Skip to main content

விராத் கோலி – எங்கிட்ட மோதாதே



2011 உலகக் கோப்பைக்கு பிறகு புற்றுநோயால் தளர்ந்து பிறகு மீண்டு வரும் வேளையில் யுவ்ராஜ் சிங் ஒரு பேட்டி அளித்தார். அதில்காலத்தில் திரும்ப சென்று நான் வேறு விதமாய் ஆட விரும்பினால் அது விராத் கோலியை போலத் தான் இருக்கும். அவரது கடும் உழைப்பு, அர்ப்பணிப்பு, கட்டுப்பாடு, ஒழுக்கம் ஆகிய பண்புகள் எனக்கும் இருந்திருக்க கூடாதா என ஆசைப்படுகிறேன்என்றார். ஒருநாள் கிரிக்கெட்டின் அசுரர்களில் ஒருவரான யுவ்ராஜ் ஒரு இளம் வீரரை பற்றி இதை சொல்கிறார் என நினைவில் கொள்ள வேண்டும். திறமையும் கடும் உழைப்பும் ஒன்றாய் சேர்ந்தால் நம்பர் 1 ஆகலாம் என்பதற்கு கோலி ஒரு உதாரணம்.

248 ஒருநாள் ஆட்டங்களில் 11,867 ரன்கள். 43 சதங்கள். பொதுவாக மட்டையாளர்களுக்கு சதத்தை விட அரைசதங்கள் மும்மடங்கு இருக்கும். ஆனால் கோலி 58 அரைசதங்களே அடித்துள்ளார் (ஆனால் இது சச்சினின் சத-அரைசத விகிதத்தை [49-96] விட பலமடங்கு மேலானது). அநேகமாய் பாதிக்குப் பாதி அரைசதங்களை அவர் சதமாய் மாற்றுகிறார். இது ஒரு அபாரமான திறன். டெஸ்ட் போட்டிகளில் அவர் 27 சதங்களும் 22 அரை சதங்களும் எடுத்துள்ளார் - ஒருநாள் போட்டிகளில் அரைசதங்களை சதமாக அவர் உருமாற்றுவதைப் போல டெஸ்டில் அவரால் நிகழ்த்த முடிவதில்லை என்பதை கவனிக்கலாம்; அதற்கு ஒரு முக்கிய காரணம் அவரால் ஒருநாள் போட்டிகளில் போல தன் இன்னிங்ஸை கட்டமைக்க முடிவதில்லை என்பது. ஒருநாள் போட்டிகளில் 15-25வது ஓவர்களுக்குள் களமிறங்கும் கோலி ஒற்றை, இரட்டை ரன்களாக குவித்து 35வது ஓவருக்கு மேல் அடித்தாடுவார். அல்லது பத்தாவது ஓவருக்குள் களமிறங்கினால் அடுத்த 10-15 ஓவர்களில் அதிகமாய் நான்குகளை அடித்து 35-40 ரன்களை எடுத்த பின் ஒற்றை, இரட்டை ரன்கள் மூலம் அரை சதத்தைக் கடப்பார். அடுத்து 35வது ஓவருக்குப் பின்னால் ஆக்ரோஷமாய் ஆடி 45வது ஓவருக்குள் சதமெடுப்பார். ஒருநாள் ஆட்டவடிவில் எல்லையில் எவ்வளவு களத்தடுப்பாளர்களை நிறுத்தலாம் எனும் விதிமுறைகளை, பந்து தொடர்ந்து புதிதாக கடினமாக இருப்பதை பயன்படுத்தி தான் ரன்களை குவிப்பதைப் போல கோலியால் டெஸ்டில் முடிவதில்லை. டெஸ்டில் கோலி நான்காவது களமிறங்கும் போது எதிரணி ஒன்று தடுப்பாட்டத்துக்கு சென்று விடும் அல்லது சுழலர்களை அதிகமாய் பயன்படுத்தும். அப்போது ஒற்றை, இரட்டை ஓட்டங்கள் சுலபத்தில் கிடைக்காது. அவர் பொறுமையாய் ஆடி சதம் எடுத்தாலும் இந்தியா 250 ரன்களை 3 விக்கெட் இழப்புக்கு தாண்டும் பட்சத்தில் கோலி அடித்தாடி சீக்கிரமாய் இலக்கை நிர்ணயிக்கும் நெருக்கடிக்கு உள்ளாவார். வினோதமாய் கோலியால் ஒருநாள் போட்டிகளில் போல டெஸ்டில் பொறுமையாய் அமைதியாய் ஆட முடிவதில்லை. அவர் டெஸ்டில் நிதானத்தை விட ஆக்ரோஷத்தை கடைபிடிக்கிறார். அதே போல கோலி டெஸ்டில் அரை சதத்தைத் தாண்டும் போது அல்லது ஆட வரும் போது இரண்டாவது புதுப்பந்தை எடுத்து விடுவார்கள். இந்த சூழலும் அவரது விக்கெட் விரைவில் விழ, சதமடிக்கும் சாத்தியம் குறைய மற்றொரு காரணம்.


