கோவை ஞானி ஒரே சமயம் சாதீய ஏற்றுத்தாழ்வுகளுக்கு எதிராகவும், இந்துமத வைதீகத்தைக் காக்கும் பொருட்டு அதே சாதீயத்தை (மறைமுகமாக) ஆதரிக்கவும் கூடியவர். அதாவது அவர் சாதிக்காக சாதியை ஆதரிப்பவர் அல்ல, வைதீகத்துக்காக சாதியை ஆதரிப்பவர். இரண்டுக்கும் நுட்பமான ஆனால் முக்கியமான வித்தியாசம் உண்டு. இதை கவனிக்காதவர்களுக்கு உண்மை விளங்காது. சாதியத்துக்கும் வைதீகத்துக்குமான நுட்பமான தொடர்பை சுட்டிக்காட்டும் போதெல்லாம் ‘அவர் இந்து மதம் தூய்மையானது, வைதீகத்தை குற்றம் சாட்டாதீர்கள்’ என பாய்ந்து வருவார். இது என் அனுமானம் அல்ல. அதை அவரது எழுத்தில் இருந்தே நாம் நேரடியாக அறிய முடியும். ஒரு உதாரணத்துக்கு, அவரது "ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம், ஜெயகாந்தனும் மெய்யியல் மரபும்" கட்டுரையில் இருந்து இதைப் பாருங்கள்:
"வேதகாலத்தில் நிலவிய, இதிகாசங்கள் கனவு காண்கிற ஓர் உயரிய சமுதாயம் இந்துவின் சமுதாயம். மார்க்சியவாதிகள் கூறும் புராதனப் பொதுவுடைமைச்சமுதாயம், வேதகாலச்சமுதாயம் வருணங்களாக வேறுபட்டாலும் மனிதர்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வு இன்னும் ஏற்படாத சமுதாயம் அல்லது இப்படி விளக்கப்பட்ட சமுதாயம் வேதகாலச் சமுதாயம்.”
வர்ணாசிரமத்தில் இருந்தே சாதி தோன்றியது என்பதை விட வர்ணாசிரம் சாதிக்கான ஒரு கருத்தியல் அடிப்படையை வழங்கியது என்பதே சரியான பார்வை. இன்றும் பிராமணியத்தை ஆதரிப்போர் அது ஒருவரது தொழிலின் அடிப்படையில் உருவானது என வாதிடுகிறார்கள். ஒருவருக்கு படிக்க, ஆன்மீக காரியங்களில் ஈடுபடத் திறமை இருப்பதால், அவர் அத்தொழிலை செய்கிறார், அதனால் அந்த வர்ணத்தை சேர்ந்தவர் ஆகிறார். சாதி மீதான தாக்குதல்களைத் தடுத்தாட முடியாதவர்கள் உடனே வர்ணாசிரமக் கொள்கைக்குப் பின்னால் ஒளிந்து கொள்வது வழக்கம். ஞானியும் இதையே செய்கிறார் - வர்ணாசிரம சமூகம் “மனிதர்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வு இன்னும் ஏற்படாத சமுதாயம்” என்கிறார். இதன் வழியாக வேதகாலத்துக்கும், பிராமணியத்துக்கும், வைதீகத்துக்கும் சாதிய அமைப்புகளுக்கும் தொடர்பு இல்லை என நிரூபிக்க முயல்கிறார். ஞானியின் சீடகோடிகளிடம் நான் கேட்கிறேன்: இப்படியான ஒருவரைத் தூக்கிப் பிடிக்க உங்களுக்கு வெட்கமாக இல்லையா?
அடுத்த மேற்கோளைப் பாருங்கள்:
“இந்த இடத்தில் மேலுமோர் உண்மையைத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம். இந்து மதம் என்ற சொல்லாக்கம் ஏற்பட்டது கி.பி. எட்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர். அக்காலத்திலிருந்து இந்து மதம், சாதி முதலியவற்றை-ஏற்றத்தாழ்வை, வினைக் கோட்பாட்டைத் தனது அங்கமாக ஏற்றுக் கொண்டது."
