Skip to main content

ஏன் சமத்துவம் இதயங்களைக் கல்லாக்குகிறது?



எச்சரிக்கை: இங்கு நான் பேசப் போகும் சமத்துவமானது உங்களுக்கு நன்கு பழக்கமான சமூக அரசியல்  சமத்துவம் அல்ல.

இன்று என்னிடம் ஒரு புரோஜெக்டின் பொருட்டு பேட்டி எடுக்க சில மாணவர்கள் வந்திருந்தார்கள். அவர்களின் விவாதப்பொருள் மாற்றுத்திறனாளிகள் கல்விப்புலத்தில் ஏற்றுக் கொள்ளப்படுகிறார்களா, ஏதேனும் சிக்கல்களை அவர்கள் எதிர்கொள்ள நேர்கிறதா, அதற்கு தீர்வு என்ன என்பது. பல சுவாரஸ்யமான கேள்விகள், ஒவ்வொன்றாய் ஆர்வமாய் பதிலளித்து வந்தேன். கடைசியாக ஒரு கேள்வி மாற்றுத்திறனாளிகளைப் பார்த்து அடுத்தவர் இரக்கப்படுவதைப் பற்றியது. அதுவே ஆக சுவாரஸ்யமான கேள்வி என்பதால் நான் அதற்கு அளித்த பதிலை மட்டும் இங்கு சொல்கிறேன்:

இரக்கம் என்பது அண்மையில் ரொம்ப மோசமான பெயரைப் பெற்று விட்ட ஒரு உணர்வு. மாற்றுத்திறனாளிகள் மட்டுமல்ல சாதி, மத, பால்நிலை ரீதியாக ஒடுக்கப்படுவோர் கூட இரக்கத்தை விரும்புவதில்லை. “இரக்கப்படாதீர்கள், வேண்டுமானால் புரிந்து கொள்ளுங்கள்என்பது அவர்களின் கோரிக்கையின் அடிநாதம். “எங்களை சமமாக நடத்துங்கள்என்பது மறைமுகமான வேண்டுதல். ஒருவரை சமமாக நடத்த வேண்டும் என்பது இன்றைய ஜனநாயக சூழலில் முக்கியமான தேவை என்பதை நான் மறுக்கவில்லை, ஆனால் மானுட உறவாடலில் அப்படி சமத்துவம் சாத்தியமா என்பதில் எனக்கு பல கேள்விகள் உண்டு. நண்பர்கள், காதலர்கள், கணவன்-மனைவி, சக பணியாளர்கள், குடும்ப உறுப்பினர், சகோதர்கள், சகோதரிகள் எல்லாரும் சமமாகவா இருக்கிறார்கள்? இல்லை. இந்த உறவுகள் ஆரோக்கியமாக இருக்கிறதென்றால் அங்கே சமத்துவம் இல்லை என்பதே பொருள்.

