“என்னுடைய நிழல்...” என ஒரு புதுப் படைப்பாளியின் ஒரு வரி துவங்கும் போது நகுலன் சட்டென நினைவுக்கு வருவதும், மனம் அங்கிருந்து தத்துவத்தில் ஜெ.கெவுக்கோ இலக்கியத்தில் டி.எஸ் எலியட் ஜேம்ஸ் ஜாய்ஸுக்கோ செல்வது இயல்பே. ஆனால் அந்த “நிழலில்” இருந்து இந்த “நிழல்” வரவில்லை. மாறாக அந்த நிழலைப் போன்றே இந்த நிழல் இருந்தாலும் அது இது அல்ல என தன்னை வாசிப்பினூடே அது நிறுவி விடுகிறது. உளவியலாளர் லக்கான் இதைப் பற்றி சொல்லும் போது தகப்பன் என்பவர் ஒருவர் அல்ல என்கிறார். Father என பெரிய எழுத்தில் அவர் தகப்பன் உருவகத்தைக் குறிக்கிறார். வயதில் மூத்தோர், மாமா, சித்தப்பா, மூத்த நண்பர்கள், ஆசிரியர் போன்றோர் பின்னாட்களில் ஒரு குழந்தையான நமக்கு அறிமுகமாகும் போது அவர்களை அப்பாவின் பிரதிபிங்களாகவும், எதிர்-பிம்பங்களாகவும் ஒரே சமயம் புரிந்து கொள்கிறோம். “இவர் என் அப்பாவைப் போன்றவர், ஆனால் அவரில்லை” என்பதே ஒருவரை ஒப்பிட்டு மறுத்து ஏற்றுக்கொள்ள செய்கிறது. மொழியில் இதை வைத்துப் பார்ப்பதானால், நகுலனின் நிழல் “நகுலனில்” ஆரம்பிப்பதில்லை. “நிழலின்” தகப்பனார் நகுலனுக்கு முன்பே நம் “மொழியில்” இருக்கிறார். நகுலன் நடுவே வந்தவர். அதாவது நகுலனின் மொழி “மொழிக்குள்” ஏற்கனவே இருக்கிறது. நகுலன் ஏற்கனவே “நகுலனுக்குள்” இருக்கிறார். நகுலனை நீங்கள் அறிந்திராவிடினும் நிழலை உருவகமாகக் கையாளும் ஒரு பிரதியை நீங்கள் ரசித்துணர முடியும். (ப்ளூமின் மாபியா கும்பலுக்கு கடைசி வரை இந்த நுணுக்கம் விளங்கவில்லை என்பது துரதிஷ்டம்.)
ஆனால் போகனின் இந்த பதற்றம் நியாயமானது தான் - ஒரு எழுத்தாளனிடத்து ஒரு வாசகன் வந்து கருத்துரைக்கும் போது அதை எப்படி எடுத்துக் கொள்வது எனும் தடுமாற்றம் வருகிறது. நம்பவா வேண்டாமா? ஒரு வாசகன் நிஜமாகவே இருக்க்கிறானா எனும் உள்ளார்ந்த கவலையே இந்த பதற்றமாகிறது. இதுவே பின்னர் இந்த வாசகன் பொருட்படுத்தக்கத்தவன், மற்றவன் உதாசீனக்கத்தக்கவன் என நினைக்க வைக்கிறது. (இன்னொரு பக்கம், இந்த படிநிலையாக்கம் நமக்குப் பிடிக்காத வாசக எதிர்வினையை மறுத்து தள்ளி வைக்கவும் உதவுகிறது.)
இந்த அச்சம் ஆரம்பத்தில் ஏன் வருகிறது?
