Skip to main content

இலக்கிய மொழி எனும் கற்பிதம் (1)



நான் என்னைப் பற்றிச் சொல்கிறேன்.எனக்கு எப்படிப்பட்ட வாசகரின் பாராட்டு மகிழ்ச்சி அளிக்கும்?எனில் நான் மாஸ்டர்கள் என்று சிலரை மனதில் வைத்திருக்கிறேன்.தாகூரை, ரூசோவை, எட்கார் அலன் போவை, எமிலி டிக்கின்சனை, அல்டஸ் ஹக்ஸ்லியை, ஆஸ்கார் வைல்டை, ,டால்ஸ்டாயை, தாஸ்தவஸ்கியை, புதுமைப் பித்தனை, சுராவை, மாதவனை, தி ஜாவை, அசோகமித்திரனை, சுகுமாரனை, ஜெயமோகனை வாசிக்கிற ஒரு வாசகர் என்னைப் பாராட்டினால் எனக்கு மகிழ்ச்சி அளிக்கும். என்னை மட்டும் அல்லது எனது சமகால எழுத்தாளர்களை மட்டும் வாசிக்கிறவர்கள் பாராட்டும்போது பெரிய மகிழ்ச்சி ஏற்படுவதில்லை.”
- போகன் சங்கர்

வாசகத் தகுதி குறித்த ஜெயமோகனின் கட்டுரையை ஒட்டின போகனின் பேஸ்புக் பதிவு இது. இதில் எனக்கு சுவாரஸ்யமாகப் பட்டது அவர் வாசகர்களை தன்னையும் தன் சமகாலத்தவர்களையும் மட்டும் படிக்கிறவர்கள் (அரைகுறை வாசகர்கள்), முன்னோடிகளையும் படித்தவர்கள் (தேர்ந்த வாசகர்கள்) எனப் பிரிக்கிறார் என்பது. இதை அவர் செய்வதற்குப் பின்னால் ஒரு நம்பிக்கை (நான் அதை மூடநம்பிக்கை எனச் சொல்வேன்) உள்ளது. அதுஇலக்கிய மொழிபற்றியது. அதென்ன இலக்கிய மொழி?


 நீங்கள் முன்னோடிகளை வாசிக்கும் போது அவர்களின் பலவிதமான மொழிநடைகள், உருவகங்கள், கருத்து நிலைகள் உங்களுக்குப் பரிச்சயமாகின்றன. அடுத்து, நீங்கள் ஒரு சமகால எழுத்தாளரைப் படிக்கும் போது முன்னோடியின் மொழியுடன் இவரது மொழி கொண்டுள்ள தொடர்ச்சி அடையாளம் காணலாம். அங்கிருந்து இவர் எடுத்துக்கொண்டு நிகழ்த்தியுள்ள தாவலை கவனிக்கலாம். இது உண்மை தான் - ஆய்வுப்புலத்தில் இதை literature survey என்பார்கள்; அதாவது நிறைய மேற்கோள் காட்டுவது; ஒரு கருத்து எங்கிருந்து வருகிறது, எப்படி முரண்படுகிறது என ஆய்வுக்கட்டுரையின் துவக்கத்திலேயே நிறுவுவது. - ஆனால் இதை வாசிப்பு மனநிலையாகக் கருதுவதுதான் மூடநம்பிக்கை

வாசிப்பின் போது நீங்கள் ஒரு குறிப்பிட்ட முன்னோடியின் மொழியை அதன் வேறொரு நிறத்தில் அடையாளம் கண்டுகொண்டால் உங்களால் அதன் பிறகு நிம்மதியாய் வாசிக்க முடியாது. கண்ணனைப் படிக்கும் போதும், சு.ராவின் மாணாக்கர் தம்மைக் கருதிய எண்பதுகளின் பல எழுத்தாளர்களைப் படிக்கும் போதும் சு.ரா தாடியும் மீசையுமாய் குளோசப்பில் நம் முகத்தருகே வந்து பயமுறுத்துவார். இன்று சாருவின், ஜெ.மோவின் மொழியைப் பிரதியெடுப்போருக்கும் இதுவே நிகழ்கிறது. இது எழுத்தாளனிடத்து ஒரு வெறுப்பை ஏற்படுத்தும். தன்னை மறந்து வாசிக்க முடியாமல் பண்ணும். ஆனால் இதுவே உங்களுக்கு சு.ரா, ஜெ.மோ, சாரு என்பதெல்லாம் யாரென்றே தெரியவில்லை என்றால் பிரச்சனையே இல்லை. அந்த ஒரிஜினல் ஸ்டைல் இல்லாத கதையை நீங்கள் வெகுவாக ரசிக்கலாம்.