 ஒரு உறவுக்குள் சமத்துவம் வந்ததும் அங்கு ஒரு இறுக்கமும் கசப்பும் வந்து விடுகிறது. கணவன்-மனைவியிடையே சமத்துவம் வந்ததும் விவாகரத்துக்கு / பிரிவுக்கு விண்ணப்பிக்கிறார்கள். பிள்ளைகள் உங்கள் தோள் உயரத்துக்கு வளர்ந்ததும் மனதளவில் உங்களிடம் இருந்து விலகுகிறார்கள். நண்பர்கள் எல்லா விசயத்திலும் ஒத்திசைவு பெற்றதும் பரஸ்பரம் வெறுக்கத் தொடங்குகிறார்கள் - இவன் நானல்ல, இவன் நானல்லாது இருக்கக் கூடாதா என மறைமுகமாக ஏங்குகிறார்கள். அடுத்து கருத்தொற்றுமை இல்லை எனக் காரணம் காட்டி விலகுகிறார்கள். விலகி இருக்கும் காலத்தில் இருவரும் வேறு வேறு எனப் புரிந்ததும் மீண்டும் இணைகிறார்கள்.  
அசோகமித்திரன் குறித்த இந்த ஜோக் முக்கியமானது - அவருக்கு உடல் நலமில்லை என செய்தி கசிகிறது. அவர் வயதானவர். ஆகையால் நண்பர்கள் பதற்றமாகிறார்கள். செய்தி பரவுகிறது. இரு நண்பர்கள் அவரைக் காண்பதற்காக அவரது வீட்டுக்கு செல்கிறார்கள். கதவைத் தட்டுகிறார்கள். கதவு திறந்தால் அங்கு முன்னே நிற்பது சாட்சாத் அசோகமித்திரனே தான். இருவரும் திகைக்கிறார்கள். அசோகமித்திரன் உடனேஎன்ன ஏமாற்றமாகி விட்டதா?” என்று முகத்தை ரொம்ப சீரியஸாக வைத்துக் கொண்டு கேட்கிறார். “உங்களுக்கு உடல் நலமில்லை என்றார்களே? அதான் பார்க்க வந்தோம்.” உடல் நலமில்லை தான், ஆனால் அதற்கு நான் படுத்த படுக்கையாக இல்லைஎன்கிறார் .மி. ஒருவருக்கு உடல் நலமற்றுப் போகும் போது நாம் கவலைப்படும் அளவுக்கு உள்ளுக்குள் மகிழவும் செய்கிறோம். அப்போது அவரை ஒரு குழந்தையைப் போல நடத்த, “கவனிக்கநமக்கு ஒரு வாய்ப்பு கிட்டுகிறது. முன்பிருந்த அந்த ஆள் இப்போது அங்கிருப்பதில்லை; பலவீனப்பட்ட ஒரு உடல் நம் முன் படுத்துக் கிடக்கிறது. நம் இரக்கம் கண்களில் நீராகி சொரிகிறது. அவருக்கு ஏதாவது செய்ய நாம் பரபரக்கிறோம். அவருக்கும் நமக்கும் ஜென்மப்பகை இருந்தால் கூட அதை ஒரு நொடி மறந்து விட்டு அன்பு பாராட்டுகிறோம். ஏனென்றால் சமத்துவம் முழுக்க காலியாகி அங்கே அந்த நபரின் தன்னிலை இல்லாமல் ஆகிறது. பல நாட்களாக பேசாமல் கடும் குரோதத்துடன் திரியும் கணவன் மனையிடையே ஒருவர் நோயுற்று விழுந்து விட்டால் உடனே நேசம் மீண்டும் துளிர்த்து விடும். விழுந்து விழுந்து கவனிப்பார்கள். “ஜுரம் கிரம் வந்து நான் நாலு நாள் படுத்துக்கிட்டா பரவாயில்லைன்னு படுதுஎன என்னிடம் ஏக்கமாகப் பேசும் தோழிகள் உண்டு. அவர்களின் ஆசையெல்லாம் யாரையாவது தாம் சில நாட்கள் எந்த நிபந்தனையுமற்று சார்ந்திருக்க வேண்டும் என்பது. அன்புக்கான ஏக்கம் பல சமயங்களில் சமத்துவமின்மைக்கான ஏக்கமே.

சமநிலைக் குலையும் போதே நாம் ஒருவரின் தேவையை உணர்கிறோம்; அவரது அருகாமைக்காக ஏங்குகிறோம். என் உடல் எனக்குப் போதாது, நாம் சமமற்று இருக்கிறேன் என்பது தானே பாலியல் இச்சை ஆகிறது? சமநிலைக்குலைவு தானே நம்மை கண்ணீர் விட்டு அழச் செய்கிறது? அது தானே மற்றொருவரை அணைத்துநான் இருக்கிறேன்என ஆறுதல் சொல்லச் செய்கிறது. அப்போது சமநிலை ஒரு நொடி மீண்டும் மீள்கிறது. அடுத்து குலைகிறது. நாம் தத்தளிக்கிறோம். நாம் தத்தளிக்க தத்தளிக்க நமது அன்பு, பாசம், காதல், அக்கறை, கனிவு எல்லாம் உயிர்ப்புடன் இருக்கிறது

ஆனால் இன்னொரு பக்கம், மானிட உறவுகளில் சமத்துவம் தோன்றும் போது நம் உணர்ச்சிகள் மரத்துப் போகின்றன. நாம் சுய-பிரக்ஞையுடன் செயல்படத் தொடங்குகிறோம். மனம் கரைந்து நெகிழ்ந்து பேச முடியாது போகிறது. “என்னை இவன் / இவள் மதிக்கிறானா / ளா?” என்னும் கேள்வி நமக்குள் எழுகிறது. அங்கு மற்றொரு பிரச்சனை - எனக்கு எதிர்தரப்பு தனி மரியாதை தர வேண்டுமெனில் அங்கு ஒரு சமநிலைக்குலைவு ஏற்பட்டே ஆக வேண்டும். ஏனென்றால் உறவுநிலையில், அந்தரங்கமான, அன்பான உறவுநிலையில், விலகி நின்று கைகூப்புவதல்ல சமநிலை. அங்கு சமநிலையின் பொருளே வேறு. சொல்லப் போனால் அந்தரங்க உறவுகள் ஒவ்வொன்றுமே சமத்துவமின்மையை நம்வசம் கோருகின்றன.

