ஒரு எழுத்தாளர் மலைமேல் இருக்கும் முருகனை ‘தரிசிக்க’ சென்றதைப் பற்றி எழுதியிருந்தார். நான் அவரிடம் நீங்க போகும் போது முருகன் இருந்தாரா எனக் கேட்டிருந்தேன். அவரை கிண்டலடிப்பதோ கடவுளை மறுப்பதோ என் நோக்கமல்ல. அவர் சொன்னதில் ஒரு தத்துவக் குழப்பம் இருப்பதாய் நினைத்தேன். அது என்ன?
இந்த தரிசனம் என்பது இந்த இடத்தில் குறிப்பாக என்ன எனும் சந்தேகம் முதலில் தோன்றியது. தரிசனம் என்றால் பார்ப்பது அல்ல - முருகனைப் பார்க்க முடியாது. தரிசனத்துக்கு உள்ளொளி ஞானம், மனத்திறப்பு, இருள் விலகுதல், மாயை அகலுதல் போன்ற பொருட்களும் உண்டு. ஆனால் நாம் கோயிலுக்குப் போய் சாமி தரிசிக்கும் போது இந்த குறிப்புணர்த்தப்பட்ட விசயங்களை உணர்கிறோமா? யாருக்காவது ஒவ்வொரு முறை முருகனை தரிசிக்கும் போதும் தமக்கு ஞானம் ஏற்படுவதையோ, மாயை விலகி மனம் தெளிவாகிடுவதோ உண்டா? (ஒரு பொருளோ பொருள் சார்ந்த செயலோ தானே ‘ஏற்பட’ முடியும்? தெளிதலும் அப்படித் தானே? அரூப விசயங்களில் அது சாத்தியமா என்பன வேறு கேள்விகள்.)
நம் நாட்டில் பல்லாயிரம் கோடி பேர் தினமும் கோயிலிலோ பூஜையறையிலோ இறைவனை தரிசிக்கிறார்கள்? இவர்களும் திரிபறத் தெளிந்த ஞானிகளா ஆகி விடுகிறார்களா? இல்லையே.
நமது அன்றாட பயன்பாட்டில் சில குறிப்பிட்ட சொற்களை மட்டும் இப்படி தெளிவின்றி நோக்கமின்றி பயன்படுத்துகிறோம். பிளேட்டோவின் Dialogues நூல் வரிசையில் சாக்ரடீஸ் நாம் நமது சொல் பயன்பாடு குறித்து தெளிவுடன் இருந்தாலோ தெளிவற்ற பயன்பாடுகளை அலசினாலோ விவேகம் கிடைக்கும், மூடநம்பிக்கைகள், பிழையான சிந்தனையில் இருந்து விடுதலை கிடைக்கும் என்கிறார் (Euthyphro நல்ல உதாரணம்). தேசப்பற்று பற்றி ஒருவர் பேசினால் அவரிடம் தேசம் என்பதை முரணின்றி விளக்க சொல்லுங்கள். ஜனநாயகம் என்று பேசுகிறவர்களிடம் அனைத்து ஜனங்களாலும் ஆளப்படுவதா எனக் கேளுங்கள். மக்களாட்சி பற்றி பேசுகிறவர்களிடம் ஆட்சி என்பதன் பொருளென்ன என வினவுங்கள். திருமணம் செய்யுமுன் அச்சொல்லினால் எந்த உத்தேசிக்கிறீர்கள் என்பதில் தெளிவு கொள்ளுங்கள். நம் சொற்கள் தெளிவற்றவை, முரண்களால் பின்னப்பட்டவை என்றால் அவை சாரமற்றவை. சாரமற்ற விசயங்களை நாம் உதறி விட்டு மகிழ்ச்சியாய் இருக்க முடியும்.
