Skip to main content

எழுத்தாளனும் சினிமாக்காரனும்




நா. முத்துக்குமார் பற்றின என் முகநூல் பதிவுக்கு பல திசைகளில் இருந்து குதித்து வந்து சீன ராணுவம் போல அதிர்ச்சித் தாக்குதல் நடத்திய நா.மு தற்கொலைப் படையினரில் சிலர் முத்துக்குமாரின் புகழைக் கண்டு பொறாமைப் பட்டு நான் அவரை விமர்சிப்பதாகக் கூறினர். இன்னும் சிலர் என்னால் ஒருபோதும் முத்துக்குமாரின் பிரபல்யத்தை, “பல கோடி இதயங்களை வென்றஅவரது வீச்சை தொட முடியாது என கருத்திட்டிருந்தனர். நான் அவர்களிடம் சொல்ல விரும்புவது ஒன்றே தான் - நீங்கள் ஒரு சினிமாக்காரரை மட்டுமே சினிமாக்காரருடன் ஒப்பிட வேண்டும். ஒரு திருடனை ஓவியர், பிளம்பர், மீனவர், முடிதிருத்துநர் போன்றோருடன் எப்படி நாம் ஒப்பிடுவதில்லையோ அப்படியே சினிமாக்காரருடனும் இலக்கியவாதியை ஒப்பிடுவது அபத்தம். சினிமாவுக்குள் கூட ஒரு நட்சத்திர நடிகரை ஒரு நடிகையுடன் ஒப்பிட முடியாது, நடிகையின் புகழை இயக்குநரின் புகழுடன் ஒப்பிட முடியாது, ஒரு மகத்தான இசையமைப்பாளரின் புகழை பாடலாசிரியரின் புகழுடன் ஒப்பிட முடியாது. இந்த புகழின் அளவுக்கும் அவர்களின் திறமைக்கும் சாதனைக்கும் எந்த தொடர்பும் இருப்பதில்லை, சொல்லப் போனால் நேர்கீழாகவே அது இருக்கும். ஒரு நோய் கொண்ட சமூகத்தில் பாகுபாடுகள் இப்படியே அமையும். இப்படியான நிலையில் ஒரு பாடலாசிரியனை நீங்கள் ஒரு தீவிர படைப்பாளியுடன் ஒப்பிடலாமா? அம்மி கொத்துகிறவரை சிற்பியுடன் ஒப்பிடக் கூடாது.


 இது ஏன், நீங்கள் ஒரு சினிமாக்காரரை ஒரு மகத்தான அரசியல் தலைவருடன், முதல்வராக இருந்தவருடன் கூட ஒப்பிட முடியாது - எம்.ஜி.ஆரின் கிளாமர் முன்பு கலைஞர் தொடர்ந்து தோற்கவில்லையா? அது கலைஞரின் தவறு அல்ல, அது நடிப்பையும் அரசியலையும் உங்களைப் போன்றோர் கலந்ததன் தவறு. அதன் விளைவாகவே ஜெயலலிதாவால் தொடர்ந்து இங்கு ஜொலிக்க முடிந்தது. (அவர் இடத்தைப் பிடிக்க ரஜினி, விஜய் போன்றோர் இன்று துடிக்கின்றனர்.) எண்பதுகளின் இறுதியில் கூட, எம்.ஜி.ஆர் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், அதிமுகவின் பிரச்சாரத்துக்கு வேறு தலைவர்களை கொண்டு சென்றால் கூட்டம் சேராது என ஜெயலலிதாவையே அனுப்பினார்கள். அண்மையில் வடிவேலுவும் சிங்கமுத்துவும் எதிரெதிராக தேர்தல் பிரச்சாரக் களத்தில் நிறுத்தப்பட்டதைப் பார்த்தோம். இதெல்லாம் குடிக்கும் நீருடன் சாக்கடைக் குழாய் இணைக்கப்பட்டதைப் போன்ற அவலங்கள். நீங்கள் ஒரு அரசியல் தலைவரிடம் சென்று உங்களுக்கு ரஜினியின் அகில இந்திய புகழ் உண்டா, அவரைப் போல உங்களைக் கோடிக்கணக்கானோர் கொண்டாடுவார்களா எனக் கேட்கலாமா? கடவுள் கூட விதிவிலக்கில்லை - நம்மவர்கள் சர்வசாதாரணமாக நடிகைகளுக்கு கோயில் கட்டி கடவுளை விட நடிகையே மேல் எனக் கோருவார்கள். ஒருவேளை கடவுளே இறங்கி வந்துஇது நியாயமா?” எனக் கேட்டால்ஓய் உமக்கு எங்கள் குஷ்பு, நயன்தாரா அளவுக்கு புகழ், ரசிகர்கள் உண்டா? கிளாமர் உண்டா?” என நம்மவர்கள் திரும்ப கேட்பார்கள்

