முதலில் பாஜக இதை தனது சட்டத்தின் பின்னுள்ள கொள்கைக்கு எதிரான போராட்டமாகக் காணவில்லை. தனது குறிப்பிட்ட செயல்பாடு ஒன்றுக்கு எதிரான போராட்டமாகவும் இதைக் காணவில்லை. மாறாக எதிர்காலம் குறித்த ‘ஆதாரமற்ற’ பயத்தின் வெளிப்பாடாக, அந்த பதற்றத்தின் மீது கட்டமைக்கப்பட்ட போராட்டமாகக் காண்கிறது. தொடர்ந்து இரவு 12 மணிக்கு அதிரடி அறிக்கைகளை செய்து, கண்மூடித்தனமான மாற்றங்களை கொண்டு வந்து இந்த அரசு மக்களை அப்படி அச்சுறுத்தி வைத்திருக்கிறது. ஆனால் நாளை தூலமான மாற்றம் ஒன்று வரும் போது ஜனங்கள் இப்படி ஒட்டுமொத்தமாக பதறி தமக்கு எதிராக திரள மாட்டார்கள் என இந்த அரசு நம்புகிறது. இது ஏன் என ஒரு உதாரணம் கொண்டு விளக்குகிறேன்:
கொடுங்கோல் தந்தையருக்கும் அவர்களின் அப்பாவி மகன்களுக்குமான உறவை எடுத்துக் கொள்ளலாம். கொடுங்கோல் தகப்பன்கள் அடித்தும் மறைமுகமாய் வதைத்தும் பிள்ளைகளை ஒடுக்கும் போது அவர்கள் மிகுந்த சகிப்புத்தன்மையுடன் அதை ஏற்பார்கள். ஆனால் என்றோ ஒருநாள் தாம் செய்த சிறிய குற்றத்துக்காக தகப்பனார் மிகப்பெரும் தண்டனை ஒன்றைத் தருவார் எனும் அச்சம் பிள்ளைகளை திடீரென கலகம் பண்ணத் தூண்டும் அல்லது வீட்டை விட்டு ஓடிட வைக்கும். தகப்பனார் இதை இவ்வாறு எதிர்கொள்வார் - அவர் தனது தண்டனைகள் அத்துமீறியதாக இருக்காது என நம்ப வைப்பார். தண்டனைகள் மேலும் மேலும் இயல்பாக்கி பிள்ளைகளை அமைதிப்படுத்துவார். அமைதியானபின் பிள்ளைகளை வரிசையில் வந்து நின்று உதை வாங்குவார்கள். ஓடிப் போனவர்கள் திரும்ப வந்ததும் தகப்பனார் அவர்களை அரவணைத்து விருந்து வைப்பார். ஆனால் அடுத்தடுத்த சிறிய குற்றங்களுக்கு கராறாய் தண்டனைகள் அளிக்க இதே பிள்ளைகள் எதிர்ப்பின்றி, குற்றவுணர்வுடன், அவற்றை வாங்கிக் கொள்வார்கள். மோடியும் தம் பிள்ளைகள் இவ்வாறே மீண்டும் தமது அரவணைக்கும் கரங்களை நாடி ஓடி வருவார்கள் என நம்புகிறார். அவர் இந்த கலகக்கார பிள்ளைகளின் தாய்; அவர் அமைதிப்படுத்தி இவர்களை கோபக்கார தந்தையார் அமித் ஷாவிடம் அனுப்பி விடுவார்.
சரி இந்த தண்டனைகள் தாம் என்ன?
இந்த குடியுரிமை திருத்த சட்டம் பற்றி பேசும் வேளைகளில் எல்லாம் அமித் ஷா பாராளுமன்றத்தில் இதை தேசிய குடிமக்கள் பதிவேட்டு சட்டத்துடன் பொருத்தி ‘எச்சரித்தார்’ - அதாவது வெளியில் இருந்து வரும் அகதிகளின் குடியுரிமையை தீர்மானிப்பது மட்டுமல்ல உள்ளே மக்களோடு மக்களாக கலந்து விட்ட ‘வந்தேறிகளை’ களைபறிப்பதும் தன் நோக்கமே என அவர் குறிப்புணர்த்தினார். சரி இந்த அகதிகள் என்பவர்கள் யார்? ‘வந்தேறிகள்’, ‘அந்நியர்கள்’ என்பவர்கள் யார்? மத்திய பாஜக அரசு இந்த இரு பதங்களையும் பூடகமாக குழப்பமாக கையாள்கிறது, அதன் மூலம் தனது இனவெறியை தந்திரமாக செயல்படுத்துகிறது.
