Skip to main content

திருவள்ளுவர் யார்?



ப்ரியாப்ரீயன் கவரிமா என்பது கவரிமான் அல்ல இமய மலையில் வாழ்ந்த ஒரு சடைசடையாக முடிகொண்ட ஒரு மாடு என எழுதிய பதிவை படித்ததும் எனக்கு ஒரு விசயம் நினைவுக்கு வந்தது:


மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின்


நான் பள்ளி மாணவனாக இருக்கும் இக்குறளை தமிழாசிரியர் எழுதிப்போட்டு விளக்குகிறார்:

கவரிமான் தனது மயிர்களை இழந்துவிட்டாலே தன் அழகு போய் விட்டதே என மனம் உடைந்து செத்துவிடும், கௌரவம் கொண்ட மாமனிதர்களும் அப்படியே.


எனக்கு ஒரு கேள்வி எழுந்தது: மயிர் உதிர்ந்தால் அது திரும்ப முளைத்து விடும். தற்காலிகமாய் மயிரிழந்ததற்கு ஏன் அக்கவரிமான் சாக வேண்டும்? அப்படி செத்தால் அது எவ்வளவு முட்டாளாக இருக்க வேண்டும்.


கல்லூரியில் இக்குறளை திரும்ப வாசிக்கும் போது மற்றொரு கேள்வி எழுந்தது: மயிர் அனையது மானம் என வள்ளுவர் சொல்கிறாரா?

மயிர் = மானம்?

அப்படித்தானே அவர் உவமையை இணைவைக்கிறார்

மயிரை இழந்ததும் அதை மிகையாக கருதி மனம் வருந்தி ஒரு மான் உயிரை விடுகிறது (அல்லது அப்படி ஒரு தொன்மம் இருந்துள்ளது) அல்லது அது மான் அல்ல, பனிப்பிரதேசத்தில் வசிக்கும் ஒரு மாடு. அதனால் முடியை இழந்தால் உயிர்வாழ முடியாது. அது தற்கொலை செய்யவோ, மனம் உடைந்து சாகவோ இல்லை, ஆனால் குளிர்பொறுக்காது சாகிறது

இந்த இரண்டு அர்த்தங்களிலும் மானம் என்பது அவ்வளவு உயர்வான ஒன்றல்ல, அது மிகைப்படுத்தப்படும் ஒரு மனக்கட்டமைப்பு எனும் தொனி உள்ளது.


இதை ஏன் நம் உரையாசிரியர்கள் கவனிக்க வில்லை? ஏன் இந்த கவரிமானை ஒரு பெருமைச்சின்னமாக்கி கதையையே மாற்றி விட்டார்கள்?


மார்ச் மாத காலச்சுவடு இதழில் ஸ்டாலின் ராஜாங்கம் திருவள்ளுவரின் உருவப்படம் வைதீகத் துறவியாக மாற்றப்பட்ட அரசியலைப் பற்றி ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதியிருந்தார். அவர் மட்டுமல்ல மேலும் பல அறிஞர்களும் எப்படி தமிழகத்தில் சுதேசிகள் மற்றும் தமிழ்தேசியவாதிகளின், திராவிட அரசியல் எழுச்சியில் காலத்தில் முதலில் வள்ளுவரை ஒரு வைதீகராக, (தலித் அல்லவென திரித்து) பிராமணராக, சைவராக, மதசார்பற்றவராக பலவிதங்களில் காட்டி, முரண்பட்ட சித்திரங்கள் வள்ளுவரின் பின்புலம் பற்றி எழுப்பப்பட்டன என்பதைக்குறித்து பேசியிருக்கிறார்கள். இவ்விசயத்தில் கௌதம சன்னாவின்திருவள்ளுவர் யார்எனும் நூல் குறிப்பிடத்தக்கது

 இந்தவள்ளுவரை மதமாற்றுவோம்திட்டத்தை ஒட்டியே பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளில் உரைகள் பிரபலப்படுத்தப்பட்டன. ஆனால் உண்மையில் வள்ளுவர் சமணர் அல்லது பௌத்தர். ஒரு பௌத்தத் துறவி. எல்லீஸ் முதலில் வெளியிட்ட திருக்குறள் நாணயத்திலும் வள்ளுவரின் தோற்றம் பௌத்த துறவிக்கானதே. அயோத்திதாசர் திருக்குறளை ஒரு தமிழ் பௌத்த படைப்பாக முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் விளக்கி திரிக்குறள் என ஒரு நூல் எழுதினார் (அனைத்துக் குறள்களுக்கும் உரையெழுதி நிறைவு செய்ய அவரால் இயலவில்லை). ஒப்பிடுகையில், அவரது உரையே திருக்குறளின் மகத்துவத்தை நமக்கு புரிய வைக்கும் தெளிவுடன் உள்ளது. ஏன்