சமநிலைக்குலைவுக்கும் சமத்துவத்துக்கும் இடையில் தோன்றும் பிரத்யேக உணர்ச்சி தான் இரக்கம். இரக்கமே நம்மை தன்னைத் தாழ்த்திக் கொள்கிறவரை நோக்கி இரு கைகளை நீட்டி அவரணைக்கத் தூண்டுகிறது. இரக்கமே நம்மை பதிலுக்கு கண்ணீர் விடச் செய்கிறது. இரக்கமேஇவருக்கு எதாவது பண்ண வேண்டும்என ஆவேசத்தை அளிக்கிறது (கருணை என்கிறஆன்மீகஉணர்வை நான் இங்கே குறிக்கவில்லை.). நமக்கு ஒரு குழந்தையைப் பார்த்ததும் அள்ளிக் கொண்டு கொஞ்சத் தோன்றுகிறதே ஏன்? அது பலவீனமாக தம் உதவியை நாடும் நிரந்தர நிலையில் இருப்பதால். நீங்கள் அள்ளிக் கொண்டு கொஞ்சி திணறடித்த பிறகு குழந்தை அழுகையை நிறுத்தி உங்கள் தோளில் இருந்து இறங்கி விடத் துடிக்கிறதே ஏன்? அது இப்போது பலவீனமாக இல்லை, இப்போது அது (தற்காலிகமாக) சமமாகி விட்டது என்பதால். நம்மால் அதை ஏற்க முடிவதில்லை. நாம் அதை மீண்டும் அள்ளியெடுக்க நினைக்கிறோமே ஏன்? நம்மால் அது சமமாகி விட்டதை நம்ப முடியாததால்
தெருவில் இறங்கிப் போராடுகிறவர்களுக்கு குண்டாந்தடிகளால் அடிபடும் போது தான் நாம் அவர்களுடன் சேர்ந்து நிற்க நினைக்கிறோம். ஒருவர் குடும்பத்துடன் பெட்ரோல் ஊற்றி கொளுத்திக் கொண்டு சாகும் போது தான் மொத்த சமூகமும் அவர்களுக்காக கொதித்துப் போய் குரல் கொடுக்கிறோம். எனக்கு சாப்பிடனும் காசு கொடு என்று ஒருவர் கேட்டால் முறைத்து விட்டு கடந்து விடுவோம். ஆனால் பசிக்கிறது என அவர் கேட்டால் நம்மால் அப்படி கடந்து விட முடியாது. ஒரு தலைவர் ஒருநாள் உண்ணாநிலைப் போராட்டம் பண்ணினால் சிக்கலில்லை. ஆனால் காலவரையற்ற போராட்டமாக அது சில நாட்கள் நீடித்தால் மொத்த மாநிலமும் அவருக்காக பதறிப் போகும்.
 தன்னை பல விதங்களிலும் தாழ்த்திக் கொண்டு, சிறுக சிறுக அழித்து உடலை துன்புறுத்திக் கொண்டு அதை ஒரு போராட்ட மார்க்கமாகவே மாற்றிய, மக்களின் குரோதங்களை, மற்றமை மீதான வெறுப்பை உண்ணாவிரதம் செய்தே கரைத்த, சுயவதையால் மொத்த தேசத்தையும் தன் பக்கம் ஈர்த்து, பின்னர் மகாத்மாவாகி சமநிலைக்குலைவை மக்கள் பக்கமாய் திருப்பி அவர்களையும் தன்னைப் போலபலவீனப்பட்டர்களாக்கினார்ஒருவர். அதற்கு அவர் அஹிம்சை எனப் பெயரிட்டார். ஆம், நான் காந்தியைப் பற்றித் தான் பேசுகிறேன். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு அதுவரையில் தான் தொடர்ந்து பயன்படுத்தி பாதிக்கப்பட்ட, அடிவாங்குகிற தரப்பை அந்த மகான் இழந்தார். அதன் பிறகு, குறிப்பாக பிரிவினையின் போது, அவரது அரசியல் மக்களில் ஒரு சாராருக்கு கொதிப்பையும் கோபத்தையும் அவர் பால் ஏற்படுத்தியது, மறுசாராருக்கு அவர் மீதான ஈர்ப்பும் அக்கறையும் குறைய ஆரம்பித்தது. மக்களால் காந்தி மீது இரக்கப்படவோ தன்னை காந்தியால் இரக்கப்படத்தக்கவர்களாக ஆக்கவோ இல்லை. ஒரு பொது எதிரி மறைந்திருந்தான். அப்போது கோட்ஸேயின் வடிவில் காந்திக்கு ஒருதீர்வுகிடைத்தது; கோட்ஸேவின் துப்பாக்கி காந்தியை மீண்டும் ஒருமுறை அழித்தது, அவர் மீது தீராத இரக்கமும் இழப்புணர்வும் தேசம் முழுக்க அலையென எழ உதவியது. “சிலுவையில் ஏற்றப்பட்டஅந்த தருணம் காந்தியை நிரந்தரமாக நாம் இரங்கி மனம் கசிய வணங்கும் நாயகனாக்கியது. தனது இன்மையே தன்னை மக்களிடத்து இணக்கமாக்கும், தன் சேதியை உணர்வுவேகத்துடன் கொண்டு சேர்க்கும் என அந்த மகான் அறிந்திருந்தார். அதனாலே மரண வாசனையை உணர்ந்தும் கூட அவர் அதற்காக பிர்லா மந்திரில் காத்திருந்தார்.