வாசிக்கும் போது இருக்கிற வாசகன் எனும் “அவன்” (அல்லது “நான்”) வாசித்து முடிக்கையில் இருப்பதில்லை எனும் புரிந்துணர்வு நாம் அனைவருக்குள்ளும் இருக்கிறது. இதுதான் பயத்தின் ஆதாரக் காரணம். ஏனெனில் வாசிப்பு நிலையற்றது, அதனால் வாசகனும் நிலையற்றவன் எனும் போது நான் பிரசுரித்ததும் நிலையற்றதாகிறது. என்னை நான் என் பிரசுரங்களுடன் அடையாளப்படுத்தும் போது நானும் நிலையற்றவனாகிறேன். இதனாலே வாசகன் தன்னிடம் பேசும் போது தெளிவாக தர்க்கபூர்வமாக கவனமாகப் பேச வேண்டும் என ஜெ.மோ விரும்புகிறார். இந்த அச்சம் அவரிடம் மட்டுமல்ல போகன் உள்ளிட்ட பல நல்ல எழுத்தாளர்களிடமும் உள்ளது. (அது என்னிடமும் உள்ளது.) நீங்கள் புத்தகக் கண்காட்சியில் வாசகர்களை சந்தித்ததாய் சொல்வது, வாசக சந்திப்புகளில் கையெழுத்திடுவது எல்லாம் கற்பனை மட்டுமே. அவர்கள் எல்லாரும் சாதாரண மனிதர்கள் - வாசகர் எனும் ஒரு இனம், ஒரு வஸ்து தனியாக உள்ளதா என? ஒரு மனைவியைப் போல தாலி கட்டிக்கொண்டிருக்கிறார்களா? விரிவாக இலக்கியத்தைப் படித்து கரைத்துக் குடித்தவருக்கு தனியாக முக அடையாளங்கள் எதாவது உண்டுமா? அவர் முன்னோடிகளின் பெயர்களை உதிர்ப்பதை, அவர்களுடன் உங்களை ஒப்பிடுவதை வைத்துதானே சொல்கிறீர்கள். தி.ஜாவை சிறப்பாக வாசிக்கும் ஒருவர் முற்றிலும் தவறாக ஏன் வாசிக்கக் கூடாது? அவர் ஏன் ஒரு மட்டமான வாசிப்பை நிகழ்த்தக் கூடாது?
இதே அச்சம் வாசகனுக்கும் உண்டு - ஒரு பிரதி நிலையாக இருக்க வேண்டும், அதை தன்னால் சரிவர நுகர முடிய வேண்டுமே, ஒரு சிறந்த கதையை தான் வாசிக்கும்போதும் அது சிறந்ததாக இருக்க வேண்டுமே எனும் நெருக்கடி ஏற்படுகிறது. அதனாலே அவன் ஜெயமோகன், எஸ்.ரா அல்லது ஒரு பேராசான் அளித்த பட்டியலை வைத்து, உதிர்த்த கருத்துக்களின் அடிப்படையின் அந்த பிரதியை வாசிக்கத் தொடங்குகிறான். பிடிக்கவில்லை என்றாலும் அது நல்ல படைப்பாகத்தான் இருக்க வேண்டும் என நம்புகிறான். இது அவனுக்கு தான் ஒரு வாசகனாக “நிரந்தரமானவன்” எனும் எண்ணத்தைக் கொடுக்கிறது; ஆறுதலளிக்கிறது. என்னை எடுத்துக் கொள்ளுங்கள் - நேற்று பஷீரின் “அனுராகத்திண்டே தினங்கள்” எனும் நாவலை மலையாளத்தில் ஒலிநூலாகக் கேட்டேன். நாவல் ரொம்ப பலவீனமாக இருப்பதாக, பஷீரின் வழக்கமான ஆழம் இல்லையே எனத் தோன்றியது; ஆனால் பஷீரின் நாவல் அப்படி ஏமாற்றமளிக்கும் என என்னால் நம்பவும் முடியவில்லை. இதுவரை நான் படித்துள்ள எல்லா பஷீர் படைப்புகளும் பட்டாசு தான். ஒருவேளை என் வாசிப்பு தவறோ, என் உள்மனம் திறந்து கொள்ளவில்லையோ, நான் சரியாக கவனிக்கவில்லையோ என குழம்பினேன். அடுத்து நான் மலையாள இலக்கியத்தில் நன்கு பரிச்சயமுள்ள ஒரு நண்பரிடம் இந்நாவலைப் பற்றி விசாரித்தேன். பஷீரின் அதிகம் பேசப்பட்ட நாவல் அல்ல இது என அவர் சொன்ன போது தான் நிம்மதி கிடைத்தது. ஆக, இவ்வளவு பேசுகிற எனக்கும் ஒரு வாசகனாக என் முன்னுள்ள பிரதி ஏற்கனவே இருக்கிற அதே பிரதி தானா எனும் அச்சம் உள்ளது.
இந்த அச்சமே வாசகன் எனும் மாயாவிக்கு ஒரு முகத்தை, மீசை, தாடியை, சாதியை, மதத்தை, கொள்கைப் பின்புலத்தை அளித்து தூலமான ஒருவனாக உருவாக்க செய்கிறது. அடுத்து அவனுக்கு ஒரு மொழியையும் கற்றுக்கொடுத்து “இப்படித்தான் நீ பேச வேண்டும், அப்போதுதான் ஒரு வாசகனாக உன்னைப் பொருட்படுத்துவேன்” என மிரட்ட செய்கிறது.
இந்த அச்சம் நானும் நீங்களும் சாகும் வரைத் தொடரும். தீர்விருக்கிறதா? ம்ஹும், எனக்குத் தெரிந்து இல்லை.

Comments