Skip to main content

தமிழ் மனத்துக்கு இணக்கமான மலையாள இயக்குநர்



பொதுவாக நாம் மலையாளப் படங்களின் புதுமையான எதார்த்தமான கதைகளை வியப்பது வழமை. அதற்கு ஏற்றாற் போல தமிழில் கற்பனையே பண்ண முடியாத வித்தியாசமான எண்ணற்ற படங்களை மலையாளத்தில் ரொம்ப குறைவான பட்ஜட்டில் எடுத்திருக்கிறார்கள். பாசில், பரதன் போன்றவர்கள் மலையாளக்கரை தாண்டி இங்கே வந்து வெற்றிப்படங்களை (அல்லது நல்ல படங்களைத்) தந்திருக்கிறார்கள். ஆனால் மலையாள மண்ணில் தமிழ் சினிமாவுக்கே உரித்தான குடும்ப செண்டிமெண்டுகளுடன் கடந்த முப்பது வருடங்களாக ஒருவர் படமெடுத்து வருகிறார் - சத்யன் அந்திக்காடு.
 மலையாளப் படங்களைப் பார்க்க விரும்பும் தமிழ் நண்பர்கள் / தோழிகளுக்கு நான் உடனடியாய் பரிந்துரைப்பது சத்யன் அந்திக்காடின் படங்களையே. ஏனென்றால் நமது விசு அல்லது விக்கிரமன் போன்றவர்கள் தெரியாமல் மலையாளத்துக்கு சென்று சற்று நேர்த்தியாக தெளிவாக படமெடுத்தது போல இருக்கும் அவரது பல படங்கள். குறிப்பாகமனசினக்கரே”, “வீண்டும் சில வீட்டு காரியங்கள்”, “தலையண மந்திரம்”, “அச்சுவிண்டே அம்மா”, “கத துடருந்நுபோன்ற படங்களை இதைப் படிக்கிற உங்களில் யார் வேண்டுமெனிலும் கண்ணை மூடிக் கொண்டு பார்க்கலாம் என்பேன். அதுவும்யார்த்திரக்காருடே ஷ்ரெத்தெக்குஅப்படியே வசந்த் எடுத்தது போல இருக்கும்.

 நான் அவர் எடுத்தது தான் எனத் தெரியாமல் சத்யன் அந்திக்காடின் படங்களுக்கு ரசிகனாக இத்தனைக் காலமும் இருந்திருக்கிறேன். அதற்குக் காரணமும் என் தமிழ் உளவியலாக இருக்கலாம்அதிலும்வீண்டும் சில வீட்டு காரியங்கள்நான் பலமுறை மனம் கசிய பார்த்த படம்: ஒரு வசதியான கிறித்துவக் குடும்பம். இளைய மகனைத் தவிர பிற பிள்ளைகள் படிப்பு, வேலை என செட்டில் ஆகி விடுகிறார்கள். இளையமகன் தான் அப்பாவுக்கு ரொம்ப பிரியம். அதனாலே செல்லம் கொடுத்து கொடுத்து கெடுத்து விடுகிறார். அவனுக்கு நாடகம், இசை போன்றவற்றில் ஆர்வம் அதிகம். தான் ஒரு பெரிய நடிகன், நாடகாசிரியன் என வீண் ஜம்பம் அவனுக்கு. ஆனால் நாடகத்தின் அரிச்சுவடி தெரியாது. அப்பாவுக்கும் நாடகத்தில் அனுபவமும் ஆர்வமும் உண்டு என்பதால் இரண்டு பேரும் பிறருக்குத் தெரியாமல் நாடகம், கலை என கூத்தடிக்கிறார்கள். ஒருநாள் தன் மகன் எல்லை மீறிப் போகிறான், பொறுப்பில்லாமல் வீணாகிறான் எனத் தோன்றும் அப்பா அவனை வீட்டை விட்டு வெளியேற்றுகிறார். அடுத்து என்னவாகிறது என்பது தான் மிச்சக் கதை
அப்பாவாக திலகனும் மகனாக ஜெயராமும் அபாரமாக நடித்திருப்பார்கள். லோகித தாஸின் கச்சிதமான திரைக்கதை. இந்த படத்தின் கதை அப்படியேபடிக்காத மேதைபடத்தைக் தழுவியது என்பது இந்நேரம் உங்களில் சிவாஜி ரசிகர்களுக்கு நிச்சயமாய் புரிந்திருக்கும். ஆனால்படிக்காத மேதைஒன்றும் புதிய கதை அல்லவே. அதுஜோக் பியாக்எனும் வங்கப்படத்தை தழுவியது. அந்த படத்தையும் கூட ஒரு நாவலைத் தழுவி எடுத்திருந்தாலும் அதுவும் ஒன்றும் ஒரிஜினல் அல்ல. தழுவித் தழுவி நம் ஆட்கள் பதினாறாம் நூற்றாண்டில் ஷேக்ஸ்பியர் எழுதிய பிரசித்த நாடகமானகிங் லியர்வரை போய் விட்டார்கள். “கிங் லியரில்கதையில் ஒரு வயதான மன்னர் தனது நாட்டை மூன்று மகள்களில் யார் தன்னிடம் அதிகம் பாசம் காட்டுகிறார்களோ அவர்களுக்கே பங்கிட்டு அளிப்பேன் என அறிவிக்கிறார். பாசாங்கு காட்டி இரண்டு பெண்கள் நாட்டைப் பறித்துக் கொண்டு அப்பாவை பின்னர் துரத்தி விடுகிறார்கள். நாணயமாக இருந்த ஒரு மகளுக்கு உரிய பங்களிக்காமல் அப்பா ஆரம்பத்தில் துரத்தி விடுகிறார். இப்போது மன்னர் நாட்டையும் அதிகாரத்தையும் இழந்து கண்ணில்லாத பிச்சைக்காரராகத் திரியும் போது அவருக்கு ஆதரவளித்து பாதுகாப்பது அந்த மூன்றாவது மகள் தான். அந்த கதையை சுதந்திரத்துக்குப் பிறகான ஒழுக்கம் சீரழிந்த பாசம் மறந்த இந்திய சமூகத்தில் வைத்தால்படிக்காத மேதைதோன்றுகிறது. அதே கதையை கேரளாவுக்கு கொண்டு வந்து அப்பா மகனைத் திருத்துவதற்காக வீட்டை விட்டு துரத்துவதாக மாற்றினால்வீண்டும் சில வீட்டு காரியங்கள்வந்து விடுகிறது.

