புதிய கல்விக் கொள்கை குறித்து இங்கு நிறைய விவாதங்கள் நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக அரசு மும்மொழிக் கொள்கையை எதிர்க்கிறோம் என சொல்லியுள்ளதும் ஆறுதலானது; அதாவது மும்மொழியைக் கற்க வேண்டும் எனும் சுமையை நம் குழந்தைகள் இங்கு திராவிடக் கட்சிகள் ஆட்சியில் உள்ள வரையில் ஏற்க வேண்டாம் எனும் நம்பிக்கையை இது அளிக்கிறது. என்னுடைய ஒரு கோரிக்கை நமது டிவி மற்றும் யுடியூப் சேனல்கள் எளிய மக்கள், கீழ்த்தட்டு, மத்திய வர்க்க பெற்றோர்களிடம் இதைப் குறித்து பரவலாக கருத்துக்கணிப்பு நடத்தி வெளியிட வேண்டும், பெற்றோர்கள் மட்டுமே பங்கேற்கிற விவாதங்களை இந்த கல்விக்கொள்கை குறித்த நடத்த வேண்டும் என்பது. இதை பாஜக எதிர்ப்பு அரசியலாக மட்டுமே யாரும் பார்த்து விடக் கூடாது, இதை ஒரு சமூகப் பிரச்சனையாக முன்னெடுக்க வேண்டும் என்பதற்காகவே பொதுமக்களை, சமூகவலைதளங்களில் களமாடாதவர்களை, இதைக்குறித்து பேச வைக்க வேண்டும் என்கிறேன்.
இனி என் பார்வையை ஒரு கல்வியாளனாக, எழுத்தாளனாக முன்வைக்கிறேன்:
முதலில் இந்த கல்விக்கொள்கை பரிந்துரைக்கும் ஐந்து பொதுத்தேர்வுகளுக்கு வருகிறேன்.
1) முதலில் எனக்கு எந்த கல்விக்கொள்கை மீதும், அது தேர்வுகளை முன்னிறுத்தி வகுக்கப்படும் பட்சத்தில் நம்பிக்கை இல்லை. தேர்வே இல்லாத கல்வி அமைப்பு தோன்றுமெனில் அதுவே சிறந்த, அசலான கல்வியை குழந்தைகளுக்கு சாத்தியப்படுத்தும். ஏன்?
தேர்வு என்பது அடிப்படையில் ஒரு போலியான முறை. ஒருவருடைய அறிவுத்திறனை, கற்றல் திறனை, கற்பனையை, ஆழமான புரிதலை தேர்வினால் ஒரு போதும் அளந்திட முடியாது. இதனாலே தேர்வில் மிகக்குறைவாக மதிப்பெண் பெற்ற எத்தனையோ பேர் வாழ்வில் ஜொலிப்பதை நாம் காண்கிறோம். உடனே வாழ்க்கைத் திறன்களை இனிக் கற்றுத் தருவோம், அதை மதிப்பிடுவோம் என ஒரு கோஷ்டி கிளம்பி வருகிறார்கள். அவர்களுக்கும் சொல்கிறேன் - நீங்கள் எந்த மானுடத் திறனையும் மதிப்பிட முடியாது, கூடாது.
எனில் மாணவர்கள் கற்கிறார்களா இல்லையா என எப்படி தெரிந்து கொள்வது?
அவர்களுக்கு தொடர்ந்து தம் கற்றல் சார்ந்து குறைவான எண்னிக்கையில் சிறு சிறு அசைன்மெண்டுகளை (பணி ஒப்படைப்புகளை) அளிக்கலாம். ஒரு வருட இறுதியில் இவற்றை 80-90% முடித்தால் தேர்வாகி விடலாம். இதில் மதிப்பீடு ஏதும் இல்லை. இங்கு ஒரு விசயத்தை நாம் கவனிக்க வேண்டும். நம் கல்வி முறையில் ஒரு சிக்கல் இது போன்ற அசைன்மெண்டுகளை பெருமளவில் மாணவர்கள் மீது திணித்து திக்குமுக்காட செய்வது. அப்படி அல்லாமல் ஒரு குறைந்த எண்ணிக்கைக்கு மேல் இவற்றை மாணவர்கள் செய்யக் கூடாது என விதிமுறையை கொண்டு வர வேண்டும்.
2) இதை விட சிறந்த முறையென்பது ஐந்தாம் வகுப்பில் இருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரை தொடர்ந்து சிறு அசைன்மெண்டுகளை மாணவர்கள் தம் விருப்பப்படி தேர்ந்து செய்து முடிப்பது. இந்த தொடர் அசைன்மெண்டுகளை ஒவ்வொரு வருட இறுதியில் அல்லாமல் பன்னிரெண்டாம் வகுப்பு முடிவில் மட்டுமே நிறைவு செய்திருக்கிறார்களா எனப் பார்ப்பது. இந்த முறையில் ஒரே ஒரு அசைன்மெண்ட் தான் ஒரு பாடத்துக்கு, இதை அவர்கள் சிறுக சிறுக ஏழு வருடங்களாக செய்து நிறைவு செய்யலாம். ஒரு வருடம் சரியாக முடிக்க இயலாவிடில் அடுத்த வருடம் கூடுதல் முனைப்புடன் வேகத்துடன் செய்து ஈடுகட்டலாம். நிறைவு செய்வதே முக்கியம், எப்படி செய்வது என்பதல்ல.
