மோடி கடும் உழைப்பாளி, அவர் நிர்வாக அனுபவம் கொண்டவர் என்றெல்லாம் சொல்லி விட்டு அவரது ஆட்சியின் குளறுபடிகளையும் ராமசந்திர குஹா இன்னொரு பக்கம் சுட்டிக் காட்டுகிறார். இது ஒரு சீரியல் கில்லரை கண்டித்தபடியே ஆனாலும் அவர் கடும் உழைப்பாளி, துல்லியமாக திட்டமிடும் சாமர்த்தியசாலி, கூர்மதியாளர், அவர் அளவுக்கு போலீசுக்கு (ராகுல் காந்திக்கு) திறமையில்லை என்பதாலே குற்றங்கள் நடக்கிறது என சொல்வதைப் போல இருக்கிறது. மோடி அவ்வளவு நிர்வாக அனுபவம் கொண்டவர் என்றால் ஏன் பொருளாதாரத்தை இப்படி பாதாளத்தில் தள்ளியிருக்கிறார்? மோடி கடும் உழைப்பாளி என்றால் அந்த உழைப்பின் பலன் மக்களுக்கு பலன் அளிப்பதா அல்லது மக்களை அவதிக்குள்ளாக்குவதா?
ஹிட்லர் கடுமையாக உழைத்து பல வதைமுகாம்களை சிறப்பாக நடத்தினார் எனப் பாராட்டுவதைப் போல இருக்கிறது குஹா சொல்வது. மோடியின் உழைப்பு, நிர்வாகத் திறன் என்பதெல்லாம் குஜராத்தை விட்டு அவர் வெளியே வந்த பின் வெறும் விளம்பரம், பிரச்சாரம், வானொலி உரை, கம்பீரத் தோற்றம், தன் பினாமிகளுக்கு இந்தியாவை விலைக்கு விற்பது என்கிற அளவில் அல்லாமல் வேறு எப்படி இந்நாட்டை மேம்படுத்துவதற்கு உதவியிருக்கிறது?

Comments