முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எழுத்தாளனும் சிறையும்


சவுக்கு சங்கரின் “உளவு-ஊழல்-அரசியல்” நூலின் ஆக சுவாரஸ்யமான பகுதி அவரது சிறை அனுபவங்கள்தாம்; முதலில் சிறைச்சூழல் அவரை அச்சுறுத்துகிறது; பின்னர் போகப் போக அங்குள்ள மனிதர்கள் மற்றும் உணவு உள்ளிட்ட நடைமுறைகளுடன் இணங்கிப் போகிறார்; எவ்வளவு வெகுளியான அன்பான, அதே நேரம் குரூரமான, மனிதர்கள் அந்த புழல் சிறைக்குள்ளே. ஆனால் வெளியே உள்ள மனிதர்களின் ஏமாற்றுத்தன்மை இவர்களிடம் இல்லை. நாம் பேசும் ஒரு சிறிய பொய்யை மறைக்கக் கூட ஆயிரம் கதைகளைப் புனைவோம். ஆனால் இந்த கைதிகள் தம் குற்றங்களைப் பற்றி அவ்வளவு வெளிப்படையாகப் பேசுகிறார்களே என வியந்தேன். நல்லவன்-கெட்டவன் எனும் இருமை இல்லாத அந்த வெளி சுலபத்தில் உங்களை பரிசுத்தமாக்கி விடுகிறது.
காலை ஐந்தரைக்குத் தேநீர், அடுத்த இரு மணிநேரங்களில் காலை உணவு (பொங்கல்), அதன் பிறகு செய்தித்தாள் (தந்தி) / வார இதழ்கள் (விகடன், குமுதம்), சக-கைதிகளுடன் அரட்டை, மதிய உணவு, மாலை ஐந்தரைக்கு இரவுணவு, வாரம் ஒருமுறை சிக்கன் என வசதியாகத் தான் இருக்கிறது. (நடுவே சில இலக்கிய உரைகளை நுழைத்தால் விஷ்ணுபுரம் இலக்கிய விழா தோன்றி விடும்.)

 வெளியே இந்த உணவுக்காக எவ்வளவு அல்லல்பட வேண்டியிருக்கிறது. சிறைக்குள் நீங்கள் உங்கள் பிரதமர் நள்ளிரவில் தோன்றி உங்கள் கைவசம் உள்ள பணம் செல்லாதது என்றோ, ஒரு மாதத்திற்கு வீட்டுச்சிறை என்றோ, சான்றுகளை உடனே சமர்ப்பிக்காவிட்டால் உங்களது குடியுரிமை ரத்தாகும் என்றோ அறிவிப்பார் என அஞ்ச வேண்டியதில்லை.
 சிறை வாழ்க்கையில் ஒரே பிரச்சனை சிறை எனும் கட்டுமானமும் திரும்ப சமூக வாழ்வுக்கு மீள வேண்டும் எனும் ஏக்கமும் தான் என சங்கர் காட்டுகிறார். நினைத்த நேரத்துக்கு ஒன்றை செய்யும் வாய்ப்பில்லை என்பதே சிறை - ஆனால் அந்த வாய்ப்பு இருந்து நாம் அதை செய்யவில்லை என்றால் அது கஷ்டமாகத் தெரியாது. சிறை வாழ்க்கை என்றில்லை, தனிமை கூட ஒருவிதத்தில்  விருப்புரிமை இல்லாமல் போவது தான். எனக்கு உங்களுடன் உரையாட விருப்புரிமை இல்லாவிட்டால் குமைந்து போவேன். அதை நீங்களே எனக்கு மறுத்தால் இன்னும் அவதிப்படுவேன். அதைக் காலமோ சூழலோ மறுத்தால் மனம் உடைந்து போவேன். ஆனால் எனக்கு அந்த விருப்பம் இல்லை எனில் பிரச்சனையில்லை. அது தனிமையல்லாமல் ஆகும். இப்போது தனிமையின் பொருள் என்ன? துணை இல்லாததா? இல்லை, துணையை அடையும் விருப்புரிமை இல்லாததே. சிறைவாழ்வின் கசப்பு இப்படித்தான் உண்டுபண்ணப் படுகிறது என இந்நூல் உணர்த்தியது.

கடைசியாக, எழுத லேப்டாப் மட்டும் அனுமதித்தால் ஒரு எழுத்தாளனுக்கு சிறை ஒரு அருமையான இடம் என்றும் தோன்றியது. எந்த இடையூறும், கவலையும் இல்லாமல் வருடத்திற்கு ஒரு நல்ல புத்தகம் எழுதலாம். டிசம்பர்-ஜனவரியில் ஜாமீன் வாங்கி வெளியே வந்து புத்தகத்தை வெளியிட்ட பின் மீண்டும் சிறைக்குத் திரும்பி விடலாம்.  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...