உ.தா., தமிழ்ப் பாடம் படிக்கிறவர்கள் ஐந்தாம் வகுப்பு முதல் பேச்சு, எழுத்து, படைப்பாக்கம் எனும் ஏதோ ஒன்றைத் தேர்ந்து அதில் ஒவ்வொரு வருடமும் ஒரு அசைன்மெண்டை முடிக்கலாம். ஒரு பேச்சரங்கில் பேசலாம், ஒரு நாடகத்தை அரங்கேற்றலாம். கவிதைகளை எழுதி வாசிக்கலாம். அடுத்தடுத்த ஆண்டுகளில் இதை நீள் கவிதை, நீள் கட்டுரை, குறுங்கதை, சிறுகதை, நாவல், புத்தகம் என விரிவாக்கிக் கொண்டு செல்லலாம். கணினிப் பாடம் என்றால் சொந்தமாக ஒரு மென்பொருளை உருவாக்குவது, செயலியை கண்டுபிடிப்பது, ஒரு புரோஜெக்டை செய்து காட்டுவது எனப் பண்ணலாம். இதைக் குழுவாக செய்யவும் அனுமதி உண்டு. ஐந்து பாடங்கள் உண்டெனில் இவற்றில் அனைத்துக்குமே அசைன்மெண்டுகள் செய்ய அவசியமில்லை.
இன்று அதிகமாய் மக்கள் பதிவு செய்கிற கோர்செரா போன்ற இணையவழிக் கல்வி முறையில் இப்படித்தான் சான்றிதழ் தருகிறார்கள், இறுதி எழுத்துத் தேர்வின் அடிப்படையில் அல்ல. மேலும் சில தனியார் பல்கலைகளில் சில குறிப்பிட்ட பாடங்களுக்கு இந்த முறையை இன்று பயன்படுத்துகிறார்கள் என்பதையும் சொல்லியாக வேண்டும்.
3) மேற்சொன்ன இரண்டு முறைகளுமே கல்வியை ஒரு விற்பனைப் பண்டமாக மாற்றி விடுகின்றன என்பதால் எனக்கு முழுக்க உவப்பானவை அல்ல. மாறாக இதைப் பரிந்துரைக்கிறேன்:
எந்த தேர்வு, அசைன்மெண்ட், மதிப்பீடும் இன்றி மாணவர்கள் சுதந்திரமாகக் கற்று பன்னிரெண்டாம் வகுப்பில் இருந்து வெளியேற வேண்டும். பங்கேற்பு கட்டாயமாக இருக்கக் கூடாது. வருகைப் பதிவு இல்லை. முழுக்க உரையாடல் மூலமாக கல்வி நிகழ வேண்டும். மாணவர்கள் எப்போது வேண்டுமான்லும் எங்கிருந்தும் இந்த கலந்துரையாடல்களில் பங்கேற்கலாம். ஆசிரியர்கள் இந்த கலந்துரையாடல்களை வழிநடத்த அவசியம் இல்லை. ஆசிரியரை மையப்படுத்தாத, மாணவர் தாமே நடத்தும் வகுப்புகள் என இவற்றை சமகால கல்வியலில் குறிப்பிடுகிறார்கள். ஆதியில் கிரேக்கத்தில் சாக்ரடீஸ் தன் மாணவர்களுக்கு நடத்தின வகுப்புகள் இவ்வாறே இருந்தன. ஒரே கட்டாயம் குறைந்தது இத்தனை மணிநேரங்கள் இந்த கலந்துரையாடல்களில் அவர்கள் பங்கேற்றிருக்க வேண்டும் என்பது.
இங்கிருந்து திரும்பிப் பார்க்கும் போது நமது ‘புதிய’ கல்விக் கொள்கையில் ‘புதிதாக’ ஒன்றும் இல்லை எனத் தெரிகிறது. அதே பழைய மெக்காலே கல்விமுறையை, தேர்வுமுறையை, கரும்பலகையில் எழுதிக் காட்டி மாணவர்களுக்கு ‘புகட்டும்’ முறையை கூடுதலாக சிக்கலாக்கி கொண்டு வந்திருக்கிறார்கள். மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு, பத்து, பன்னிரெண்டாம் வகுப்புகள் பொதுப் தேர்வு என இரண்டு சோதனைகளை நான்காக பெருக்கி இருக்கிறார்கள். இது தனியார் பள்ளிகள் கல்வியில் நுகர்வை விளம்பரப்படுத்த, பெருக்க பயன்படுத்தும் உத்தி. இதை அரசுப் பள்ளிகளுக்கும் கொண்டு வருகிறார்கள். (தொடரும்)

Comments