சமநிலைக்குலைவைப் போன்றே இரக்கமும் நாடகத்தனமானது தான். சமநிலையின்மை ஒரு போலியான மனநிலை என்பதைப் போன்றே இரக்கமும் ஒரு செயற்கையான உணர்ச்சி தான். ஆனால் இந்த இரண்டும் இன்றி நம்மால் ஒரு உறவுக்குள் உயிர்த்திருக்க சாத்தியமாவதில்லை. இந்த இரண்டும் இல்லாத போது ஒரு தரப்பு மற்றதை நோக்கிஇதயமற்றவன்என்கிறது; மற்றது இதை நோக்கிஎன்னை உனக்குப் புரியவில்லை”. இரண்டு தரப்புமே கடலில் மிதக்கும் இரு பனிப்பாறைகளாகி மெல்ல மெல்ல விலகிச் செல்கின்றன

மகிழ்ச்சியின் போது என்னவாகிறது? இதே தான் - நான் மிகுதியான மகிழ்ச்சியில் இருக்கிறேன், எனக்குப் போதவில்லை, நீயும் என்னுடன் சேர்ந்து கொள்கிறாயா, என்னை நிரப்புகிறாயா என நாம் வேண்டுதல் விடுக்கிறோம். உண்மையில் நாம் மகிழ்ச்சியை யாருடனும் பகிர்வதில்லை. மகிழ்ச்சியை ஒரு துணையுடன் சேர்ந்து பன்மடங்காக்குகிறோம். ஒரு நிறைவின்மையை நிறைவாக்குகிறோம். மகிழ்ச்சியின் மையத்தில் உள்ள துயரமும் இதுவே.
 மிகுந்த மகிழ்ச்சியின் போது தான் மனிதன் தன் தனிமையை சட்டென தொட்டறிகிறான். வெற்றிக் கொண்டாட்ட்டம் என்பதே இதற்காக கண்டுபிடிக்கப் பட்டது தானோ! கொண்டாட்டத்தை (அல்லது பார்ட்டியை) ஏற்பாடு செய்கிறவன் - “மகிழ்ச்சிக்குக்காரணமானவன் - “நான் மகிழ்ச்சியாக இல்லைநான் மகிழ்ச்சியாக இல்லைஎன பிரகடனம் செய்கிறான். ஆட்கள் தன்னைச் சுற்றி கத்தி ஆர்ப்பரிக்கத் தொடங்கியதும் தான் தனியாக இருப்பதாக அவனுக்கு ஒரு கணம் தோன்றுகிறது; அவர்களுடன் போய் இணைந்து கொண்டதும் அவனது மகிழ்ச்சி மீள்கிறது. அவன் மகிழ்ச்சியானவன் என்றாலும் மகிழ்ச்சியற்ற தன் நண்பர்களிடம் அவன் தன்னை தாழ்த்திக் கொள்கிறான். அவர்கள் பூரிப்புடன் அவன் மீதுஇரக்கம்காட்டுகிறார்கள். தாழ்வில் இருந்து மேட்டுக்கு அவனை கைப்பிடித்து ஏற்றி விடுகிறார்கள்.

