கொரோனா லாக்டவுன் அறிவிக்கப்பட்ட போது எனக்குத் தோன்றிய முதல் கேள்வி மக்கள் உணவுக்கு, மருந்துக்கு எங்கு போவார்கள் என்றல்ல, இந்த குடிகாரர்களின் நிலை என்னாவது என்பதே. ஏனோ என் இதயம் அவர்களுக்காகத் தான் முதலில் வாடியது. அந்தளவுக்கு சின்சியராக ஒன்றில் ஈடுபடுகிறவர்களை நான் பார்த்ததில்லை. தினமும் மதுவருந்தியே வேண்டும் எனும் நிலையில் இருப்பவர்கள், மதுவின்றி கைகால் நடுக்கம் முதல் கடுமையான மனப்பிரச்சனை ஏற்படுகிறவர்கள் வரை இருக்கிறார்கள். சென்னையில் என் வீட்டுக்கு எதிரில் உள்ள கோயிலில் ஒருவர் வந்து அமர்ந்து தினமும் காலையில் ஒரு மணிநேரம் பிச்சையெடுத்து விட்டு அந்த காசில் குடிக்க செல்வதைப் பார்த்திருக்கிறேன். அவர் பார்க்க டீஸண்டாக இருப்பார், ஆனால் குடிக்காக தற்காலிக பிச்சைக்காரனாகவும் தயங்க மாட்டார். இது அவரது மனைவி, பிள்ளைகளுக்கும் தெரியும்.
இவர்களில் சிலர் அன்றன்றைக்கு குடிக்கும் தேவைக்கு மட்டுமே வேலை செய்வார்கள், கடன் வாங்குவார்கள், ஏதாவது பித்தலாட்டம் பண்ணுவார்கள். மொத்தமாக சரக்கை வாங்கி வைக்க வக்கில்லாத ‘அன்றாடங்காய்ச்சிகள்’ பலர் இருக்கிறார்கள். இவர்களில் நிறைய பேருக்கு குடியை விட்டால் வாழ்க்கையில் அர்த்தமே இல்லை. ஒரு மனிதனின் தன்மானத்தை இப்படி முழுக்க அழிக்கிற மற்றொரு வியாதி இல்லை என்பேன்.
இவர்களால் 21 நாள் தனித்திருப்பை தாங்க முடியுமா?
சென்னையிலும் கேரளாவிலும் இடைவெளி விட்டு வரிசையில் நின்று மக்கள் மது வாங்கும் படங்களைக் கண்டேன். அண்மையில் கேரளாவின் மதுக்கடைகளை மூட நீதிமன்றம் ஆணையிட்டு விட்டது. மற்ற மாநிலங்களில் எந்தளவுக்கு தாராளமாக சரக்கு கிடைக்கிறது எனத் தெரியவில்லை. ஆனால் நான் எதிர்பார்த்ததைப் போல எதிர்விளைவுகள் ஆரம்பித்து விட்டன - கேரளாவில் இதுவரை மட்டும் 7 பேர் மது கிடைத்தாததால் ஏற்படும் விலகும் அறிகுறிகள் (withdrawal symptoms) காரணமாக தற்கொலை பண்ணியிருக்கிறார்கள். ஒருவர் ஷேவிங் லோஷன் குடித்து இறந்திருக்கிறார். மற்றொருவர் மின் கம்பியைப் பற்றியதால் மின்சாரம் தாக்கி மரணமடைந்திருக்கிறார். மேலும் சிலர் மாடியில் இருந்து குதித்திருக்கிறார்கள் - அதில் ஒருவர் கடும் காயங்களுடன் ஐ.சி.யுவில் இருக்கிறார். இந்த லாக்டவுன் காலத்தில் கேரளாவில் மனநோய் கடுமையாகி அட்மிட் ஆகுவோர் எண்ணிக்கை நாளுக்கு 300 என உயர்ந்திருப்பதாக சொல்கிறார்கள். இதை கேரள முதல்வரே ஒப்புக்கொண்டிருக்கிறார். தற்போது அங்கு மருத்துவ பரிந்துரை சான்றுடன் சென்றால் மதுவை ரேஷன் போல வழங்குகிறார்கள். கர்நாடகாவிலும் இதே போல் ஏழு பேர் தற்கொலை செய்திருக்கிறார்கள். மற்றொரு பக்கம் மக்கள் கிடைத்ததை எல்லாம் போதைக்காக பயன்படுத்தி உயிரை விடுகிறார்கள் - அஸ்ஸாமில் இருவர் தொழிற்சாலை ரசாயனங்களுடன் சாப்ட் டிரிங்க்ஸில் கலந்து குடித்து செத்திருக்கிறார்கள்; ஒருவர் நிலைமை கவலைக்கிடம்.
இது ஒரு பெரிய பனிப்பாறையின் நுனி மட்டுமே. பரந்துபட்ட கணக்கெடுப்பு நடத்தினால் இந்த எண்ணிக்கை பலமடங்கு அதிகமாகும் என்பதில் சந்தேகம் இல்லை.
நான் தினம் தினம் பார்க்கும் அமைதியான குடிகாரர்கள் உண்மையில் ஒரு நடுங்கும் நூல்பாலத்தின் மீது நடக்கிறவர்களே; சின்ன தடுமாற்றம் போது சரிந்து விடுவார்கள். இரவுபகலாய் கடைகளைத் திறந்து வைத்து அரசும் தனியார் நிறுவனங்களுமாய் நம் மக்கள் தொகையில் சரி பாதியை மனநோயாளிகளாக மாற்றியிருக்கிறார்கள் என்பதை கொரோனா நாட்கள் அம்பலப்படுத்தி இருக்கின்றன. வரும் நாட்களில் பழையபடி எல்லா கடைகளையும் வருடம் முழுக்க திறந்து வைக்காமல் தினமும் குறைந்த நேரம் மட்டும் திறந்து வைக்க வேண்டும். இவர்களில் புதிதாக உருவாகும் குடிகாரர்கள் யார், நோயாளிகள் ஆகி விட்ட குடிகாரர்கள் யார் என அரசு ஒரு கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதை பொதுவெளியில் வைக்க வேண்டும். இவர்களில் நோயாளிகளுக்கு அரசும் இந்த மதுவைக் தயாரிக்கும் ரிபைனரிகளும் நட்ட ஈடு மற்றும் இலவச சிகிச்சை அளிக்க வேண்டும்.
இதெல்லாம் நடக்காது, ஆனாலும் சொல்லி வைக்கிறேன்!

Comments