வனிதா விஜயகுமாரின் யுடியூப் சேனலில் அவர் லைவாக செய்த 40 நிமிட ஒப்பனை அலங்காரத்தை நேற்று பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்குப் பொதுவாக மேக் அப் மீது பெரிய மரியாதை இல்லை என்பது மட்டுமல்ல மேக் அப் அணிந்த பெண்களை அருகில் வைத்துப் பார்த்தால் குமட்டிக்கொண்டு வரும். ஆனால் நேற்று அந்த லைவ்வைப் பார்த்ததில் இருந்து மேக் அப் மீது ஒரு தனி மரியாதையே வந்து விட்டது. எவ்வளவு லேயர்கள், அதில் என்னவொரு கலை நுணுக்கம்!
தன்னுடைய முக அமைப்பு, நிறம், குற்றங்குறைகள் தெரிந்து அதற்கு ஏற்ப ஒப்பனைப் பொருட்கள் வாங்கி பொறுமையாக ஒவ்வொன்றாகப் பூசிய முகத்தை ஒரு ஓவியத்தைப் போல மெருகேற்றுவதற்கு நிதானத்துடன் நிறைய கற்பனையும் வேண்டும். பொதுவாக புருவத்துக்கு மை பூசுவார்கள் என நினைத்திருந்தேன், ஆனால் வனிதா ஒருவித அடர்சிவப்பை லேசாய் தேய்க்க ஒரு ஆர்ப்பாட்டமான ஸ்டைல், ஒரு குறும்புத்தனம் அந்த முகத்துக்கு வந்து விட்டது. பின்னர் இமையில் நீலம், கன்ன எலும்புகளை தனித்துக்காட்ட ஒரு ஹைலைட்டர், மொழுமொழுவென தோலைக்காட்ட ஒரு கிரீம், பளபளவெனக் காட்ட மற்றொன்று, மினுமினுவெனக் காட்ட மற்றொன்று என பார்க்கப் பார்க்க அதிசயித்தபடி இருந்தேன். எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தது அவர் தன் கண்ணுக்குக் கீழ் பூசின கன்சீலர் தான். அதைத் தேய்த்ததும் அவரது கண்ணுக்குக் கீழ் உள்ள அந்த கறுப்பு அரைவட்டம் அப்படியே காணாமல் போய் விட்டது.
ஒப்பனையை துவங்கும் முன்னர் அவர் தன் முகத்தைக் காட்டினார் - அது ஒரு வெள்ளைக்காகிதத்தைப் போல டெரராக இருந்தது. உதடுகள் சிலருக்கு பழுப்பாக, சிலருக்கு கறுப்பும் சிவப்பும் கலந்திருக்கும். இவருக்கு உதடுகளும் வெளிறி இருந்தன. ஆனால் ஒப்பனை முடிந்ததும் 50% உருமாறி விட்டது அந்த முகம். லிப் ஹைலைட் பென்ஸிலும், லிப் கிளாசும் அணிந்ததும் அந்த உதடுகள் இரு பூவிதழ்களைப் போல ‘என்னைக் கொஞ்சு கொஞ்சு’ எனக் கேட்டன.
மிக சுமாரான முகத்தோற்றம் கொண்ட வனிதாவுக்கே மேக் அப் இவ்வளவு அதிசயங்கள் செய்யுமென்றால் ஒரு அசல் அழகியை அது எங்கோ தூக்கி சென்று விடும் என்பதில் சந்தேகமில்லை.
இங்கே இன்னொரு விசயத்தைக் குறிப்பிட்டாக வேண்டும் - நேற்று இந்த லைவ்வைப் பார்த்த பின்னர் பெண்கள் எவ்வளவுதான் அழகியாய் பிறந்தாலும் இயல்பில் அழகில்லை எனத் தோன்றியது. அவர்கள் தம்மை அழகியாய் காண்பிக்க நிறைய மெனக்கெடுகிறார்கள். கிட்டத்தட்ட ஒரு கவிதையை ஒவ்வொரு சொல்லாக திருத்தி, வாக்கியமாக வெட்டி எடிட் செய்வதைப் போல முகத்தில் ஒரு பெருங்காவியத்தையே தினமும் இயற்றுகிறார்கள். ஆனால் இன்னொரு பக்கம் இப்படி ஒரு பெண் தன் அழகை செயற்கையாய் வடிவமைப்பது ஆணினத்துக்கு செய்யும் அநியாயம் அல்லவா என்றும் கேட்கத் தோன்றியது.
ஒரு உதாரணம்:
ஒரு பார்க்கத்தக்கப் பெண் தன் காதலனைப் பார்க்க செல்லும் போதெல்லாம் இது போல மேக் அப் அணிந்து தன்னை அழகியாய் உருமாற்றிக்கொண்டு போகிறாள். ஆனால் அந்த பையனோ சும்மா முகம் கழுவி அதே அழுதுவழியும் தோற்றத்தில் அவளைக் காண வருகிறான். அவள் முன் வந்ததும் தான் ஒரு வெண்கல விளக்கின் முன் இருக்கும் கற்சிலை போல இருண்டு விடுவதாக அவனுக்கு தோன்றுகிறது. அவன் அவளை ஒருவித மிரட்சியுடன், மயக்கத்துடன் தினமும் நோக்குகிறான். சுமார் இரண்டு வருடங்கள் இப்படி ஓடுகின்றன. அவர்கள் திகட்டத் திகட்ட காதலிக்கிறார்கள். அவன் அவளை மேக் அப் இன்றி ஒருநாள் கூடப் பார்த்ததே இல்லை. அவர்கள் திருமணம் செய்து ஒரே வீட்டில் வசிக்க நேர்ந்த பின்னரே மேக் அப் இல்லாத அவளது முகத்தை அவன் முதன்முதலாக பார்க்க நேர்கிறது. அப்போது அவனுக்கு இது அதிர்ச்சியாக இருக்காதா? காலையில் ஒரே படுக்கையில் விழிக்கும் போது “யார் இந்தப் பெண்?” என ஒரு நொடித் தோன்றினால் என்ன செய்ய? (அவன் அதை வெளியே சொல்ல மாட்டான் என்பது வேறுவிசயம்.)
மேக் அப் அணிவது அவளது உரிமைதான் என்றாலும், ஒரு பெண் அவளது உடல்தோற்றம் மட்டுமே அல்ல என்றாலும், இப்படி தொடர்ந்து உருமாறி செல்வது ஒருவித ஏமாற்றுதல் இல்லையா? “ஐயோ இந்த பெண்ணையா இரண்டு வருடங்களாய் பார்த்தோம்?” என அவன் மனதுக்குள் குழம்பினால் நாம் அவனை பழிசொல்லவா முடியும்?
என்ன சொல்றீங்க?

Comments