நான் கீழே தந்துள்ள எஸ்.பி உதயகுமாரனின் அறிக்கையைப் படியுங்கள். சாத்தான்குளம் காவல் நிலையம் மீது நடவடிக்கை எடுக்க இத்தனை நாளாய் நம் அரசு காட்டிய மெத்தனத்துக்குப் பின்னே ஆர்.எஸ்.எஸ்ஸின் கரம் உள்ளது:
“ "Friends of Police" மற்றும் "சேவா பாரதி" அமைப்புக்களைத் தடை செய்!
1993-ஆம் ஆண்டு பிரதீப் வி. பிலிப் என்கிற ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் FOP அமைப்பைத் தோற்றுவித்திருக்கிறார். காவல்துறையில் வேலைக்குச் சேர விரும்பும் பள்ளி, கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் இந்த அமைப்பில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.
தற்போது தமிழகத்திலுள்ள அனைத்து காவல்நிலையங்களிலும் 15 முதல் 20 வரையிலான FOP உறுப்பினர்கள் இருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் 34 FOP மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளனர்..
FOP உறுப்பினர்கள் இரவு ரோந்து, சாலைப் போக்குவரத்து மேலாண்மை, பாதுகாப்பு நடவடிக்கைகள், இரத்ததான முகாம்கள் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். அண்மைக் காலங்களில் கிரிமினல் வழக்கு விசாரணைகளிலும், ஊரடங்கை மீறும் வாகனங்களைப் பிடிப்பதிலும் இவர்கள் இணைத்துக்கொள்ளப் படுகின்றனர்.
சாத்தான்குளம் படுகொலையில் நான்கு FOP உறுப்பினர்கள் பங்கேற்றதாக தகவல் பரவியதும், அந்த நான்கு பேரும் தங்கள் அமைப்பில் முறைப்படி பதிந்துகொண்டவர்கள் அல்ல என்று FOP நிர்வாகம் யூன் 29 அன்று முகநூல் வழியாக அறிவித்தது.
அப்படியானால் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஜெயராஜ், பென்னிக்சை சித்திரவதை செய்த அந்த நான்கு பேர் (கணபதி, கண்ணன், ஜேக்கப், எலிசா) யார் என்கிற கேள்வி எழுகிறது.
அவர்கள் "சேவா பாரதி" அமைப்பைச் சார்ந்தவர்கள் என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. இவர்களில் பலர் FOP என்கிற போர்வையில் காவல்துறைக்குள் ஊடுருவி சாதிமதவாத அட்டூழியங்கள் செய்து வருகின்றனர் என்று பல சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். FOP அமைப்புக்கும், சேவா பாரதி அமைப்புக்கும் உள்ள உண்மை உறவுநிலை என்ன?
"சேவா பாரதி" ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் துணை அமைப்பு. இதன் தலைமையகம் சென்னையில் உள்ளது. தமிழகத்தில் "சேவா பாரதி" அமைப்பில் 2,500 தன்னார்வலர்கள் இருப்பதாக அவர்களின் இணையதளம் சொல்கிறது.
இவர்கள் உண்மையிலேயே காவல்துறையில் ஊடுருவி இருக்கிறார்கள் என்றால், இவர்களை காவல்துறைக்குள், காவல்நிலையங்களுக்குள் நுழைய விட்டவர்கள் யார்? இந்த முடிவு காவல்துறையில் யார் யாரால், எப்போது, எங்கே எடுக்கப்பட்டது? அல்லது ஆளும் அ.தி.மு.க. அரசு இந்த முடிவை எடுத்ததா? காவல்துறை அமைச்சராக இருக்கிற முதல்வருக்கு இந்தப் பிரச்சினை பற்றி ஏதாவது தெரியுமா, இல்லையா? உள்துறைச் செயலாளருக்கு ஏதாவது தெரியு்மா, இல்லையா?
அண்மையில் உ.பி.யில் "போலிஸ் மித்ரா" என்கிற பெயரில் "ஹிந்து யுவ வாகினி" எனும் ஆர்.எஸ்.எஸ். ஆதரவுக் குழு ஊடுருவி, இசுலாமியர்களையும், கிறித்தவர்களையும் அடித்து நொறுக்கியது போல, இங்கே தமிழகத்தில் "சேவா பாரதி" அமைப்பினர் களமிறங்கியிருக்கிறார்களோ என்கிற சந்தேகம் வலுக்கிறது.
குடியுரிமைச்சட்ட எதிர்ப்புப் போராட்டத்தின்போது, டில்லியில் சாதாரண உடையணிந்த பல ரவுடிகள் காவல்துறையினரோடு நின்று மக்களைத் தாக்கியதை நாடேப் பார்த்து அதிர்ந்தது. பாசிசக் குழுக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இராணுவம், போலீஸ் போன்ற பாதுகாப்பு அமைப்புகளுக்குள் நுழைந்து கொண்டிருப்பது நாட்டிற்கும், நமது சனநாயக அமைப்புக்கும் மாபெரும் ஆபத்தாக மாறிக்கொண்டிருக்கிறது.
இந்த FOP - சேவா பாரதி உறவு பற்றிய ஒரு பொதுவிவாதம் தமிழகத்தில் உடனடியாக நடந்தாக வேண்டும். தேவையற்ற இந்த இரண்டு அமைப்புக்களையும் தமிழக அரசு நிரந்தரமாகத் தடைசெய்ய வேண்டும்.
பச்சைத் தமிழகம் கட்சி
யூலை 2, 2020.”
இதன் மூலம் ஒன்று தெளிவாகிறது - “சேவா பாரதி” எனும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் உள்ள நான்கு பேர் சாத்தான்குளம் காவல் நிலைய படுகொலையில் நேரடியாக சம்மந்தப்பட்டிருக்கிறார்கள். இதனாலே பாஜக தலைவர் முருகன் இந்த வழக்கை ஒரு சிறிய பிரச்சனை என அறிக்கை விடுகிறார். இதனாலே துண்டுப்பிரச்சாரத்தை வினியோகித்த காரணத்துக்காக மிஷினரிகள் இழுத்து வரப்பட்டு இதே காவல் நிலையத்தில் வைத்து நிர்வாணமாக்கி அடிக்கப்பட்டார்கள். இதனாலே தான் நமது முதல்வரே இந்த சங்கி புல்லுருவிகள் நால்வர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார். இன்று தமிழகத்தில் நடப்பது அதிமுக ஆட்சி அல்ல, ஆர்.எஸ்.எஸ்ஸின் அப்பட்டமான ஆட்சி. அவர்களின் ஆட்கள் காவலர்களுடன் இணைந்து எளிய மக்களை அவர்கள் கிறுத்துவர்கள் என்பதாலே அடித்துக் கொல்கிறார்கள்.
இப்படியே போனால் இந்த நாடு விளங்காது!

Comments