 

இதன் பொருள், எனக்கு சினிமாக்காரர்கள் மீது வெறுப்பு, மனவிலக்கம் என்றல்ல. அவர்கள் வெகுஜனக் கலைஞர்கள், அதற்கான மதிப்பை அவர்களுக்கு அளிப்போம். ஆனால் தமிழகத்தில் ஆரம்பிக்கும் அத்தனை நதிகளும் சினிமா எனும் கடலில் தான் போய் கலக்க வேண்டும் என பிடிவாதம் பிடிக்கக் கூடாது.

சினிமா என்பது இங்கு என்றல்ல உலகம் முழுக்க ஒரு மகத்தான, ராட்சஸ வளர்ச்சி கண்டுள்ள வெகுமக்கள் ஊடகம். நீங்கள் அமெரிக்காவில் போய்க் கேட்டால் கூட ஒரு நடிகனே ஒரு சிறந்த இலக்கிய நாவலாசிரியனை விட அதிகப் புகழுடன் இருப்பான். அவர்களுக்கும் நமக்கும் ஒரே வித்தியாசம் அவர்கள் இந்த புகழ் வீச்சைக் கொண்டு எழுத்தாளனை மதிப்பிட, மட்டம் தட்ட மாட்டார்கள் என்பது. அவர்கள் எந்த நடிகனுக்கு அதிக ரசிகர்கள், யார் படம் அதிக நாட்கள் ஓடும் என பரஸ்பரம் அடித்துக் கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு ஒவ்வொரு கலைஞனுக்கும் கொடுக்க வேண்டிய இடம், மரியாதை என்னவெனத் தெரியும். கேரளாவில் எம்.டி நடிகர்கள் அளவுக்குப் புகழ் கொண்டவர் தான், ஆனால் அவரால் மோகன்லாலை நட்சத்திர அந்தஸ்தில் மீற முடியாது. லாலின் படங்களைப் பார்த்த அளவுக்கு மக்கள் எம்.டியின் நாவல்களை கேரளாவில் படித்திருக்க மாட்டார்கள். ஆனால் லால் தனக்கு இணையான ஒரு கலைஞனாகவே எம்.டியை அங்கு கருதுவார். சொல்லப் போனால் எம்.டி வந்தால் அவர் எழுந்து நின்று மரியாதை செலுத்துவார்முக்கியமாக அங்கு ஆரம்ப கட்ட எழுத்தாளனைக் கூட பொதுமக்கள் இப்படி அவமதிக்க மாட்டார்கள். இங்கு விஜய்க்கு அசோகமித்திரன் என்றால் யாரெனத் தெரிந்திருக்குமா? படிக்க வேண்டாம், பெயராவது தெரிந்திருக்குமா?


மற்றுமொரு விசயத்தையும் குறிப்பிட வேண்டும்:

