Skip to main content

புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதும் அதற்கான மாற்றும் (3)





                                        (பில்கேட்ஸும் பிராயிலர் கோழிகளும்)


தனியார் கார்ப்பரேட் பள்ளிகளில் பயின்று வந்த, சிபி.எஸ்ஸி பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் அரசுப்பள்ளி மாணவர்களை விட அதிக திறமையானவர்கள் அல்லவா? அவர்கள் பெரிய கல்லூரிகளில் இடம்பெற்று ஜொலிக்கவில்லையா? ஒரு மாணவனாகவும் பின்னர் கல்வியாளனாகவும் இது ஒரு பொய்ப் பிரச்சாரம், தொன்மம் என என்னால் உறுதியாக சொல்ல முடியும்.


வாய்ப்பு வழங்கப்படும் பட்சத்தில் நமது அரசுப்பள்ளி மாணவர்களால் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஈடுகொடுக்க முடிவதுடன் அவர்களை மீறி செல்லவும் முடிகிறது என்பதே உண்மை


என் கதைக்கு முதலில் வருகிறேன்:

நான் அரசுப்பள்ளியிலே படித்து தனியார் கல்லூரிகளுக்கு சென்றேன். குறிப்பாக சென்னையில் நான் முதுகலை படிக்க சென்ற போது அங்கு வகுப்பில் என்னையும் சேர்த்து நான்கு பேரே அரசுப்பள்ளி மாணவர்கள். மிச்ச பேர்கள் சென்னையின் தனியார் பள்ளிகளில், தனியார் கல்லூரிகளில் அனைத்து வசதிகளையும் பெற்று முன்னேறி வந்தவர்கள். எங்களை விட ஸ்மார்ட்டானவர்கள். ஆனால் முதல் அரை கல்வியாண்டில் இருந்தே எனக்கு இந்த தனியார் பள்ளி நட்சத்திரங்களை முறியடித்து முதல் மதிப்பெண் வாங்குவது எந்த சிரமமும் இருக்கவில்லை. அவர்கள் என்னளவுக்குத் திறமையானவர்களே, ஆனால் என்னளவுக்கு உழைக்க மாட்டார்கள். இது தனியார் கல்வியின் ஸ்மார்ட்டாக் கற்கும் பயிற்சியின் ஒரு சிக்கல். ஒரு சின்ன விசயத்தை ஒரு பக்க குறிப்புகளைக் கொண்டு படிக்கக் கூடாது, அதற்கு பத்து புத்தகங்களையாவது புரட்ட வேண்டும் என நான் நினைத்தேன். அவர்கள் தேர்வுக்கு ஒரு வாரம் முன்பு படிக்க ஆரம்பித்தால் நான் கல்வியாண்டு முழுக்க ஒருநாள் விடாமல் படிப்பேன். அவர்களை நான் முறியடித்தற்கு மற்றொரு காரணம் அவர்கள் அப்போது படிக்க ஆரம்பித்த உளவியல், அமைப்பியல், பின் அமைப்பியல் கோட்பாடுகளை நான் பதினைந்து வயது முதலே கலை இலக்கியப் பெருமன்ற விவாதங்கள் மூலம் பரிச்சயம் கொண்டிருந்தேன். (மொழியியல் தவிர - ஏனென்றால் அதை தீவிர இலக்கியக் கூட்டங்களில், பத்திரிகைகளில் யாரும் பொருட்படுத்துவதில்லை.) ஆக எனக்கு வகுப்புகள் ரொம்ப அடிமட்டமாக, சவால் அளிக்காததாக இருந்தன. அதாவது அரசுப் பள்ளியில் இருந்து சென்ற எனக்கு அந்த சென்னையில் உள்ள உன்னதமான தனியார் கல்லூரியின் ரெண்டு வருடத்திற்கான பாடத்திட்டம் மூன்றே மாதங்களில் படிக்கும் அளவுக்கானதாக இருந்தது. “ஏண்டா இந்த லாலி பாப் பாடத்திட்டத்தை வைத்து என் டைமை வேஸ்ட் பண்றீங்க?” என்றே நான் உள்ளுக்குள் கதறினேன். இன்று எழுதி வரும் இளம் எழுத்தாளர்கள் யாரும் ஒரு தனியார் பல்கலையில் சென்று இலக்கியம் படித்தால் இப்படித்தான் கதறுவீர்கள்.