பொருண்மையான பல விசயங்களில் மொழி இப்படி இடறுவதில்லை என்பதை கவனிக்கலாம் - நான் பாட்டுப் பாடுகிறேன் என்றால் அது தெளிவானது. போனில் பேசுவது, உணவருந்துவது, குளிப்பது, சிறுநீர் கழிப்பது, அழுவது, தழுவிக் கொள்வது ... இப்படி கணிசமான மொழிப்பிரயோகங்களில் பிரச்சனையில்லை. உடனடியாய் நம் முன் இல்லாத விசயங்களைப் பேசும் போது இப்பிரச்சனைகள் உடனடியாய் முளைக்கின்றன - உ.தா., “தூக்கம் வருகிறது”. தூக்கம் உங்களுக்கு நீங்கள் ‘தூங்கும்’ முன்பு எப்படி வரும்? அல்லது தூக்கம் உங்களை நோக்கி வருகிறது என உருவகமாய் சொல்கிறீர்களா? தூக்கம் உங்களை நோக்கி மெத்து மெத்தென நடந்து தன் அழகிய கரங்களை நீட்டி அரவணைக்க அருகில் வருகிறது என்றால் அது ‘நடக்கிற’ சமயத்தில் ‘அது’ எங்கே? எங்குமே இல்லையே.
இப்போது சொல்லுங்கள் நீங்கள் முருகனைப் பார்க்கிறீர்களா தரிசிக்கிறீர்களா? தரிசிப்பது தான் இல்லை என்று ஆகி விட்டது.
பார்ப்பதைப் ‘பார்ப்போம்’ - நீங்கள் மலைமேலுள்ள முருகனைப் பார்க்க போகிறீர்கள். ஒருவரை நீங்கள் பார்ப்பதற்கான சில நிபந்தனைகளில் ஒன்று அங்கு பார்க்கிறவரும் பார்க்கப்படுபவரும் இருக்க வேண்டும் என்பது. (நாகார்ஜுனர் தனது “மூலமாத்யாமிக காரிகா” நூலில் இந்த சிக்கலைப் பற்றி ஒரு சூத்திரத்தில் குறிப்பிடுகிறார்.) நீங்கள் முருகனைப் பார்த்து அவரை ‘பார்க்கப்பட்டவராக’ ஆக்கினால் அங்கு ஒரு இருமை தோன்றுகிறது - நீங்கள் பார்க்கிறவர், முருகன் பார்க்கப்படுகிறவர். ஒன்று இல்லாமல் இன்னொன்று அங்கு இல்லை. நீங்கள் அந்த சமயம் பார்க்கவில்லை என்றால் முருகன் அழிந்து விடுவார். அதை விடப் பிரச்சனை நீங்கள் பார்க்காத போது முருகன் இருக்க மாட்டார் என்பதால் முருகன் சாரமற்றவர் என ஆகி விடுகிறது. (நாகார்ஜுனரின் வாதம் இப்படித் தான் போகும்.) கணிசமான பக்தர்கள் தம் கடவுள் சாரமற்றவர் என்பதை ஏற்க மாட்டார்கள். ஆகையால் முருகனை நீங்கள் ‘பார்க்கவில்லை’ என்றே சொல்லியாக வேண்டும்.
அடுத்து ஒரு பிரச்சனை வருகிறது - பார்ப்பது எனும் செயலே பார்க்கிறவர் மற்றும் பார்க்கப்படும் பொருள் / நபரைப் பொருத்தே சாத்தியமாகிறது. முருகனைப் பார்ப்பதே பக்தி என்றால் பார்க்கப்படும் முருகன் நீங்கள் பார்ப்பதனாலே சாரமற்றவர் ஆகி விடுகிறார். ஆகையால் மலையேறி நீங்கள் முருகனைப் பார்க்க செல்வதால் முருகன் மட்டுமல்ல பக்தியும் சாரமற்றதாகிறது. நீங்கள் மலையேறி செல்வதால் நாத்திகவாதி ஆகி விடுகிறீர்கள்!
சரி தரிசிக்கவும் இல்லை, பார்க்கவும் இல்லை என்றால் நீங்கள் முருகனிடம் என்னதான் பண்ண முடியும்? உங்கள் கருத்து என்ன? நீங்கள் உங்கள் இஷ்ட தெய்வத்தின் முன் செல்லும் போது என்ன பண்ணுவீர்கள்? எது சரியான சொல்?

Comments