எனக்குத் தெரிந்து மிகச்சில தீவிர எழுத்தாளர்கள் தாம் தமக்கு சினிமாப் புகழ் இல்லையே என மருகுவார்கள். அவர்களில் ஒரு சிறிய பகுதியினர் பாட்டெழுத வாய்ப்பு தேடுவார்கள். இதில் ஒன்றும் தப்பில்லை. ஆனால் நான் பார்த்துள்ள நூற்றுக்கணக்கான படைப்பாளிகள் தமது ஆயுட்காலம் முழுக்க இருட்டிலேயே முடியும் எனத் தெரிந்தே தான் அவர்கள் எழுத வருகிறார்கள். அவர்கள் பாடலாசிரியர்களை விட அதிக முனைப்புடன் துடிப்புடன் பண்பாட்டுத் தளத்தில் இயங்குகிறார்கள். தமக்குப் பிடித்திருக்கிறது என்பதால், அது தம் வாழ்வுக்கு ஒரு அர்த்தம் தருகிறது என்பதால், அது தம் மொழிக்கும் பண்பாட்டுக்கும் அளிக்கும் ஒரு கொடை என்பதால் செய்கிறார்கள். எழுத்தாளர்கள் இந்த தமிழ் சமூகத்தில் இப்படி கவனம் பெறாத தரப்பாகவே நீண்ட காலம், அடுத்த பல பத்தாண்டுகள், இருந்தாக வேண்டும். அதுவரை இங்கு இலக்கியத்தில் நுழையும் ஒவ்வொருவனும் ஒரு விளிம்புநிலை மனிதனே. தமிழ் இலக்கியத்தின் மிகப் பெரிய நட்சத்திரங்களான எஸ்.ரா, ஜெ.மோ போன்றோரை விட ரம்யா பாண்டியனின் இடுப்பு மடிப்புகள் தாம் பொதுமக்களுக்கு அதிகம் தெரியும், அதிகம் பிடிக்கும். அதற்காக எஸ்.ராவும், ஜெ.மோவும் சேலைகட்டி தம் இடுப்பு மடிப்புகளைக் காட்டி படமெடுத்து புகழ் பெற முடியுமா


இந்த நிலை மாறுவது சுலபத்தில் நடக்காது, அதற்கு கல்வி இந்த சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் பரவ வேண்டும். வேலையை, பணத்தைப் பற்றி அதிக கவலையில்லாமல் மக்கள் படிக்கிற பல தலைமுறைகளாக மக்கள் படிக்கிற நிலை வர வேண்டும். இங்கே சினிமா வெறியர்களாகத் திரிகிறவர்களின் முகநூல் பக்கங்களைப் போய் பார்க்கும் போது அவர்களின் வாசிப்பும் பெரும்பாலும் பூஜ்யமாக இருக்கும் அல்லது அவர்கள் எழுபதுகளில் பிறந்தவர்கள் எனில் வெகுஜன பாக்கெட் நாவல்கள் படித்திருப்பார்கள் எனத் தெரிகிறது. இதை ஒரு குற்றமாக நான் சொல்லவில்லை - இவர்களின் அடுத்தடுத்த தலைமுறைகள் இலக்கியம், தத்துவம், சமூகம், அரசியல் என புத்தக வாசிப்பை மேற்கொள்வார்கள்; அவர்கள் பா. விஜய்யும், நா.முத்துக்குமாருமே மகத்தான கவிகள் என பேசுமளவுக்கு முதிர்ச்சியற்றவர்களாக இருக்க மாட்டார்கள்.


நான் இங்கு சாதி, பொருளாதார நிலை போன்ற பாகுபாடுகளை காரணிகளாகப் பார்க்கவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் - கேரளா நம்மை விட வளர்ச்சியில் நலிந்த மாநிலம். ஆனால் அங்கே எல்லா நிலையில் உள்ளவர்களும் படிக்கிறார்கள். ஆனால் இங்கே நாம் ஒப்பிடுகையில் அதிக வளர்ச்சி பெற்றிருந்தாலும் ஒரு மிகச்சிறிய மத்திய வர்க்க பகுதியினர் தாம் படிக்கிறார்கள், எழுதுகிறார்கள். அவர்களும் திராவிட இயக்கத்தின், இடதுசாரிகளின் அரசியல் பிரக்ஞை அளித்த விழிப்புணர்வால் படிக்க ஆரம்பித்தவர்கள் அல்லது வசதியாக உட்கார்ந்து படிக்கும் நிலப்பிரபுத்துவ வம்சாவளியில் தோன்றியவர்கள். இதில் சாதி, வர்க்க பாகுபாடு ஒன்றுமில்லை. ஒட்டுமொத்தமாக இது ஒரு குப்பைக்கிடங்கு. இங்கு நாமெல்லாரும் ஒரே இடத்தில் தான் ஒரு மிகச்சிறிய ஒளிரும் வைரக்கல்லைப் போல இருக்கிறோம். மலை கலையான குப்பைக் கூளங்களுக்கு நடுவே நம்மை யாருக்கும் புலப்படவில்லை. நாம் ஒன்றாகத் தான் முன்னேற முடியும். அதுவரை இந்த தற்கொலைப் படையினர், படிக்காமல் இருப்பதை ஒரு தகுதியாக நினைப்பவர்கள் நம்முடன் இருந்தே ஆவார்கள். உச்சநிலை எழுத்தாளர்களுக்குக் கூட புத்தகம் சில ஆயிரங்களுக்கு மேல் விற்காத நிலை தொடரவே செய்யும்.


