திருடனுக்குத் தேள் கொட்டியது போல் என்பார்களே அதுதான் ஜிக்கும் நடந்துள்ளது, அதை மறைக்கத்தான் இந்த 59 சீன செயலிகளின் தற்காலிகத் தடை எனும் நாடகம். ஜீயால் இத்தனை நாட்களில் ஒருமுறை கூட ‘சீனா நம் எதிரி’ என வெளிப்படையாக சொல்ல முடியவில்லை. அவரது pmcares நிதிக்கு 100 கோடிக்கு மேல் சீன நிறுவனங்கள் அண்மையில் பணம் கொடுத்திருக்கின்றன. இப்போது தடை செய்யப்பட்டுள்ள டிக்டாக் கூட 30 கோடி கொடுத்திருக்கிறது. இன்று குஜராத்தில் (ஜியின் பினாமியான) அதானி 3000 கோடிக்கான ஒரு வணிக ஒப்பந்தத்தை ஒரு சீன நிறுவனத்துடன் செய்துள்ளார். பிஎஸென்னெல்லுடன் ஹுவாய் நிறுவனத்துக்குள்ள தயாரிப்பு ஒப்பந்தமும் இன்னும் ரத்தாகவில்லை. Paytmஇல் 50% மேல் அலிபாபா எனும் சீன நிறுவனம் பங்குகளை வகிக்கிறது. அதைத் தடை செய்தால் அதை பெரிதும் நம்பியிருக்கும் நம்மைப் போன்றோர் அதிகம் பாதிக்கப்படுவோம் என்றாலும் தேசப்பாதுகாப்பு என வரும் போது நிர்தாட்சண்ணியமாக தடை செய்ய வேண்டியதுதானே. ஜிக்கு இதில் என்ன பிரச்சனை?
என் ஊகம் சீனாக்காரனின் கையில் அவரது குடுமி இருக்கிறது, அவர்களுடனான புரிந்துணர்வில் கோடானுகோடி பணம் அவருக்கும் அவரது நலம் விரும்பிகளுக்கும் லாபம் உள்ளது. அதனாலே அவர்களை நேரடியாகத் தாக்கவோ ஒரேயடியாய் தடை செய்யவோ ஜிக்கு துணிச்சல் இல்லை. அது தன் விரலைக் கொண்டு தன் கண்ணையே குத்துவதைப் போல என அவர் நினைக்கிறார்.
மற்றொரு பக்கம், நாம் சீனாவை ஓட ஓட விரட்டி விட்டோம் என பிரச்சாரம் தூள் பறக்கிறது. அமேசானில் எந்த பொருளைப் போய் பார்த்தாலும் அங்கு கேள்வி-பதில் பகுதியில் யாராவது ஒருவர் வந்து “இது சீனப்பொருளா?” எனக் கேட்பதைப் பார்க்கிறோம். இந்தக் கேள்வியை ஒவ்வொரு பக்கமாய் போய் காப்பி பேஸ்ட் செய்வது சங்கிகளின் சமூகவலைதளப் படையே, இதன் மூலம் மக்கள் சீனாவுக்கு எதிராய் கொதித்துப் போயிருப்பதாய் ஒரு தோற்றத்தை உண்டு பண்ண நினைக்கிறார்கள். மற்றொரு பக்கம் டிக்டாக் நிறுவனத்தின் இந்திய சி.இ.ஓ (குஜராத்தை சார்ந்த ஒரு காந்தி) “இது ஒரு பிரச்சனையே இல்லை, மத்திய அரசு எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறது, அங்கே எங்கள் தரப்பை விளக்கி நாங்கள் மீண்டு வருவோம்.” என எகத்தாளமாக டிவீட் போட்டிருக்கிறார். இந்த கெத்து எங்கிருந்து வருகிறது? பணபலம், அதிகார பலம் மற்றும் செல்வாக்கால். அரசு இப்போதைக்கு விதித்துள்ளது ஒரு பாவனையான தடை எனும் நம்பிக்கையால். நாம் தான் கோடிக்கணக்கில் கொட்டிக் கொடுத்திருக்கிறோமே எனும் துணிச்சலால். இதுவே இந்த அரசு “நாங்கள் சீன செயலிகளை தடை செய்கிறோம், சீன வணிக நிறுவனங்களையும் உடனே தடை செய்வோம்” என வெளிப்படையாக துணிச்சலாக அறிவித்திருந்தால் பேச்சுவார்த்தைக்கே இடமிருக்காதே. ஒரு சின்ன ஆள் ஒரு இந்திய தேசத்தின் தலைமைக்கே சவால் விடும்படி ட்வீட் போடும் நிலை ஏற்படாதே. ஏன் இறையாண்மைக்கு ஆபத்து என்றெல்லாம் டபாய்க்க வேண்டும்?
அதாவது இவர்களின் மன்னர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் சீன வியாபாரிகள், முதலீட்டாளர்களிடம் கையைக் கட்டி நிற்பாராம், மக்கள் மட்டும் சீனப் பொருட்களை பகிஷ்கரித்து போராட வேண்டுமாம். இந்த லட்சணத்தில் இந்த போலி நடவடிக்கைக்கு “டிஜிட்டல் ஸ்டிரைக்” என ஒரு பெயர் வேறு. வெட்கமாக இல்லையா உங்களுக்கு?
Comments