக நான் மற்றொரு பட்டியலைக் கொடுத்தேன். இப்படியே போன பின் வாசகரே என் சாட்டுக்கு வந்தார். எனக்கு அவரை ஏற்கனவே தெரியும். ‘நீங்க எனக்கு ஏன் பரிசு தர வேண்டும், உங்க அன்பே போதும்என தட்டிக்கழிக்கப் பார்த்தேன். அவர் பிடிவாதமாக இருந்தார். அப்படித் தான் நான் அவரிடம் ஒரு ஸ்மார்ட் வாட்ச் வாங்கித் தரக் கேட்டேன். அவர் நான் குறிப்பிட்ட Mi Band 4 வாங்கி அனுப்பினார். அவர் கேட்டுக் கொண்டது படி பெயரை வெளியிடாமலே அவருக்கு இங்கே நன்றி சொல்லிக் கொள்கிறேன்.


நான் என் பிரியத்துக்குரியவர்களிடம் எப்போதும் கைக்கடிகாரத்தைத் தான் பரிசாக வேண்டுவேன். அது எப்போதும் மணிக்கட்டில் விழித்தபடி இருக்கும், ஒரு அன்பின் நினைவுறுத்தலாக. நான் பெங்களூருக்கு வருவதற்கு முன்பான பிறந்த நாளின் போது மனுஷ்யபுத்திரன் என்னை அழைத்து ஒரு அழகிய கைக்கடிகாரத்தை பரிசாக அளித்தார் - அவர் அப்படி பரிசளிப்பார் என்பதை என்னால் ரொம்ப நேரம் நம்பவே முடியவில்லை. அதன் ஸ்டிராப் அறுந்து போன பின்னரும் கூட சரி செய்து கையில் கட்டியிருந்தேன். அதன் பிறகு ஒரு காதல் பரிசாக மற்றொரு கைக்கடிகாரம் வந்தது. அதன் பிறகு இந்த Mi Band. இதை ஒரு வாரமாவது பயன்படுத்திய பிறகு எழுதலாம் என உத்தேசித்தேன். இதை ஒரு மதிப்புரையாகவும் கொள்ளலாம்.

