ஆட்டுக்கார அண்ணாமலை ‘பாரதிராஜா’ எனப்படும் பாஜகவில் இணைந்ததை ஒட்டி நிறைய மீம்கள் வெளியாகின்றன, #டகால்டிஅண்ணாமலை எனும் ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது. இந்த பகடிகள் ஒரு பக்கம் இருக்கட்டும். எனக்கு இது ஒரு திரைக்கதைக்குள் அவசரமாய் திணிக்கப்பட்ட காட்சியாகத் தெரிகிறது:
அதாவது ஆட்டுக்காரர் கர்நாடகாவில் காவல் அதிகாரியாக இருக்கும் போது ஆர்.எஸ்.எஸ் சாகாக்களில் மும்முரமாய் பங்கேற்று, அங்குள்ள பாஜக தலைவர்களுடன் நல்லுறவைப் பேணி, அவர்களின் செல்லப்பிள்ளையாகி வேகமாய் மேலதிகாரியாக வளர்கிறார். ஊடகங்களிலும் தன் பெயர் தொடர்ந்து வரும்படி பார்த்துக்கொண்டு ஒரு ‘துடிப்பான அதிகாரி’ பிம்பத்தை வளர்த்தெடுக்கிறார். ஆனால் வழக்கமான பாணியில் ஒரு கட்சி-சார் ஐ.பி.எல் காவல் அதிகாரியாக தொடர்வதில், ஓய்வுறும்போது கோடிக்கணக்கில் சுருட்டிக்கொண்டு ஈ.ஸி.ஆரில் பெரிய பங்களா அமைத்து செட்டில் ஆவதில் நம் ஆட்டுக்காரருக்கு ஆரம்பத்திலே ஆர்வமில்லை. அவர் “பெரிதினும் பெரிது” கேட்பவர். ஏன் அரசியல்வாதிகள் தூக்கிப்போடும் எலும்புத்துண்டுகளுக்காக வேலை செய்து, அடிக்கடி ஆட்சிமாற்றங்களின் போது பந்தாடப்பட்டு, பலரது கால்களில் விழுந்து, தலை நரைத்த நிலையில் தொப்பையும் பங்களாவுமாய் ஊர்ப்பக்கம் முடங்க வேண்டும்? நாமே அரசியல்வாதி ஆகி விட்டால் என்ன? ஐந்தே வருடங்களில் மொத்த மாநிலத்தையும் நம் சுட்டு விரல் அசைவுக்கு நடனமாட வைக்கலாமே!
இப்படித்தான் அவர் தில்லியில் ஷா, மோடியை சந்தித்து கட்சியில் இணைந்து, கர்நாடகத்தில் பதவி பெற்று, தேர்தலில் சீட் வாங்கி எம்.எல்.ஏ, எம்.பி ஆகலாம் என கனவு கண்டிருக்கிறார். அதற்கு ஏற்ப அவர் அரசியல் தொடர்புகள், கர்நாடகாவுக்குள் தன்னை கன்னடியராகக் காட்டிக் கொண்டு உயிர் உள்ளுளவும் கன்னடமே பேசுவேன், இம்மண்ணின் மைந்தன் நான் என்றெல்லாம் நாடகம் போட்டிருக்கிறார். ஊடக நண்பர்களைக் கொண்டு ஒரு எதிர்கால நட்சத்திரம் எனும் பிம்பத்தை அவ்வப்போது தூசுதட்டி வைத்திருக்கிறார். ஆனால் தில்லியில் நடந்ததோ வேறு - அவர்களுக்கு 1) இவர் கர்நாடகாவில் இருப்பது தேவையில்லை / உள்ளூர் அரசியல் தலைவர்களுக்குப் பிடிக்கவில்லை அல்லது 2) தமிழகம் மீதே நட்டா, ஷா போன்றோருக்கு கவனம் இருந்ததால் இவரை - ஊழலற்ற அதிகாரி சகாயத்தின் பாணியில் துடிப்பான ஐ.பி.எஸ் இளஞ்சிங்கம் போல முன்னிறுத்தி - இங்கே அனுப்பலாம் எனத் திட்டமிட்டு அனுப்பி இருக்கிறார்கள்.