திருக்குறள் வெறும் நீதிநூல் அல்ல, அதற்கு ஒரு பௌத்த தத்துவப் பின்புலம் உள்ளது. நாம் அதை வைதீகப் பின்புலத்தில் வைத்தால் பல குழப்பங்கள் ஏற்படும். நடைமுறைப் பொருளில், மு.வரதராசன், சாலமன் பாப்பையா அல்லது பிற திராவிட ஆய்வாளர்களின் நோக்கில், படித்தால் குறளின் நுணுக்கங்கள் புலப்படாமல் எளிய தட்டையான அறிவுரைகள் ஆகி விடுகின்றன. மானத்தை மயிருடன் ஒப்பிடுகிறார் எனக் கூறும் ஒரு அபத்தமும் தோன்றுகிறது.


சரி பௌத்த தத்துவத்தின் பின்புலத்தில் வைத்துப் படிக்கும் போது மேலே குறிப்பிட்ட திருக்குறளின் பொருள் எப்படி மாறுகிறது?

விலங்குகளுக்கு ஆண்மைச்செறிவைக் காட்ட, எதிரியை பயமுறுத்தும் தோற்றத்தை தருவது மயிர். ஆண் சிங்கத்தை நோக்கி பெண் சிங்கத்தை ஈர்ப்பது அதன் பிடறி மயிரின் கம்பிரம். ஆண்மயிலுக்கு இது தோகை. பெரும்பாலான உயிரினங்களில் ஆணுக்கு அதிக உயரத்தை, எடையை, சதைதிரட்சியை இயற்கை அளித்துள்ளது. இது ஒரு தோற்றம் மட்டுமே. இதை விலக்கினால் ஆணும் பெண்ணும் ஒன்றுதான். இந்த தோற்ற மயக்கத்தைப் போலத்தான்மானமும்”. மானம் என்பதை சுயமரியாதை என அரசியல்படுத்தி புரிந்து கொண்டால் அது நவீன அரசியல் வாசிப்பாக, வள்ளுவர் உத்தேசிக்காததாகி விடும். மேலும் சுயமரியாதை என்றால் என்ன உதிர்கிற மயிரா எனும் கேள்வியும் எழும்.


நான்மானம்என்பதை அகந்தை, கர்வம், சுய-மதிப்பு, தன்னுணர்வு என வாசிக்க விரும்புகிறேன். பௌத்தத்தின் ஒரு அடிப்படையான அறிதல் முறை நம் எண்ணங்கள், நம்பிக்கைகள், உணர்வுகள் துவங்கி தூல உலகில் காணும் பொருட்கள், விசை, பல பௌதீக மாற்றங்கள் வரை சாரமற்றவை என தர்க்கபூர்வமாக விளங்கிக் கொள்வது. ஒவ்வொன்றின் இருப்பும் காலத்துடன், வெளியுடன் அது கொள்ளும் உறவினால், உறவாடலால் உருக்கொள்கிறது. விதை-செடி எனும் உதாரணம் மூலம் நாகார்ஜுனர் இதை விளக்குகிறார். விதையில் இருந்து செடி தோன்றுகிறதா என்றால் ஆம். ஆனால் விதையில் இருந்து வேறெந்த காரணிகளும் இன்றி செடி முளைப்பதில்லை. தட்பவெட்பம், ஈரப்பதம், மண், மண்ணிலுள்ள உரம், மண்ணின் இறுகாத லகுவான நிலை, விதை மண்ணுக்குள் இருக்கும் போது பிற சங்கதிகள் அதற்கு ஊறுவிளைவிக்காதது என ... எத்தனையோ காரணிகள் ஒரு செடி தோன்ற காரணமாகின்றன. இந்த காரணிகளும் தம்மளவில் விதைக்கு உதவுவதில்லை. அவற்றையும் பல்வேறு காரணிகள் தாங்கிப் பிடிக்கின்றன. இப்படி பின்னால் போய்க்கொண்டே இருந்தாலும் எதுவும் தன்னளவில் இருப்பதோ ஒன்றை செய்வதோ இல்லை என அறிவோம். முக்கியமாய், காலத்திற்கு இதில் ஒரு இடம் உள்ளது. விதை மண்ணுக்குள் செல்கிறது, அடுத்து அது முளைக்கிறது. செடி தோன்றுகிறது. இம்மூன்றும் வெவ்வேறு காலங்களில் நிகழ்கின்றன. ஆனால் இக்காலங்கள் ஒன்றில் இருந்து மற்றொன்றுக்கு முளைவிட்டு வளர்ந்து செல்கின்றன என நமக்கு எப்படித் தெரியும்? நான் நேற்று நட்ட விதை இன்று முளைவிடும் போது இல்லை. எனில் நேற்று நட்டதில் இருந்தே அது வருகிறது என எப்படி சொல்ல முடியும்? என் முன்னே இருப்பதுஇன்றுமட்டும் தானே? இப்படி இருப்பு என்பது காலம் குறித்த பல பிழையான புரிதல்களின் அடிப்படையில் நிகழ்கிறது என நாகார்ஜுனர் காட்டுகிறார். மனம், சுயம், அதனால் தோன்றும் தன்னுணர்வு, அதில் இருந்து வரும் தன்னை முன்னிறுத்திய, தன்னாலே எல்லாம் நிகழ்கிறது எனும் அகந்தை தோன்றுகிறது. எப்படி விதையில் இருந்து செடி முளைக்கிறதோ அப்படியே இருப்பில் இருந்து சுயமும், சுயத்தில் இருந்து தன்னுணர்வும், தன்னுணர்வில் இருந்து அகந்தையும், அகந்தையில் இருந்து உலகம் குறித்த புரிதலும் என பல்வேறு காரணிகளில் இருந்து தோன்றி சாரமற்ற நிலையற்ற ஒன்றாகிறது. தான் என்பதை சாரமற்றது, நிலையற்றது என ஒருவன் புரிந்து கொள்வது கவரி மா தன் மயிர்களை இழந்துநிர்வாணமடைவதைப்போல ஆகிறது. இங்கே அழிவு ஒரு விடுதலையாகிறது.


