வாசகத் தகுதி குறித்த ஜெயமோகனின் தவறான நம்பிக்கைகளின் விளைவே விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் எனும் அமைப்பு என அண்மையில் அவரது வாசகர்களின் தகுதிப் பட்டியலைப் படிக்கையில் புரிந்து கொண்டேன்.
வாசிப்பு தொடர்ந்து மாறி வரும் நிலை, அதில் என்ன தகுதி இருக்க முடியும்? ஒருவர் தொடர்ந்து சமையலைக் கற்றுக் கொண்டு அனுபவம் மற்றும் படிப்பால் சமையல்காரரானால் அது ஒரு திறன். ஆனால் வாசிப்பு ஒரு திறன் அல்ல. அதற்கு நிரூபணம், சரியான நிகழ்த்துமுறை, தகுதிச்சான்றிதழ் ஒன்றும் கிடையாது. சமையல்காரன் தான் சமைத்த உணவை கொண்டு வந்து உங்களிடம் காட்ட முடியும். அவனது படைப்பே அவனது திறனின் நிரூபணம். ஆனால் ஒரு வாசகனால் அப்படி எதையும் கொண்டு வந்து காட்ட முடியாது.
நான் ஜெயமோகனின் “விஷ்ணுபுரம் வாசகர் வட்ட” கருத்தரங்குகளின் மீது தொடர்ந்து விமர்சனங்கள் வைத்ததே இதனால் தான். அவர்கள் வாசிப்பை கருத்துரைப்பதாகப் புரிந்து கொள்கிறார்கள். எழுத்தானின் சொந்தக் கதையே படைப்பு எனும் ஒரு அடிப்படை நம்பிக்கை அங்கு பயிற்றுவிக்கப்படுகிறது. ஆக, எழுத்தாளனின் வாழ்க்கை, அவனது பின்னணி, கருத்துக்கள் ஆகியவற்றை ஒரு பக்கம் தொகுத்தும் கொள்கிறார்கள். இதைக் கொண்டு ஒரு பிரதியை அர்த்தப்படுத்த முயல்கிறார்கள். சாகசப்பிரியர்களான அடுத்த சிலர் ஒரு படைப்பை அதன் வரலாற்றுச் சூழல், பாத்திர அமைப்பு, உருவகம், தர்க்கச் சரடு என பகுத்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கு இப்போது ஒரு திருப்தி வந்து விடுகிறது. ஆனால் குழந்தையை விடுத்து பொம்மைக்கு சோறூட்டி குழந்தையை பட்டினியிட்டுக் கொல்வதே தாம் செய்வது என அவர்களுக்குப் புரிவதில்லை. ஆங்கிலத்தில் dont throw the baby out with the bath water என்பார்கள். அதாவது குளிப்பாட்டுகிற ஆர்வத்தில் தண்ணீருடன் சேர்த்து குழந்தையையும் வெளியே எறிந்து விடுவது. இவர்கள் எவ்வளவு அனாயசமாக கம்சனைப் போல குழந்தையைக் கொல்கிறார்கள் எனப் பார்த்து எனக்கு கண்ணீரே வந்து விட்டது.
வாசிப்பின் பெரும் திளைப்பு நிலை, பரவசம், பித்து நிலை, இவற்றை தர்க்கத்துக்கு உட்படுத்தும் தத்துவப்பயிற்சி (கடைசியான இது அவசியமில்லை என்றாலும்) அவர்களுக்கு வாய்ப்பதில்லை. ஏனென்றால் கோர்வையாக தர்க்கபூர்வமாக விளக்குவதே வாசிப்பு என ஜெயமோகன் இவர்களை நம்ப வைத்து விடுகிறார் போல. இவர்கள் வாசகர்கள் அல்ல, வாசிப்பில் இருந்து விடுபட்ட, வாசிப்புடன் பிணக்கம் கொண்டு விவாகரத்துப் பெற்ற “விமர்சனப் போராளிகள்”. இவர்கள் புத்தகங்களைக் காதலிப்பார்கள், ஆனால் புத்தகங்களுக்குள் உள்ள பித்தை, மௌனத்தை, அதர்க்கத்தை வெறுப்பார்கள். இவர்கள் “விஷ்ணுபுரம் விமர்சகர் வட்டம்” எனப் பெயரை மாற்றிக் கொள்வதே தகும்.
ஜெயமோகனை எது வெறுப்பூட்டியதோ, சீண்டியதோ தெரியவில்லை, ஆனால் ஒட்டுமொத்த வாசகப் பரப்பும் இந்த மேற்சொன்ன வாசக விரோதிகளாக மாற வேண்டும் என அவர் விரும்புகிறார் என இதிலிருந்து தெரிகிறது.
