Skip to main content

அந்நியர் மத்தியில் குழந்தைகள்



இன்று என் வேலையிடத்தில் நான் காண நேர்ந்த இரு குழந்தைகள் இடம் குறித்த என் பார்வையை முழுக்க மாற்றினார்கள்.

முதல் குழந்தை அவனது அப்பாவுடன் கையைப் பற்றி வந்தான். நான்கு வயதிருக்கும். பள்ளி சீருடை அணிந்திருந்தான். அவனுடைய அப்பா (அவர் அங்கு ஒரு ஊழியர்) சைன் இன்  செய்ய மேலே மாடிக்கு செல்ல்லும் முன் சில நிமிடங்கள் குழந்தையை கீழே உணவருந்தும் இடத்தில் ஒரு மேஜை அருகே விட்டு செல்கிறார். நான் பின்னால் ஒரு மேஜை அருகே என் சக்கர நாற்காலியைபார்க்செய்து ஒரு தேநீரை ருசித்தபடி எழுதிக் கொண்டிருக்கிறேன். கடைக்கண்ணால் குழந்தை படிக்கட்டையும் தன்னைக் கடந்து செல்லும் அந்நியர்களையும் கவனித்துக் கொண்டு நிற்கிறான். நிமிடத்துக்கு நிமிடம் பதற்றம் ஜுரம் போல ஏறுவதை அவன் முகத்தில் பார்க்கிறேன். நான் எழுதுவதைத் தொடர்கிறேன். அப்போது ஒருவர் வந்துயாருப்பா நீ? ஏன் தனியா நிற்கிறே? என்னாச்சு?” என அக்கறையாய் விசாரிக்க அவன் பதிலளிக்காமல் முழிக்கிறான். பயந்து அழுகிறான். இப்போது அவர் தன் பையை கீழே வைத்து விட்டு அவன் முன் மண்டியிட்டு ஆறுதல்படுத்துகிறார். அவன் பதில் சொல்லாமல் தாரைத்தாரையாய் கண்ணீர் வடிக்கிறான். நான் எழுதுவதை விட்டு விட்டு அங்கு செல்லுமுன்பு நான்கைந்து பேர்கள் கூடுதலாய் சேர்ந்து விட்டார்கள்.
அவனுக்கு தமிழ் தான் புரியும் எனத் தெரிய வர தமிழிலும் அவனிடம் விசாரிக்கிறோம். அவனுடன் வந்தது அவன் அப்பா என நான் ஆரம்பித்து நினைத்தாலும் இப்போது ஒரு குழப்பம் வருகிறது. யாராவது தெரியாமல் அங்கே கொண்டு விட்டு விட்டு போய் விட்டார்களா? ஆனால் அது அப்பா தான். “அம்மா எங்கே?” “அம்மா எங்கே?” எனும் கேள்விகளுக்கு அசைந்து கொடுக்காதவன், கூடுதலாய் அழுதவன், “அப்பா எங்கே?” என்றதும் நிதானமாகிறான். தளும்பி நிற்கும் விழிகளால் பார்த்து நெஞ்சங்களை கரைத்து விட்டு தன் அப்பா மேலே மாடிக்கு சென்றிருப்பதாய் சைகை செய்து சொல்கிறான். இப்போது குறிப்பாய் விசாரிக்கப்பட அவன் அமைதியாகி தன் அப்பாவின் பெயரைக் குறிப்பிடுகிறான்ஆனால் கூட்டத்தைக்  கண்டு ஏனோ அவன் மீண்டும் அழுகிறான். இப்போது ஒருவர் அவன் அப்பாவைப் போய் அழைத்து வருவதாய் உறுதிப்படுத்துகிறார், அவன் அதை நம்பத் தயாரில்லாதது போல கூடுதலாய் அழுகிறான். இப்போது அவன் அப்பாவே வந்து அரவணைத்து அழைத்து செல்ல, ஒரு டிப்பிக்கல் ஆணைப் போல, வேகத்துடன் கண்ணீரைத் துடைக்கிறான். சின்ன பயத்துடன் அப்பாவின் கையைப் பற்றி அங்கிருந்து நடந்து அகல்கிறான்
சற்று நேரத்தில் அங்கு மற்றொரு சிறுவனை அவன் அப்பா அழைத்து வருகிறார். அவனுக்கும் நான்கு வயதுக்குள் தான் இருக்கும், அதே சிருடை. அவனுடைய அப்பா அங்குள்ள உணவகம் ஒன்றில் பணி புரிகிறார். அவர் பையனை விட்டு சில நிமிடங்கள் கழிவறைக்குள் போய் விட்டார். அதற்குள் அவன் நாற்காலியில் ஏறி குட்டிக்கரணம் அடித்து, அங்கு பெருக்க வந்த பாட்டிகளை துரத்திக் கொண்டோடி, கூச்சலிட்டு அதகளம் பண்ணி விட்டான். உணவகத்தில் ஒரு பொறுப்பில் இருக்கிறவரைக் கண்டதும் போய் பேசினான். ஒரு நிமிடத்துக்குள் இத்தனையையும் அவன் எப்படி செய்தான் என நான் வியந்தேன்.
ஒரு குழந்தை பேசவே அஞ்சி கண்ணீர் வடிக்க மற்றொரு குழந்தை மொத்த இடத்தை ஆளுகை செய்கிறான். அவனுக்குள்ள தயக்கம் ஏன் இவனுக்கு இல்லை?
 இரு குழந்தைகளுக்கும் முக்கிய வித்தியாசம் அவர்களின் ஆளுமை மட்டுமல்ல அவர்களுக்கு அந்த இடத்தில் உள்ள மனிதர்களுடன் உள்ள பரிச்சயமும் தான். இடமும் (வெளியும்) மனிதர்களும் ஒன்றே எனும் புரிதல் குழந்தைகளுக்கு கூர்மையாக உள்ளது. அதனாலே ஒரு புதிய இடத்திற்கு செல்லும் போது அவர்கள் அந்த இடத்தைக் கண்டு எதையும் மதிப்பிடுவதில்லை; தன்னை நோக்கி வரும் மனிதர்களையே கவனித்து அனுமானிக்கிறார்கள்; அடுத்தடுத்த செயல்களை ஊகிக்கிறார்கள். ஒரு குழந்தைக்கு தன்னை நோக்கித் திடீரென வந்து விசாரிக்கும் மனிதர்கள் திடீரென மூடுகிற ஒரு கதவுக்கு சமானம். இது நமக்குப் புரிந்து கொள்ள குழப்பமாக இருக்கும், ஆனால் குழந்தைகள் இயல்பாகவே அப்படித் தான் வெளியைப் புரிந்து கொள்கிறார்கள்

