தஸ்தாவஸ்கி:
தஸ்தாவஸ்கி 1821 நவம்பர் 11இல் ரஷ்யாவில் பிறந்தார்.
தஸ்தாவஸ்கியின் தந்தை ஒரு ராணுவ மருத்துவர். அவர் மத்திய வர்க்கத்தை சேர்ந்தவர். ஆனால் மருத்துவப் பணியில் சம்பாதித்த பணத்தைக் கொண்டு சிறிய அளவுக்கு நிலத்தை வாங்கி அங்கு பண்ணையை அமைத்து அவர் நிலச்சுவாந்தாராக மாறினார். இருந்தும் தஸ்காவஸ்கியிம் அவரது நான்கு கூடப்பிறப்புகளும் வசதியாக வாழ்க்கையை வாழ்ந்ததாக சொல்ல முடியாது. கடன்வாங்கியும் கூடுதல் நேரம் பணி செய்துமே தஸ்தாவஸ்கியின் தந்தை தஸ்தாவஸ்கியையும் அவரது சகோதரரையும் ராணுவக் கல்லூரியில் பொறியியல் படிக்க வைத்தார். தஸ்தாவஸ்கி ஆனால் பொறியியலை வேண்டாவெறுப்பாகவே படித்தார். இந்த காலகட்டத்தில் தான் தஸ்தாவஸ்கியின் தந்தை அவரது பண்ணையில் வேலை செய்த தொழிலாளிகளால் கொல்லப்பட்டு கிணற்றில் வீசப்படுகிறார். இந்த சம்பவம் பின்னாளில் தஸ்தாவஸ்கியை அதிகமும் பாதித்த வலிப்பு நோயை அவருக்கு ஏற்படுத்தியது எனச் சொல்லப்படுகிறது. இதுவே அவர் “கரமசோவ் சகோதரர்கள்” நாவல் எழுதவும் தூண்டுதலாக அமைந்திருக்கலாம். குரூரமான, குடிகாரரான கோமாளித்தனமான தூய தீமை வடிவான தந்தை பாத்திரங்களை அவர் பின்னாளில் எழுதவும் காரணமாக இருக்கலாம் (மெர்மலதேவ் / தந்தை கரமசோவ்).
தந்தையைக் கொல்லும் விருப்பத்தைப் பற்றிய ஈடிபல் காம்பிளக்ஸ் கோட்பாட்டை வடிவமைக்க பிராயிட் தஸ்தாவஸ்கியில் இருந்து ஆதாரங்களைப் பெற்றுக் கொண்டார் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
1845இல் தஸ்தாவஸ்கி தனது Poor Folk எனும் முதல் நாவலை வெளியிட்டார். அடுத்து தனது எழுத்து வாழ்க்கையில் கவனம் செலுத்தும் பொருட்டு தன் ராணுவ வேலையில் இருந்து நீங்கினார்.
தஸ்தாவஸ்கி அடுத்து தன் முக்கிய நாவலான “Double”ஐ 1846இல் வெளியிட்டார். கொகோலின் The Overcoat கதையை நினைவுபடுத்தும் இது உளவியல் ரீதியாக மிகச்சிறப்பான வெளிப்பாடுகளைக் கொண்டது. Split Personality கொண்ட ஒருவர் தன் பிறவுபட்ட ஆளுமையை நிஜ மனிதனாக நம்பி அவரிடம் மோதினால் என்னவாகும் எனும் சுவாரஸ்யமான் ஒற்றை வரியைக் கொண்டது இது. ஒரு மனிதன் தன்னை தூயவன், உண்மையானவன் என நம்பும் போது அவன் உடனடியாக அதற்கு நேர்மாறான ஒரு எதிரிணையை, மற்றமையை அங்கு கட்டமைக்கிறான், அதற்குள் சிறைப்படுகிறான், அவனுக்கு மீட்சி இல்லாமல் போகிறது என்கிறார் அவர் இந்நாவலில்.
1949இல் தஸ்தாவஸ்கி பெட்ராஷெவஸ்கி எனும் புரட்சிகர குழுமத்தில் பங்கேற்றதாக குற்றம் சாட்டப்பட்டு தண்டனையாக சைபீரியவுக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவர் ஐந்து வருடங்கள் கடுங்காவல் தண்டனையும், கடுமையான உடல் வதைகளையும் அனுபவித்தார்.