 கோலிக்கு 31 வயதாகிறது. இப்போதைக்கு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஒட்டுமொத்தமாய் 70 சதங்கள் எடுத்திருக்கிறார். இன்னும் 7 வருடங்கள் அவர் ஆடினால் கூடுதலாய் 50 சதங்கள் அடித்து விடுவார், எனில் என்பதில் ஐயமில்லை. அதாவது என் கணிப்பு படி கோலி தன் 35வது வயதுக்கு முன்னரே சச்சினின் சதத்தை முறியடித்து வரலாற்றில் தனி முத்திரை பதிப்பார். ஓய்வு பெறும் போது ரன்களை பொறுத்த மட்டிலுமே அவர் சச்சினை விட 20-25 சதங்கள் கூடுதலாய் (ஒருநாள் + டெஸ்ட் போட்டிகள்) எடுத்திருப்பார்.


ஆனால் ஆட்டத்தரம், எந்த சூழலுக்கு தன்னை தகவமைத்துக் கொள்ளும், எந்த சவாலையும் எதிர்கொண்டு ஜெயிக்கும் திறன் எனப் பார்க்கும் போது சச்சின் எப்போதுமே கோலியை விட பல மடங்கு உயரமானவரே. சச்சின் மலை எனில் கோலி நடுவே. இருந்தாலும் ரன்குவிக்கும், ஆட்டத்தை வென்றளிக்கும் திறனைப் பொறுத்து கோலி சச்சினை விட கெட்டிக்காரர்.

 

ஆவேசத்தின் கனல்


விறகடுப்பு அணைந்த பின்னும் சாம்பலுக்குள் கனல் தகதகத்துக் கொண்டே இருக்கும். கோலிக்குள்ளும் அந்த நெருப்பு ஒரு போதும் அணைவதில்லை. மட்டையாடும் போது மட்டுமல்ல களத்தடுப்பில், வெற்றியை கொண்டாடுவதில், களத்தில் ஒரு புலியை போல் உலாத்துகையில் அவரது கண்களில், நடையில், உடல்மொழியில் ஆக்ரோசம் மிளிர்ந்து கொண்டிருக்கும். ஆனால் பேட்டிங்கின் போது இந்த வெறியுணர்ச்சியை அமைதியான ரன்களாக உருமாற்ற தெரிந்தவர் கோலி. இத்திறன் அவரை போன்று ஆவேசம் மிக்க காம்பிளி, கங்குலி, யுவ்ராஜிடம் கூட இருக்கவில்லை. அதனால் தான் கோலி இவ்வயதிலேயே இவர்களையும் கடந்து சென்று விட்டார்.


அப்பாவின் கனவு


விராத் கோலி தில்லியில் ஒரு பஞ்சாபிய குடும்பத்தில் 1988இல் பிறந்தார். அவருடைய அப்பா பிரேம் கோலி ஒரு வழக்கறிஞர். கோலி தான் குடும்பத்தில் கடைக்குட்டி. அவருக்கு ஒரு அண்ணனும் அக்காவும் உண்டு. மூன்று வயதிருக்கும் போதே அவர் ஒரு சின்ன கிரிக்கெட் மட்டையை எடுத்து விளாசி விளையாடத் துவங்கி விட்டார் என்கிறார் அவரது அம்மா. தெருவில் அவர் விளையாடும் அழகை பார்த்து விட்டோ அல்லது தங்கள் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை இனியும் இப்பையன் உடைக்க வேண்டாம் என கருதியோ அவரது பக்கத்து வீட்டார் பிரேம் கோலியிடம் விராத்தை ஏதாவது ஒரு கிரிக்கெட் பயிற்சி மையத்தில் சேர்த்து விட பரிந்துரைத்தார்கள். அப்பா விராத்தை ராஜ்குமார் ஷர்மா எனும் பயிற்சியாளரிடம் ஒப்படைத்தார். அங்கிருந்து விராத்தின் கிரிக்கெட் பயணம் நேர்த்தியாக முன்னகர்ந்தது.