இரக்கம் என்பது இந்த வாழ்க்கை நமக்கு அளித்த கொடை எனத் தோன்றுகிறதுஇரக்கத்தை தனியாகப் பார்க்கும் போது, அதை உறைய வைத்துநம்மை இப்படி மதிப்பிடுகிறார்களேஎனஇரங்கும்போது தான் நமக்கு வெறுப்பும் கோபமும் இரங்குபவர் மீது வருகிறது. நான் இரங்கத்தக்கவன் அல்ல என கூவத் தோன்றுகிறது. ஆனால் இந்த உலகில் ஒவ்வொருவரும் இரங்கத்தக்கவரே எனப் புரிந்து கொண்டால் இத்தகைய சிக்கல்கள் இராது. மாற்றுத்திறனாளியாக நான் காட்சிபூர்வமாகவே மக்களின் இரக்கத்தைத் தூண்டுகிறேன். என்னை நோக்கிஇரங்கும்படிநான் யாரையும் கைப்பிடித்து இழுக்கத் தேவையில்லை. அவர்களாகவே என்னை நோக்கி வருகிறார்கள். நான் ஒரு இரக்கக்காந்தம்”. எங்களிடையே ஒரு உறவாடல் துவங்கும் போது அந்த இரக்கம் மறைந்து அது அன்பாக பரிமளிக்கிறது. தொலைவில் இருந்து வெறித்துப் பார்க்கிறவர்கள் மட்டுமே என்னை ஒரு மற்றமையாக்குகிறார்கள், அவர்கள் என்னை எரிச்சலூட்டுகிறார்கள்.

தற்போது பணி செய்யும் இடத்தில் நான் வந்ததுமே, முதல் ஐந்து நிமிடங்களிலேயே, நான்கு நண்பர்கள் அமைந்து விட்டார்கள். இது எனக்கு முன்பு நிகழ்ந்ததில்லை. ஏனெனில் முன்பு நான் சக்கர நாற்காலி பயன்படுத்தியிருக்கவில்லை. சக்கர நாற்காலி இரு மனிதர்களுக்கு இடையில் தோன்றுகிற ஈகோ எனும் கோட்டை சுவரை தகர்த்து விடுகிறது. சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் நான் அவர்களை இரக்கப்பட அனுமதிக்கிறேன், அவர்கள் என்னை நிரப்பிட தயக்கமின்றி வருகிறார்கள். ஒரு மனிதனின் ஊனம் வெறும் ஊனம் இல்லை. அது அடுத்தவரின் இதயத்துக்குள் நுழைய அவன் வைத்திருக்கும் சாவி. அதுவே தான் என் ஊனத்தை அழிக்கும் சாவியும்


நம் சமூகத்தில் மாற்றுத்திறனாளி எனும் சொல் துவங்கி பல்வேறு விதங்களில் மற்றமைகள் (பெண்கள், தலித்துகள், சிறுபான்மையினர்) தொடர்ந்து அரசியல்வயப்படுவதை, அரசியல் சரித்தன்மைக்குள் போய் மாட்டிக் கொள்வதைக் காண்கிறோம். இது இரக்கத்தை ஒழித்து அந்த இடத்தில் ஒரு போலியான எந்திரத்தனமான மரியாதையை கொண்டு வருகிறது. வெளியே சாதி ஒழிய வேண்டும் என்றுவிட்டு மற்றொரு பக்கம் இன்னும் கெட்டியாக சாதியைப் பற்றிக் கொள்ளச் செய்கிறது; பெண் சமத்துவத்துக்காக விழுந்து விழுந்து பேசி விட்டு முடிந்தவரையில் அவர்களை கீழாகவே நடத்த செய்கிறது. இந்த எந்திரத்தனம் நமது ஆன்மாவையே அரித்து விட்டது. எதிர்காலத்தில் இந்த எந்திரத்தனம் மாற்றுத்திறனாளிகளிடத்தும் வந்து விடக் கூடாது என விரும்புகிறேன். நான் இந்த மரியாதையைத் தான் நான் வெறுக்கிறேன். நான் மரியாதையின் இடத்தில் என்றுமே இரக்கத்தை எடுத்துக் கொள்வேன்.  

நன்றி: அங்கே என்ன சத்தம்?  (10)

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...