என்னவென்று தெரியவில்லை; இரண்டு பேர் ஒரே சமயம் இன்பாக்ஸில் என்னிடம் இமானுவல் காண்டைவாசிப்பதைப் பற்றிக் கேட்கிறார்கள். ஒரு பக்கம் ஆச்சரியம், மறுபக்கம் மகிழ்ச்சி. முகநூல் வந்த பிறகு தான்மேற்கத்திய தத்துவம் படிக்க விரும்புகிற சிலரையாவது தமிழில் சந்திக்கிறேன். ஹபீப் ஹாதி எனும் ஒரு நண்பர்இமானுவல் காண்ட்
குறித்து தமிழில் ஏதாவது புத்தகம் வந்துள்ளதா எனக் கேட்டார். எனக்குத் தெரியவில்லை. முகநூல் நண்பர்கள்தெரிந்தால் சொல்லவும்!
அடுத்து ஒரு நண்பர், ராஜ் லஷ்மணன், இப்படிக் கேட்டிருக்கிறார்:
“Sir, I don't have any introduction to philosophy other than knowing a brief version of some philosophers mill, Locke, kant. Where should I start my philosophical reading, would it be good if I start with kant. Thanks in advance sir.”
என் பதில் இது:
1) தத்துவம் வாசிப்பதற்கும், இலக்கியம் வாசிப்பதற்கும் முறைமைகள் ஒன்றே - ஒன்று வரலாற்று ரீதியாகஒழுங்குவரிசையில் படிக்கலாம். மேற்கத்திய தத்துவம் என்றால் சாக்ரடீஸில் இருந்து துவங்கலாம். மூலநூல்வாசிப்பே சிறந்தது, ஏனென்றால் அறிமுக நூல்கள் படித்தால் அவை தரும் கண்ணோட்டத்தின் வழியே ஒருதத்துவத்தை தொகுக்கத் தோன்றும். இருந்தாலும் ஒரு ஆறுதலுக்காக, தன்னம்பிக்கையை பெறுவதற்காக Very Short Introduction போன்ற தொடர்களில் இருந்து ஒன்றை எடுத்து படிக்கலாம். ஆனால் மூலநூலைப் படிக்கும்போது பெரும்பாலும் இந்த மிகச்சுருக்க அறிமுகங்கள் சொல்வது தவறு எனத் தோன்றும். இதைத் தவிர்க்கமுடியாது.
2) வரலாற்று ரீதியாக என்றேனே அதற்கென தத்துவ வரலாறு நூல்கள் பல உள்ளன. ஜாலியான வாசிப்புக்கு வில்டியூரெண்டை சொல்லலாம். சுருக்கமான, தர்க்க ரீதியான அறிமுகத்துக்கு பெர்ண்ட்னெண்ட் ரஸலின் தத்துவவரலாற்றை பரிந்துரைக்கலாம். என் இளமையில் நான் ரஸலை கிட்டத்தட்ட வழிபட்டே வந்தேன். அவர் காட்டும்கெத்து, போகிற போக்கில் சிலரை புறமொதிக்கி செல்வது, ஸ்டைலான மொழி, ரத்தினச் சுருக்கமாகப் பேசுவதுஎன்னைக் கவர்ந்தன. ஆனால் ரஸலின் எழுத்தில் உள்ள குறைகள் பின்பே எனக்கு விளங்கியது. ரஸல் ஒருபொருண்மைவாதி. அவரது கண்ணோட்டத்துக்கு ஒத்து வராத தத்துவ அறிஞர்களை நமது பேஸ்புக் மேதாவிகள்செய்வதைப் போல முத்திரை குத்தி கழித்துக் கட்டி விடுவார். நீட்சேயின் பக்தர்கள் அவர் தனது History of Western Philosophyயில் நீட்சேய்க்கு வழங்கி உள்ள அறிமுகத்தைப் படித்தால் ரத்த வாந்தி எடுப்பார்கள். அல்லது பக்கத்தில் வருகிற யாரையாவது நாலு சாத்து சாத்துவார்கள். அந்தளவுக்கு பித்துக்குளித்தனமாகஇருக்கும். அதனால் ரஸல் எனும் பிள்ளையாரை முச்சந்தியில் போட்டு உடைத்து விட்டேன். அவரை நான்அதிகமும் பரிந்துரைப்பதில்லை.
3) சரி எந்த வரிசையில் படிப்பது? எப்படியும் படிக்கலாம். சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் என எடுத்துக்மொண்டாலே அணுகுமுறை, கண்டுபிடிப்புகள், தர்க்கத்தை பயன்படுத்தும் விதத்தில் அவ்வளவு வித்தியாசங்கள். அவர்களுக்கு இடையில் ஒரு தொடர்ச்சியை கண்டுபிடித்து ஒரு வரலாற்றை கற்பனை செய்யலாம். எனக்குஇந்த வகை வாசிப்பில் உடன்பாடில்லை. பௌத்தத்துக்கும் அத்வைதத்துகுமான, நாகார்ஜுனருக்கும்தெரிதாவுக்குமான ஒற்றுமைகளைத் தேடுவதைப் போன்ற வியர்த்தமான செயல் இது. ஆகையால் வரிசையாகப்படித்தாலும் ஒவ்வொரு அறிஞரையும் தனித்துவமாக கண்டு படித்தாலே ஆழமாய் போக முடியும் என்பதே என்நம்பிக்கை.
