எனக்கு பதினாறு வயது இருக்கும் போது ஹாமீம் முஸ்தபா அண்ணன் தக்கலையில் ஒரு புத்தகக் கடை அமைத்தார். அங்கு பின்பக்கம் ஒரு அறையில் டியூசன் வகுப்புகளும் நடந்தன. அங்கு கணக்குப் பாடம் கற்க வேண்டாவெறுப்பாக நான் சேர்ந்தேன். இயல்பாகவே கணக்கை விட முன்பக்கம் உள்ள புத்தகக் கடையே என்னை அதிகம் கவர்ந்தது. நான் அங்கேயே குடியிருக்கத் தொடங்கினேன். அங்கிருந்து நான் வாங்கிய புத்தகங்களை விட அமர்ந்து படித்தவை அதிகம். அண்ணன் அதையெல்லாம் கண்டுகொள்ள மாட்டார். அவர் அங்கே ஒவ்வொரு வெள்ளி மாலையும் கலை இலக்கியப் பெருமன்றக் கூட்டங்கள் நடத்தினார். அந்த கூட்டங்கள் வழியாகத் தான் தமிழின் மிகச்சிறந்த சிந்தனையாளர்கள், எழுத்தாளர்களை நான் அறிமுகம் கொண்டேன். இன்று யோசித்துப் பார்க்கும் போது என் எதிர்கால அரசியல் சமூக சிந்தனைகளை வடிவமைத்த உரையாடல்கள் பெரிதும் அங்கே முஸ்தபா அண்ணனின் கடையிலே நடந்துள்ளன எனப் புரிகிறது - எப்படி சமூகப் பார்வையுடன் படிக்க வேண்டும், எழுத்தை எப்படி ஒரு சமூகச் செயல்பாடாகக் காண வேண்டும் என நான் அன்று புரிந்து கொண்டதே இன்றும் என்னை வழிநடத்துகிறது. அதற்கு விதையிட்டவர் முஸ்தபா அண்ணனே. அண்ணனின் கடையில் வைத்தே நான் ஜெயமோகனை முதலில் சந்தித்தேன். முதல் உரையாடலிலே அவரிடம் (சற்று அமெச்சூராக) முரண்பட்டேன். அந்த முரண்பாட்டுடனே ஜெ.மோவுடனான என் பின்னாளைய உறவு இருக்கிறது - இன்னும் ஆழமாக முரண்பட்டபடி. இடதுசாரிகளுடன் என்னால் இன்றும் சுலபத்தில் இணங்கிப் போக முடிவதன் உளவியல் முடிச்சுகள் அந்த இடத்திலே விழுந்தன எனத் தோன்றுகிறது.
மற்றவர்களிடம் இருந்து முஸ்தபா அண்ணன் ஒரு விதத்தில் பெரிதும் வேறுபடுவார் - அவர் தனது சமூக இலக்கியப் பார்வையை சுலபத்தில் வெளிக்காட்ட மாட்டார். உங்களிடத்துள்ள தனது மதிப்பீட்டை ஒருபோதும் காட்ட மாட்டார். தன்னிடம் இருந்து மிகவும் முரண்படும் நபர்களிடம் கூட அவரால் ஒரு நல்லுறவை தக்க வைக்க முடியும். புதியவர்களை அரவணைத்து தன்னுடன் அழைத்து செல்ல முடியும். அடுத்தவரின் சிந்தனைகளை தன் வழியில் மாற்றியமைக்கக் கூடாது என நம்புவார் - அந்தளவுக்கு மாற்றுப் பார்வைகளுக்கு இடமளிப்பார். மிக மென்மையாக தன் மாற்றுக்கருத்தை உணர்த்தவும் செய்வார். பாலு மகேந்திரா எப்படி ஒர் பத்து வயதுப் பையனைக் கூட தனக்கு இணையாக வைத்து அவனிடம் மன்னிப்பெல்லாம் கேட்பார் எனக் கேள்விப்பட்டிருக்கிறோம். முஸ்தபா அண்ணன் கிட்டத்தட்ட அந்த மாதிரி தான். தன் கடையில் வேலை செய்யும் பையனை தன்னை விட மேலாகவே நடத்துவார், கருத்துக்களைக் கேட்டறிவார், அவரது தாக்கத்தால் அவன் கவிதையெழுதி பிரசுரிக்க, கூட்டங்களில் கலந்து கொண்ட பேசத் தொடங்குவான்.
நட்பை வளர்க்க, அதற்கு மதிப்பளிக்க அவர் எடுக்கிற எத்தனங்கள் வியப்பளிக்கும். நான் சென்னைக்கு முதன்முதலாக வந்த போது முஸ்தபா அண்ணனுடன் அவரது கல்லூரிப் பருவத் தோழியைக் காண அவரது வீட்டுக்கு என்னையும் அழைத்து சென்றிருந்தார். பத்து நிமிடங்கள் அங்கிருந்திருப்போம். ஆனால் அந்த தோழி அன்று அடைந்த மகிழ்ச்சி அவரது முகத்தில் துலங்கியது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு நான் சென்னையில் வாழ்ந்து கொண்டிருந்த போது அண்ணன் ஒவ்வொரு முறை சென்னை விஸிட் அடிக்கும் போது என்னைப் பார்க்க வருவார். அரை மணி பேசிக்கொண்டிருந்து விட்டுப் போய் விடுவார். ஒருவரிடம் உறவைத் தக்க வைக்க போனில் சில நிமிடங்கள் அவ்வபோது பேசினால் போதும் எனும் காலத்தில் எந்த நோக்கமும் பயனும் நாடாமல் அவர் தன் பழைய நண்பர்களை சந்திக்க அவ்வளவு எத்தனம் எடுக்கிறாரே என நான் மிகவும் நெகிழ்ந்து போவேன். அவர் மாறவே இல்லை. நட்பாட்டத்தை அதிகார விளையாட்டாகக் காணும் இன்றைய உலகில் ஒரு உதிரி அவர்.
முஸ்பதா அண்ணன் தன் மனைவியை சமமாக நடத்துவதுடன் பன்மையில் அழைத்து பேசுவது எங்களுக்கு அந்த காலத்தில் வியப்பாக இருக்கும். தன் மகள்களுக்கும் அவர்கள் விரும்பினபடி பட்டப்படிப்பு படிக்க வாய்ப்பளித்து சென்னைக்கு அனுப்பி விடுதியில் தங்க வைத்து படிக்க செய்தார். (எங்கள் ஊரில் இது பெரிய விசயம்.) முற்போக்காக சிந்திப்பது ஒன்று, அவ்வாறு வாழ்வது வேறொன்று.
முஸ்தபா அண்ணனை என் பதின்வயது சந்தித்திராவிடில் என் வாழ்க்கை வேறுவிதமாக இருந்திருக்கும் நான் அடிக்கடி யோசிப்பேன். என்னைப் போல இன்னும் நிறைய பேர் வாழ்வில் அவர் போகிற போக்கில் மாற்றிவிட்டு அதற்கான அங்கீகாரத்தை வாங்காமல் கடந்து போய் விடுவார்.
அவருடைய இந்த பிறந்த நாளில் என்னுடைய வாழ்த்துக்களும் நன்றியும்.

Comments