இதை நமது ஆட்டுக்காரர் எதிர்பார்த்திருக்க மாட்டார், ஜெர்க்காகி விட்டு சரி இதே பிம்பத்தை தமிழகத்தில் போய் உருவாக்கிப் பார்ப்போம் என கிளம்பி வந்து விட்டார். இங்கே வந்தால் அவர் பேசுவது ஒன்றும் எடுபடவில்லை. என்ன பண்ணினாலும் கலாய்க்கிறார்கள், என்ன சொன்னாலும் திட்டுகிறார்கள். கன்னடா அளவுக்கு சரளமாக தமிழில் பேசவும் வரவில்லை. அந்த முகத்தில் அதிகாரத் திமிர் இப்போதும் வழிகிறது. அவரைப் பார்த்தாலே கோபம் வருகிறது. GobackModi என டிரெண்டிங் செய்த மாநிலத்துக்கு வந்து எனக்கு மோடியை ரொம்ப பிடிக்கும் என எடுத்த எடுப்பிலே பேசினால் எப்படி எடுபடும்? பாஜகவினரைப் போன்றே இவரும் சாதி, மதவாதம், இட ஒதுக்கீடு, காவல்துறை வன்முறை என எதைப் பேசினாலும் அதில் ஒரு மக்கள் விரோத மனநிலை வெளிப்படுகிறது. அதாவது வடக்கேயும் கர்நாடகாவிலும் ஒரு சங்கி பேசி கைத்தட்டு வாங்குவதை இங்கே பேசினால், செருப்படி வாங்குகிறார். ஆனால் தொடர்ந்து ஊடகங்கள் சளைக்காமல் அவரை ஊதிப்பெருக்கியபடியும் இருக்கின்றன.
ஆட்டுக்காரருக்கு ரொம்ப பொறுமை இல்லை - ஒரே நாளில் மனிஷா கொய்ராலாவை கல்யாணம் பண்ணிக்கொண்டு, ரௌடிகளுடன் சண்டைபோட்டு, மூத்த அரசியல்வாதிகளை முறியடித்து, மக்கள் ஆதரவுபெற்ற ஒரே தலைவனாக முதல்வராக கால்மேல் கால் போட்டு உட்கார வேண்டும். ஆனால் அது சினிமாவில் மட்டும்தானே முடியும்?
அவர் பாஜகவில் சேர்வது ஆரம்பகட்ட திட்டத்தில் இல்லை என நினைக்கிறேன். ரஜினி ஆதரவில் சட்டமன்ற தேர்தலில் ஜெயித்து விட்டால், அந்த சமயம் போதுமான எம்.எல்.ஏக்களின் ஆதரவு மூன்றாவது, நான்காவது அணிகளுக்குக் கிடைத்து ரஜினியின் பின்புலத்தில், பாஜக பினாமி ஆட்சி ஒன்றை அதிமுகவுடன் கூட்டணி அமைத்து விட்டால் தனக்கு ஒரு முக்கிய அமைச்சர் பதவி, ஏன் முதலமைச்சர் பதவி கூட கிடைக்கலாம் என அவர் கனவு கண்டிருக்கலாம். ஆனால் அவரால் தனியாக நின்று நோட்டா கூட வாங்க முடியாது. அதற்கு அவருக்கு வேலை பார்க்க தொண்டர்களோ உள்-கட்டமைப்போ இல்லை; உள்ளூரில் பெரிய செல்வாக்கும் இல்லை. அவரே கர்நாடகாவில் பேசும் போது சொல்கிறார் - “தமிழகத்தில் என்னை என் குடும்பத்தார், உறவினர், நண்பர்கள் என நூறு பேருக்குத்தான் தெரியும், ஆனால் கர்நாடகாவிலோ நான் ஒரு பிரபலம், பல கோடி பேர் என்னைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள், நான் இம்மண்ணின் மைந்தனாக கொண்டாப்படுகிறேன் ....” பாஜகவின் தூண்டுதலால் தமிழக ஊடகங்கள் ஆட்டுக்காரருக்கு நிறைய விளம்பரம் கொடுத்து அவரை இங்கு பல லட்சம் பேருக்கு தெரிந்தவர் ஆக்கியிருக்கலாம். ஆனால் செல்வாக்கு