ஹசர்லுக்கும் ஹைடெக்கருக்குமான தத்துவ மோதல்:
- ஹசர்ல் இந்த உலகின் பொருட்களிடத்து நமது அனுபவங்கள் வழி பிரக்ஞை எப்படி செயல்படுகிறது என விசாரிக்கத் தலைப்பட்டார். இது தவறான அணுகுமுறை என்றார் ஹைடெக்கர் - நமது அனுபவங்கள் காட்டும் உலக இருப்பு என்பதே ஒரு கருத்து வடிவம் அல்லவா, ஒரு கருத்து வடிவின் வழி அனுபவங்களை, பிரக்ஞையை எப்படி அறிய முடியும் எனக் கேட்டார். உ.தா., உங்கள் மனத்தைப் பற்றின உங்கள் அனுமானங்கள் ‘மனத்தைப் பற்றின மனத்தின் அனுமானங்களே’ அன்றி அசலான அனுமானங்கள் அல்லதானே?
- ஹசர்ல் மரபான மெய்ப்பொருள் மூல ஆராய்ச்சியை (formal ontology) முன்னெடுத்தார். இதில் மானிட இருப்பை இந்த உலகில் ஏற்கனவே நிறுவப்பட்டு விட்ட, முன்னறிவான மெய்மையின் மூலக்கூறுகள் (a priori categories) மூலம் அணுகுவதே பிரதானம். ஆனால் ஹைடெக்கரோ அரிஸ்டாட்டிலின் வழியில் அனைத்து பொருட்களின் இருப்பை ஒன்றிணைந்த இருப்பாகக் காணும் ஒரு ontologyஐ முன்னெடுத்தார். இதில் மனிதன் தன் மனத்தின் செயல்பாடால், பிரக்ஞையால், செயல்நோக்கால் அல்ல வெறுமனே தன் உடலால் உலகியலில் பங்கெடுப்பான் வழியாகவே தன் இருப்பை உணர்கிறான். இதில் உலகின் இருப்பு அவனை தன்பால் இழுக்கிறது (அவன் உலகை நாடுவதில்லை).
- மனிதன் தன் உள்ளுணர்வை நம்பி உலகின் ஒவ்வொரு பொருளும் ஒரு சிறு உலகம் எனக் காணும் போக்கை transcendental சிந்தனை என்கிறார்கள். ஹசர்ல் மானிட பிரக்ஞை இப்படியே தோன்றுகிறது என்றார். ஹைடெக்கர் இதனிடத்தில் da-sein என்றொரு புதிய கோட்பாட்டைக் கொண்டு வந்தார் (da-sein என்றால் ஜெர்மன் மொழியில் ‘அங்கே இருத்தல்’ என பொருள்) - அதாவது சிந்தனைக்கு, முன்னெறியான புரிதலுக்கு முன்பே தோன்றும் இருப்பு, உலகுடன் சமூகத்துடன் ஒரு பகுதியாக இருத்தல் என இதை வடிவமைத்தார். அதாவது இருட்டில் காலடியில் ஒரு பொருளைப் பார்க்கிறோம். அது கயிறு அல்லது அரவம் என சிந்திக்கும் முன்பு அங்கு வந்து சேர்வது, வந்த பின் அது கயிறோ என யோசிக்கும் முன் அங்கு “இருப்பது”. (யோசித்த மறுநொடி அது மனத்தைப் பற்றின மனத்தின் அநுமானமாக கயிற்றரவமாகி விடும்.) ஒரு கரப்பான் பூச்சி என்னைக் கடந்து உரசிப் பறக்கும் போது ஒரு பயம், அருவருப்பு ஏற்படுகிறது, ஆனால் அது ஏற்படும் முன்பு ஒன்று தோன்றுகிறது, அங்கே நாம் “இருக்கிறோம்”, அதுவே நமது da-sein. ஒரு ஸ்பூன் ஐஸ்கிரீம் நம் நாவில் படும் அந்த மைக்ரோ நொடி, ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட நிலையில் இருந்து குறிப்பிட்ட ஐஸ் கிரீமை குறிப்பிட்ட ஸ்பூனால் எடுத்து வாயில் வைக்கிறோம், அது நம் நாவில் படுகிறோம் - இப்படி பல சங்கதிகள் ஒரே சமயம் இணைந்து ஒரு இருப்பை உண்டாக்கிறது. இதுவே ஐஸ்கிரீம்-சாப்பிடும்-நான் எனும் இருப்பு, அதன் da-sein. இது என்னவிதமான ஐஸ் கிரீம் என யோசிக்கும் போது அது இல்லாமல் ஆகிறது.
- ஹசர்லின் பொருட்கள் குறித்த பிரக்ஞை (intentionality) என்பதை ஹைடெக்கர் care / being-in-the-world ஆகிய கருத்தமைவுகளாக மாற்றியமைத்தார். இதன்படி இங்கு நமது இருப்பானது பிரக்ஞை பொருட்கள் மீது தன்னை வடிவமைக்கும் முன்பே, அறிவு அதை கோட்பாடாக்கும் முன்பே நிகழ்கிறது. ஒரு குழந்தை தன் அப்பாவின் கரத்தை நம்பிக்கையுடன் பற்றும் போது அது அக்கரத்தை அல்ல உலகின் கரத்தைப் பற்றுகிறது. அது சிந்திக்காமலே இந்த உலகுடன் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் தன் இருப்பை ஏற்படுத்துகிறது. இதை ஹைடெக்கர் care என்கிறார்.
ஹைடெக்கர் தத்துவ வரலாற்றில் எந்த இடத்தை சேர்ந்தவர்?
