Skip to main content

உளவியல் நூல்கள்: ஒரு பார்வை (4)


இருத்தலியல் உளவியல் என ஒரு துறையும் உண்டு - இதில் வாழ்க்கை அர்த்தமற்றது, சாரமற்றது எனும் புள்ளியில் இருந்தே விவாதத்தை ஆரம்பிக்கிறார்கள். மனிதனின் துன்பங்களுக்கு, அவநம்பிக்கைகளுக்குக் காரணம் வாழ்க்கை அர்த்தமற்றது, அதனால் நிச்சயமற்றது, அதனாலே அவநம்பிக்கையை ஏற்படுத்துவது எனும் தொடர் விளைவுகளே. பௌத்தம் இந்த தொடர் சங்கிலியை உடைத்தால் மனிதன் விடுதலை அடைவான் எனும் போது, உளவியலில் இந்த சங்கிலிகளை ஓரிடத்தில் நிலையாக அறைந்து வைக்க ஒரு ஆணி - ஒரு அர்த்தம் - அவசியம் எனப் பேசினார்கள். குறிப்பாக யூதர்களின் வதைமுகாம்களில் மக்கள் மரணம் கண்முன்னால் தோன்றும் போது எப்படி வாழ்க்கையில் நம்பிக்கை வைத்து முன்னகர்ந்தார்கள் எனும் கேள்வியை வைத்தே இது தோன்றியது. இந்த உளவியல் வகையை தோற்றுவித்தவர் பெயர் விக்டர் பிராங்கிள் [Viktor Frankl] (1905-97). இவர் வதைமுகாம் ஒன்றில் சிறைவைக்கப்பட்டு மீண்டு வந்தவர். உளவியலாளரான இவர் எப்படி அந்த வதைமுகாமினர் நம்பிக்கையுடன் வாழ்க்கையை தொடர்ந்தார்கள், ஏன் தற்கொலை செய்யவில்லை எனக் கேட்டார். இம்மக்கள் வாழ்க்கை குறித்த பல நம்பிக்கைகளை அன்றாடத்தில் கற்பனையாய் உருவாக்கி அவற்றை நம்பினார்கள் எனக் கண்டுப்பிடித்தார். நவீன காலத்தில் சமூகத்தில் இருந்து அந்நியப்பட்டு அவநம்பிக்கையால் மன அழுத்தத்துக்கு உள்ளாகும் நோயாளிகளுக்கு வாழ்க்கையில் ஒரு அர்த்தத்தை கண்டுபிடித்து அளித்தாலே சரியாகி விடும் எனக் கூறினார். இந்த முறைமையை logotherapy என்றார்கள். இவரது முக்கிய நூல் Man’s Search for Meaning. 




அடுத்து இதே உளவியலை இருத்தலிய, சமூகவியல், மார்க்ஸிய பொருளாதாரத்தின் பாதையில் வைத்து அலசியவர் எரிக் புரோம் (Erich Fromm) [1990-80]. இவர் வரலாற்றின் போக்கை நிலப்பிரபுத்துவம், முதலீட்டியம் எனப் பிரிக்கிறார். நிலப்பிரபுத்துவ காலத்தில் மக்கள் அடிமைகளாய், அறியாமையில் இருந்தாலும் அவர்கள் தாம் யார் எனும் நிச்சயத்துடன் இருந்தார்கள் (அதாவது லோகோதெரப்பியில் வரும் இருத்தலின் அர்த்தம்). ஆனால் முதலீட்டிய சமூகத்திலோ சமூதாயங்கள் உடைந்து, கிராமத்தில் இருந்து மக்கள் நகரங்களுக்குப் புலம்பெயர்ந்து தனிமனிதர்கள் தோன்றுகிறார்கள். இந்த தனிமனிதர்கள் நிலையான ஒரு குறிப்பிட்ட ஊரை சேர்ந்தவன், சமுதாயத்தை சேர்ந்தவன், தொழில் அடையாளத்தைக் கொண்டவன் என தம்மைக் குறிக்க முடியாது. அவர்கள் ஒரு எந்திரத்துடான தம் உறவால் மட்டுமே அடையாளப்படுத்தப்படுவார்கள், அவர்கள் பணத்தின் மதிப்பால் மதிப்பிடப்படுவார்கள். ஆனால் மார்க்ஸ்மூலதனம்நூலில் பணத்தின் மதிப்பு என்பது அரூபமாய் இருப்பதாலே அது ஏற்றத்தாழ்வுகளுக்கு, அநீதிக்கு வழிவகுப்பதாய் சொல்கிறார். அதே போல தொழிலில் இருந்து தொழிலாளி அந்நியப்படுவதைப் பற்றியும் (உழைப்பின் மதிப்புக்கான நியாயமான பங்கு மறுக்கப்படுவதால்) அவர் பேசியிருக்கிறார். இது மனித மனத்தில் ஏற்படுத்தும் நிச்சயமின்மைகளை, அதனாலான அவநம்பிக்கையை, அழுத்தத்தை, நெருக்கடியைப் பற்றி விரிவாக அலசியவர் புரோம். ஆனால் மார்க்ஸில் இருந்து சற்று விலகி அவர் நிலப்பிரபுத்துவ அடிமை வாழ்வை ஒரு சுதந்திர வாழ்வாகக் கண்டார்; இங்குதான் இவரது உளவியல் இருத்தலியல் தத்துவத்தின் பாதையை எடுக்கிறது. இவரது ரொம்ப பிரசித்தமான நூல் Fear of Freedom (இது Escape of Freedom என்றும் அறியப்படுகிறது). இதன் தலைப்பே வித்தியாசமானது, இவரது கோட்பாட்டின் அடிப்படையைக் காட்டுவது. மனிதன் சுதந்திரத்தை விரும்பினாலும் அது அவனுக்கு ஊறானது, அவன் சுதந்திரத்தைக் கண்டு அஞ்சுகிறான், இந்த அச்சமே அவனை மனச்சிக்கல்களை நோக்கித் தள்ளுகிறது என்றார்.