Mi Bandஇன் சிறப்புகளை முதலில் சொல்லி விடுகிறேன்:
1) மெல்லிசானது - அது கையில் இருக்கிற உணர்வே இருப்பதில்லை
2) தொடர்ந்து என் இதயத்துடிப்பை பதிவு பண்ணி சராசரியைக் காட்டுகிறது. பொதுவாக என் நாடித்துடிப்பு சற்றே குறைவாக இருக்கும். ஆகையால் இப்போது எந்த நேரத்தில் எல்லாம் அது அதிகமாகிறது எனப் பார்க்க சுவாரஸ்யமாக இருக்கிறது. எழுதும் போது கொஞ்சம் அதிகமாகிறது. சராசரியான 70-78இல் இருந்து 91க்கு வருகிறது. சாப்பிடும் போதும் அதிகரிக்கிறது. உடற்பயிற்சி பண்ணும் போது 110-120 வரைப் போகிறது.
3) இரவுத் தூக்கத்தை துல்லியமாக கணிக்கிறது - ஆழ்துயில் 40-50 நிமிடங்கள் என சொல்கிறது. ஆழ்துயிலின் கால அளவு குறையும் போது சரியாக சுட்டுகிறது. தூக்கம் சரியில்லை என்றால் காலை எழுந்ததுமே நமக்கு அது தெரிந்து விடும் - அலுப்பாக உடம்பு இறுக்கமாக இருக்கும். ஒருநாள் நான் சீக்கிரமாகத் தூங்க போய் விட்டதாய் சொல்கிறது. தாமதமாய் தூங்கப் போனாலும் அதை சுட்டி கண்டிக்கிறது. மற்ற பயனர்களுடன் ஒப்பிட்டு நீ எவ்வளவோ பரவாயில்லை என ஆறுதல் சொல்கிறது. எனக்கு இந்த மாதிரி AI சமாச்சாரங்கள் பிடிக்கும் என்பதால் வெகுவாக ரசிக்கிறேன்.
4) வலுவான மின்கலன் - நீங்கள் தொடர்ந்து நாடித்துடிப்பையும் தூக்கத்தையும் அளக்கும்படி செட்டிங்ஸில் மாற்றிக் கொண்டாலும் கூட சுலபத்தில் 14 நாட்கள் தாங்குகிறது. அல்லாவிடில் 18-20 நாட்கள் வருமென நினைக்கிறேன்.
5) அழைப்புகள், வாட்ஸாப், மெஸெஞ்சர் குறுஞ்செய்திகள் ஆகியவற்றின் நோட்டிபிக்கேசன்களை நான் ஸ்மார்ட்போனில் விரும்ப மாட்டேன். அது ஒரு தொந்தரவு என்றே முதலில் நினைத்தேன். ஆனால் இப்போது வசதியாக இருக்கிறது. போனை பைக்குள் வைத்துக் கொண்டு சுற்றலாம். தூங்கும் போது எட்ட வைத்துக் கொள்ளலாம். எந்த அவசர அழைப்பென்றாலும் மணிக்கட்டிலே தெரிந்து போகும். (அழைப்பை எடுக்க முடியாது, நிராகரிக்கலாம்)
6) போனில் இருந்து ஸ்பீக்கப்ரிலோ ஹெட்போனிலோ பாட்டு கேட்கிறோம் என்றால் அதை இந்த கைக்கடிகாரத்தில் இருந்தே மாற்ற முடியும். வண்டி ஓட்டும் போதும் மற்ற சமயங்களிலும் இது ரொம்ப சௌகர்யம்
7) அலாரம் வசதியும் பிடித்திருக்கிறது. மணிக்கட்டில் ஏதோ பூச்சி ஊர்வது போன்ற உணர்விலே நான் சட்டென எழுந்து கொள்கிறேன். போனை தூங்கும் போது எட்ட வைத்துக் கொள்வதும் நல்லதாக உள்ளது. இந்த அலாரம் போன் அலாரம் போல நச்சரிப்பாக இல்லை. போன் வெறித்தனமாக இசைத்து என்னை துயிலெழுப்ப முயலும் போது உறக்கச் சடவுடன் சரியாக எடுத்து அணைத்து வைக்க முயன்று கீழே போட்டு அதிர்ந்து போய் மீண்டும் தூங்கப் போய் விடுவேன். ஆனால் Mi Band சன்னமாக அழைக்கும் போது ஒன்று நீங்கள் எழுந்து கொள்ளலாம், அல்லது அப்படியே தூங்கலாம். அருகிலுறங்கும் ரொம்ப தன்மையான காதலியைப் போலபரவாயில்லை இன்னும் கொஞ்சம் தூங்குங்கஎன ஆறுதல் சொல்லி விடும்.
8) இறுதியாக சொன்னாலும் இதுவே ரொம்ப முக்கியம் - உடற்பயிற்சிக்கான பெரிய தூண்டுதலாக இது இருக்கிறது. பரிசு கைக்கு வந்த நாளில் இருந்தே (இடையே விட்டிருந்த) உடற்பயிற்சியை மீண்டும் துவங்கி விட்டேன். எவ்வளவு நேரம் பயின்றிருக்கிறோம், எவ்வளவு கலோரிகள் எரித்திருக்கிறோம் எனும் கணக்கு பெரும் உத்வேகம் அளிக்கிறது. ஒரு நாளைக்கு ஆயிரம் கலோரிகளாவது எரிக்க வேண்டும் என தம் கட்டி இரண்டு வேளைகள் கூட உடற்பயிற்சி செய்து பார்த்தேன். உடற்பயிற்சியை ஒரு ஜாலியான விளையாட்டு ஆக்குகிறது இந்த Mi Band.

இனி சிறிய குறைகள்:
1) நேரம் பார்க்க நீங்கள் மணிக்கட்டை ஒரு வாக்கில் வெடுக்கென திரும்ப வேண்டி இருக்கிறது. படுத்தபடி பார்த்தால் அதுவும் படுத்து தூங்கி விடுகிறது. நின்ற நிலையிலும் சில நேரம் எந்த கோணத்தில் திருப்புகிறோம் என்பதைப் பொறுத்து மட்டுமே வேலை செய்கிறது. ஆனால் தொடு திரையை தொட்டால் கூட உடனே விழித்துக் கொள்ளும் என்பதால் பிரச்சனையில்லை.
2) சக்கரநாற்காலியில் நான் சுற்றுவத்ற்கே ஒரு நாள் 1800 அடிகள் நடந்ததாய் சொன்ன போது மூக்கில் விரல் வைத்தேன். இந்த சேட்டையை மன்னித்தாலும் கூட சும்மா எழுந்து உட்கார்ந்து கைகால்களை அசைத்தாலே அதை நாம் நடந்ததாக கணக்கு காட்டுகிறது என்பது தான் ரொம்ப அதிகம்.
3) Mi Fit ஆப் மூலமாகத் தான் கணிசமான தகவல்களை நாம் அறியவும் தொகுக்கவும் முடியும். ஆனால் ஆப் அவ்வளவு லகுவாக நட்பாக இல்லை

கடைசியாக - பார்க்கும் ஆட்களிடம் எல்லாம் பெருமையாகவாசகர் ஒருவர் அளித்த பரிசுஎன சொல்லிக் கொள்கிறேன். இப்படி அங்கீகரிக்கப்படுவதாய் நினைத்துக் கொள்வது பிடித்திருக்கிறது.

 இம்முறை பிறந்த நாளுக்கு என் முகநூல் சுவரில் வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் சேர்த்து இங்கு மீண்டும் ஒரு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தும் கொள்கிறேன்

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...