‘அகதி’ என்பவர் ஒடுக்கப்படும் முஸ்லீம் அல்லாதவர் என உலகமே ஏற்காத ஒரு பழமையான வரையறையை கொண்டு வரும் இந்த அரசு ‘அந்நியர்’ எனும் பதத்தையும் அவ்வாறே வரையறுக்கும் என்பது வெளிப்படை - அதற்காகவே குடியுரிமைச் சட்டத்தையும் குடிமக்கள் பதிவேட்டையும் அவர் ஒன்றுக்குள் ஒன்றை மடித்து வைத்து நமக்குத் தருகிறார் - இப்போது நீங்கள் குட்டி பாகிஸ்தான் என கேரளாவில் வர்ணிக்கும் ஒரு மாவட்டத்து ஜனங்களை அகதிகளாக, பாகிஸ்தானில் இருந்து வந்த, ஆவணங்கள் இல்லாத மக்களாக வரையறுத்து அவர்களை தடுப்பு முகாம்களுக்கு அனுப்ப முடியும். இஸ்லாமியர் அனைவரும் வந்தேறிகள் எனும் இந்துத்துவரின் நீண்ட கால கதையாடலை சட்டமாக்க முடியும். அகதிகள் குறித்த கதையாடல் இன்றி நீங்கள் ஆவணமில்லை எனும் காரணத்தை வைத்து ஒரு சிறுபான்மையினர் கூட்டத்தை ‘வந்தேறிகள்’ என முத்திரை குத்த முடியாது. நமது பிரதமர் குடியுரிமை திருத்த சட்டம் இந்த நாட்டின் குடிமக்களான சிறுபான்மையினரை இலக்காக்காது என கூறுவதை நாம் இப்படியே புரிந்து கொள்ள வேண்டும். அவர்களை நேரடியாக அவ்வாறு இந்த அரசால் தேசப்பிரஷ்டம் செய்ய இயலாது - அதற்குத் தான் அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள அகதிகளை தனிமைப்படுத்தி அவர்களை தடுப்புமுகாமில் வைத்து விட்டு அந்த அடையாளத்துக்குள் சிறுபான்மையினரில் பலரையும் திணித்து மக்களை குழப்பி இந்த அரசு குளிர்காய திட்டம் போடுகிறது. ஒரு உதாரணம் தருகிறேன்:
ஒரு ஊரில் உள்ள கறுப்பான மக்களை ஒடுக்குவதற்காக வெள்ளைத்தோல் கொண்ட பெரும்பான்மையினர் திட்டமிடுகிறார்கள். அதற்காக அவர்கள் முதலில் சில கறுப்புத்தோலினரைப் பிடித்து விசாரணை பண்ணி அவர்கள் திருடர்கள் என பிரகடனம் பண்ணுகிறார்கள். அடுத்து கறுப்புத்தோல்காரர்களால் நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைகிறது என அரசும் காவல்துறை ஆணையரும் தொடர்ந்து பேட்டி அளிப்பார்கள். கடைசியாக கறுப்பாகத் தெரியும் அத்தனை பேரையும், குற்றத்தடுப்பு மற்றும் விசாரணை நோக்கில், ஒட்டுமொத்தமாக கைது பண்ணி முகாம்களில் அடைத்து வைப்பார்கள். இப்போது இதை யாரும் இனவெறுப்பு என இதை பேசி விட முடியாது; திருடன் + கறுப்புத் தோல் = கறுப்பானவர்கள் எல்லாம் திருடர்கள் எனும் சூத்திரத்தை உருவாக்கி மக்கள் மனத்தில் பீதியை அரசு உருவாக்கி இருக்கும். இதே தந்திரத்தை தான் பாஜக அரசு சிறுபான்மையினர் மீது பிரயோகிக்க உத்தேசிக்கிறது.
