சவுக்கு சங்கரின் “உளவு-ஊழல்-அரசியல்” நூலின் ஆக சுவாரஸ்யமான பகுதி அவரது சிறை அனுபவங்கள்தாம்; முதலில் சிறைச்சூழல் அவரை அச்சுறுத்துகிறது; பின்னர் போகப் போக அங்குள்ள மனிதர்கள் மற்றும் உணவு உள்ளிட்ட நடைமுறைகளுடன் இணங்கிப் போகிறார்; எவ்வளவு வெகுளியான அன்பான, அதே நேரம் குரூரமான, மனிதர்கள் அந்த புழல் சிறைக்குள்ளே. ஆனால் வெளியே உள்ள மனிதர்களின் ஏமாற்றுத்தன்மை இவர்களிடம் இல்லை. நாம் பேசும் ஒரு சிறிய பொய்யை மறைக்கக் கூட ஆயிரம் கதைகளைப் புனைவோம். ஆனால் இந்த கைதிகள் தம் குற்றங்களைப் பற்றி அவ்வளவு வெளிப்படையாகப் பேசுகிறார்களே என வியந்தேன். நல்லவன்-கெட்டவன் எனும் இருமை இல்லாத அந்த வெளி சுலபத்தில் உங்களை பரிசுத்தமாக்கி விடுகிறது.
காலை ஐந்தரைக்குத் தேநீர், அடுத்த இரு மணிநேரங்களில் காலை உணவு (பொங்கல்), அதன் பிறகு செய்தித்தாள் (தந்தி) / வார இதழ்கள் (விகடன், குமுதம்), சக-கைதிகளுடன் அரட்டை, மதிய உணவு, மாலை ஐந்தரைக்கு இரவுணவு, வாரம் ஒருமுறை சிக்கன் என வசதியாகத் தான் இருக்கிறது. (நடுவே சில இலக்கிய உரைகளை நுழைத்தால் விஷ்ணுபுரம் இலக்கிய விழா தோன்றி விடும்.)
வெளியே இந்த உணவுக்காக எவ்வளவு அல்லல்பட வேண்டியிருக்கிறது. சிறைக்குள் நீங்கள் உங்கள் பிரதமர் நள்ளிரவில் தோன்றி உங்கள் கைவசம் உள்ள பணம் செல்லாதது என்றோ, ஒரு மாதத்திற்கு வீட்டுச்சிறை என்றோ, சான்றுகளை உடனே சமர்ப்பிக்காவிட்டால் உங்களது குடியுரிமை ரத்தாகும் என்றோ அறிவிப்பார் என அஞ்ச வேண்டியதில்லை.
சிறை வாழ்க்கையில் ஒரே பிரச்சனை சிறை எனும் கட்டுமானமும் திரும்ப சமூக வாழ்வுக்கு மீள வேண்டும் எனும் ஏக்கமும் தான் என சங்கர் காட்டுகிறார். நினைத்த நேரத்துக்கு ஒன்றை செய்யும் வாய்ப்பில்லை என்பதே சிறை - ஆனால் அந்த வாய்ப்பு இருந்து நாம் அதை செய்யவில்லை என்றால் அது கஷ்டமாகத் தெரியாது. சிறை வாழ்க்கை என்றில்லை, தனிமை கூட ஒருவிதத்தில் விருப்புரிமை இல்லாமல் போவது தான். எனக்கு உங்களுடன் உரையாட விருப்புரிமை இல்லாவிட்டால் குமைந்து போவேன். அதை நீங்களே எனக்கு மறுத்தால் இன்னும் அவதிப்படுவேன். அதைக் காலமோ சூழலோ மறுத்தால் மனம் உடைந்து போவேன். ஆனால் எனக்கு அந்த விருப்பம் இல்லை எனில் பிரச்சனையில்லை. அது தனிமையல்லாமல் ஆகும். இப்போது தனிமையின் பொருள் என்ன? துணை இல்லாததா? இல்லை, துணையை அடையும் விருப்புரிமை இல்லாததே. சிறைவாழ்வின் கசப்பு இப்படித்தான் உண்டுபண்ணப் படுகிறது என இந்நூல் உணர்த்தியது.
கடைசியாக, எழுத லேப்டாப் மட்டும் அனுமதித்தால் ஒரு எழுத்தாளனுக்கு சிறை ஒரு அருமையான இடம் என்றும் தோன்றியது. எந்த இடையூறும், கவலையும் இல்லாமல் வருடத்திற்கு ஒரு நல்ல புத்தகம் எழுதலாம். டிசம்பர்-ஜனவரியில் ஜாமீன் வாங்கி வெளியே வந்து புத்தகத்தை வெளியிட்ட பின் மீண்டும் சிறைக்குத் திரும்பி விடலாம்.

Comments