இதை என் சக எழுத்தாளர்கள் நன்றாகவே அறிவார்கள். ஒரு சிறந்த கவிஞனிடம் போய் நம் தற்கொலைப் படையினர்பா.விஜய்யின் நூல் லட்சக்கணக்கில் விறகும். உன் புத்தகத்தை நூறு பேர் படிப்பார்களா?, யார் பெரிய கவிஞன்?” என கூச்சமின்றி கேட்பார்கள். இப்படிக் கேட்பது தமக்குத் தான் அசிங்கம் எனப் புரிந்து கொள்ள மாட்டார்கள். அதனால் எழுத்தாளன் ஒரு சிறிய மூலையில் போய் ஒதுங்கிக் கொள்வான். (என்னைப் போன்றபைத்தியங்கள்வெளியே வந்து கல்லெறியை எதிர்கொள்வார்கள்.) அவனுக்கு சினிமா குறித்த பொறாமையோ வயிற்றெரிச்சலோ இராது. இருந்தால் அவன் எழுதவே வர மாட்டான்சினிமாப் புகழைக் காட்டி அவனைப் புண்படுத்த எல்லாம் முடியாது


ஒரு பேஸ்புக் பெண் பதிவர் நான் ஹைடெக்கர் குறித்து எழுதிய குறிப்பை ஸ்க்ரீன்ஷாட் எடுத்துஇப்படி மிகக்குறைவாய் லைக்கு வாங்கும் இவருக்கு என்ன திமிர் பாருங்கஎன கலாய்க்கிறார். அடப்பாவமே! ஹைடெக்கரைப் பற்றி தமிழில் மிக மிகக் குறைவாகவே எழுதப்பட்டிருக்கிறது. அவரை மேற்குலகிலேயே மக்கள் படிக்கத் திணறுவார்கள். அவரைப் பற்றி தமிழில் எழுதினால் பல்லாயிரம் பேர் படிக்க மாட்டார்கள் என எனக்குத் தெரியாதா? தெரிந்து தான் எழுதுகிறேன். அனுமோளின் படத்தைப் போட்டு ஒரு வரியை ரெட்டை அர்த்தத்துடன் பதிவேற்றினால் கூடுதல் லைக்குகள் கிடைக்கும் என் எனக்குத் தெரியும். அரசியல், சர்ச்சைக்குரிய விசயங்களைப் பற்றி மிகச்சிறிய குறிப்புகளை எழுதினால் பல்லாயிரம் லைக்குகள், ஆயிரக்கணக்கில் பகிர்வுகள் வருமெனவும் எனக்குத் தெரியும். அப்படியான எளிய உடனடி நுகர்வுக்கான பதிவுகளையும் எழுதியிருக்கிறேன். அதில் எனக்கு எந்த கிளுகிளுப்பும் இல்லை, இது குறித்து எந்த ஏமாற்றமும் இல்லை. ஆனால் எதிர்காலத்தில் இந்த நிலை வெகுவாக முன்னேறும் என்றும் அறிவேன். அதற்காக நான் காத்திருப்பேன். இந்த உடனடி விருப்பக்குறிகளுக்காக இரவுபகலாய் யோசித்து மண்டையை உடைக்க மாட்டேன்.


இவர்கள் பைத்தியங்கள், விலகியிருப்போம் என நான் யோசிக்கப் போவதில்லை. நான் இவர்களுடனே இருப்பேன். ஒருநாள் இவர்களுக்குத் தெளிவு பிறக்கும். அன்றும் நான் இருப்பேன்.


பின்குறிப்பு: இந்த சந்தர்பத்தில் ஆதரவாய் உடன் நின்ற நண்பர்களுக்கு நன்றி!


Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...