Skip to main content

புலி வேட்டையும் கொரோனா வேட்டையும்


பி.பி.சி இணையதளத்தின் புள்ளிவிபரக் கணக்கு இது - கொரோனா வைரஸ் தாக்கியவர்களில் ஆயிரத்தில் ஒன்பது பேர் மட்டுமே மரணமடைகிறார்கள். அதாவது 1%. அதுவும் இந்த வைரல் ஜுரம் வந்தவர்களில் மிகவும் வயதானவர்கள், ஏற்னவே உடல்நிலை சீர்குலைந்து போனவர்களே மரணமடைய வாய்ப்பதிகம். பெரும்பாலோனவர்களுக்கு இது ஒரு சிறிய ஜுரம், சளித்தொல்லை போலத் தோன்றி வந்த வேகத்தில் மறைந்து போகும். ஆனால் இப்போது உலகம் முழுக்க பரவியுள்ள பீதியால் தும்மினால் கூட ஐயோ சாவு நெருங்குதோ என மக்கள் பதறும் நிலை ஏற்படுகிறது. மூக்கு ஒழுகினால் உங்களிடம் இருந்து தள்ளி நிற்கிறார்கள். என்னுடைய கல்லூரியில் எங்கு பார்த்தாலும் முகமூடியுடன் மாணவர்கள் திரிகிறார்கள். சென்னையில் கொரோனா முகமூடி என்று சொல்லி கூவி விற்கிற காணொளி ஒன்றைப் பார்த்தேன். ஹேண்ட் சேனிடைஸர்கள் மருந்துக்கடைகளில் காலியாகி விடுகின்றன. பள்ளிகளை மூடிவிட்டார்கள் (ஆனால் புள்ளிவிபரப்படி இந்த நோய்த்தாக்குதலால் குழந்தைகள் அதிகம் மரணமடைவதில்லை). ஒரு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படம் வெளியாகியதை விட, தேர்தல் முடிவுகளை விட அதிக பரபரப்பை இது தோற்றுவித்துள்ளது.

ஒப்பீட்டளவில் தில்லியில் நடந்த  (நடத்தப்பட்ட) கலவரங்களில் கொல்லப்பட்டவர்களில் பத்தில் ஒரு மடங்கு கூட இன்னும் கொரோனாவுக்கு பலியாகியதாய் தெரியவில்லை. தூத்துக்குடியில் காவல்துறையில் துப்பாக்கிச்சூட்டில் கொடூரமாய் கொல்லப்பட்டதைப் போல மக்கள் இன்னமும் இந்நோய்க்கு பலியாகவில்லை. ஆனால் தில்லி கலவரங்களின் போது ஆயிரக்கானோர் கைகால் உடைக்கப்பட்ட ஆஸ்பத்திரியில் இருக்கிறார்கள் என செய்தி வந்த போது அசராத நாம் இந்த 1% மரண வாய்ப்புள்ள கொரோனாவுக்குப் போய் ஏன் இப்படி அல்லோலப்படுகிறோம் என்னும் கேள்வி கடந்த சில தினங்களாகவே என்னை அலைகழிக்கிறது. எனக்கு உண்மையில் எந்த தெளிவான விடையும் கிடைக்கவில்லை. சில அனுமானங்கள் மட்டுமே:

1) ஒரு குறிப்பிட்ட கட்சியினரால் அல்லது போலீசாரால் மக்கள் திரள் கொல்லப்படும் போது அங்கு ஒருமற்றமைதோன்றுகிறது - செத்தவர்கள் ஒன்று இஸ்லாமியர் என சமாதானம் கொள்கிறோம். இந்து ஒருவர் கொல்லப்பட்டதாய் தெரிய வந்தால் அவர் தான் இஸ்லாமியர் வீட்டுக்குள் தாக்குதல் செய்ய போயிருப்பார் என நினைக்கிறோம். இந்த இரண்டு தரப்புமே மனிதர் தாம், அவர்கள் நம்மில் ஒருவர் என நமக்குத் தோன்றாது. இவர்களுக்கு வெளியே நாம் இருப்பதாய் நினைக்கிறோம். துப்பாக்கிச் சூட்டின் போதும் கூட இந்த மத்திய வர்க்க மனநிலை தான் வெளிப்படுகிறது - அவர்களை யார் தெருவில் இறங்க போராடச் சொன்னது என சிந்திக்கிறோம்; அப்படி உயிர்விட்டவர்களை மற்றமையாக்கி நம் பிரக்ஞைக்கு வெளியே வைக்கிறோம். நகரவயப்பட்ட எல்லா நாடுகளிலும் இன்று இந்த தனிமைப்படல், மற்றமையைப் புரிந்து கொள்ள மறுத்தல் உள்ளது. ஆனால் கொரோனாவின் போது இது சாத்தியப்படுவதில்லை. வைரஸ் ஒரு கண்ணுக்குப் புலப்படாத எதிரி. வைரஸால் பாதிக்கப்பட்டதாய் சொல்லப்படுகிறவர்களும் கண்ணுக்குப் புலப்படாதவர்கள். அவர்களை நாம் தேடிக்கொண்டே இருக்கையில் ஒருவேளை நாமும் பாதிக்கப்பட்டிருப்போமோ என அஞ்சுகிறோம். நம் நெருங்கிய நண்பர்கள், சாதியினர், குடும்பத்தினர், மனைவி, குழந்தைக்கு நோய்த்தொற்று இருக்குமோ எனப் பதறுகிறோம். எங்கெங்கும் நீக்கமற நிறைந்த ஒருபரப்பிரம்மமாகவைரஸ் உள்ளதால், அதன் முன் பாகுபாடே இல்லாததால் நாம் நிஜமாகவே பீதியாகிறோம்

