பி.பி.சி இணையதளத்தின் புள்ளிவிபரக் கணக்கு இது - கொரோனா வைரஸ் தாக்கியவர்களில் ஆயிரத்தில் ஒன்பது பேர் மட்டுமே மரணமடைகிறார்கள். அதாவது 1%. அதுவும் இந்த வைரல் ஜுரம் வந்தவர்களில் மிகவும் வயதானவர்கள், ஏற்னவே உடல்நிலை சீர்குலைந்து போனவர்களே மரணமடைய வாய்ப்பதிகம். பெரும்பாலோனவர்களுக்கு இது ஒரு சிறிய ஜுரம், சளித்தொல்லை போலத் தோன்றி வந்த வேகத்தில் மறைந்து போகும். ஆனால் இப்போது உலகம் முழுக்க பரவியுள்ள பீதியால் தும்மினால் கூட ஐயோ சாவு நெருங்குதோ என மக்கள் பதறும் நிலை ஏற்படுகிறது. மூக்கு ஒழுகினால் உங்களிடம் இருந்து தள்ளி நிற்கிறார்கள். என்னுடைய கல்லூரியில் எங்கு பார்த்தாலும் முகமூடியுடன் மாணவர்கள் திரிகிறார்கள். சென்னையில் கொரோனா முகமூடி என்று சொல்லி கூவி விற்கிற காணொளி ஒன்றைப் பார்த்தேன். ஹேண்ட் சேனிடைஸர்கள் மருந்துக்கடைகளில் காலியாகி விடுகின்றன. பள்ளிகளை மூடிவிட்டார்கள் (ஆனால் புள்ளிவிபரப்படி இந்த நோய்த்தாக்குதலால் குழந்தைகள் அதிகம் மரணமடைவதில்லை). ஒரு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படம் வெளியாகியதை விட, தேர்தல் முடிவுகளை விட அதிக பரபரப்பை இது தோற்றுவித்துள்ளது.
ஒப்பீட்டளவில் தில்லியில் நடந்த (நடத்தப்பட்ட) கலவரங்களில் கொல்லப்பட்டவர்களில் பத்தில் ஒரு மடங்கு கூட இன்னும் கொரோனாவுக்கு பலியாகியதாய் தெரியவில்லை. தூத்துக்குடியில் காவல்துறையில் துப்பாக்கிச்சூட்டில் கொடூரமாய் கொல்லப்பட்டதைப் போல மக்கள் இன்னமும் இந்நோய்க்கு பலியாகவில்லை. ஆனால் தில்லி கலவரங்களின் போது ஆயிரக்கானோர் கைகால் உடைக்கப்பட்ட ஆஸ்பத்திரியில் இருக்கிறார்கள் என செய்தி வந்த போது அசராத நாம் இந்த 1% மரண வாய்ப்புள்ள கொரோனாவுக்குப் போய் ஏன் இப்படி அல்லோலப்படுகிறோம் என்னும் கேள்வி கடந்த சில தினங்களாகவே என்னை அலைகழிக்கிறது. எனக்கு உண்மையில் எந்த தெளிவான விடையும் கிடைக்கவில்லை. சில அனுமானங்கள் மட்டுமே:
1) ஒரு குறிப்பிட்ட கட்சியினரால் அல்லது போலீசாரால் மக்கள் திரள் கொல்லப்படும் போது அங்கு ஒரு “மற்றமை” தோன்றுகிறது - செத்தவர்கள் ஒன்று இஸ்லாமியர் என சமாதானம் கொள்கிறோம். இந்து ஒருவர் கொல்லப்பட்டதாய் தெரிய வந்தால் அவர் தான் இஸ்லாமியர் வீட்டுக்குள் தாக்குதல் செய்ய போயிருப்பார் என நினைக்கிறோம். இந்த இரண்டு தரப்புமே மனிதர் தாம், அவர்கள் நம்மில் ஒருவர் என நமக்குத் தோன்றாது. இவர்களுக்கு வெளியே நாம் இருப்பதாய் நினைக்கிறோம். துப்பாக்கிச் சூட்டின் போதும் கூட இந்த மத்திய வர்க்க மனநிலை தான் வெளிப்படுகிறது - அவர்களை யார் தெருவில் இறங்க போராடச் சொன்னது என சிந்திக்கிறோம்; அப்படி உயிர்விட்டவர்களை மற்றமையாக்கி நம் பிரக்ஞைக்கு வெளியே வைக்கிறோம். நகரவயப்பட்ட எல்லா நாடுகளிலும் இன்று இந்த தனிமைப்படல், மற்றமையைப் புரிந்து கொள்ள மறுத்தல் உள்ளது. ஆனால் கொரோனாவின் போது இது சாத்தியப்படுவதில்லை. வைரஸ் ஒரு கண்ணுக்குப் புலப்படாத எதிரி. வைரஸால் பாதிக்கப்பட்டதாய் சொல்லப்படுகிறவர்களும் கண்ணுக்குப் புலப்படாதவர்கள். அவர்களை நாம் தேடிக்கொண்டே இருக்கையில் ஒருவேளை நாமும் பாதிக்கப்பட்டிருப்போமோ என அஞ்சுகிறோம். நம் நெருங்கிய நண்பர்கள், சாதியினர், குடும்பத்தினர், மனைவி, குழந்தைக்கு நோய்த்தொற்று இருக்குமோ எனப் பதறுகிறோம். எங்கெங்கும் நீக்கமற நிறைந்த ஒரு “பரப்பிரம்மமாக” வைரஸ் உள்ளதால், அதன் முன் பாகுபாடே இல்லாததால் நாம் நிஜமாகவே பீதியாகிறோம்.