தன் அப்பா தினமும் தன்னை தவறாது பயிற்சிக்கு அழைத்து போய் விடுவதை சர்வதேச நட்சத்திரம் ஆன பின்னர் நினைவு கூரும் கோலி தன் அப்பாவின் அருகாமையை மிகவும் மிஸ் பண்ணுவதாய் குறிப்பிடுகிறார். ஏனென்றால் 2006இல் கோலி தன் 18வது வயதில் தன் இரண்டாவது ரஞ்சி கோப்பை ஆட்டத்தை தில்லிக்காக ஆடும் போது அவரது அப்பா மாரடைப்பில் காலமானார். மனமுடைந்து போன கோலி அப்பாவின் சிதைக்கு நெருப்பூட்டிய உடனே ஆட்டத்தை தொடர்வதாய் திரும்ப சென்றார். இது மொத்த தில்லி அணியையும் திகைப்பில் ஆழ்த்தியது. இழப்பின் தவிப்பை மறைத்து விட்டு மன உறுதியுடன் அவர் அன்று கர்நாடகாவுக்கு எதிராய் அடித்த 90 ரன்கள் அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றியது. அப்பா காலமுற்ற அன்றிரவில் இருந்து கோலி மிகவும் மன உறுதி கொண்டவராக மாறினதாய் அவர் அம்மா ஒரு பேட்டியில் குறிப்பிடுகிறார். தேசிய அணியில் மகன் ஆட வேண்டும் எனும் தன் அப்பாவின் ஆசையை நிறைவேற்றுவதே ஒரே இலக்காய் கொண்டு கோலி அதன் பிறகு உழைத்தார். அது மட்டுமல்ல அப்பாவின் மறைவுடன் குடும்பம் பொருளாதார ரீதியாய் சரிந்தது. வாடகை வீட்டுக்கு இடம்பெயர்ந்தது. குடும்ப வியாபாரம் தளர்ந்தது. தன் குடும்பத்தை சரிவில் இருந்து மீட்கும் பொறுப்பு தன்னுடையது என கோலி ஏற்றுக் கொண்டார். அன்றிருந்து அவர் உருக்கு இதயம் படைத்த முதிர்ச்சியான இளைஞராய் உருமாறினார். இந்த பொறுப்புணர்வையும் உறுதியையும் பின்னர் அவர் பலமுறை இந்திய அணிக்காய் பேட்டிங் செய்த போது வெளிப்படுத்தினார்


முதல் உலகக்கோப்பை


பள்ளி மற்றும் சிறுவர்களுக்கான பிற ஆட்டங்களில் தொடர்ந்து ரன்களை குவித்த கோலி 2008இல் மலேசியாவில் நடந்த 19 வயதுக்கு கீழாருக்கான உலகக்கோப்பை அணிக்கு தலைவராய் நியமிக்கப்பட்டார். அவரது கிரிக்கெட் வாழ்வில் அது ஒரு திருப்பு முனை. உலகக்கோப்பையை கோலி வென்றளித்தார். குறிப்பாய் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் இந்தியா சொற்ப ரன்களில் வெளியேற கோலி அதிரடியாய் தலைமை தாங்கி வெற்றிக்கு வித்திட்டார். அத்துடன் கோலியின் பெயர் இந்தியா முழுக்க பிரபலமாகியது. விரைவில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் கோலி துவக்க ஆட்டக்காரராய் களமிறங்கி சிறப்பாய் ஆடினார். கால் பக்கம் மட்டுமே பிரதானமாய் ஆடினாலும் அவரது துணிச்சலும் கவனமும் அற்புதமாய் தனித்து தெரிந்தன. ஆனாலும் அணியில் நிறைய சீனியர் நட்சத்திர வீரர்கள் இருந்ததாலும் கோலி திமிர் பிடித்தவர் எனும் அவப்பெயர் நிலவியதாலும் ஒரு வருடம் அணியில் இருந்து விலக்கப்பட்டார்.