அகதிகள் எனும் கதையாடலுக்கு மற்றொரு நோக்கமும் உண்டு - சிறுபான்மையின மக்களை முத்திரை குத்தி குடியுரிமையும் வாக்குரிமையும் மறுத்த பிறகு என்ன பண்ணுவது?
அகதிகளை ஒரு அரசு அடையாளம் கண்ட பின் அவர்களை தடுப்பு முகாம்களில் வைத்திருக்கும். இந்திய அரசு இதுநாள் வரையிலும் அகதிகள் எனும் அந்தஸ்தை இம்மக்களுக்கு அளிக்காமல், சட்டவிரோதமாய் வந்திருக்கும் அந்நியர் என்றே பார்க்கிறது; பார்த்து சிறையில் அடைக்கிறது. இந்த அரசு இந்த விசயத்தை ஒரு புதுச்சட்டம் மூலம் ஒரு பிரச்சார ஆயுதமாக முயல்கிறது. இப்போது நாடு முழுக்க பல்வேறு தடுப்பு முகாம்களை கட்டி வருகிறது. அஸ்ஸாமில் கோல்போரா மாநிலத்தில் ஏழு கால்பந்தாட்ட விளையாட்டரங்குகளின் பரப்பளவில் தடுப்பு முகாம் ஒன்றை கட்டி வருகிறது. கடந்த ஒரு வருடமாக இதற்கான பணி அங்கு நடந்து வருகிறது. இதில் 3000 அகதிகள் தங்க வைக்கப்படலாம். இதற்கான செலவு 45 கோடி. அஸ்ஸாம் அரசு மேலும் பத்து தடுப்பு முகாம்கள் கட்டுவதற்காக கோரிக்கை விடுத்துள்ளது. செலவு 450 கோடி என்றால் இவற்றில் சிறை வைக்கப்படுவோரின் எண்ணிக்கை 30,000 ஆக இருக்கும். ஆனால் அரசின் கணக்குப்படி 30,000 சிறிய தொகை. பத்து முகாம்கள் போதுமானவை அல்ல. இப்போதைய திருத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டுக் கணக்கெடுப்புப் படி 19 லட்சம் பேர் அகதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த மக்களில் இந்து வங்காளிகளும் கணிசமாக இருப்பதாலே பாஜக அரசு அவர்களுக்கு ஆவணமின்றியே குடியுரிமை அளிக்கும் சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இப்போது அகதிகள் என வரையறுக்கப்பட்டோரில் இஸ்லாமியர் மட்டுமே வடிகட்டப்பட்டு முகாம்களில் சிறைவைக்கப்படுவார்கள் - The Hindu Business Line இந்த எண்னிக்கையை 5 லட்சம் என்கிறது. (இந்த அரசியலுக்கு எதிராகத் தான் அஸ்ஸாமில் பெரும் போராட்டங்கள் வெடித்துள்ளன) அரசு 160 தடுப்பு முகாம்களை கட்ட உத்தேசிக்கிறது. அங்கு ஐந்து லட்சம் அகதிகளை குடியமர்த்தி சோறு போடுவது, அவர்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது, அகதிகளை விசாரித்து தீர்ப்பு வழங்கும் நீதியமைப்புகளுக்க்கான செலவையும் சேர்த்துப் பார்த்தால் 1200 கோடி செலவாகும்.
அடுத்து நவி மும்பை, பெங்களூரு, கொல்கொத்தா என பல மாநிலங்களில் தடுப்பு முகாம்கள் கட்டப்பட்டு வருகின்றன. இவ்வளவு ஆயிரம் கோடிகளை இந்த அரசு ஏன் தடுப்பு முகாம்களுக்கு செலவிட வேண்டும்? அடுத்த பாராளுமன்ற தேர்தலில் இவை ஒரு முக்கிய பிரச்சார மையமாக இருக்கப் போகிறது என்பதைத் தவிர வேறெதற்காக இதை பாஜக செய்ய வேண்டும்? இந்த முகாம்களை அரசு அகதிகளுக்கான தற்காலிக குடியிருப்புகள் என நியாயப்படுத்தும். ஆனால் அகதியல்லாத சிறுபான்மை மக்களையும் இங்கு அனுப்புவதே அரசின் எதிர்காலத் திட்டமாக இருக்கும்.

Comments