2) ஊடகங்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம் என்னும் பெயரில் இந்த பீதியை வைத்து வியாபாரம் பண்ணுகிறது. இதற்கு இணையாக மற்றொரு மிகப்பெரிய பரபரப்பு நிகழும் வரை இது நன்கு விற்கும் சேதியாக இருக்கும். உங்களுக்கு பெரிய கவரேஜ் எல்லாம் தேவையில்லை - சென்னையில் ரெண்டு பேர் மரணமடைந்தார்கள் என தலைப்பு செய்தி போட்டால் போதும். அன்றே கூட ஒரு விபத்தில் நாற்பது பேர் செத்திருந்தாலும் அது பின்னுக்குத் தள்ளப்பட்டு விடும். செத்தால் கொரோனாவால் சாக வேண்டும் என்பதே இன்றுள்ள நிலை.
3) இன்று நமக்கு நிஜமாகவே கொரோனா தேவைப்படுகிறது - இவ்வளவு அர்த்தமற்றதாய், எதிர்பார்ப்புகள் அற்றதாய் முன்பு வாழ்க்கை இல்லை; வாழ்க்கை பயம் தான் மிகப்பெரிய திகில் உணர்வு. திகிலுணர்வு ஒரு சாகச உணர்வைக் கொண்டு வருகிறது. ஒரு பழைய பேட்டியில் இயக்குநர் ராம் தான் ஏன் சினிமா எடுக்கிறேன் என்பதற்கு ஒரு காரணம் சொன்னார் - ஒரு 9-5 வேலையில் இல்லாத சாகசத்தன்மை சினிமாவில் உள்ளது; ஒரு சினிமா கனவு காணப்பட்டு, திட்டமிடப்பட்டு, அது படம்படிக்கப்பட்டு வெளியாவது வரை எத்தனையோ எதிர்பாரா தடைகள், தலைகீழ் மாற்றங்கள் வரலாம். இன்று சினிமாவில் இருப்பவர் நாளை இருப்பாரா எனத் தெரியாது. சினிமா எடுப்பது அல்லது சினிமாவில் தன்னை தக்க வைப்பது வனத்துக்கு வேட்டைக்கு செல்வதைப் போன்றது, அதுவே தனக்கு சினிமாவில் இருந்து கிடைக்கும் பெரிய மகிழ்ச்சி, நிறைவு எனச் சொன்னார் ராம். மனிதன் இப்படி வேட்டையாடி ஆபத்துடன் கண்ணாமூச்சி ஆடுவதற்காக தோன்றியவன். ஆனால் இன்றைய எந்திரமய வாழ்க்கையில் கணிசமானோருக்கு சலிப்பும், மாற்றமின்மையும் தான் ஒரே சாத்தியமாக உள்ளது. ஓரளவுக்கு வேட்டையாடும் திகிலை இன்று நுகர்வு அனுபவம் சாத்தியமாக்குகிறது. ஆனால் ஒரு எவ்வளவு பொருட்களைத் தான் வாங்குவது? புலி வேட்டையாட முடியாத இந்த வாழ்க்கையில் நமக்கு வேட்டையாட தற்காலிகமாக இப்போது கொரோனா வைரஸ் கிடைத்து விட்டது; நாம் கொரோனா வேட்டைக்குக் கிளம்பி விட்டோம், அல்லது கொரோனாவிடம் இருந்து (ஜுராசிக் பார்க்கில் போல) தப்பித்து ஓட என நினைக்கிறோம்.
கொரோனாவுக்கு நாம் மிகவும் கடன்பட்டிருக்கிறோம்!
Comments