கவிஞர் சபீதாவின் தற்கொலை குறித்த பலவிதமான பதிவுகளைப் படித்துக் கொண்டிருந்த போது ஒருவருக்கு தற்கொலை செய்ய உரிமை உண்டா என்கிற சந்தேகம் ஏற்பட்டது. முதலில், குடும்பம் அதை அனுமதிப்பதில்லை. அடுத்து, நண்பர்கள், ஆதரவாளர்கள், நேசம் கொண்டவர்கள் நம்மைப் போகாதே எனக் கையைப் பற்றி இழுக்கிறார்கள். சரி, தற்கொலையின் பிரச்சனை தான் என்ன?
1) வாழ்வு முழுமையடையுமுன் முடித்துக் கொள்கிறோம் - சரி, எத்தனையோ பேரின் வாழ்க்கை, முழுமையாக வாழ்ந்தும் கூட, அப்படித் தான் இருக்கிறது. அதற்கு உண்மையில் ஒன்றுமே பண்ண முடியாது தானே. முழுமையற்ற வாழ்வை நீண்ட ஆயுளுக்கும் வாழ்ந்து முடிக்கிறவர்களை நம்மால் ஏதாவது பண்ண முடியுமா சொல்லுங்கள்? பிறகு அதே லாஜிக்கை வைத்து ஏன் தற்கொலை செய்கிறவர்களிடம் மட்டும் பிலாக்காணம் வைக்கிறோம்.
2) குடும்பத்துக்கும், நண்பர்களுக்குமான கடமையை பாதியில் விட்டு செல்கிறோம் - இது மற்றொரு கற்பனை. படாதபாடு பட்டு வளர்த்த குழந்தைகள் ஒருநாள் டாட்டா காட்டிக் கொண்டு போய் விடுகிறார்கள். பலருக்கும் நம்மை நினைவில் கூட இருப்பதில்லை. நண்பர்களிடையே எந்த தொடர்ச்சியும் இப்போதெல்லாம் இருப்பதில்லை. பேசினால் உண்டு, அல்லாவிட்டால் “தொடர்பில் இல்லை” என மறந்து போவார்கள். சாகும் போது மட்டும் கொதித்து எழுந்து கொண்டு வருவார்கள். திருமண பந்தங்கள் கேலிக்கூத்தாகி விட்ட, காதலுறவுகள் அனுதினமும் நிலையற்றுப் போகிற காலத்தில் வாழ்கிறோம். கடமையாவது மண்ணாவது!
எங்காவது ஒருவரின் தற்கொலைக்குப் பின்னர் அவரது குடும்பம் திகைத்துப் போய் வாழ்க்கையை தொலைத்து நின்றதுண்டா? இல்லை. அது ஒரு காயமாக எஞ்சியிருக்குமே அன்றி வாழ்க்கையை தடை செய்யாது.
3) “வாழ்க்கையென்றால் துன்பம், துயரம் இருக்கும், போராடி ஜெயிக்கத் தானே வேண்டும்!” நூற்றில் ஒருத்தர் தான் இங்கே போராடி ஜெயிக்கிறார்கள். மிச்ச பேர் தோல்விகளை சகித்து வாழ்கிறார்கள். அதில் எந்த பெருமையும் உண்மையில் இல்லை. சகிப்பது என்பது போராடுவது அல்ல. போராட மிகப்பெரிய அகவலிமை வேண்டும். பிடிவாதம் வேண்டும். நம்மில் பலருக்கும் இந்த அறிவுரை சொல்லத் தகுதியே இல்லை. அதிர்ஷ்டத்தால் தான் உயிருடன் இருக்கிறோம் என நினைக்கிறேன். குடும்பம், நண்பர்கள் இருக்கிற அதிர்ஷ்டம், சிரிக்கவும் வேடிக்கை காட்டவும் மறந்து போகவும் தெரிந்த அதிஷ்டம்.
4) என்னால் சகிக்க முடியாதது தற்கொலை பண்ணுகிறவர்களை தோற்றுப் போனவர்களாக, பலவீனர்களாகக் காணும் பாங்கு. வாழ்க்கை ஒரு சாலைப் பயணம், அதில் விபத்து தான் தற்கொலை என்றால், அதில் தப்பித்து விட்டவருக்கு எந்த சிறப்புத் தகுதியும் இல்லை. அதிர்ஷ்டம் மட்டுமே அவரைக் காப்பாற்றி இருக்கிறது. அப்படியே தப்பித்து இவரொன்றும் நாளை இமயமலையில் கொடி நாட்டப் போவதில்லை. இதே ரோட்டில் தான் நாயாய் வெயிலில் அங்கும் இங்கும் அலையப் போகிறார்.
5) வாழ்வை முழுமையாக வாழ்ந்து முடிப்பதும் கூட எப்போதும் நல்லதில்லை - ஜெர்மனியில் ஹோலோகோஸ்டின் போது ஒரு எழுபது வயதாளர் 90 வயது வரை பிடிவாதமாக வதைமுகாம்களில் வாழ்ந்து மறைவதனால் என்ன பயன்? ஆனால் வாழத் தான் வேண்டும் என்பேன். அதில் ஒரு திகைப்பு இருக்கிறது, சின்ன சின்ன ஆச்சரியங்கள் இருக்கின்றன, இவ்வளவு கொடுமைகளுக்கு மத்தியில் துவளாமல் நின்றேன் எனும் பெருமை இருக்கிறது. ஆல்பர்ட் காமுவின் நாவல்களில் நான் கற்றுக் கொண்டது இது. ஆனால் இந்த பெருமைக்கு மத்தியிலும் நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி எனும் பணிவு வேண்டும்.