சைபீரியாவில் இருந்து மீண்ட பிறகு தஸ்தாவஸ்கி சூதாடி, Idiot போன்ற நாவல்களையும் அவரது பிரதான படைப்புகளான குற்றமும் தண்டனை, கரமசோவ் சகோதரர்கள் போன்றவற்றை வெளியிட்டார். தஸ்தாவஸ்கியின் முதிர்ச்சியான காலகட்டம் என இதை அழைக்கலாம். தஸ்தாவஸ்கி இப்போது சமூகப் புரட்சி என்பதை ஒரு மேலோட்டமான செயல்பாடு, ஏமாற்றுவேலை என நினைக்க ஆரம்பித்தார். தனிமனித எழுச்சியால் மாற்றம் வராது, அழிவே ஏற்படும், எளிய மக்களின் ஆன்மாவில் ஏற்படும் மலர்ச்சியே புரட்சிகர மாற்றங்கள் அசலாகத் தோன்ற அவசியம் என நம்பினார். இதுவே அவரது பின்னாளைய நாவல்களான “குற்றமும் தண்டனையும்”, “கரமசோவ் சகோதரர்கள்” போன்றவற்றில் முற்போக்கு சிந்தனையாளர்கள் எளிய பாமர ஜனங்களிடம் இருந்து பிளவுபட்டிருப்பதை, அவர்களின் செயல்பாடுகள் ஆன்மீக சீரழிவுக்கு அவர்களை இட்டுச்செல்வதை சித்தரிக்க ஆரம்பித்தார். அறிவுஜீவிகள் அவரது நாவல்கள் பகடி செய்யப்பட்டனர், எளிய பாசாங்கற்ற மனம் கொண்டவர்கள் போற்றப்பட்டனர். சைபீரியாவில் அவர் கண்ட அனுபவங்கள், மனிதர்கள், அங்கு அவர் மானுட இருப்பு குறித்து பெற்ற ஆழமான புரிதல், விவிலிய வாசிப்பு ஆகியவை அவரை இந்த இடத்துக்கு நகர்த்தின எனலாம்.
1881இல் தஸ்தாவஸ்கி மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவால் மரணமுற்றார். மரணப்படுக்கையில் அவர் தன் பிள்ளைகளிடம் தனக்கு விவிலியத்தில் இருந்து ஊதாரி மைந்தன் கதையைப் படிக்கும் படி கேட்டார் எனச் சொல்லப்படுகிறது.
தஸ்தாவஸ்கியின் “குற்றமும் தண்டனையும்”, “கரமசோவ் சகோதர்கள்” இரண்டும் அவரது அதிகம் பேசப்பட்ட படைப்புகள்.
தஸ்தாவஸ்கி உளவியல் எதார்த்தவாத நாவல்களின் தலைமகனாக கருதப்படுகிறார்.
ஏன்?
மனித மனத்தை தனிமனித விழைவினால் உந்தப்படுவதாகக் காணவில்லை, அதற்கு ஒரு சமூக கோணம் இருப்பதை, அது dialectical ஆக செயல்படுவதைக் கண்டறிந்தார். உ.தா., அவரது நாவல்களில் குற்றங்கள் தனிமனித விழைவினால் நிகழ்வதில்லை, மாறாக பல்வேறு சமூகத் தூண்டுதல்கள் அதற்குப் பங்களிக்கின்றன, அதாவது குற்றத்தில் அதை நிகழ்த்துபவனுக்கு மட்டுமல்ல அதை விசாரிக்கிறனுக்கும் உள்ள் பங்கை தஸ்தாவஸ்கி சுட்டிக் காட்டினார். “குற்றமும் தண்டனையும்” நாவலில் ரஸ்கால்நிக்கோவ் ஒரு வட்டிக்கடை நடத்தும் பெண்ணைக் கொல்கிறான். ஆனால் அதன் பிறகு விசாரணை, தண்டனை குறித்த நடைமுறைகளால் அவன் ஆட்படுகிறான். ஒரு பக்கம் தன் குற்றம் எப்படியெல்லாம் விசாரிக்கப்பட வேண்டும் என விசாரணை அதிகாரிகளுடன் தொடர்ந்து உரையாடுகிறான், அடுத்து தனக்கான மீட்சி எப்படி சாத்தியமாகும் என ஒரு இளம் பாலியல் தொழிலாளியான சோனியாவுடன் உறவாடிப் புரிந்து கொள்கிறான். விசாரணை அதிகாரி இங்கு ஒரு சர்வாதிகார ஆட்சி அமைப்பின் கருவி. அதை ஒரு தனிமனிதனை கண்காணித்து, வரைமுறைக்கு கொண்டு வர முயல்கிறது. அதனாலே ரஸ்கோல்நிக்கோவ் தொடர்ந்து விசாரணை அதிகாரியிடம் பேசி இறுதியில் அவரிடம் உண்மையை ஒப்புக்கொள்ள முனையும் போது கூட அவரால் அவனை கைது செய்ய முடியாமல் போகிறது. ஏனென்றால் மனிதனின் ஆன்மா அல்ல அவனை வரையறுக்கும் புறவயமான ஆதாரங்களே அவனுக்கு முக்கியம். ஆனால் சோனியாவோ ஆன்மீகத்தின் தரப்பில் இருந்து அவனை ஏற்பதுடன் மன்னிக்கவும் செய்கிறாள்.