4) மூலநூலைப் படித்தால் புரியுமா?
அது உங்கள் முதிர்ச்சியைப் பொறுத்தது. அதாவது பயிற்சி அல்ல, முதிர்ச்சி. நான் ஏற்கனவே சொன்னதைப்போல அரிஸ்டாட்டிலை நன்கு வாசித்துப் பயின்றால் அதை வைத்து சாக்ரடீஸையோ ஹைடெக்கரையோபுரிந்து கொள்ள முடியாது. ஆனால் வாழ்க்கையை குறித்து ஆழமாய் அந்த நூல்களைக் கொண்டு வாசிக்கத்தெரிய வேண்டும். தொடர்ந்து தீவிரமாக தத்துவத்தை பரிசீலிக்கும் மனம் அமைப்பு வேண்டும். நான் பதின்வயதில் இருந்தே தத்துவத்தில் கால்களை அளைந்து வருகிறேன் என்றாலும் எனக்கு அந்த முதிர்ச்சி வரநாற்பது ஆண்டுகள் தேவைப்பட்டது. ஆனால் என்னுடைய மாணவனான ஆயுஷுக்கு அது 20 வயதிலேயேஅமைந்து விட்டது. அவன் என்னுடன் இணைந்து ஹைடெக்கர் குறித்து நூல் எழுதினான். இப்போது நாங்கள்நாகார்ஜுனரைப் பற்றி ஒரு நூலை எழுதி வருகிறோம். அவன் வயதில் எனக்கு அந்த முதிர்ச்சி சத்தியமாகஇல்லை. நான் அப்போது கிரிக்கெட் பார்த்துக் கொண்டும், பெண்களைப் பற்றி கவலைப்படும் கொண்டும், அவ்வப்போது இலக்கிய கிரீடத்தை தனிமையில் சூடிப் பார்த்துக் கொண்டும் இருந்தேன்.
நான் சாக்ரடீஸை அன்று படித்த போது அவரது வாதத்திறன் என்னைக் கவர்ந்தது, இரு பத்தாண்டுகளுக்க்குப்பிறகு படித்த போது அவர் ஒரு சூன்யவாதி, பின்நவீன விளையாட்டுக்காரர்களுக்கி இணையானவர் எனப்புரிந்தது. நீட்சேயை அப்போது படித்த போது அந்த கவித்துவத்தில் சொக்கிப் போனேன். ஆனால் தொடர்ந்துவாசிக்க வாசிக்கவே அவரது சொற்களுக்குப் பின்னுள்ள அரசியல் விளங்கியது, அவர் விளக்குகிற இருப்பு மீதுவெளிச்சம் விழுந்தது.
ஆகையால், வயதுக்கும் தத்துவ வாசிப்புக்கும், உங்கள் முதிர்ச்சிக்கும் சம்மந்தமில்ல. தகவல் அறிவு, பகுத்தறிவுபோன்றவையும் தத்துவத்துக்கு உதவாது. நீங்கள் தானாய் கனிய வேண்டும். அதுவரை சும்மா வாசித்துக்காத்திருங்கள்.
5) அடுத்து, எல்லா தத்துவங்களையும் ஒரே தட்டில் வைத்து படிக்காதீர்கள். உங்கள் மன அமைப்புக்கு ஏற்ற, தேடலுக்கு விடை தருகிற சிலர் இருப்பார்கள். உங்கள் மனம் அவர்களை நோக்கி அதிகமாய் ஈர்க்கப்படும். அவர்களையும் அவர்களைப் போன்றோரையும் அதிகமாய்ப் படியுங்கள். அங்கிருந்து உங்களை ஈர்க்கிற, உங்களுக்கு முக்கியமான தத்துவப்பள்ளியை அடையாளம் காணுங்கள். உ.தா., நான் ஆரம்பத்தில்அத்வைதத்தை படிக்க முயன்றேன். ஆனால் பௌத்தம் - சூனியவாதம் - படிக்கும் போது கிடைக்கும் உற்சாகம், மகிழ்ச்சி, அறிவுக்கிளர்ச்சி எனக்கு அத்வைதம் பற்றி வாசிக்கும் போது இல்லை. ஏனென்றால் நான் இயல்பில்ஒரு மறுப்புவாதி. ஒன்றை கட்டி எழுப்புவதை விட உடைத்து எறிவதில் களிப்பு அடைகிறவன். எனக்கு ஏற்றவர்நாகார்ஜுனரே. நான் அவரை தெரிதா, டெலூஸ் போன்றோர் வழி எதேச்சையாய் கண்டடைந்தேன். ஆனால்நீங்கள் அம்பேத்கர் வழி பௌத்தத்துக்குள் வந்தால் அது வேறொன்றாக இருக்கும். அதே போல கடந்தபத்தாண்டில் நான் அதிகமும் விரும்பி வாசித்தது ஜெர்மானிய தத்துவவாதிகளையே என அண்மையில்சட்டெனத் தோன்றியது. அப்படி அமைந்து விட்டது. உங்களுக்கு இதைப் போல கீழைத்தேய தத்துவங்கள், பிரஞ்சு தத்துவம், அல்லது ஆங்கிலேய தத்துவ மரபுடனோ ஒரு தொப்புள் கொடி உறவிருக்கலாம்.