 கிறித்துவத்தில் உள்ள மன ஊக்கம் / மனத்திட்பம் (will) எனும் கருத்தாக்கத்தையே அவர் உளவியலில், இருத்தலியலில் வைத்து வித்தியாசமாக அர்த்தப்படுத்துகிறார். நான் எப்படி வாழ வேண்டும், என்ன தேர்வுகளை எடுக்க வேண்டும் எனும் கேள்விகள் கடும் பதற்றத்தை ஏற்படுத்துபவை. ஒரு எழுத்தாளனுக்கு தன் கதையின், நாவலின் ஒரு அத்தியாயத்தை எழுதும் முன் எப்படி எழுதப்போகிறோம் எனும் தேர்வு கடும் நெருக்கடியை அளிக்கும். நுகர்வோனாக நாம் அனுதினமும் நுட்பமாக ஒரு பதற்றத்தில் இருக்கிறோம். அந்த பதற்றத்தை பின்னர் ஒரு இன்பமாக மாற்றிக் கொள்கிறோம். திருமணம் பெண்கள் பலருக்கும் நெருக்கடியான சந்தர்ப்பம். அதற்குப் பதிலாக யார் வசமாவது முடிவெடுக்கும் உரிமையை கொடுத்து விடலாம் என புரோம் சொல்வதில்லை; மாறாக 1) வாழ்க்கையில் ஒரு அர்த்தத்தை உண்டு பண்ணி அதன் முன் நம் தேர்வுகளை ரத்து பண்ணிடலாம் என்கிறார்; 2) நெருக்கடியின் காரணம் இதுவே எனப் புரிந்ததும் மனம் லகுவாகி விடும் என்கிறார்.


எரிக் புரோமின் எழுத்துக்கள், குறிப்பாகவிடுதலை நோக்கிய அச்சம்எனக்கு மிகுந்த ஆறுதலாக அமைந்த புத்தகம். நான் கடுமையான சோர்வில் இருக்கும் போதெல்லாம் புரோமின் சிந்தனைகளை அசைபோடுவேன், மனம் லேசாகி விடும்.

ஆனால் தத்துவத்தில் அதிகம் வாசிக்கத் தொடங்கிய பின்னர் புரோம் எழுத்திலுள்ள குறைகள், போதாமைகள் தென்பட்டன, அவர் சற்று அலுக்கத் தொடங்கினார் என்பதையும் ஒத்துக் கொள்ள வேண்டும். இருந்தாலும், இன்றும் எனக்கு ஒரு மன இறுக்கம் ஏற்பட்டால் நான் நாடுவது அவரது நூலையே



4) இறுதி வகை உளவியல் நூல்களை positivism (நேர்கருத்துவாதம்) என்கிறார்கள். சிக்ஸென்மிகாயின் (Mihaly Csikszentmihalyi) ஒழுக்குக் கோட்பாடு (flow) பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். பிரக்ஞையின் இடையூறு இன்றி ஒரு வேலையில் ஆழ்ந்து செயல்படும் போது நாம் உச்சபட்ச மகிழ்ச்சியை அடைவதாய், அதை எப்படி சாத்தியப்படுத்துவது என சிக்ஸன்மிகாய் விளக்குகிறார்.  