கொச்சையாக சொல்வதானால், எல்லாமே மயிருதானே, உன் தன்னுணர்வும் மயிருதானே, ஏண்டா அதுக்காக அழுகிறே என வள்ளுவர் கேட்கிறார். இந்த கவலையை விட்டொழி, அப்போது இப்பிறவிக்கடனை ஒழித்து நீ ஒளிவிடும் வடிவைப் பெறுவாய் என்கிறார்.


புத்தர் காலத்தின் துறவிகள் நீண்ட சடாமுடி தரித்து குளிக்காமல் சிக்குப்பிடித்து திரிந்தனர்; அசுத்தமான பயமுறுத்தும் இத்தோற்றமே துறவின் குறியீடாகக் கருதப்பட்டது. மற்றொரு பக்கம் சமணர்கள் தலைமயிரை கையால் பிடுங்கி மொட்டையாகும் சடங்கைப் பன்பற்றினர். புத்தர் இதை ஏற்கவில்லை. அவர் தன் சீடர்களிடம் இரு மாதங்களுக்கு ஒருமுறை தலையை சவரம் செய்து கொள்ளச் சொன்னார். அதற்கு மேல் மயிரை கொண்டாடவோ சிக்காக்கி வருந்தவோ பிடுங்கி துன்புறவோ வேண்டாம் என நினைத்தார். புத்தரின் இந்த பரிந்துரை வினய பிதாகா நூலின் காந்தகா எனும் அத்தியாயத்தில் வருகிறது. தலைமயிரைத் துறப்பது ஒருவர் பிக்கு ஆவதை, உலகப்பற்றை துறக்கிற நிலையின் குறியீடாகிறது.


இப்போதுமயிர்நீப்பின்உயிர்போய் விடும் என்பதை அகந்தை போனதும் மறுபிறப்பு எடுக்க இயலும் எனும் முழுக்க நேர்மறையான (நேரீடான) புரிதல் வருகிறது.


இதை தப்பாக விளக்கி நம்மை திசைதிருப்பியிருக்கிறார்கள் இந்த உரையாசிரியர்களும் தமிழாசிரியர்களும். திராவிட இனமானம், குடும்ப மானம், தனிமனித மானம், சாதி மானம் என இதை வெவ்வேறு பொருட்களில் மக்கள் படிக்கும் நிலை ஏற்படுகிறது. இந்த வாசிப்பு சுதந்திரம் உண்டு அனைவருக்கும் எனிலும் ஆழமான வாசிப்பு பௌத்த வாசிப்பு மட்டுமே.  


சரி இந்த வாசிப்புக்கு திருக்குறளுக்கு உள்ளேயே சான்றுகள் உண்டா? தாராளமாக. அடுத்த பதிவில் அதைத் தருகிறேன்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...