அடுத்து, உங்கள் பாதை பொருண்மைவாதம், பொருள்முதல்வாதம் என்றால் மெய்யியல், இருத்தலியம் அதன்அசலான அமைவில் உங்களுக்கானது அல்ல. உலகமும், அதன் இருப்பும் சாரமானது என உங்கள் அனுபவங்கள்கற்றுத் தந்தால் பின்நவீன காலத்து தத்துவமோ, சூன்யவாத பௌத்தமோ உங்களுக்கு ஏற்றது அல்ல. நீங்கள்தட்டுத்தடுமாறி வைதீகத்தின் வாசல் கதவை நள்ளிரவில் தட்டுவீர்கள்.
அதாவது தத்துவ வாசிப்பை அகம்-புறம் என ஒரு வசதிக்காக பிரிப்பார்கள். இதில் நீங்கள் ஒன்றைஇதயபூர்வமாக தேர்ந்து கொள்ள வேண்டும். அடுத்து அகமும் புறமும் ஒன்றே எனும் மூன்றாவது தரப்புக்கு வந்துசேரலாம். அல்லது இரண்டாவதுடனே நின்று கொள்ளலாம். உங்கள் வாழ்க்கைப் பார்வையில் இருந்துதத்துவத்தை பிரித்து பார்க்கலாகாது. இது முக்கியம்.
- அடுத்தது, மதத்தையும் தத்துவத்தையும் குழப்பிக் கொள்ளக் கூடாது. சில அருமையான தத்துவவாசிப்பாளர்கள் மதத்தின் சகதிக்குள் மாட்டிக் கொள்வதைக் கண்டு வருந்தி இருக்கிறேன். கத்தோலிக்கநம்பிக்கைகளுக்கு இணங்காத தத்துவங்களைப் படிக்க மறுக்கும் அறிஞர்களைக் கண்டிருக்கிறேன். அதேபோலத் தான் வைதீகமும். கோவை ஞானி ஒரு பயிற்சி பெற்ற தத்துவ வாசிப்பாளர் அல்ல என்றாலும், அவர்தன் வாழ்நாள் முழுக்க கடவுள் என்கிற ஒரு சாரத்தை விட்டு வெளியேற முடியாமல் திணறியதை, அதற்குள்மார்க்ஸியத்தை, தமிழ் தேசியத்தை, இலக்கியத்தை பொருத்த முயன்று ஆயுளை வீணடித்ததைப் பற்றிமுன்பு எழுதியிருந்தேன். ஒரு சிந்தனையாளன் இப்படி மரபின் காவலனாக இருக்கக் கூடாது. “மண்ணுக்கேற்ற மார்க்ஸியம்”, “மரபுக்கேற்ற மார்க்ஸியம்” என்றெல்லாம் கிளிஜோஸியம் காட்டக் கூடாது. அவன்கட்டுத்தளைகளை அறுத்தெறியும் தேடல் கொண்டிருக்க வேண்டும். நிரூபித்தல்களை மறுப்பதேதத்துவத்தின் நோக்கம் என்பதை அவன் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது தத்துவத்துக்குள் நமது அறிவின் பாரத்தை, மதத்தின், சாதியின் அரசியலை கொண்டு வரக் கூடாது.
- இறுதியாக, தனியாக வாசிக்காதீர்கள். முடிந்த அளவுக்கு கூட்டாக வாசியுங்கள். அப்போது தத்துவம்எளிதாகும். தத்துவம் என்பது நாவல் அல்ல. அதை விவாதித்து விளங்கும் விதமே உருவாக்கிஇருக்கிறார்கள். பண்டைய காலத்தில் மடங்களில் அப்படித்தான் சதா வாதிட்டு மோதி தத்துவம்கற்றார்கள். இன்றும் திபெத்திய பௌத்த மரபில் இப்போக்கு உள்ளது. ஆகையால் உங்களுக்காக reading buddyஐ, வாசிப்புத் துணைவனைக் கண்டுபிடியுங்கள். பரஸ்பரம் கேள்விகளைக் கேட்டு விவாதித்து, உங்களுக்குள் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியபடி, படியுங்கள்.
வாழ்த்துக்கள்!

Comments