Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

ஆணவக் கொலைகளும் நாம் கொள்ளும் குற்றவுணர்வும்

உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கு குறித்து அரற்றுகிறவர்கள் ஒருவித சாதிக் குற்றவுணர்வை, சாதியும் வேண்டும் அதே சமயம் அது நீதியுடனும் இருக்க வேண்டும் எனும் போலி இரட்டை மனப்பான்மையுடன் சிந்திக்கிறார்கள் என டி. தர்மராஜ் ஒரு பதிவை இட்டிருந்தார். வழக்கம் போலஎன்ன இவர் இப்படி சொல்கிறார்?” என ஒரு நொடி தோன்றினாலும் அவர் குறிப்பிடும் உண்மை பளிச்சென மறுநொடி விளங்கியது. ஆம் உண்மையே. சாதியம் குறித்த மேல் மற்றும் இடைசாதியினரின் கவலைகள் குற்றவுணர்வில் இருந்து வருவதே.

 நான் இதனுடன் ஆற்றாமையையும் சேர்த்துக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் சட்டரீதியாக தீண்டாமையை தடை செய்யலாம், சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான ஒரு மெலிதான பாதுகாப்பு வலையை உருவாக்கலாம், ஆனால் இதையெல்லாம் செய்யும் போதே இவை பாசாங்கு மட்டுமே, நடைமுறையில் பெரிய அளவில் பயனளிக்காதவை என உங்களுக்கு உள்ளூரத் தெரிந்திருக்கும். சிலர் அமைப்பு ரீதியாக இதை சீர்திருத்த முடியுமா என யோசிப்பார்கள். சிலர் ஆற்றாமையில் வெதும்புவார்கள். சிலர் கூச்சப்படுவார்கள், சிலர் கோபப்படுவார்கள். ஆனால் அத்தனையும் உள்ளே இருப்பவனின் உணர்வுகளே, இது தானும் இதன் பகுதி என உணர்ந்தவனின் குற்றவுணர்வின் விளைவன்றி வேறில்லை என டி தர்மராஜ் கூறுவது அப்பட்டமான உண்மை. ஆனால் நடைமுறையில் ஒடுக்கப்பட்ட சாதிக்குள் இருந்தபடி போராடுகிறவர்கள், எழுதுகிறவர்களாலே சாதியில் இருந்து விடுதலை பெற ஒரு வழியைக் கண்டறிய முடியவில்லை என்பதும் இந்த நாணயத்தின் மற்றொரு பக்கமே. மேலே இருப்பவர்களுக்கு குற்றவுணர்வு என்றால் கீழே இருப்பவர்களுக்கு கோபம், கசப்பு, அவநம்பிக்கை. இரண்டுமே இயலாமையின் வெளிப்பாடுகள். இந்த சாதி அமைப்பை உடைப்பதில் மேல்சாதி என அறியப்படுகிறவர்களால் பங்களிக்க முடியுமா? சாதியின் கண்ணிகளை உடைத்து விட்டு தனி மனிதனாக வாழ முடியுமா? விரும்பியோ விரும்பாமலோ சாதிய சமூகம் உங்களுக்கும் உங்கள் சமூகத்துக்கும் அளிக்கிற அனுகூலங்களை மறுக்க முடியுமா? முடியாது.


விருப்பமோ துணிச்சலோ இல்லாமல் அல்ல, மேலே இருப்பவனுக்கு அவன் முற்போக்கோ பிற்போக்கோ, அவன் கிராமத்தில் இருக்கிறானோ அல்லது நகரத்தில் வசிக்கிறானோ சாதி வேண்டாம் என ஒதுக்குமளவுக்கு அது கையில் எடுக்கும் ஒரு பொருளாக இல்லை. அதை புலன்களால் அல்ல செயல்களாலே அறிகிறோம். பா. ரஞ்சித்தின் ஒரு பேட்டி நினைவுக்கு வருகிறது. மால்கம் எக்ஸ், அலி போன்ற படங்களைப் பற்றிப் பேசும் போது அவர் தான் இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்கள் கறுப்பர்களைப் போல இருக்கலாதா என ஏங்கியதுண்டு எனச் சொல்கிறார். இனவாதம் சாதியத்தை விட நேரடியானது, எளிமையானது. அதை அடையாளம் காண்பது, எதிர்ப்பது ஒப்பீட்டளவில் சுலபம். கறுப்பராக இருப்பது ஒரு பௌதீகமான உண்மை. அவர் அதை மறுக்க வேண்டியதில்லை, சமத்துவத்தை, சம உரிமையை மட்டும் கோரினால் போதும். ஆனால் சாதியை அப்படி தோலில் அடையாளம் காண முடியாது - அது பூடகமானது, மாரீசன் போல மறைந்து பொய்யுருவங்களில் உலவுவது, ரகசியமாகவும் வெளிப்படையாகவும் ஒரே சமயம் இருப்பது, புதிரானது. நீங்கள் இன அடையாளத்துக்குள் இருந்தபடியே விடுதலை பெற முடியும். ஆனால் சாதிக்குள் இருந்தபடி சமத்துவம் பெற முடியாது. இந்த வித்தியாசம் முக்கியம். சாதிக்குள் இருப்பது ஒரு நாடகத்தில் வேடம் பூணுவதைப் போன்றது. வேடம் பூண்டு நடித்தபடியே இது நானே, ஆனால் அது நானில்லை எனக் கூற முடியாது. கறுப்பின மக்களுக்குள் பல பிரிவுகள், குழுக்கள் இருந்தாலும் அவர்களிடையே படிநிலை இருக்காது. ஆனால் சாதியில் படிநிலையை தவிர்க்கவே முடியாது.  