ஒரு பெரும் வாசகனுக்குப் புலப்படாததது - புரிவதல்ல, புரியாததே சரியான வாசிப்பு எனும் உண்மை - ஒரு எளிய ஆரம்ப நிலை ஆளுக்கு சட்டெனப் புரியும். பரவலான வாசிப்பு பல சமயங்களில் வாசிப்புக்கு எதிராக செயல்படும். அது வாசிப்பை ஒரு உத்தியாக மாற்றி விடும். இதற்கு நான் ஆயிரம் உதாரணங்களை நேரில் பார்த்திருக்கிறேன். என்னுடைய இலக்கிய மாணவர்களில் சிறந்த வாசகர் எப்போது அதிகம் படித்த சிறந்த மாணவனாக இருப்பதில்லை. அவர்கள் அபிப்ராயம் உதிர்ப்பவர்கள் மட்டுமே. மிகக்குறைவாக வாசிக்கும் ஒருவர் அற்புதமான வாசகராக இருப்பதை எத்தனையோ முறைக் கண்டிருக்கிறேன். ஒரே ஒரு பொது இயல்பை இத்தகையோரிடம் காண்பதென்றால் கொஞ்சம் கிறுக்குத்தனம் இயல்பிலே இருக்கும் என்பது, ஆனால் கிறுக்கர்கள் எல்லாரும் நல்ல வாசகர்கள் அல்ல.
சரி ஒரு வாசகன் சொல்லும் கருத்துக்களை எப்படி எடுத்துக் கொள்வது?
ஒரு வாசகன் கருத்து சொல்லும் போது, எதிர்வினையாற்றும் போது - அது உங்கள் நாவல் டி.ராஜேந்தர் படம் பார்த்தது போல இருக்கிறது, ரொம்ப தமாஷாக / உணர்வுபூர்வமாக வடிவேலு / கௌதம் மேனனின் காதல் படக்காட்சிகளைப் போல இருந்தது என்பதிலிருந்து அற்புதமான இசையைக் கேட்டது போல இருந்தது எனச் சொல்லி முன்னுக்குப் பின் முரணாய் மனதில் எழும் எண்ணங்களைக் கொட்டுவது வரை எப்படி இருந்தாலும் - அதை ஒரு கருத்துக் கூறுதலாக நான் பார்ப்பதில்லை. அது ஒரு உணர்வு வெளிப்பாடு மட்டுமே. அந்தளவிலே அது அழகானது. ஆனால் அவனே தன் மேதைமையைக் காட்ட விமர்சன சொரூபம் எடுக்கும் நான் அவனது ஈகோவைத்தான் அங்கு பார்ப்பேன்.
மொழி என்பது பல்வேறு மிதக்கும் குறிப்பான்களால் ஆனது. ஒன்று சொல்லப்படும் போது அதற்கு முன்பு வந்த ஒன்றில் சாய்ந்து நின்று, தன்னை அதுவாகக் காட்டியே இது அர்த்தம் பெறுகிறது. எந்த வாக்கியத்திலும் உண்மை இருப்பதில்லை. ஆக, சொல்லப்படும் எதுவும் ஒரு கருத்தாக முக்கியம் அல்ல. இந்தப் பிரச்சனையை உணர்ந்தே ஒரு உலர்ந்த உணர்ச்சியற்ற தர்க்க மொழியில் கோட்பாட்டு, கல்விப்புல உரையாடல்கள் நிகழ்கின்றன. ஆனால் இலக்கியத்தில் அவற்றுக்கு மதிப்பில்லை.
வாசகன் என்னைப் பொறுத்தமட்டில் ஒரு அழகான குழந்தை. அவனிடம் அப்போது ஒரு களங்கமின்மை இருக்கும். அவன் உளறுவதெல்லாம், அது அன்பார்ந்த பாராட்டோ வசையோ, எனக்கு சுகமான கவிதையே. அவன் தெளிவாக விமர்சன மொழியில் தொண்டையை கனைத்துக் கொண்டு ஒரு தோரணையில் பேசும் போது தான் “அட அம்பியின் உடம்பில் அந்நியன் வந்து விட்டானே” என நான் சுதாரிப்பேன். ஆனால் ஜெயமோகனோ “அந்நியன்” வந்ததும் துள்ளிக்குதிக்கிறார். இவன் தான் எனக்கு வேணும் என்கிறார். “அம்பி” பொய், “அந்நியனே” உண்மை என்கிறார். இவன் இருந்தால் அவன் இருக்க மாட்டான், அவன் இருந்தால் இவன் இருக்க மாட்டான் சார். எல்லாவற்றையும் விட முக்கியமாய், இவன் இருந்தால் நாம் “இருக்க” மாட்டோம். எச்சரிக்கை!

Comments