(கோவை ஞானி, "ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம், ஜெயகாந்தனும் மெய்யியல் மரபும்")
வேத கால சமூகத்திலே மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வு தோன்றுகிறது. இதை ஞானி 'வர்ணம்' என நியாயப்படுத்துகிறார். கி.பி எட்டாம் நூற்றாண்டுக்குப் பின்னரே சாதியை இந்து சமூகம் ஏற்றுக் கொண்டதா? அதுவரை அது சோஷலிச சமூகமாக, ஏற்றத்தாழ்வு இன்றி மகத்தாக இருந்ததா? அடக்கொடுமையே! மனு நீதி எழுதப்பட்டு, அதில் சூத்திரன் பிரம்மனின் காலில் இருந்து உருவானவன் என எழுதப்பட்டது, சாதி நிறுவப்பட்டது கி.மு இரண்டாம் நூற்றாண்டில். இதுதான் ஒரு பக்கம் சமத்துவம் பேசிக்கொண்டே, ஆர்.எஸ்எஸ்ஸை சாடிக்கொண்டே இந்து மதத்தின் சனாதனவாதத்தை தூக்கிப் பிடிக்கும் ஞானியின் போக்கு. என்னது சனாதனமா? அதை ஞானி ஆதரிக்கவேயில்லை என்கிறீர்களா? தன் பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிடும் இக்கருத்தைப் பாருங்கள்:
//கோவை ஞானி : தோழர் எஸ்.என். நாகராசனுக்கு இப்பொழுது வயது 82. ஈரோடு மாவட்டத்தின் சத்தியமங்கலத்தில் தென்கலை வைணவர் குடும்பத்தில் பிறந்தவர். (...) பிற்காலத்தில் தான் தென்கலை வைணவராகப் பிறந்ததால்தான் மார்க்சியனாக தனக்குள் உரம் பெற வாய்த்தது என்பதை உணர்ந்துகொண்டார். //
ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறந்ததால் நீங்கள் எப்படி தனித்த பண்பாட்டு அறிவைப் பெறுவீர்கள்? இதை விட பெரிய அபத்தம் இருக்க முடியுமா? தென்கலை வைணவ சாதி ஒருவருக்கு எப்படி மார்க்ஸியத்தை ஆழமாய் புரிந்து கொள்ளும் அறிவை, உரத்தை அளிக்கும்? இதன் பொருள் உன் சாதி உன் உயரத்தைத் தீர்மானிக்கும் என்பதை அல்லவா? (ஞானியைப் போன்றே) ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவருக்கு வெறும் விவசாய அறிவே வாய்க்கும், நாவிதக் குடும்பத்தில் பிறந்தவருக்கு அது மட்டுமே வரும் என்னும் வாதமல்லவா இது? காந்தி வணிக சமூகத்தில், வைஸ்யராகப் பிறந்ததாலே அவர் மோதல்களின் நடுவே சமரசத்தை, கொல்லாமையை, அமைதியைக் கடைபிடித்தார் என ஜெ.மோ எழுதியது நினைவு வருகிறது. (ஞானியும் ஜெ.மோவும் இப்படி உடன்படும் பல புள்ளிகள் உண்டு.)
வரலாற்றைத் திரித்து வைதீகம் அதன் இயல்பில் உன்னதமானது, சாதியற்றது என நியாயப்படுத்துவதே, ஒருவர் பிறப்பாலே ‘ஞானம்’, ‘உரம்’ பெறுகிறார் என நம்புவதே ஞானியின் அரசியல். இதைத்தான் நான் மென் இந்துத்துவா அல்லது கலாச்சார இந்துத்துவா என்கிறேன். சாதி ஒழிய வேண்டும் எனச் சொல்லிக் கொண்டே சாதியின் நியாயங்களை மறைமுகமாய் ஆதரிப்பது அது. இந்துத்துவா ஒழிக என்றபடியே வைதீக இந்துமத உணர்வை, அதன் வழியே வெகுமக்கள் ஒன்றாக திரட்டப்படுவதைப் பராட்டுகிற, அது பண்பாட்டுக்கு, இலக்கியத்துக்கு அவசியமானது, இந்து மதம் இல்லாவிட்டால் தமிழ் இலக்கியம் அழிந்து விடும் என பயமுறுத்துகிற மென் அரசியல் இது. இது அரசியல் இந்துத்துவாவின் விரோதியைப் போல பாவிக்கும் நண்பன். முன்னது மீசையை முறுக்கி கதவை உடைத்துக் கொண்டு பின்வாயில் வழியாக வந்தால் பின்னது நெற்றியில் திருநீருடன் நம்மை வணங்கியடி முன்வாசல் வழியாக வரும். அடிப்படையில் ரெண்டுமே ஒன்றுதான்.
சமத்துவத்தை, ஏற்றத்தாழ்வற்ற சமூகத்துக்காக அரை நூற்றாண்டாக பேசியும் யோசித்தும் வந்தவர் ஞானி எனும் போது அதற்கு எதிரான வைதீகம் மற்றும் சாதியத்துக்கு மறைமுகமாய் அவர் இப்படி ஆதரவளிப்பது ஏன் என்ற கேள்வியையும் இந்த நாம் சிஷ்யகோடிகளிடம் திரும்பக் கேட்க வேண்டும்.

Comments