புதுமைப்பித்தனின் “அகலிகை” சிறுகதை எங்கள் பல்கலைக்கழகத்தின் ‘இந்திய இலக்கியம்’ எனும் பாடத்தில் இருந்தது. அக்கதையை வகுப்பில் விவாதிக்கும் போது அகலிகையின் தொன்மக் கதையை சரிவர அறியாத நவீன மாணவர்கள் கூட சுலபத்தில் அக்கதைக்குள் பயணிக்க முடிவதை, மனம் கரைந்து அதனுள் மூழ்குவதை கவனித்தேன். இது வினோதம், ஆனால் உண்மை. தொன்மத்தை நாம் பரிச்சயம் பண்ணுவது கூட கதைக்குள் நுழைவதற்கான ஒரு துவக்க விசைக்காகத் தான். மற்றொரு பக்கம், அகலிகையின் தொன்மத்தை கரைத்து குடித்தவர்களுக்கு அக்கதைக்குள் பயணிப்பது சிரமமாவதை நான் கண்டிருக்கிறேன் - அவர்கள் கதைக்குள் தொன்மத்தையே, அது சரியாக துல்லியமாக புனையப்பட்டிருக்கிறதா எனும் கவலையுடன், தேடிக்கொண்டிருந்தார்கள். ஏனென்றால் அகலிகை என்பது அங்கு ஒரு பேச்சுக்கு மட்டுமே. அது ஒரு திசைகாட்டி அடையாளப் பலகை. அதைக் கடந்ததும் நீங்கள் தொன்ம அகலிகையை மறந்து விடுகிறீர்கள். இப்போது தொன்ம அகலிகையில் இருந்து பு.பி எந்தளவுக்கு விலகி செல்கிறாரோ அந்தளவுக்கு அக்கதை உங்களுக்கு கூடுதல் உண்மையாகப் படுகிறது. ஒரு கட்டத்தில் இவள் அகலிகை அல்ல, வேறு யாரோ ஒரு பெண், உங்களுக்கு நன்கு பரிச்சயமான ஆனால் வாழ்வில் என்றும் சந்தித்திராத பெண் எனத் தோன்றுகிறது. அப்போது தான் உங்கள் மனம் உடைகிறது. என் வகுப்பில் இக்கதையை படித்து மனம் உடைந்து கண் கலங்கினவர்கள் ஏற்கனவே புதுமைப்பித்தனைப் பரிச்சயம் கொண்டிராதவர்கள். அகலிகையை முன்பின் அறியாதவர்கள். அகலிகை என்பவள் விக்கிபீடியாவில் வருகிற அகலிகை பாத்திரம் அல்ல, அவள் யாரும் இதுவரை சந்தித்திராத ஒரு உருவற்ற ஒரு மாயப் பெண் அல்லது பெண்ணுருவையும் கடந்த ஒரு உரு என எனக்கு அப்போது தான் புரிந்தது. அதுவும் ஒரு கண்ணீர்த் துளி வழியே, உருவகம், உவமை, கவித்துவ வர்ணனை வழியே நீங்கள் அகலிகையாகவே ஆகும் போது, கல்லாய் உறையும் போது நீங்கள் அந்த ஆதி உருவை உங்கள் உடல்வழி நிகழ்த்துகிறீர்கள்; அவளுக்கும் வாசிக்கும் உங்களுக்கும் பேதமில்லாமல் ஆகிறது.
இங்கு நாம் விவாதிப்பது வாசிப்பில் நம் பிரக்ஞையின் இடம் குறித்தே. போகன் குறிப்பிடும் இந்த தொல்படிமத்தைக் கண்டுணரும் வாசகப் பிரக்ஞை உண்மையானதா எனக் கேட்க வேண்டியுள்ளது. தத்துவத்தில் இதை எப்படிப் பார்க்கிறார்கள்?
பிரக்ஞையை / சுயத்தை விளக்கும் போது தத்துவஞானி கீர்க்கெகாட் சுயம் என்பது “சுயம் குறித்து பிரக்ஞை” என்கிறார். “இது நான்” எனக் கோருவது “நான்” அல்ல; “நான்” என ஒரு கட்டமைப்பை உருவாக்கி ஒரு கட்டத்தில் அந்த கட்டமைப்பு தான் உண்மை என நம்புவதே நாம் எதிர்கொள்கிற அந்த “நான்”. அதாவது நான் எனத் தன்னை கற்பித்து அந்த கற்பிதத்தைக் குறித்து ஒரு பிரக்ஞை உருவாக அப்பிரக்ஞையே “நானாக” மாறுவது. இந்த பொய்யான நம்பிக்கையே நமது சுயம் அல்லது பிரக்ஞை என கீர்க்கெகாட் அவதானித்தார். நம்முடைய மரபிலும் ஜெ.கிருஷ்ணமூர்த்தி இதைப் பற்றி பேசியிருக்கிறார். இதன்படி அகலிகை என நாம் காண்பது அகலிகையை அல்ல, அகலிகையை நாம் காண்பதாக நம்புகிற ஒரு கட்டமைப்பு காண்கிற மற்றொரு கட்டமைப்பை. இந்த கட்டமைப்புகள் ஒரு ஆழமான வாசிப்பின் போது தகர்கின்றன. நம் புலனுலகில் ஒரு அசல் அனுபவமாக உருக்கொள்கின்றன. ஆனால் விமர்சிக்கும் போது அவை நம் மொழியில் மீண்டும் பலவீனமாகத் திரள்கின்றன.