 

 சாதி ஒருவித நிகழ்த்து வடிவம். எவ்வளவு தான் மனிதன் நவீனப்பட்டாலும் அவன் பேசுகிற மொழியில், புழங்குகிற வெளியில், பார்க்கிற, கேட்கிற விசயங்களில் சாதி நிகழ்த்தப்பட்டபடியே இருக்கிறது. எப்படி? மற்றமைகள் உருவாக்கப்படுவதன் வழி. நாம் இந்தியர்கள் உளவியல் ரீதியாக மற்றமையை உண்டு பண்ணி அதைக் கொண்டு நம் சமூக அரசியல் பண்பாட்டு வெளியை, அங்கு நம் இடத்தை உறுதி செய்கிறோம். அதை மீறிப் போகவும் முயல்கிறோம். இன்றைய தலைமுறை ஒன்று இரண்டுக்கும் இடையில் மாட்டி இருக்கிறது, அல்லது பழமையில் மூழ்கி மீட்புவாதம் பேசுகிறது. சாதியின் வழியே நம் அடையாளம் மற்றும் அந்தஸ்து உருவாகிறது என்பதே பிரதானமான சிக்கல், இது பிரக்ஞைபூர்வமாக அல்ல நம் சமூக உறவாடலின் வழி, மொழிப்பயன்பாட்டின் வழி அபோதமாக நடக்கிறது எனபதே அதிபிரதானமான சிக்கல்.

 இதை உடைக்க நாம் மொழியில் இருந்து வெளியேற வேண்டும். மதத்துக்கு நிச்சயம் இதில் மிகப்பெரிய பங்கிருக்கிறது என்பதால் மதத்தின் குறியீட்டு மொழியில் இருந்து, பண்பாட்டுக்கு இடமிருக்கிறது என்பதால் பண்பாட்டின் குறியீட்டு மொழியில் இருந்து, திருமணம், அதிலிருந்து குடும்பம், குழந்தை வளர்ப்பு போன்று அன்றாடம் நிகழ்த்தப்படும் சடங்குகளில் இருந்து, நீ இன்னவன், அது என்பது இன்னது என மனிதரை, உயிர்களை, பொருட்களை விரல் சுட்டி அடையாளம் காண்பதில் இருந்து வெளியேற வேண்டும். இப்படி வெங்காயத்தை உரிப்பதைப் போல இது சென்று கொண்டே இருக்கும்.

இந்து மதத்தை எடுத்துக் கொள்வோம் - நாத்திகராக தம்மை அறிவித்துக் கொண்ட, உணர்ந்த எத்தனை பேரால் முழுமையாக இந்து மதத்தில் இருந்து வெளியேற முடிந்தது? அவர்கள் விரும்பாவிடினும் அவர்களின் சமூக செயல்பாடுகளில், பார்வையில், அசைவில், வெளிப்பாடுகளில் இந்து மதம் இருந்தபடியே தான் இருந்தது. இந்து மதத்தில் இருந்து வெளியேறுவது விளக்கை அணைத்து வெறும் கண்களால் இருட்டைப் பார்ப்பதைப் போல இருக்கிறது. ஒருவேளை மற்றொரு விளக்கு கிடைத்தால் அது சாத்தியமாகலாம். அது எங்கே இருக்கிறது

 

இந்த உளச்சிக்கல் தாழ்த்தப்பட சாதியினருக்கும் உண்டு. அவர்கள் ஒரு சமயம் ஒடுக்கப்படும் ஒற்றை இனமாக உணர்ந்தபடி அதனுள் தாம் இப்படியாக பிற ஒடுக்கப்பட்டவரில் இருந்து வேறுபட்டவர் என வரையறுப்பார்கள். அதற்குள் ஒரு படிநிலையை ஏற்படுத்துவார்கள். மேலும் அவர்களும் இந்து மதத்துக்குள்ளே தான் இருக்கிறார்கள். இருக்கும் வரை அவர்களாலும் வெளியேற முடியாது. (நான் இங்கு இந்து மதம் என்பதையே டி. தர்மராஜ் பிராமணியம், பிராமண மனப்பான்மை என்கிறார் என நினைக்கிறேன்.)


அதனாலே சாதியை ஒழிப்போம் போன்ற பிரச்சார எளிமைப்படுத்தல்களில், சாதியைக் கடந்து விட்டவன் நான் எனும் கோரல்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. இது ஒரு சமூக உளவியல் பிரச்சனை. நம் மொழியில் பின்னிப்பிணைந்து விட்ட ஒரு உயிரி. இப்போதைக்கு ஒவ்வொருவரும் நமது சாதியத்தை மறைக்காமல் அதனுடன் வெளிப்படையாக முரண்பட்டபடி, அதை எதிர்க்க முயன்ற படி, தொடர்ந்து அதனிடம் தோற்றபடி வாழ முயலலாம். இது ஒரு போதும் தனிமனிதன் ஒருவனால் சாத்தியமாகாது - அவனால் முடிந்தது ஒரு காலடி எடுத்து வைப்பது, ஒரு கல்லை எடுத்துப் போடுவது. அதைச் செய்யலாம். குற்றவுணர்வு-கோபம் எனும் இருமைக்குள் சிக்குவதைத் தவிர நமக்கு இப்போதைக்கு வேறு வக்கில்லை என்பதையும் ஒப்புக் கொள்ளலாம்

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...