Skip to main content

ஹாமீம் முஸ்தபா அண்ணனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்



எனக்கு பதினாறு வயது இருக்கும் போது ஹாமீம் முஸ்தபா அண்ணன் தக்கலையில் ஒரு புத்தகக் கடை அமைத்தார். அங்கு பின்பக்கம் ஒரு அறையில் டியூசன் வகுப்புகளும் நடந்தன. அங்கு கணக்குப் பாடம் கற்க வேண்டாவெறுப்பாக நான் சேர்ந்தேன். இயல்பாகவே கணக்கை விட முன்பக்கம் உள்ள புத்தகக் கடையே என்னை அதிகம் கவர்ந்தது. நான் அங்கேயே குடியிருக்கத் தொடங்கினேன். அங்கிருந்து நான் வாங்கிய புத்தகங்களை விட அமர்ந்து படித்தவை அதிகம். அண்ணன் அதையெல்லாம் கண்டுகொள்ள மாட்டார். அவர் அங்கே ஒவ்வொரு வெள்ளி மாலையும் கலை இலக்கியப் பெருமன்றக் கூட்டங்கள் நடத்தினார். அந்த கூட்டங்கள் வழியாகத் தான் தமிழின் மிகச்சிறந்த சிந்தனையாளர்கள், எழுத்தாளர்களை நான் அறிமுகம் கொண்டேன். இன்று யோசித்துப் பார்க்கும் போது என் எதிர்கால அரசியல் சமூக சிந்தனைகளை வடிவமைத்த உரையாடல்கள் பெரிதும் அங்கே முஸ்தபா அண்ணனின் கடையிலே நடந்துள்ளன எனப் புரிகிறது - எப்படி சமூகப் பார்வையுடன் படிக்க வேண்டும், எழுத்தை எப்படி ஒரு சமூகச் செயல்பாடாகக் காண வேண்டும் என நான் அன்று புரிந்து கொண்டதே இன்றும் என்னை வழிநடத்துகிறது. அதற்கு விதையிட்டவர் முஸ்தபா அண்ணனே. அண்ணனின் கடையில் வைத்தே நான் ஜெயமோகனை முதலில் சந்தித்தேன். முதல் உரையாடலிலே அவரிடம் (சற்று அமெச்சூராக) முரண்பட்டேன். அந்த முரண்பாட்டுடனே ஜெ.மோவுடனான என் பின்னாளைய உறவு இருக்கிறது - இன்னும் ஆழமாக முரண்பட்டபடி. இடதுசாரிகளுடன் என்னால் இன்றும் சுலபத்தில் இணங்கிப் போக முடிவதன் உளவியல் முடிச்சுகள் அந்த இடத்திலே விழுந்தன எனத் தோன்றுகிறது.


 மற்றவர்களிடம் இருந்து முஸ்தபா அண்ணன் ஒரு விதத்தில் பெரிதும் வேறுபடுவார்அவர் தனது சமூக இலக்கியப் பார்வையை சுலபத்தில் வெளிக்காட்ட மாட்டார். உங்களிடத்துள்ள தனது மதிப்பீட்டை ஒருபோதும் காட்ட மாட்டார். தன்னிடம் இருந்து மிகவும் முரண்படும் நபர்களிடம் கூட அவரால் ஒரு நல்லுறவை தக்க வைக்க முடியும். புதியவர்களை அரவணைத்து தன்னுடன் அழைத்து செல்ல முடியும். அடுத்தவரின் சிந்தனைகளை தன் வழியில் மாற்றியமைக்கக் கூடாது என நம்புவார் - அந்தளவுக்கு மாற்றுப் பார்வைகளுக்கு இடமளிப்பார். மிக மென்மையாக தன் மாற்றுக்கருத்தை உணர்த்தவும் செய்வார். பாலு மகேந்திரா எப்படி ஒர் பத்து வயதுப் பையனைக் கூட தனக்கு இணையாக வைத்து அவனிடம் மன்னிப்பெல்லாம் கேட்பார் எனக் கேள்விப்பட்டிருக்கிறோம். முஸ்தபா அண்ணன் கிட்டத்தட்ட அந்த மாதிரி தான். தன் கடையில் வேலை செய்யும் பையனை தன்னை விட மேலாகவே நடத்துவார், கருத்துக்களைக் கேட்டறிவார், அவரது தாக்கத்தால் அவன் கவிதையெழுதி பிரசுரிக்க, கூட்டங்களில் கலந்து கொண்ட பேசத் தொடங்குவான்.

 நட்பை வளர்க்க, அதற்கு மதிப்பளிக்க அவர் எடுக்கிற எத்தனங்கள் வியப்பளிக்கும். நான் சென்னைக்கு முதன்முதலாக வந்த போது முஸ்தபா அண்ணனுடன் அவரது கல்லூரிப் பருவத் தோழியைக் காண அவரது வீட்டுக்கு என்னையும் அழைத்து சென்றிருந்தார். பத்து நிமிடங்கள் அங்கிருந்திருப்போம். ஆனால் அந்த தோழி அன்று அடைந்த மகிழ்ச்சி அவரது முகத்தில் துலங்கியது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு நான் சென்னையில் வாழ்ந்து கொண்டிருந்த போது அண்ணன் ஒவ்வொரு முறை சென்னை விஸிட் அடிக்கும் போது என்னைப் பார்க்க வருவார். அரை மணி பேசிக்கொண்டிருந்து விட்டுப் போய் விடுவார். ஒருவரிடம் உறவைத் தக்க வைக்க போனில் சில நிமிடங்கள் அவ்வபோது பேசினால் போதும் எனும் காலத்தில் எந்த நோக்கமும் பயனும் நாடாமல் அவர் தன் பழைய நண்பர்களை சந்திக்க அவ்வளவு எத்தனம் எடுக்கிறாரே என நான் மிகவும் நெகிழ்ந்து போவேன். அவர் மாறவே இல்லை. நட்பாட்டத்தை அதிகார விளையாட்டாகக் காணும் இன்றைய உலகில் ஒரு உதிரி அவர்.

முஸ்பதா அண்ணன் தன் மனைவியை சமமாக நடத்துவதுடன் பன்மையில் அழைத்து பேசுவது எங்களுக்கு அந்த காலத்தில் வியப்பாக இருக்கும். தன் மகள்களுக்கும் அவர்கள் விரும்பினபடி பட்டப்படிப்பு படிக்க வாய்ப்பளித்து சென்னைக்கு அனுப்பி விடுதியில் தங்க வைத்து படிக்க செய்தார். (எங்கள் ஊரில் இது பெரிய விசயம்.) முற்போக்காக சிந்திப்பது ஒன்று, அவ்வாறு வாழ்வது வேறொன்று.  

முஸ்தபா அண்ணனை என் பதின்வயது சந்தித்திராவிடில் என் வாழ்க்கை வேறுவிதமாக இருந்திருக்கும் நான் அடிக்கடி யோசிப்பேன். என்னைப் போல இன்னும் நிறைய பேர் வாழ்வில் அவர் போகிற போக்கில் மாற்றிவிட்டு அதற்கான அங்கீகாரத்தை வாங்காமல் கடந்து போய் விடுவார்

அவருடைய இந்த பிறந்த நாளில் என்னுடைய வாழ்த்துக்களும் நன்றியும்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...