முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோவை ஞானியின் கலாச்சார இந்துத்துவா



கோவை ஞானி ஒரே சமயம் சாதீய ஏற்றுத்தாழ்வுகளுக்கு எதிராகவும், இந்துமத வைதீகத்தைக் காக்கும் பொருட்டு அதே சாதீயத்தை (மறைமுகமாக) ஆதரிக்கவும் கூடியவர். அதாவது அவர் சாதிக்காக சாதியை ஆதரிப்பவர் அல்ல, வைதீகத்துக்காக சாதியை ஆதரிப்பவர். இரண்டுக்கும் நுட்பமான ஆனால் முக்கியமான வித்தியாசம் உண்டு. இதை கவனிக்காதவர்களுக்கு உண்மை விளங்காது. சாதியத்துக்கும் வைதீகத்துக்குமான நுட்பமான தொடர்பை சுட்டிக்காட்டும் போதெல்லாம்அவர் இந்து மதம் தூய்மையானது, வைதீகத்தை குற்றம் சாட்டாதீர்கள்என பாய்ந்து வருவார். இது என் அனுமானம் அல்ல. அதை அவரது எழுத்தில் இருந்தே நாம் நேரடியாக அறிய முடியும். ஒரு உதாரணத்துக்கு, அவரது "ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம், ஜெயகாந்தனும் மெய்யியல் மரபும்" கட்டுரையில் இருந்து இதைப் பாருங்கள்:


"வேதகாலத்தில் நிலவிய, இதிகாசங்கள் கனவு காண்கிற ஓர் உயரிய சமுதாயம் இந்துவின் சமுதாயம். மார்க்சியவாதிகள் கூறும் புராதனப் பொதுவுடைமைச்சமுதாயம், வேதகாலச்சமுதாயம் வருணங்களாக வேறுபட்டாலும் மனிதர்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வு இன்னும் ஏற்படாத சமுதாயம் அல்லது இப்படி விளக்கப்பட்ட சமுதாயம் வேதகாலச் சமுதாயம்.”


வர்ணாசிரமத்தில் இருந்தே சாதி தோன்றியது என்பதை விட வர்ணாசிரம் சாதிக்கான ஒரு கருத்தியல் அடிப்படையை வழங்கியது என்பதே சரியான பார்வை. இன்றும் பிராமணியத்தை ஆதரிப்போர் அது ஒருவரது தொழிலின் அடிப்படையில் உருவானது என வாதிடுகிறார்கள். ஒருவருக்கு படிக்க, ஆன்மீக காரியங்களில் ஈடுபடத் திறமை இருப்பதால், அவர் அத்தொழிலை செய்கிறார், அதனால் அந்த வர்ணத்தை சேர்ந்தவர் ஆகிறார். சாதி மீதான தாக்குதல்களைத் தடுத்தாட முடியாதவர்கள் உடனே வர்ணாசிரமக் கொள்கைக்குப் பின்னால் ஒளிந்து கொள்வது வழக்கம். ஞானியும் இதையே செய்கிறார் - வர்ணாசிரம சமூகம்மனிதர்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வு இன்னும் ஏற்படாத சமுதாயம்என்கிறார். இதன் வழியாக வேதகாலத்துக்கும், பிராமணியத்துக்கும், வைதீகத்துக்கும் சாதிய அமைப்புகளுக்கும் தொடர்பு இல்லை என நிரூபிக்க முயல்கிறார். ஞானியின் சீடகோடிகளிடம் நான் கேட்கிறேன்: இப்படியான ஒருவரைத் தூக்கிப் பிடிக்க உங்களுக்கு வெட்கமாக இல்லையா?


அடுத்த மேற்கோளைப் பாருங்கள்:


இந்த இடத்தில் மேலுமோர் உண்மையைத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம். இந்து மதம் என்ற சொல்லாக்கம் ஏற்பட்டது கி.பி. எட்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர். அக்காலத்திலிருந்து இந்து மதம், சாதி முதலியவற்றை-ஏற்றத்தாழ்வை, வினைக் கோட்பாட்டைத் தனது அங்கமாக ஏற்றுக் கொண்டது."