இதனாலே, தொல்படிமத்தை வாசிப்பில் அடையாளம் காண்பது “இது அதுதான்” என சொல்வதல்ல என்கிறேன். ஒரு புகைப்படத்தை நோக்கி “ஓ இவரா, எனக்குத் தெரியுமே” எனச் சொல்வதைப் போன்றல்ல என்கிறேன். உன்னதமான வாசிப்பு என்பது ஒரு தொல்படிமத்தை இருப்பற்ற ஒன்றாக அடையாளம் காண்பது. அது மொழியின் கட்டுமானத்தைக் கடந்தது, அதை வாழ முடியுமே ஒழிய, பகுத்துப் புரிய முடியாது என அறிவது. கீதையில் அர்ஜுனன் கிருஷ்ணனிடம் “நீ யார்?” எனக் கேட்க அதற்கு பதிலளிக்கும் கிருஷ்ணன் “நான் இந்த ஆகாயமும் அல்ல, இந்த பூமியும் அல்ல, இந்த மரமும் அல்ல, அந்த மேகமும் அல்ல” என மறுத்தபடியே போகிறான். சர்வோத்தமன் அன்னோஜனின் கதையில் தொல்படிமத்தை அடையாளம் கண்டதல்ல கிருஷ்ணன் தன்னை கீதையில் அடையாளம் காட்டுவதே (வாழ்க்கையே நான், சிந்தனை அல்ல) மிகச்சரியான வாசிப்பு என்பேன்.
அடுத்து இதே கோணத்தில் ஜெயமோகன் கூறும் கருத்தொன்றைப் பார்ப்போம்:
“பொதுவாக ஒரு படைப்பில் அதற்குரிய நுண்தளம் ஒன்று இருக்கும். அந்த நுண்தளத்தை தொட்டுவிட்டு மேலே பேசும் விமர்சனங்களுக்கு மட்டுமே விமர்சனம் என்ற மதிப்பு உண்டு.
வாசகனாக ஒருவன் செய்யவேண்டியது அந்த நுண்தளத்தை, ஆழ்பிரதியை வாசிப்பது மட்டும்தான். அதை வாசிக்காதவன் வாசகனே இல்லை. ... அந்த நுண்பிரதியை எடுத்து அதிலிருந்து நம் வாழ்க்கையுடன் இணைத்து நாம் சொல்லும் கருத்துக்கு மட்டுமே மதிப்பு. அந்த நுண்பிரதியை எடுப்பதற்கு கதையின் வடிவமோ மொழியோ போதாமலிருந்தால் அதைப்பற்றிய எதிர்மறையான குறிப்பை அளிக்கலாம்.”
- ஜெயமோகன்
நுண்தளத்தை வாசிப்பதைக் கூட ஏற்கிறேன். ஆனால் நுண்பிரதியை எப்படி “எடுக்க” முடியும் ஜெயமோகன்? அது என்ன பவுடர் டப்பாவா? அது ஒரு ஆய்வகத்தில் வளர்க்கப்படும் நுண்கிருமிகளின் கல்ச்சரா, எடுத்து நுண்பெருக்கியின் கீழ் வைக்க? அதை எப்படி வாழ்க்கையுடன் இணைக்க? வாழ்க்கை என்ன கடை அலமாரியில் லேபள் ஒட்டி வைக்கப்பட்டிருக்கிறதா, வாங்கி ஒன்றுடன் இன்னொன்றை கலக்க? அல்லது அது என்ன மின்கம்பியா, பச்சையையும் சிவப்பையும் இணைக்க? நுண்பிரதியை கையாளக் கூடிய மொழிக்கட்டுமானமாகப் பார்ப்பது சுத்த அபத்தம். அப்படி இருக்க அதற்கு மதிப்புண்டு, மதிப்பில்லை என ஏன் பேசுகிறீர்கள் ஜெயமோகன்? எவ்வளவு செறிவாகத், தெளிவாக அதை ஒருவர் அதை விளக்கினாலும் குருடன் இருட்டில் பார்ப்பதைப் போலத்தானே? (ஏற்கனவே பார்வையில்லை, அதில் இருட்டென்ன வெளிச்சமென்ன?) உங்களது இந்த கருத்தில் உள்ள பிரதானப் பிரச்சனையே அது ஒரு தாவரவியல் / உயிரியல் ஆய்வேட்டில் எழுதப்பட்ட குறிப்பைப் போல உள்ளது என்பது. கரப்பான்பூச்சியைக் கிழித்து அதன் உள்ளுறுப்பை எடுத்து இது இன்னது என ஒரு மாணவர் நிறுவுவதைப் போல ஒரு வாசகர் தன் கருத்தை முன்வைக்க வேண்டும் என்கிறீர்கள். நீட்சே, ஹைடெக்கர் துவங்கிய ஒரு பின்னமைப்பியல் மரபு எழுச்சி கொண்டதும் மேற்கத்திய தத்துவத்தில் இந்த பகுப்பாய்வு பித்துக்குளித்தனம் ஒரு முடிவுக்கு வந்தது; தெரிதா இந்த நுண்பிரதியை ஒருவித இன்மை என அங்கு விளக்கினார். (அது மேற்கில் ஒரு மிகப்பெரிய மாற்றத்துக்கு வழிவகுத்தது.) இன்மையை எப்படி எடுத்துக்காட்ட முடியும் ஜெயமோகன்? இப்படி நுண்பிரதியை வாசிப்பில் இருந்து பிரித்து விடலாம் என நம்புவது ஐரோப்பிய analytical மரபில் இருந்து இங்கு வந்து சேர்ந்த ஒரு பிழையான போக்கு என்கிறேன்.

Comments