குழந்தைகள் ஒரு புது இடத்துக்கு செல்லும் போது தம் பெற்றோரின் கையைப் பற்றி செல்வதை கவனியுங்கள். அது பாதுகாப்புக்காகவும் வழியறிதலுக்காகவும் மட்டுமல்ல. பெற்றோர் ஒரு புது இடத்துக்குள் புகுந்து நடந்து செல்ல அங்கு பல கதவுகள் குழந்தைக்குத் திறக்கின்றன. சற்று கூடுதல் துணிச்சலான குழந்தைகள் பெற்றோர்கள் அருகாமையில் இருந்தால் சற்று தொலைவு வரை தனியாக ஓடி விளையாடுவார்கள். ஆனால் தாம் தனியாக இருப்பதாக உணர்வு ஏற்பட்டால் உடனடியாய் அழுவார்கள். (இது வீட்டு நாய் தன் சொந்தக்காரருடன் புது இடத்துக்கு செல்வதற்கு இணையானது.)

குழந்தைகளிடம் நாம் முதலில் பேசும் போது நாம் முன்னேகி சென்று கேள்விகளைக் கேட்டால் அவர்கள் பயந்து அழுவதன் காரணமும் இது தான். அப்போது அவர்களுக்கு அந்த வெளி நான்கு சுவர்களாக மாறி எழுந்து வந்து தம்மை நெருக்குவதாகத் தோன்றுகிறது. அதனால் குழந்தைகளை நோக்கி நாமாக செல்லாமல் அவர்களை நம்மை நோக்கி வரவழைப்பது, அவர்களாக நம்மிடம் பேச வைப்பது முக்கியம். அப்போது உடனே நட்பாகி விடுவார்கள்


முதல் குழந்தைக்கு அங்குள்ள மனிதர்கள் அந்நியம் என்பதால் அது தனக்கு சொந்தமில்லாத இடத்தில் தனக்கு சொந்தம் ஒரு சிறிய சதுர அளவு இடம் மட்டுமே என நினைத்து அசையாது நின்ற இடத்தில் நின்றான். ஆனால் அடுத்த குழந்தைக்கோ அங்குள்ள ஆட்கள் சிலரைத் தெரியும் என்பதால் மொத்தமும் தன் இடமே என நம்பி குதித்து கூச்சலிடுகிறான்

Comments

"முதல் குழந்தைக்கு அங்குள்ள மனிதர்கள் அந்நியம் என்பதால் அது தனக்கு சொந்தமில்லாத இடத்தில் தனக்கு சொந்தம் ஒரு சிறிய சதுர அளவு இடம் மட்டுமே என நினைத்து அசையாது நின்ற இடத்தில் நின்றான்."

சிறுவயதில் (5 வது படிக்கும் போது) கை மூட்டு விலகி நாட்டு வைத்தியரிடம் சென்று கையைக் கட்டி தொட்டில் போட்டு அப்பாவுடன் மிதிவண்டியில் திரும்பி வந்தோம். வழியில் ஒரு தேநீர் கடையில் அப்பா மிதிவண்டியை நிறுத்தி ஸ்டாண்டு போட்டு டீ குடிக்கப் போய்விட்டார். எனக்கும் ஒரு வடை வாங்கி கொடுத்தார். பிறகு அவர் நண்பர்களுடன் கதை பேச ஆரம்பித்துவிட்டார். அவர் அருகில் வந்தால் ஆடாமல் அசையாமல் நிற்கும் சைக்கிள், அவர் விலகியதும் எனக்கு ஆடுவது போலத் தோன்றியது. நிலமே மெல்ல அசைந்து சைக்கிளோடு விழுந்துவிடுவேனோ என்று தோன்றியது. கண்களை மூடினாலும் நிலம் மெல்ல பாதாளத்தை நோக்கி சரிவதைப் போல இருந்தது. வயிற்றைப் புரட்டி பயத்தில் அழத்தொடங்கி விட்டேன். அப்பா வந்ததும் சைக்கிள் கல்லு மாதிரி நின்றது.

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...