 என்னுடன் வகுப்பில் இருந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த பத்ரா என்றொரு மாணவன் இருந்தான். அவனும் என்னைப் போன்றே வகுப்புகளைப் பற்றி உணர்ந்தான். ஆக, நாங்கள் வகுப்புகளை சுவாரஸ்யமாக்க ஒரு திட்டமிட்டோம். ஆசிரியரை வழக்கம் போல நடத்த விடக் கூடாது, திசை திருப்ப வேண்டும். நாங்கள் இதற்காக வகுப்புக்கு முந்தின நாள் ஒரு கூட்டம் போடுவோம். ஒரு குறிப்பிட்ட தலைப்பில் ஆசிரியர் எப்படியெல்லாம் பேசுவார் என கணித்து அவரது கருத்துக்களை எப்படி மறுத்து கேள்வி கேட்கலாம் என ஒரு திட்டவரைவை தயாரிப்போம். அதில் நான் ஒரு கேள்வியை இப்படிக் கேட்டு ஆசிரியர் இப்படி பதிலளித்தால் அதற்கு நீ இப்படி ஒரு மறுப்புக் கேள்வியைத் தொடுக்க வேண்டும், அடுத்து அவர் சரணடையாவிட்டால் நான் உனக்கு ஆதரவாக இப்படியான கேள்வியை எழுப்புவேன் எனக் குறித்து வைப்போம். அவ்வாறே ஒரு திரைக்கதையை போல கேள்வி-பதிலை வகுப்புக்குள் நிகழ்த்துவோம். பெரும்பாலான ஆசிரியர்கள் திகைத்துப் போய் பேசுவதை மறந்து விடுவார்கள். மற்ற மாணவர்கள் தூங்கப் போவார்கள்

இதை குறிப்பிடக் காரணம் நாங்கள் இருவரும் மற்றவர்களை விட புத்திசாலிகள் எனக் காட்டவல்ல. மாறாக, நாங்கள் உருவான வாழ்க்கைச் சூழல், அனுபவங்கள் எங்களை மற்றொரு இடத்தில் கொண்டு போய் வைத்தன. நான் கலை இலக்கிய பெருமன்றத்தின் தீவிர இலக்கிய விவாதங்கள் வழி உருவானவன் என்றால் பத்ராவோ கொல்கொத்தாவில் அவன் வீட்டுக்குள்ளும் வெளியிலும் அரசியல், தத்துவ விவாதங்களைக் கேட்டு குழந்தையில் இருந்தே வளர்ந்தவன். இதை நீங்கள் வரையறைக்குட்பட்ட செயற்கையான வகுப்பறை அமைப்புகளைக் கொண்டு பதிலீடு செய்ய முடியாது. ஐந்தாம் வகுப்பு முதலே ஷேக்ஸ்பியரைக் கற்கும் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இன்று உண்டு. ஆனால் ஒரு இடதுசாரி இலக்கிய, அரசியல் அமைப்புக்குள் வளர்கிற இளைஞனை வாதத்திலோ எழுத்திலோ அறிவுத்திறனிலோ வெல்ல இந்த கான்வென்ட் லாலிபாப்புகளால் இயலாது. முன்னவன் அனுபவத்தால் புடம் போடப்படுகிறவன், பின்னவனோ அனுபவத்தால் காயம்படாமல் அமைப்புகளால் பாதுகாக்கப்பட்ட செயற்கையாக உருவாக்கப்படுகிறவன்.


ஆம், கான்வெண்ட் மாணவர்கள் சரளமாக ஆங்கிலம் பேசுவார்கள், கூடுதல் தன்னம்பிக்கையுடன் தோன்றுகிறார்கள். உண்மையே, அதே நேரம் கிராமத்தில் இருந்து செல்லும் அரசுப்பள்ளி மாணவர்களும் ஒரு தனியார் கல்லூரிக்குள் சென்று ஒரு வருடத்துக்குள் தம்மை தகவமைத்து, இந்த கான்வெண்ட் பேபிகளை பேச்சிலும் ஆளுமையில் கடந்து செல்வதை நான் நேரடியாகவே காண்கிறேன். வகுப்பில் முதல் மாணாக்கராய் வருவதைக் காண்கிறேன். அவர்களுக்குத் தேவையெல்லாம் பணம், இடம் உள்ளிட்ட வசதிகள் மட்டுமே. முன்பு போலல்ல, இன்று காலம் வெகுவாக மாறி விட்டது - கூகிள், ஆங்கில ஊடகங்களுடன் சதா வாழும் நிலை, சமூகவலைதளங்கள் மாணவர்கள் வேகவேகமாய் ஈடுக்கட்டி முன்னேற உதவுகின்றன