(கோவை ஞானி, "ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம், ஜெயகாந்தனும் மெய்யியல் மரபும்")


வேத கால சமூகத்திலே மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வு தோன்றுகிறது. இதை ஞானி 'வர்ணம்' என நியாயப்படுத்துகிறார். கி.பி எட்டாம் நூற்றாண்டுக்குப் பின்னரே சாதியை இந்து சமூகம் ஏற்றுக் கொண்டதா? அதுவரை அது சோஷலிச சமூகமாக, ஏற்றத்தாழ்வு இன்றி மகத்தாக இருந்ததா? அடக்கொடுமையே! மனு நீதி எழுதப்பட்டு, அதில் சூத்திரன் பிரம்மனின் காலில் இருந்து உருவானவன் என எழுதப்பட்டது, சாதி நிறுவப்பட்டது கி.மு இரண்டாம் நூற்றாண்டில். இதுதான் ஒரு பக்கம் சமத்துவம் பேசிக்கொண்டே, ஆர்.எஸ்எஸ்ஸை சாடிக்கொண்டே இந்து மதத்தின் சனாதனவாதத்தை தூக்கிப் பிடிக்கும் ஞானியின் போக்கு. என்னது சனாதனமா? அதை ஞானி ஆதரிக்கவேயில்லை என்கிறீர்களா? தன் பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிடும் இக்கருத்தைப் பாருங்கள்:


//கோவை ஞானி : தோழர் எஸ்.என். நாகராசனுக்கு இப்பொழுது வயது 82. ஈரோடு மாவட்டத்தின் சத்தியமங்கலத்தில் தென்கலை வைணவர் குடும்பத்தில் பிறந்தவர். (...) பிற்காலத்தில் தான் தென்கலை வைணவராகப் பிறந்ததால்தான் மார்க்சியனாக தனக்குள் உரம் பெற வாய்த்தது என்பதை உணர்ந்துகொண்டார். //

ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறந்ததால் நீங்கள் எப்படி தனித்த பண்பாட்டு அறிவைப் பெறுவீர்கள்? இதை விட பெரிய அபத்தம் இருக்க முடியுமா? தென்கலை வைணவ சாதி ஒருவருக்கு எப்படி மார்க்ஸியத்தை ஆழமாய் புரிந்து கொள்ளும் அறிவை, உரத்தை அளிக்கும்? இதன் பொருள் உன் சாதி உன் உயரத்தைத் தீர்மானிக்கும் என்பதை அல்லவா? (ஞானியைப் போன்றே) ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவருக்கு வெறும் விவசாய அறிவே வாய்க்கும், நாவிதக் குடும்பத்தில் பிறந்தவருக்கு அது மட்டுமே வரும் என்னும் வாதமல்லவா இது? காந்தி வணிக சமூகத்தில், வைஸ்யராகப் பிறந்ததாலே அவர் மோதல்களின் நடுவே சமரசத்தை, கொல்லாமையை, அமைதியைக் கடைபிடித்தார் என ஜெ.மோ எழுதியது நினைவு வருகிறது. (ஞானியும் ஜெ.மோவும் இப்படி உடன்படும் பல புள்ளிகள் உண்டு.) 



வரலாற்றைத் திரித்து வைதீகம் அதன் இயல்பில் உன்னதமானது, சாதியற்றது என நியாயப்படுத்துவதே, ஒருவர் பிறப்பாலேஞானம்’, ‘உரம்பெறுகிறார் என நம்புவதே ஞானியின் அரசியல். இதைத்தான் நான் மென் இந்துத்துவா அல்லது கலாச்சார இந்துத்துவா என்கிறேன். சாதி ஒழிய வேண்டும் எனச் சொல்லிக் கொண்டே சாதியின் நியாயங்களை மறைமுகமாய் ஆதரிப்பது அது. இந்துத்துவா ஒழிக என்றபடியே வைதீக இந்துமத உணர்வை, அதன் வழியே வெகுமக்கள் ஒன்றாக திரட்டப்படுவதைப் பராட்டுகிற, அது பண்பாட்டுக்கு, இலக்கியத்துக்கு அவசியமானது, இந்து மதம் இல்லாவிட்டால் தமிழ் இலக்கியம் அழிந்து விடும் என பயமுறுத்துகிற மென் அரசியல் இது. இது அரசியல் இந்துத்துவாவின் விரோதியைப் போல பாவிக்கும் நண்பன். முன்னது மீசையை முறுக்கி கதவை உடைத்துக் கொண்டு பின்வாயில் வழியாக வந்தால் பின்னது நெற்றியில் திருநீருடன் நம்மை வணங்கியடி முன்வாசல் வழியாக வரும். அடிப்படையில் ரெண்டுமே ஒன்றுதான்.


சமத்துவத்தை, ஏற்றத்தாழ்வற்ற சமூகத்துக்காக அரை நூற்றாண்டாக பேசியும் யோசித்தும் வந்தவர் ஞானி எனும் போது அதற்கு எதிரான வைதீகம் மற்றும் சாதியத்துக்கு மறைமுகமாய் அவர் இப்படி ஆதரவளிப்பது ஏன் என்ற கேள்வியையும் இந்த நாம் சிஷ்யகோடிகளிடம் திரும்பக் கேட்க வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...