![]() |
| கறுப்பர் ஜார்ஜ் பிளாயிட் அமெரிக்க போலீசாரால் நசுக்கிக் கொல்லப்படும் காட்சி |
ஜார்ஜ் பிளாயிடின் கொடூரமான படுகொலையைக் கண்டித்து அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் வெடிக்கும் போராட்டங்கள், கலவரங்களைப் பார்க்கும் போது இந்த போராளிகள் ஏன் இந்திய சாதி எதிர்ப்பு வரலாற்றில் இருந்து சில பாடங்களைக் கற்றுக்கொள்ளக் கூடாது எனத் தோன்றுகிறது. வெறுமனே இனவாதம் வன்முறை, பாகுபாடு ஆகியவற்றை ஒழிக்க வெறுமனே கூப்பாடு இடாமல் அங்கு அவை தோன்றுவற்கான காரணம் என்னவென யோசிக்கலாம் - முக்கியமாக கறுப்பர்கள் பல அரசுத்துறைகளில் பிரதிநுத்துவம் பெறாதது. இதற்கு அடுத்து பொருளாதார ஏற்றத்தாழ்வு. இதற்கு ஒரு சிறந்த தீர்வே தீர்வு இட ஒதுக்கீடு.
30-40% கறுப்பர்களுக்கு காவல்துறையில் இட ஒதுக்கீடு வேண்டும் என்கிற நோக்கில் முதலில் போராட்டங்களை வடிவமைக்கலாம். (அப்போது தான் 25%மாவது தருவார்கள்.) அடுத்து வேறு துறைகளில் இட ஒதுக்கீடு கேட்டுப் போராடலாம். இது அங்கு அமைப்பு ரீதியாக முன்னெடுக்கப்படும் இனவெறுப்பை மட்டுப்படுத்த பெருமளவு உதவும். சமூகத்தில் ஒரு பகுதியினர் ஆண்டானாக இருக்கும் போது அவர்களிடம் அறத்தை, சமத்துவத்தைக் கோருவது ஒரு அபத்தம். சமத்துவம் அமைப்பளவில் இருந்தால் மட்டுமே நடவடிக்கைகளிலும் இருக்கும். அதற்கு ஒரு குறிப்பிட்ட கால அளவுக்கு இட இதுக்கீடு மட்டுமே தீர்வு.
தென்னாப்பிரிக்காவில் சுலபத்தில் இதை நடப்புக்கு கொண்டு வந்து விட்டார்கள். பிற நாடுகளில் இந்த திசை நோக்கி போராட்டங்களை நகர்த்தினால் இனவாதம் பெருமளவு ஒழிந்து விடும். ஏனென்றால் சாதியை ஒழிப்பதை விட இனவாதப் பாகுபாட்டை ஒழிப்பது சுலபம்!

Comments