அது மட்டுமல்ல விசாரணை என்பது எப்படி குற்றத்தின் மறுபக்கமாக செயல்படுகிறது எனும் சமூக உளவியலையும் இங்கு தஸ்தாவஸ்கி பேசுகிறார். மற்றொரு பக்கம் ஒரு குற்றவாளி எப்படி தொடர்ந்து விசாரணை குறித்த அக்கறையால், பயத்தால் ஆட்பட்டு விசாரணை அதிகாரியை கண்காணிக்கிறான், அதே சமயம் அவன் கண்காணிக்கப்பட்டும் வருகிறான் என்பதையும் தஸ்தாவஸ்கி முதன்முறையாக நாவலில் பேசினார். அவருக்குப் பிற்பாடு பல துப்பறியும் படங்களில், நாவல்களில் இந்த உளவியல் பரிமாணம் அலசப்பட்டது. மிஷ்கினின் “யுத்தம் செய்” படத்தில் வரும் ‘கண்காணிப்பு’ எனும் கதைக்கரு ஒரு உதாரணம். பலரும் இப்படி தஸ்தாவஸ்கிக்கு கடன்பட்டிருக்கிறார்கள்.
“கரமசோவ் சகோதரர்களில்” தந்தை கரமசோவ் தன் மகன்களில் ஒருவரால் கொல்லப்படுகிறார், யார் கொன்றார் என்பது இறுதி வரை தெளிவாகாது, குற்றத்தை நேரடியாக இழைத்தவர் இன்னார் என சொல்ல முடிந்தாலும் அதற்கு அவர் மட்டும் தானா பொறுப்பு எனும் தஸ்தாவஸ்கியின் தத்துவார்த்த, உளவியல் கேள்வி சுவாரஸ்யமானது, தீவிரமானது.
டிமிட்ரி ஒரு ரௌடித்தனமான, உணர்ச்சிவயப்பட்ட மகன், இவான் ஒரு அறிவுஜீவி, அல்யோஷா ஆன்மீக நாட்டம் கொண்ட இளம் துறவி, பாவெல் சமூகத்தால் அங்கீகரிக்கப்படாத உறவில் பிறந்த மகன் - இந்த நான்கு பேரில் டிமிட்ரியே கொன்றிருக்கலாம் என்றாலும் மனதளவில் மிச்ச மூன்று மகன்களுக்கும் இதில் இடமிருக்கலாம் என்பது அதிர்ச்சிகரமான சேதி, குறிப்பாக தூயவனான அல்யோஷாவுக்கும் தன் தந்தை மீது கொலை விருப்பம் இருக்கலாம் என்பது.
நாவலின் முடிவில் அறிவுத்தேடலோ, புலனின்பத் தேடலிலோ ஆன்மீகமோ அல்ல ஒரு தூய, அன்பாலான எளிய வாழ்க்கை நிலையே மனிதனுக்கு விடுதலையளிக்கும் எனும் இடத்துக்கு தஸ்தாவஸ்கி வந்து சேர்கிறார். இதை நாவலின் இறுதியில் அல்யோஷா காணும் குழந்தைகளின் காட்சி மூலம் அவர் சுட்டுகிறார்.
தந்தை கரமசோவை நாம் அதிகாரம் மிக்க, அறமற்ற ஒரு தேசிய அமைப்புக்கான குறியீடாகப் பார்க்கலாம். அல்லது தூய தீமைக்கான உருவகமாகவும் பார்க்கலாம். இரண்டையும் நேரடியாக ஒருவர் எதிர்கொண்டு வெல்ல முடியாது.
தஸ்தாவஸ்கியின் படைப்புலகம் குறித்த ஆய்வில் மிகைல் பக்தினின் விமர்சனங்கள் முக்கியம்: அவர் தஸ்தாவஸ்கியின் எழுத்தில் உள்ள பல்குரல்தன்மை, dialogism, முடிவுறாத தன்மை குறித்த அவதானிப்புகள், தத்துவங்கள் மிக சிறப்பான விவாதங்களை முன்னெடுத்தன.

Comments