6) வாழ்க்கை எந்த கணத்தில் முடிந்தாலும் அது ஏற்கத்தக்கதல்ல - ஏனென்றால் வாழ்க்கையில் ஒரு முடிவு மரணத்தால் ஏற்படுவதில்லை. முடிவு என்றால் நிறைவு. ஒரு புத்தகத்தை மூடுவதைப் போல, ஒரு கதவை மூடுவதைப் போல, ஒரு சினிமாவைப் பார்த்து முடிப்பதைப் போல வாழ்க்கையை முடிக்க முடியாது. எந்த மரணத்திலும் ஒரு முடிவற்ற தன்மை எஞ்சியே ஆகும். நம்முடைய அனுபவங்களில் சாவு மட்டுமே முழுமையற்றது என்றார் ஹைடெக்கர். நீங்கள் செத்துக் கொண்டிருக்கும் போதே செத்து விடுகிறீர்கள். இதோ சாகிறேன் என வசனம் பேசி யாரும் சாக முடியாது. இது ஏற்படுத்தும் திகைப்பு நம்மை மரணம் குறித்து நிறைய சிந்திக்க பேச செய்கிறது. வாழ்தலையும் சாகசமாக்குகிறது. இதை நான் ‘எழுதிக் கொண்டிருக்கும் போது சாக மாட்டேன்’ எனும் எளிய நம்பிக்கையே என்னை எழுத செய்கிறது, ஆனால் நான் சாகக்கூடும் எனும் அதே எளிய பயம் தான் இதை ஒரு திகைப்பான இனிப்பான அனுபவமாக்குகிறது. வேறெதுவும் என்னை சாவுக்கு இவ்வளவு நெருக்கமாய் கொண்டு போவதில்லை. தொண்டு கிழம் கூட சாவையும் வாழ்வையும் இப்படித் தான் உணர்கிறது. அதனாலே வயசாளிகள் சாகாமல் தொடரும் போது எரிச்சல் கொள்கிறோம், அவர்கள் வாழ்வை ருசிக்க நினைத்தால் பகடி செய்கிறோம். தற்கொலை இந்த முழுமையற்ற அனுபவத்தை தானாக நெருங்கித் தொடுகிற சாகசம். நமக்கு ஏற்படும் கவலை அவர் போய் விட்டார் என்பதை விட அவர் போய் திரும்ப வரவில்லையே என்பது தான், அவர் திரும்ப வந்து அந்த சாகசம் எப்படி இருந்ததென சொல்லவில்லையே எனும் விசனம் தான். நாம் அவரைப் பற்றி பேசிப் பேசி இந்த ஏமாற்றத்தை மறைத்துக் கொள்கிறோம். அவருக்குப் பிறகு சின்னச் சின்ன தற்கொலைகளை நிகழ்த்திக் கொண்டே போகிறோம் - நம் பித்தான காதல்களில், நம் சிலாகிப்பான எழுத்துக்களில், நம் மயக்கமான கனவுகளில், நம் முடிவுறாத பேச்சுகளில்.
தற்கொலையின் விளிம்பு வரை சென்றவர்களிடம் பேசி சரி செய்திருப்போம் — ஓரிரு அனுபவங்களாவது நம்மில் பலருக்கும் இருக்கும். ஆனால் அவர்கள் வெறுமனே விளிம்பு வரை செல்ல விரும்பியவர்கள் மட்டுமே. நாமும் அப்போது அனுபவித்த திகைப்பு அவர்களுடன் கையைப் பற்றி விளிம்பு வரை சென்று திரும்பியதே. எல்லாருடைய துயரங்களும் சாதாரண துயரங்களே. ஆனால் அத்துயரங்களை அசாதாரணமானவை என நினைக்கும் போது மட்டுமே அவர்கள் தற்கொலைக்கான முதலடியை எடுத்து வைக்கிறார்கள். அவர்களிடம் என்னுடைய துயரம் மகத்தானது, தனித்துவமானது எனும் உணர்வு இருக்கும். அது ‘என்னுடைய வாழ்வு மட்டும் மகத்தானது, தனித்துவமானது’ எனும் கோரலில் இருந்து வருவது. தற்கொலையில் மட்டுமே அதற்கான அங்கீகாரம் சில நேரம் கிடைக்கும். தற்கொலை முயற்சியாளர்களிடம் உரையாடுவது அவ்வளவு நாடகீயமாக ஆவேசமாக அமைவது அதனால் தான். நீங்களும் உங்கள் சொற்களும் அப்போது ஒரு அசாதாரணத்துவம் பெறுகின்றன.
போர்க்களத்தில் எதேச்சையாக குண்டுதாக்கி வீழ்ந்தவர்களைப் போல தற்கொலையாளர்களை அதற்கான கௌரவத்துடன் அனுப்பி வைக்க வேண்டும். தற்கொலையின் அந்த அதிரடி வேகத்தில் ஒரு அழகு இருக்கிறது, அதில் ஒரு கவித்துவம் இருக்கிறது, அதில் அணையாத ஒரு சுடரொளி இருக்கிறது - அதை நாம் வணங்க வேண்டும்!

Comments