தன்முனைப்பு உளவியல் (motivational) நூல்கள் கடந்த நான்கு பத்தாண்டுகளுக்கு மேலாக உலக புத்தக சந்தையில் முதல் பத்து இடங்களுக்குள் வருபவை. நம்மூரில் கண்ணதாசன் பதிப்பகம் இத்தகைய நூல்கள் பலவற்றை மொழியாக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்கள்

நமது இந்திய தத்துவம் மனவோட்டம் குறித்து சொல்வதற்கும் இந்த வகை உளவியலின் அணுகுமுறைக்கும் ஒரு தொடர்பு உண்டு. நம் தத்துவம் எண்ணம் என்பது நிலையானது அல்ல, நெகிழ்வானது என்கிறது. நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆவாய் என்கிறது. அதற்காக தினமும் பணத்தைப் பற்றி நினைத்தால் பணம் மடியில் வந்து விழாது. ஆனால் நமது ஒற்றை சிந்தனை தொடர் சிந்தனைகளை உருவாக்குகிறது, தொடர் சிந்தனைகள் ஒரு வழித்தடத்தை மனத்தில் உருவாக்குகின்றன, ஆகையால் நம் மனவோட்டம் நம் மனநிலையை, எடுக்கும் முடிவுகளை, பிரச்சனைகளை எதிர்கொள்ளும் முறையைத் தீர்மானிக்கிறது. ஒரு சாமியார் ஒரு பூனையை வளர்க்க ஆரம்பித்து, அதற்கு பாலுக்காக பசுமாடு வாங்கி, பால் கறக்க ஒரு பெண்ணை நியமித்து கடைசியில் அவளை மணந்து கொள்ளும் கதையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இது மேற்சொன்ன தத்துவத்தின் ஒரு கொச்சையான விளக்கம் எனலாம்.

இந்த கோட்பாட்டை நேர்கருத்துவாத உளவிலாளர்கள் நவீன நரம்பியலின் கண்டுபிடிப்புகளின் தளத்தில் வைத்து மனித மனத்தின் இயல்பை, அதை நம் தேவைக்கேற்ப வடிவமைக்கும் உபாயங்களைத் தருகிறார்கள். ஸ்டீவன் கோபியின் Seven Habits of Highly Successfuly People, ஆந்தனி ராபின்ஸின் Awaken the Giant Within இந்த வகை நூல்களில் நான் ரசித்தவை.


எனக்கு தன்முனைப்பு உளவியலில் நம்பிக்கை இல்லை என்றாலும், இவர்கள் மனித நடத்தையை அலசுவதை கவனிக்கப் பிடிக்கும். ஏனோ இத்தகைய நூல்களைப் படிப்பதில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. ஆனால் இவற்றைப் படித்து யாரும் உருப்பட முடியாது என்று நம்புகிறேன்.


லக்கான், பிராயிட், டெலூஸ் ஆகியோரை அறிமுக நூல்கள் படித்து பின்னர் மூலநூல்களை நேரடியாகப் படிப்பது நல்லது. பிராயிட் ஏகப்பட்ட ஆதாரங்கள், மேற்கோள்களை அள்ளி வழங்கியபடி செல்வார், ஒரு சிறிய பொருளை எடுக்க ஒரு இருட்டான குடௌனுக்குள் செல்வதைப் போல இருக்கும். டெலூஸின் மொழி (தெரிதாவைப் போல) கவித்துவமானது, உருவக ரிதியானது என்பதால் ஒரு எளிய அறிமுகத்துடன் அவரைப் படிப்பது உதவும். லக்கானின் எழுத்துமுறையும் சற்று சிக்கலானது. நிறைய பொறுமையும் கவனமும் அவருக்குள் செல்ல அவசியம்.


பிராயிடின் மிகப்பிரபலமான நூல் The Interpretation of Dreams. லக்கானின் பெயர் பெற்ற நூல் Ecrits. டெலூஸுக்கு Difference and Repetition. சிஸெக்கின் நூல்களைப் படிக்கும் முன் அவரது சுவையை லேசாய் அறிய பேட்மேன் படங்களைப் பற்றி அவரது கட்டுரையான The Politics of Batman படிக்கலாம். சமகால அரசியல், சமூகச் சூழல் பற்றி ஜாலியான நூல்களையும் சிக்கலான தத்துவ, உளவியல் ஆய்வு நூல்களையும் அவர் எழுதியிருக்கிறார்.

இவர்களைப் போக மிச்ச உளவியலாளர்களை நேரடியாகவே நீங்கள் படிக்கலாம்!

 

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...