ஒரு ஆசிரியனாக என்னுடைய அனுபவம் என்னவெனில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் தனியார் கொழுந்துகளுக்கும் திறன் மற்றும் சாதனை அளவில் பெரிய வித்தியாசமில்லை என்பதே. இரண்டு பிரிவிலும் சோம்பேறிகள் இருக்கிறார்கள், உழைப்பாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் மக்குகள் இல்லை. நான் இதுவரை ஒரு மக்கு மாணவனைக் கூட கண்டதில்லை, சரியான நேரத்தில் போதுமான ஊக்குவிப்பு ஆதரவும் கொடுத்தால் எந்த மாணவனாலும் எதையும் கற்கவும் வெல்லவும் முடிகிறது.


ஒரே வித்தியாசம் உள்ளூர் கல்விக்குப் பிறகு வெளிநாட்டுக்கு சென்று படிக்க பண வசதி நமது அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இருப்பதில்லை. அதே போல பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் உடனடியாய் நல்ல பொறுப்புகளில் அமர்த்தப்படும் அளவுக்கு அவர்களுக்கு ஒரு பிராமண, மார்வாரி, பஞ்சாபிப் பையன் அளவுக்கு தொடர்புகள் இருப்பதில்லை.


எதார்த்தம் இப்படி இருக்க நமது புதிய கல்விக்கொள்கை தனியார் கல்விக்கொள்கைகளை அப்படியே ஈயடிச்சான் காப்பி அடிக்க முயல்வது அபத்தமானது. அது தனியார் கல்வி குறித்து மத்திய வர்க்கத்துக்கு உள்ள மாயையை பயன்படுத்தி மைய அரசு குறுக்குவழியில் நல்ல பெயர் வாங்க உதவலாம். ஆனால் மாணவர்களுக்கு நடைமுறையில் எந்த பயனும் இராது. மாறாக அவர்களை பிராயிலர் கோழிக்குஞ்சுகளாக மாற்றும். எனக்கு ஒரு மகன் இருந்தால் அவனை நான் ஒரு அரசுப்பள்ளியிலே சேர்ப்பேன். அங்கு அவன் எளிய வாழ்க்கைச்சூழலுக்கு, கீழ்மத்திய வர்க்கப் பிள்ளைகளுடன் நட்பு பூண்டு, பெரிய அழுத்தங்கள் இன்றி சுயமாய் சிந்தித்து வளர வேண்டும் என விரும்புவேன். பிராயிலர் கோழிகளைக் கொண்டு நீங்கள் பிரியாணி மட்டுமே போட முடியும். நடைமுறையில் அவர்களால் எந்த பயனும் இல்லை. கூண்டைத் திறந்து விட்டால் பறந்து போகக் கூடத் தெரியாது.


நமக்கு இப்போதைக்குத் தேவை அரசுக் கல்வி முறையை மாற்றுவதல்ல, கல்விக்கு கூடுதலாக நிதியை ஒதுக்குவது, நிறைய ஆசிரியர்களை பணியில் அமர்த்துவது, ஒவ்வொரு வகுப்பிலும் 20க்கு மேல் மாணவர்கள் எடுக்காமல் இருப்பது, உள்கட்டமைப்பு வசதிகளை தனியாருக்கு நிகராய் வலுப்படுத்துவது, நவீனப்படுத்துவது, மாணவர்களின் ஆய்வுக்கு நிதி ஒதுக்குவது, தேர்வுகளை ஒழிப்பது, அனுபவரீதியான, ஆய்வுரீதியான, கலந்துரையாடல் வழியிலான கல்விக்கு வழிவகுப்பது

முடிந்தால், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ..டி போன்ற முன்னணி நிறுவனங்களில், அரசு வேலைகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் சட்டத்திருத்தத்தை கொண்டு வருவது, தில்லியிலும் கேரளாவிலும் நிகழ்வதைப் போல மக்களை தனியார் பள்ளிகளைத் தவிர்த்து அரசுப் பள்ளிகளை நோக்கி ஈர்ப்பது.


 


Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...