ஒவ்வொரு கண்காட்சியிலும் இதை கவனிக்கலாம்: ஒவ்வொரு மூன்று, நான்கு வருடங்களும் புத்தக வரவில் புது வெள்ளம் பாய்கிறது. இந்த முறை கண்காட்சியில் நான் அதிகமாய் நாவல்களைக் கண்டேன். அதிகமாய் வலைதளங்களில் பேசப்பட்டவையும் நாவல்கள் தாம். அடுத்து புதிய புதிய பொருளில் அபுனைவு நூல்களும் குவிந்துள்ளன. அதுவும் அரசியல் சமூக நூல்கள். கவிதை நூல்களும் மலிந்துள்ளன என்றாலும் நான் எடுத்து வாசித்துப் பார்த்தவரையில் உருப்படியாய் புதிய தொகுப்புகளில் கண்ணில் படவில்லை (ஒருவேளை நான் அதிக அக்கறையுடன் கவிதைகளைத் தேடியிருக்க மாட்டேன்).
நாவல் வடிவிலும் பரீட்சார்த்த முயற்சிகள் அரிதாகி எதார்த்தவாத கதைகளே அதிகமாகி விட்டன. அதுவும் நிறைய பேர் முகநூல் எழுத்து அல்லது சிறுகதையில் இருந்து தம் முதல் நாவல்களை வெளியிட்டிருக்கிறார்கள். எந்தளவுக்கு என்றால் ஏற்கனவே தடம் பதித்த எழுத்தாளர்களை விட புத்தகமே வெளியிடாத இளம் பேஸ்புக்கர்களை இது நெருக்கடியில் தள்ளி உள்ளது. யாவரும் டாட்காம் சென்ற போது ஜீவ.கரிகாலன் தான் கொண்டு வந்துள்ள புது எழுத்தாளர்களின் நாவல்களை அடுக்கடுக்காய் காண்பித்தார்; அசந்து போனேன். பிரியா விஜயராகவனின் “அற்றவைகளால் நிரம்பியவள்” நாவலை அரங்கில் இருந்தே சில அதியாயங்கள் படித்தேன். முதலில் ஆச்சரியப்படுத்தியது தன் முதல் நாவலையே இவ்வளவு பெரிதாக எழுதியிருக்கிறாரே என்பது. அடுத்து தலைமுறைகளின் கதையை எழுதாமல் ஒரு பெண்ணின் கதையை பல நாடுகளுக்கு எடுத்துப் போய் அந்தரங்கமான அனுபவங்களின் தொகுப்பாக எழுதியிருக்கிறார் என்பது. அடுத்து தனித்தமிழில் எழுதுகிற மெனக்கேடு ஒன்றும் அவருக்கு இல்லை - ஆங்கிலச் சொற்களை அப்படியே பயன்படுத்துகிறார்; சிறிய அதிர்ச்சி மதிப்பும் சிலாகிப்பும் கலந்து பாலியலை எழுதுகிறார். இது இன்றைய முகநூல் எழுத்தின் தாக்கத்தினால் இருக்கலாம்.
படித்தவரையில் அந்த நாவலில் ஒரு நாவலாசிரியருக்கான பல லட்சணங்களைக் கண்டேன்.
புது எழுத்தாளர்களின் நாவல் முயற்சிக்கு பேஸ்புக் பெரிய அடித்தளம் எனத் தோன்றுகிறது. தினமும் இங்கு எழுதுவது அவர்களுக்கு சரளமான மொழிநடையையும் தம் கதையை சொன்னாலே அது நல்ல கதையாக அமையும் எனும் நம்பிக்கையையும் கொடுக்கிறது. இரண்டுமே புனைவெழுத்தாளனுக்கு அவசியமான இயல்புகள். நான் இந்த போக்கை ஆரோக்கியமானதாகப் பார்க்கிறேன் - ஒருவர் தன் முதல் நாவலை எழுதுவது ஒன்றும் சாதாரண விசயம் அல்ல. நீங்கள் எந்தளவுக்கு அதிகமாய் வாசிக்கிறீர்களோ அந்தளவுக்கு எழுதுவது சிரமமாகும். இத்தனை அற்புதமான நாவலாசிரியர்கள் செய்யாத ஒன்றை நீங்கள் செய்தாக வேண்டும்; அவர்களின் சாதனைக்கு சற்றும் குன்றாமல் செய்ய வேண்டும். ஒரு குறிப்பிட்ட சூழலை, சம்பவத்தை, பாத்திர அமைப்பை அவர்களுக்கு ஒப்பாக நாமும் எழுத வேண்டும் என்கிற அழுத்தங்கள் நாவலை சரளமாக எழுதிப் போக சிலநேரம் பாதகமாகும். சிலபேருக்கு இத்தகைய எதிர்பார்ப்புகளே நாவலை துவங்குவதற்கு தடையாகும். ஆனால் தோளில் பாரமில்லாமல் பயணத்தை ஆரம்பிக்கிறவர்கள் சுலபத்தில் இலக்கை தொட்டு விடுகிறார்கள். அடுத்தடுத்து இவர்கள் எழுதுவது மற்றும் நாவலின் கலையை கற்றும் அனுபவத்தில் உணர்ந்தும் அறிவது முக்கியமாக இருக்கும். 2023இல் இவர்களே அடுத்தடுத்த நாவல்களை வெளியிடுவார்களா அல்லது வேறு ஆட்கள் வருவார்களா எனப் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன்.

Comments