2) ஊடகங்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம் என்னும் பெயரில் இந்த பீதியை வைத்து வியாபாரம் பண்ணுகிறது. இதற்கு இணையாக மற்றொரு மிகப்பெரிய பரபரப்பு நிகழும் வரை இது நன்கு விற்கும் சேதியாக இருக்கும். உங்களுக்கு பெரிய கவரேஜ் எல்லாம் தேவையில்லை - சென்னையில் ரெண்டு பேர் மரணமடைந்தார்கள் என தலைப்பு செய்தி போட்டால் போதும். அன்றே கூட ஒரு விபத்தில் நாற்பது பேர் செத்திருந்தாலும் அது பின்னுக்குத் தள்ளப்பட்டு விடும். செத்தால் கொரோனாவால் சாக வேண்டும் என்பதே இன்றுள்ள நிலை

3) இன்று நமக்கு நிஜமாகவே கொரோனா தேவைப்படுகிறது - இவ்வளவு அர்த்தமற்றதாய், எதிர்பார்ப்புகள் அற்றதாய் முன்பு வாழ்க்கை இல்லை; வாழ்க்கை பயம் தான் மிகப்பெரிய திகில் உணர்வு. திகிலுணர்வு ஒரு சாகச உணர்வைக் கொண்டு வருகிறது. ஒரு பழைய பேட்டியில் இயக்குநர் ராம் தான் ஏன் சினிமா எடுக்கிறேன் என்பதற்கு ஒரு காரணம் சொன்னார் - ஒரு 9-5 வேலையில் இல்லாத சாகசத்தன்மை சினிமாவில் உள்ளது; ஒரு சினிமா கனவு காணப்பட்டு, திட்டமிடப்பட்டு, அது படம்படிக்கப்பட்டு வெளியாவது வரை எத்தனையோ எதிர்பாரா தடைகள், தலைகீழ் மாற்றங்கள் வரலாம். இன்று சினிமாவில் இருப்பவர் நாளை இருப்பாரா எனத் தெரியாது. சினிமா எடுப்பது அல்லது சினிமாவில் தன்னை தக்க வைப்பது வனத்துக்கு வேட்டைக்கு செல்வதைப் போன்றது, அதுவே தனக்கு சினிமாவில் இருந்து கிடைக்கும் பெரிய மகிழ்ச்சி, நிறைவு எனச் சொன்னார் ராம். மனிதன் இப்படி வேட்டையாடி ஆபத்துடன் கண்ணாமூச்சி ஆடுவதற்காக தோன்றியவன். ஆனால் இன்றைய எந்திரமய வாழ்க்கையில் கணிசமானோருக்கு சலிப்பும், மாற்றமின்மையும் தான் ஒரே சாத்தியமாக உள்ளது. ஓரளவுக்கு வேட்டையாடும் திகிலை இன்று நுகர்வு அனுபவம் சாத்தியமாக்குகிறது. ஆனால் ஒரு எவ்வளவு பொருட்களைத் தான் வாங்குவது? புலி வேட்டையாட முடியாத இந்த வாழ்க்கையில் நமக்கு வேட்டையாட தற்காலிகமாக இப்போது கொரோனா வைரஸ் கிடைத்து விட்டது; நாம் கொரோனா வேட்டைக்குக் கிளம்பி விட்டோம், அல்லது கொரோனாவிடம் இருந்து (ஜுராசிக் பார்க்கில் போல) தப்பித்து ஓட என நினைக்கிறோம்.


கொரோனாவுக்கு நாம் மிகவும் கடன்பட்டிருக்கிறோம்!

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...