2009இல் மீண்டும் ஆட வந்த கோலி முற்றிலும் மாறுபட்ட, கூடுதல் முதிர்ச்சியான வீரராக இருந்தார். அப்போதைய அணியில் சச்சின், சேவாக், யுவ்ராஜ், தோனி, ரெய்னா போன்று நிறைய அதிரடி பேட்ஸ்மேன்கள் இருந்தனர். அவர்கள் இடையே கோலி ரிஸ்கே எடுக்காமல் ஒற்றை இரட்டை ஓட்டங்களில் கவனம் செலுத்தும் நிதானமான பேட்ஸ்மேன் ஆனார். Off sideஇல் அவரது ஆட்டமும் மெருகேறியது. 2011 உலகக்கோப்பை வந்த போது கோலி உலகின் கவனிக்கத்தக்க மத்திய வரிசை பேட்ஸ்மேனாக இருந்தார். உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் சச்சின் மற்றும் சேவாக் ஆட்டமிழந்த நிலையில் கோலி பதறாமல் ஒற்றை இரட்டை ரன்கள் எடுத்து காம்பிருடன் அணியை நிலைப்படுத்தினார். அவரது 35 ரன்கள் அணிக்கு நிதானத்தையும் வேகத்தையும் அளித்து இந்தியா உலகக்கோப்பையை வெல்ல பிரதான காரணமாகியது.


கோலி 2.0


2012இல் இருந்து கோலி புது உயரங்களை எட்ட துவங்கினார். சச்சின், சேவாக், காம்பிர், யுவ்ராஜ் ஆகிய நட்சத்திரங்கள் மங்கத் துவங்க கோலி சூப்பர் ஹீரோவாக உயர்ந்தார். இந்தியா இரண்டாவதாய் பேட்டிங் செய்யும் போது அவரது ஆட்டம் அசாத்தியமாய் இருந்தது. ஆஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்பு தொடரில் இந்தியா இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற இந்தியா 40 ஓவர்களில் 321 அடிக்க வேண்டியிருந்தது. கோலி 133 அடித்து 37 ஓவர்களிலேயே இலக்கை எட்ட வைத்தார். ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு 148 பந்துகளில் அவர் அடித்த 183 1998இல் ஷார்ஜாவில் சச்சின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராய் அடித்த சதத்துக்கு இணையானது.

ஆஸ்திரேலிய தொடரில் அடிலெய்ட் மைதானத்தில் கோலி அடித்த கன்னி சதம் அவர் டெஸ்ட் அரங்கில் நிலைபெற உதவியது. 2014இல் இந்தியா மீண்டும் ஆஸ்திரேலியா சென்ற போது கோலி டெஸ்ட் தொடரில் 692 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு இந்திய பேட்ஸ்மேன் அடித்த அதிகபட்ச ரன்கள் எனும் சாதனையை படைத்தார்.

 

குறைபட்ட டெக்னீக்


கோலியின் முக்கிய பலவீனம் அவர் எப்போதும் பேட்டை கால்பக்கம் அடிக்கும் வண்ணம் சற்றே திருப்பி பிடித்திருக்கிறார் என்பது. இதனால் off sideஇல் வைடாக போகும் பந்தை அவரால் சுலபத்தில் விரட்ட முடிவதில்லை. முதல் இங்கிலாந்து தொடரில் சொதப்பிய கோலி அடுத்த பயணத் தொடரில் off ஸ்டம்புக்கு வெளியே விழும் பந்துகளை விடுத்து நேராக ஆடப் பழகி ரன்களை குவித்தார்

கோலியின் அடுத்த பிரச்சனை ஸ்கொயர் கட்

கோலி ஆரம்பத்தில் இருந்தே குறைநீளப் பந்துகளை பின்னங்காலுக்கு சென்று வெட்டும் ஸ்கொயர் கட் அதிகம் ஆடாமல் இருந்தார். இந்த நீளத்தில் பவுலர்கள் தொடர்ந்து வீசும் பட்சத்தில் ஒற்றை ரன்னுக்காக அவர் பந்தை பாயிண்ட் பகுதியில் வழிநடத்தும் ஷாட்டை ஆட அதிகம் முயன்று வந்தார். தன் உடம்பில் இருந்து விலகி பந்தை நோக்கி மட்டையை உந்துகிற இந்த ஷாட் அவ்வப்போது அவரை ஸ்லிப்புக்கு எட்ஜ் செய்ய வைத்தது. இதை உணர்ந்து அவர் பின்னர் தனதான பாணியில் குறைகளைக் கடந்து, ஆஸ்திரேலிய தொடரில் ஸ்கொயர் கட்டை தனதான பாணியில் அடித்து வெற்றியடைந்தார்.