ஹைடெக்கர் ஒரு phenomenologist என பொதுவாக அறியப்படுகிறார். Phenomenology (நனவு அனுபவ இயல்) என்றால் the study of structures of consciousness as experienced from the first-person point of view. அதாவது நமது பிரக்ஞையைப் பற்றி, அதை நரம்பியல் செயல்பாடாக அன்றி ஒரு அனுபவ செயல்பாடாக ஆய்வு செய்து, தத்துவ விசாரம் மூலம் அறிவது. குறிப்பாக அனுபவம் என்பதை ஒரு குறிப்பிட்ட பொருளை நோக்கி செலுத்தப்படும் intentionality ஆகப் பார்ப்பது. Intentionality என்றால் இல்பொருள் கற்பனைப் போக்கு. அதாவது மனத்தின் கட்டமைப்புகளை அனுபவம் வழியாக வெளியே நாடுவது.
ஹைடெக்கரின் ஆசானான ஹசர்ல் இந்தத் துறையில் ஒரு பெரும் சாதனையாளர். ஆனால் ஹைடெக்கர் தன்னை நனவு அனுபவ இயல்வாதியாக அல்லாமல் ontologist என அறியப்படவே விரும்புவார். Ontology என்பது மெய்ப்பொருள் மூல ஆராய்ச்சி. அதாவது இந்த உலகில் மனிதனின் இருப்பு எப்படி அவனது இருப்புக்கான ஒரு பிரக்ஞையை தோற்றுவிக்கிறது, இந்த இருப்பை அவன் எப்படி பருப்பொருட்களாலான அனுபவங்களால் அறிகிறான் என விசாரிப்பது. நனவு அனுப இயல் என்பது ஒரு மனிதனின் அனுபவம் எப்படி உலகை நோக்கி செலுத்தப்படுகிறது என விசாரித்தால் ontology எப்படி இந்த உலகை நோக்கி அவனது இருப்பு செலுத்தப்படுகிறது என விசாரிகிக்கிறது. முன்னதில் மனரீதியான அனுபவம் என்றால் பின்னதில் பௌதீகமான இருப்பு பிரதானம்.
இதுதான் ஹைடெக்கர் நுட்பமாக ஆழமாக அறிய வேண்டுமெனில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய வித்தியாசம்.
பிற தத்துவ அறிஞர்களின் வரிசையில் ஹைடெக்கரை எங்கே வைப்பது?
சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், விட்ஜென்ஸ்டைன், சார்த்தர் போன்ற தத்துவ அறிஞர்களை விட ஹைடெக்கர் இலக்கிய வாசகர்களுக்கு அணுக்கமானவர். அவரது மொழி உருவகங்களால் ஆனது, இதனாலே அவரை நேரடியாகப் படிப்பவர்களுக்கு பல குழப்பங்களை விளைவிப்பவர். ஆனால் அதே நேரம் மறைபொருளை விரும்பி வாசிக்கும் ஒரு வாசகனுக்கு அவரது அடிப்படையான சிந்தனைகள் புரிந்து கொள்ள எளிதானவை. இந்த சிந்தனைகள் என்னென்ன?
ஹைடெக்கரின் காலத்தில் இருப்பு குறித்து நிறைய முக்கிய சிந்தனைகள் தோன்றின - குறிப்பாக இருப்பை சுயத்திற்கு இந்த மாபெரும் பிரபஞ்சத்தில், சமூக ஊடாடல்களுக்கு நடுவில் உள்ள இடமென்ன, அவனுக்கு தன் வாழ்க்கை குறித்து முடிவெடுப்பதற்கான அதிகாரமும் சுதந்திரமும் உண்டா, அவன் காலத்தில் கைவிடப்படுகிறானா போன்ற எதிர்மறையான, இருண்மையான கேள்விகளை இந்த சிந்தனையாளர்கள் எழுப்பினார்கள். இருத்தலியம் என அறியப்பட்ட இந்த தத்துவ மரபில் நமக்கு இருந்த ஒரே சாத்தியம் நமது கைகள் கட்டப்பட்டுள்ளன என உணர்ந்து துணிச்சலாக நெருக்கடிகளை எதிர்கொள்வதே. இந்த பார்வையில் உண்மை ஓரளவுக்கு உண்டு, நவீன வாழ்வின் ஒரு முக்கிய சிக்கலாக நாம் இதை உணர்கிறோம் என்பது சரியே, அதனாலே இந்த தத்துவம் இருபதாம் நூற்றாண்டில் பிரசித்தமானது, இன்றும் அது தாக்கம் செலுத்துகிறது. ஆனால் ஹைடெக்கர் இருத்தலியத்தின் இந்த பாதையை மாற்றி அமைத்தவர். இருப்பு என்பதை ஒரு சுயத்தின் தன்னுணர்வு எனும் இடத்தில் இருந்து உலகில் அவனது இருப்பு என புதிய ஒளியில் நோக்கியவர். அவ்விதத்தில் அவர் மெய்யியல் (metaphysical) தத்துவத்தின் திசையையும் மாற்றியமைத்தவர்.
நீட்சேயை வாசித்தவர்களால் ஹைடெக்கருடன் பயணிப்பது சற்றே சுலபமாகும் - ஏனென்றால் இருவரும் தொல் கிரேக்க சிந்தனைகள், வாழ்வு முறைகளால், குறிப்பாக ஆரம்பகால கிரேக்கர்கள் காலத்தைப் புரிந்து கொண்ட விதத்தால் ஈர்க்கப்பட்டவர்கள். காலத்தை நவீன சிந்தனையில் இருந்து ஆதி கிரேக்க சிந்தனைக்கு நகர்த்தியதே இவர்களின் தத்துவத்தின் பிரதான சாதனையாகவும், அவர்களின் சிந்தனை அமைப்புகளுக்கு அடித்தளமாகவும் அமைந்தது.
Comments