எனக்கு என்னை ஒருவர் ரசிப்பதை விட கச்சிதமாக மதிப்பிடுவதே முக்கியம்என நீங்கள் நினைப்பதானாலும் ஒரு பிரச்சனை உண்டு - நீங்கள் ஒரு இளம் எழுத்தாளனாக ஜெயமோகனின் ஒரு நாவலைப் பின்பற்றி அதைப் புதுவிதமாய் எழுதி அதை மற்றொரு நிலைக்கு உயர்த்தியிருந்தாலும் அது ஒரிஜினலாகாது. .தா., ஜெயமோகனின் புனைவுலகில் அவ்வப்போது சு.ராவின்ஒரு புளிய மரத்தின் கதைநாவலின் நிழலை கண்டடையும் போதெல்லாம் நான் விசனப்படுவேன். அது ஒரு எழுத்தாளனின் ரகசியம். அதை ஒரு வாசகன் கண்டடைவது ஒரு துன்பியல் சம்பவமாகும். அது ஜெயமோகன் மீதான என் ஈர்ப்பை குறைக்கிறது. சு.ராவின் புளியமரத்தை இவர் எவ்வளவு பெரிதாய் வளர்த்திருக்கிறார் எனத் தோன்றாது. ஆனால் அசோகமித்திரனிடம் இப்படியான ஒரு இலக்கிய மொழியை, தொடர்ச்சியை நீங்கள் தமிழில் அவரது முன்னோடிகளில் கண்டுபிடிக்க முடியாது; அவர் தன் ரகசியங்களை எங்கோ பாதுகாப்பாக புதைத்து வைத்திருக்கிறார்.

இந்த பிரச்சனை அதிகமாக கவிதையில் நிகழும் - ஒரு மரம் என்று வந்தாலே நமக்கு தேவதேவன், வானம்பாடிக் கவிஞர்கள், அங்கிருந்து தோரோ அல்லது பக்திக் கவிதை மரபு என மனம் செல்லும். குட்டி ரேவதியின் கவிதைகளை தேவதேவனைத் துண்டித்து விட்டு வாசிப்பது மிக மிக சிரமம். (ஆனால் அது சாத்தியமாகும்போதே நமக்கு வாசிப்பின்பம் கிடைக்கிறது.) ஆக, இப்படி வரிகளிடையே முன்னோடிகள் தலைகாட்டுவது வாசிப்புக்கு இடையூறாகும் - போகனைப் படிக்கும்போது கல்யாண்ஜியோ கலாப்ரியாவோ நினைவுக்கு வந்தால்ஆஹா அந்த முன்னோடியை வரியை வைத்து எப்படி புதிதாக பின்னியிருக்கிறார்என நினைப்பது மூளையை சொறிந்து விடுவது மட்டுமே. காதலியை உற்றுப் பார்த்து விட்டுஉன் அம்மாவின் சாயல் உனக்கு நிறையவே வந்திருக்கிறது, அதனால் தான் இந்த அழகுஎன்றால்நீ என்னை ரசிக்கிறாயா அல்லது என் அம்மாவை பற்றி நினைக்கிறாயா?” என அப்பெண்ணுக்கு எரிச்சல் வரும். “நீ யாரைப் போன்றும் இல்லை, நீ யாராகவும் இல்லை, அதனாலே நீ அனைத்தாகவும் இருக்கிறாய்என சொல்வதே இதயபூர்வமான பொய்கலக்காத காதல் லயிப்பு. நல்ல வாசிப்பிலும் அதுவே நடக்க வேண்டும். மாறாக விக்கிபீடியா பதிவில் வரும் ஹைப்பர்லிங்கைப் போல ஒவ்வொரு முன்னோடியாக வந்து விழக் கூடாது

டான் க்விக்ஸாட்டில்போல முன்னோடிகளை, சமகாலத்தவர்களை பகடி செய்யும் நோக்கி எழுதப்படும் படைப்புகளுக்கு மட்டுமே போகன் சொல்லியிருப்பது பொருந்தும் - யாரைக் கலாய்க்கிறார்கள் எனப் புரியாவிட்டால் ஜோக்கே இல்லையே. தமிழில் அப்படி வெகுகுறைவாகவே எழுதப்படுகின்றன என்பதால் அந்த பிரச்சனையும் இல்லை (கவிதையில் இசை முயல்கிறார் என்றாலும்).

இப்படி ஒவ்வொரு படைப்பும் ஒரு சரம் சரமான சங்கிலித்தொடருடன் பிணைக்கப்பட்டுள்ளது எனும் நம்பிக்கை பழமையானது - ஆங்கில விமர்சன மரபில் இதை liberal humanism என்பார்கள். இதன் பிதாமகரான ஹெரால்ட் ப்ளூம் குறித்து எனக்கும் போகனுக்கும் ஏற்கனவே பஞ்சாயத்து உள்ளது. ஆனால் இந்த யூதர் தான் இருபதாம் நூற்றாண்டில் இலக்கியப் பாற்கடலில் இந்த முன்னோடி வரிசை எனும் விடத்தைக் கடைந்து எடுத்தவர். நீங்கள் முன்னோடிகளை வாசித்து அவர்களின் மொழியின் அடிப்படையில் அவர்களின் சுவடை ஒட்டி எழுத வந்தவர்களை அடையாளம் கண்டு ஏற்க வேண்டும் என ப்ளூமின் மாபியா கும்பலை சேர்ந்தவர்கள் நம்பினர். பின்னமைப்பியல் தோன்றி தன்னை நிறுவிக்கொண்ட காலத்தில் ஒரு பிரதியின் அர்தத்தத்தைக் கடந்து செல்வதே வாசிப்பு எனப் புரிய வர ப்ளூமின் மாபியா கும்பல்என்கவுண்டர்செய்யப்பட்டு ஒழிந்தது; ஆனாலும் ப்ளூமின் ஆவி நமக்குள் இப்போது உலவியபடியே தான் இருக்கிறது. இப்போது போகனின் வடிவில் வந்து நிற்கிறது - அவருக்கு பேய்க்கதைகளில் ஆர்வம் அதிகம் என்பதால் கூட இருக்கலாம்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...