இதை அடுத்து கால்சுழலர்களின் கூக்ளி பந்தை சரியாக கணிக்காமல் பிணங்களை சென்று அதை வெளியே செல்லும் பந்தாக பாவித்து ஆடி விக்கெட் இழக்கும் வழக்கம் கோலிக்கு ஏற்பட்டது. இன்னும் முழுமையாக அவர் கடந்துவிடாத குறை இது.

இருந்தாலும், ஒவ்வொரு தொழில்நுட்ப சவாலையும் அவர் எதிர்கொண்டு உழைத்து மீண்டு வரும் விதம் அவரை ஒரு முழுமையான பேட்ஸ்மேனாக வளர உதவுகிறது எனலாம்.


கேப்டன் கோலி


இந்திய டெஸ்ட் அணியின் தலைவராக கோலியின் தலைமை பாஸிட்டிவாக ஆக்ரோசமாய் உள்ளது. தோல்வி நிச்சயம் எனத் தெரிந்தாலும் அவர் பின்வாங்க மாட்டார். அவரால் பவுலர்களை உத்வேகப்படுத்தி பிரமாதமாய் வீச வைக்க முடிகிறது என்பதும் முக்கிய பலம். ஆனால் இதையே அவரது ஒருநாள் அணித்தலைமைக்கு சொல்ல முடியாது.

ஒரு தலைவராக ஒருநாள் போட்டிகளில் கோலி நிலையற்ற தீர்மானமற்ற அணுகுமுறை கொண்டவர் என்பது பெரிய பலவீனம். 2019இல் இங்கிலாந்தில் நடந்த ஒருநாள் உலகக்கோப்பையின் போதான அணித்தேர்வு முன்னுக்குப்பின் முரணாக் அமைந்தது, இதுவே இந்தியா கோப்பையை வெல்ல முடியாததற்குக் காரணம் என டாம் மூடி, நசீர் ஹுசேன் உள்ளிட்ட பல முன்னாள் வீரர்கள் கருதுகிறார்கள். அதுமட்டுமல்ல ஒரு நீண்ட ஆட்டத்தொடரின் போது தலைவர் கூலாக இருப்பது அவசியம், ஆனால் தீப்பிழம்பான கோலி தன் அணியினரையும் விரைவில் எரிந்தடங்க வைப்பதால், அரை இறுதியின் போதே அணி துவண்டு போகிறது. இக்குறைகளை களைந்தால் மட்டுமே கோலியால் ஒரு உலகக்கோப்பையை வெற்றி வரலாறு படைக்க முடியும்.


கூடுதல் தகவல்கள்


ஆட்டம் ஆரம்பிக்கும் முன் விராத் கோலி நல்ல மூடில் இருந்தால் நிச்சயம் சதம் அடிப்பார். எதிரணி, ஆடுதளம், ஆட்ட சூழல் எல்லாம் ஒரு பொருட்டல்ல” – இந்தியாவின் முன்னாள் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன்.

விராத் கோலி எனக்கு என்னையே நினைவுபடுத்துகிறார்”, மே. தீவுகளின் கிரிக்கெட் மேதை விவியன் ரிச்சர்ட்ஸ்.

2013ஆம் ஆண்டு கோலி அர்ஜுனா விருது பெற்றார்.

2015இல் கோலி T20யில் மிக வேகமாய் 1000 ரன்களை அடித்த முதல் பேட்ஸ்மென் ஆனார்.

ஒருநாள் போட்டிகளில் மிக வேகமாய் 5000 ரன்களை அடித்து சாதனை படைத்தார்.

ஒருநாள் போட்டிகளில் மிக வேகமாய் 10 சதங்களை அடித்த சாதனை கோலியுடையது.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...