அவருக்கு இப்போதும் 100 பேருக்கு மேல் இல்லை. என்னதான் திமுக-அதிமுக இல்லாத ஆட்சியைக் கொண்டு வருவோம் என கொக்கரித்தாலும் அதிமுகவின் மறைமுக ஆதரவு இல்லாமல் ரஜினி துவங்கி ஆட்டுக்காரர் வரை தம்மால் தேர்தலில் ஜெயிக்க முடியாது என அறிவர். இதனால்தான் ஆட்டுக்காரர் பாஜக தலைமையை தொடர்பு கொண்டு அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் ஆதவுடன் தான் தேர்தலில் களமிறங்க வேண்டும் என கோருகிறார், ஆனால் பேரம் படியவில்லை. அமைச்சர் அதை நிராகரித்து விட்டார். (அமைச்சர் வேலுமணி இன்னொரு பக்கம் தன்னை முதலமைச்சராக முயற்சி செய்ய தில்லி தலைமைக்கு வேண்டுகோள் வைப்பதாக சொல்கிறார்கள்), ஆட்டுக்காரர் மனமுடைந்திருக்கிறார். தேர்தலில் நின்று போராடி குறைந்த வாக்குகளுடன் தோற்று அசிங்கப்பட அவர் தயாரில்லை. அவர் அறிவார் - இந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவால் கணிசமான இடங்களை வெல்ல முடியாவிட்டால், குறைந்தபட்சம் மறைமுகமாய் கூட்டணி ஆட்சியை அமைத்து தமிழகத்தை கைப்பற்ற முடியாவிட்டால், தமிழக பாஜகவில் பல தலைகள் உருளும். ஸ்டாலினை இவ்வளவு சாபம் விடும் நட்டா தன் சொந்த கட்சியினரை என்ன பண்ணுவார் யோசியுங்கள்! மிதித்தே கொல்லுவார். அடுத்த 8-9 மாதங்களில் தான் கணிசமான பணத்தை செலவழித்து தோற்று வேறு போனால் தில்லி தலைமை தன்னை திரும்பிக் கூட பார்க்காது என ஆட்டுக்காரர் அறிவார். கடைசியில் புழுக்கை தான் எஞ்சும்!
என் கணிப்பு அவர் இத்தேர்தலில் பாஜகவுக்காக நேரடியாக அங்கங்கே பிரச்சாரம் செய்து ஒதுங்கிக் கொள்வார் என்பது. அதோடு அவரது தேனிலவும் முடிவுக்கு வந்து விடும்.
நினைத்தது நடக்கவில்லை. விழுந்து விட்டோம், ஆனால் மீசையில் மண் ஒட்டக் கூடாதே! அதனால் தான் தில்லி வரை போய் நட்டாவை சந்தித்து உறுப்பினர் ஆகி உள்ள நாடகம். தலைவர்கள், எம்.எல்.ஏக்கள், எதிர்க்கட்சியின் அதிருப்தி தலைவர்கள் தில்லிவரை போகலாம், எந்த ஆதரவும், அரசியல் பின்புலமும் இல்லாத இவர் ஏன் இவ்வளவு டிராமா போட வேண்டும்? அதை ஏன் ஒவ்வொரு ஊடகமும் பேச வேண்டும்? ஏதோ பெரிய அரசியல் திருப்பம் நடந்ததைப் போல நம்மை பேச வைத்து, அசிங்கத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்பதற்குத்தான்.
மேலும் பாஜக அவரை மறைமுகமாய் களமிறக்க வேண்டும் எனத்திட்டமிட்ட பின்னர் இப்போது கட்சியில் சேர்த்துக்கொள்வது அவரது தோல்வியைத்தான், தில்லி தலைமையே அவரைக் கைவிட்டுவிட்டதைத் தான் காட்டுகிறது.
நீ அமெரிக்காவுக்கே திரும்பப் போயிடு சிவாஜி!

Comments