 இதேவீண்டும் சில வீட்டு காரியங்கள்கதையை கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து அப்பாவுக்குப் பதிலாக அம்மாவை மாற்றி மகனுக்கும் வளர்ப்பு மகனுக்கும் இடையிலான பாசப்போராட்டம் ஆக்கினால்மனசினக்கரேவந்து விடுகிறது (இந்த கதையையும் இன்னும் கொஞ்சம் தழுவி தமிழுக்கே திரும்ப கொண்டு வந்தார்கள் என்பது வேறு கதை - ரஞ்சித் நடித்தபசுபதி மே / பா ராக்காபாளையம்”).
ஆனால் இந்த படங்களில் சொல்லாமல் சுட்ட பாவத்துக்குப் பரிகாரம் என்பது போல சத்தியன் அந்திக்காடு ஒரே ஒரு படத்துக்கு மட்டும் ஒழுங்காக அனுமதி பெற்று தழுவி எடுத்தார்.  “சம்சாரம் அது மின்சாரம்படத்தை மலையாளத்தில்குடும்ப புராணம்என மறுஆக்கம் செய்தார்.
 சத்யன் அந்திக்காடு குடும்ப செண்டிமெண்ட் படங்கள் மட்டுமல் அல்லாமல்  “நாடோடிக் காற்று”, “பட்டணப் பிரவேசம்”, “சந்தேஷம்”, “காந்தி நகர் செகண்ட் ஸ்டிரீட்போன்ற நகைச்சுவை, பகடி படங்களும் எடுத்து பெரும் வெற்றி பெற்றார். மோகன்லால், ஶ்ரீனிவாசன் இருவரின் நடிப்பு வாழ்வில் மறக்க முடியாத முத்திரைப் படங்களாக இவை அமைந்தன. “அர்த்தம்எனும் வித்தியாசமான இருத்தலிய சாயல் கொண்ட சற்றே பரிட்சார்த்தமான படத்தையும் எடுத்தார்; அது வெற்றியும் பெற்றது. மற்றொரு பக்கம்பின்காமி”, “களிக்களம்போன்ற ஆக்‌ஷன், போலீஸ்-திருடன் பாணி படங்களை எடுத்து கையையும் சுட்டுக் கொண்டார். இந்த மாற்றுக்கதைகளை விடுத்தால் சதய்ன் அந்திக்காடின் கிட்டத்தட்ட எல்லா படங்களுக்கு ஒரு பொதுவான சரடு உண்டு - அது ஒரு கதாபாத்திரம். வாழ்க்கையில் தொடர்ந்து தோற்றுப் போகும் ஆனால் அதை ஏற்றுக் கொள்ள விரும்பாத போலி அபிமானம் மிக்க ஒரு மத்திய வர்க்க ஆண். அவனது அதிரடி சேட்டைகளை, குழப்படிகளை நகைச்சுவை கதைப்பின்னணியில் வைத்தால்நாடோடிக் காற்று”, “பட்டணப் பிரவேசம்ஆகி விடும். சமூகக் களத்தில் வைத்தால்சந்தேஷம்வந்து விடுகிறது. போலி கௌரவம் காரணமாய் சொந்த ஊரில் வேலை செய்ய முடியாமல் கூர்க்காவாக மாறுவேடம் போட்டு வேறு ஊருக்கு வேறு மாநிலத்துக்கோ சென்று புதிய வேலைகள் செய்கிறவனின் கதையாக்கினால்நாடோடிக் காற்று”, “காந்தி நகர் செகண்ட் ஸ்டிரீட்போன்ற படங்கள் தோன்றுகின்றன. இதே பாத்திரத்தை குடும்பக் களம், அரசியல் களம் என மாற்றி வைத்து பல சுவையான படங்களை சத்யன் அந்திக்காடு எடுத்தார். (இந்த வெட்டி வீராப்பு நாயகன் தான் தமிழில் வடிவேலுவின் வடிவில் எதேச்சையாக ஒரு அட்டாகாசமான நகைச்சுவை சாதனையாளனாக மாறியதோ எனத் தோன்றுகிறது.)  ஒரே பாத்திரம், வெவ்வேறு சூழல்கள் என வித்தியாசமான கதைகளை அவர் உண்டு பண்ணி வெற்றிப்படமாக்குவது ஒரு தனிசாதனை எனத் தோன்றுகிறது. வேறு எந்த இயக்குநரையும் இவ்விசயத்தில் சத்தியன் அந்திக்காடுடன் ஒப்பிட இயலாது (தமிழில் பாக்கியராஜ் மற்றும் அவரது சீடர்களைத் தவிர).


Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...