விமர்சனத்தில் தொல்படிம விமர்சனம் என ஒரு தனி வகைமை உண்டு. இது ஒவ்வொரு பிரதியிலும் மிக நுட்பமாக ஒரு புலப்படாத படிமம் செயல்படுகிறது என்கிறது; இந்த தொன்மம் ஏற்கனவே நம் பண்பாட்டு மனத்தில் ஊறிக்கிடக்கிறது. இந்த படிமத்தை ஒரு எழுத்தாளன் எடுத்துக் கையாளும் போது அது மிகுந்த ஆற்றலுடன் வாசகனிடம் சில விசயங்களை தெரிவிக்கிறது. நம் மொழி இப்படியான படிமங்களின் தொகுப்பினால் உருவாகியது. ஆனால் இந்த தொன்மமானது நம்மிடம் உரையாடும் விதம் மிக மிக சிக்கலானது.
உதாரணத்திற்கு, கோட்ஸே ராமரை, ராம ராஜ்ஜியத்தை நம்பினார். காந்தியும் நம்பினார். ராம ராஜ்ஜியத்தை மீட்கும் பொருட்டு கோட்ஸே காந்தியை சுடும் போது காந்தி “ஹே ராம்” என முனகியதாய் சொல்வார்கள். காந்தியின் இந்த ராமனும் துப்பாக்கியுடன் நின்ற கோட்ஸேயின் ராமனும் பொதுவாக ஒன்றுதான், ஆனால் இருவரின் மனதுக்குள்ளும் அவர்கள் வேறுவேறு. அயோத்யா கலவரங்களுக்குப் பிறகு இந்த ராமன் ஒரு வரலாற்றுப் பாத்திரமாக கட்டமைகப்பட்டான். இது நிலத்துக்கும், கோயிலுக்குமான உரிமையை உறுதிப்படுத்த இந்துத்துவ சக்திகளுக்கு அவசியப்பட்டது. ஆனால் அவர்கள் “ஜெய் ஶ்ரீராம்” எனக் கூவும் போது இதே ராமன் ராமாயணத் தொன்மத்தின் பாத்திரமான ராமனாகி விடுகிறான். அவன் இப்படி முரணான நிலையில் (வரலாற்றுப் பாத்திரமாகவும் கற்பனைப் பாத்திரமாகவும்) ஒரே சமயம் இருக்கிறான். இப்போது நீங்கள் ஒரு இறைநம்பிக்கையாளரிடம் கேட்டால் அவர் “வரலாற்று ராமன் பொய், தொன்ம ராமனே உண்மை” என்பார். ஒரு இந்துத்துவரிடம் கேட்டால் அவர் “இறைநம்பிக்கையாளர் சொல்வதும் உண்மை, நாங்கள் சொல்வதும் உண்மை” என்பார். என்னிடம் கேட்டால் இரண்டுமே பொய் என்பேன். குழப்பமாக இருக்கிறதா? தொல்படிமங்கள் மொழியில் திரண்டு வரும் போது இந்த குழப்பம் இயல்பாகவே எழுகிறது - நம் மனத்தின் ஆழத்துக்குள் தொல்படிமங்கள் பயணிக்க பயணிக்க அவை முகமற்ற உருவற்ற முழுக்க உணர்ச்சிகளால் ஆன ஒரு வடிவாகின்றன. வரலாற்றில் இருந்து, தொன்மத்தில் இருந்து ராமன் கடலில் கரைக்கப்பட்ட பிள்ளையாரைப் போல உருவற்ற ஒரு ஆதி உருவமாகிறான். இதே உளவியல் தான் இலக்கிய வாசிப்பிலும் நிகழ்கிறது - வாசிக்க வாசிக்க தொல்படிமம் சுலபத்தில் புலப்படாத மற்றொன்றாகிறது. வாசித்து முடித்து தர்க்கரீதியாக யோசிக்கையில் அது மீண்டும் சுட்ட மண் பொம்மையாகிறது.

Comments